பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

நியூஜெர்சி பட்ஜெட்டின் அரசியல்

நம்ம ஊர் அரசியல்வாதிகளை மிஞ்சக்கூடிய "சூப்பர் அரசியல்" காமெடி நியூஜெர்சியில் நடந்தேறி உள்ளது. நியூஜெர்சி கவர்னர் கோர்சைன் தனது பட்ஜெட்டில் கூறிய புதிய விற்பனை வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவரது கட்சியை சேர்ந்த டெமாக்ராட் உறுப்பினர்களுடன் நடந்த மோதலால், பட்ஜெட்டை ஜூலை 1 காலவரைக்குள் நிறைவேற்ற முடியவில்லை.

பட்ஜெட்டை ஜூலை 1க்குள் நிறைவேற்றாததால், அரசாங்கம் எந்த செலவீனங்களையும் செய்ய முடியாது. இதனால் அத்தியாவசிய ஊழியர்கள் தவிர பலருக்கு தற்காலிக "சம்பளம் இல்லாத விடுப்பு" வழங்கப்பட்டது. அதாவது நியூஜெர்சியின் மொத்த அரசு பணியாளர்களான 84,000 பேரில் 45,000பேருக்கு பட்ஜெட் நிறைவேற்றும் வரை வேலையில்லை. அரசுப் பணிகள் முடங்கிப் போயின.

இதைத் தவிர இங்குள்ள அட்லாண்ட்டிக் சிட்டியின் பிரபலமான சூதாட்ட மையங்களில், இந்த சூதாட்டங்களைக் கண்காணிக்க கூடிய அரசின் கண்காணிப்பாளர்கள் வேலைக்கு வராததால், இங்கிருக்கும் பல கேசினோக்கள் இழுத்து மூடப்பட்டன. இதனால் சுமார் 36,000க்கும் மேலான கேசினோ ஊழியர்களுக்கு கடந்த புதன்கிழமையில் இருந்து வேலையில்லை.

ஒரு வாரமாக நடந்த இந்தப் பிரச்சனை, ஒரு வழியாக கவர்னருக்கும், அவரது எதிர்தரப்பு டெமாக்ராட் கோஷ்டியான ராபர்ட்சுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு நேற்று காலை பட்ஜெட் ஒப்புக்கொள்ளப்பட்டு இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பட்ஜெட் பிரச்சனை இது தான்.

கவர்னர் கோர்சைன் நியூஜெர்சியின் பட்ஜெட் பற்றாக்குறையான 4.5பில்லியன் டாலர்களை சரிக்கட்ட விற்பனை வரியை தற்போதைய 6%ல் இருந்து 7%மாக உயர்த்த வேண்டும் என்கிறார். இந்த வரி விதிப்பு மூலம் கிடக்கும் நிதி, பற்றாக்குறையை சரிக்கட்டவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கவர்னர் உறுதியாக இருந்தார். இந்த புதிய வரி விதிப்பு மூலம் 1.1பில்லியன் திரட்ட முடியும். ஆனால் சராசரி நியூஜெர்சி குடும்பத்தின் செலவு வருடத்திற்கு சுமார் 275டாலர்கள் அதிகரிக்கும்.

ஆனால் அவருடைய எதிர்தரப்பான ராபார்ட்ஸ், இந்த விற்பனை வரியை ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த விற்பனை வரி விதிப்பிற்கு பதிலாக அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரியை உயர்த்துவது, சூதாட்ட வரிகளை உயர்த்துவது, செலவீனங்களைக் குறைப்பது போன்றவற்றைச் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் கவர்னர் வருமான வரியை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் அவரது பட்ஜெட்டை அசம்லியில் நிறைவேற்ற அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே ஒப்புக்கொள்ள வில்லை. இதனால் எழுந்த நெருக்கடி தான் ஜூலை 1 காலவரைக்குள் பட்ஜெட்டை நிறைவேற்றாத சூழ்நிலை எழுந்து அரசுப் பணிகள் முடங்கிப் போயின.

ஒரு வழியாக நேற்று காலை, விற்பனை வரி மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டு அதிக அளவில் இருக்கும் சொத்து வரியை (Property tax) குறைக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சமரசத்துடன் ராபர்ட்சும், கவர்னர் கோர்சைனும் சமரசம் செய்து கொண்டனர். பட்ஜெட்டும் அமலுக்கு வந்துள்ளது

இந்தப் பிரச்சனையால் அட்லாண்டிக் சிட்டியில் இருக்கும் சூதாட்ட மையங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 16மில்லியன் வருமானத்தை இழந்திருக்கின்றன. இந்த சூதாட்ட மையங்கள் மூலம் நியூஜெர்சி அரசுக்கு வர வேண்டிய வரியையும் அரசு இழந்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்குப் பிண்ணனியில் இருக்க கூடிய காரணம், உள்ளூர் அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ராபர்ட்சுக்கும், கோர்சைனுக்கும் டெமாக்ரட் கட்சிக்குள் இருக்கும் போட்டி காரணமாகவே இந்தப் பிரச்சனை எழுந்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியிருந்தது. கவர்னர் கோர்சைனுக்கும், கெம்டவுன் கவுண்டியைச் (Camden County) சார்ந்தவர்களுக்கும் இருக்கும் அதிகார போட்டியின் வெளிப்பாடு தான் இந்தப் பிரச்சனை என அந்த செய்தி தெரிவித்து இருந்தது.

கவர்னர் மூன்று மாதங்களுக்கு முன்பே தனது பட்ஜெட்டை சமர்ப்பித்தார் என்று தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் ஒரு வாரம் அரசுப் பணிகள் முடங்கிப் போகும் அளவுக்கு இந்தப் பிரச்சனை சென்றது மிக மோசமான நிர்வாக முறையின் வெளிப்பாடு தான். மேலும் படிக்க

சரியும் குறியீடு

இந்தியப் பங்குச்சந்தை எப்பொழுது சரியும் என பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தனர். அந்தச் சரிவு நேற்று நிகழ்ந்து விட்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (BSE) 463புள்ளிகள் சரிந்ததுள்ளது. தேசியப் பங்குச் சந்தை (NSE) 147.10 புள்ளிகள் சரிந்துள்ளது. ஒரே நாளில் ரூபாய் 100,000 கோடி முதலீட்டாளர்களின் மதிப்பு சரிவடைந்துள்ளது.

இந்தச் சரிவு நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று தான் என்ற வகையில் பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. என்றாலும் ஒரே நாளில் ஏற்பட்ட இந்தச் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாக ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல், கடந்த பாரளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்து இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற பொழுது என வெகு சில தருணங்களில் தான் இந்தளவுக்குச் சரிவு இருந்தது. ஆனால் இம் முறை அத்தகைய பெரிய trigger எதுவும் இல்லை என்றாலும் நீண்ட நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க தொடங்க, அத்துடன் மேலும் சில காரணங்களும் சேர்ந்து கொண்டு பங்குச்சந்தையை சரிய வைத்து விட்டது.

இந்தியப் பங்குச்சந்தையே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்பத் தான் ஆடிக் கொண்டிருக்கிறது. பங்குக் குறியீடுகளின் உயர்வு இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகளைச் சார்ந்து இருக்க வில்லை. பல பங்குகளின் விலை மிகவும் உச்சகட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. மார்கன் ஸ்டேன்லி கடந்த மாதம் ஆசியாவிலேயே இந்தியப் பங்குச்சந்தையின் விலை தான் மிக அதிக அளவில் இருப்பதாக தெரிவித்து இருந்தது. பங்குச் சந்தை சரியக் கூடும் என்றாலும் 11,000 புள்ளிகளுக்கு கீழே போகக் கூடிய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து இருந்தது.

பொதுவாக பங்குச்சந்தை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பல ஆய்வு அறிக்கைகளுக்கு ஏற்ப பங்குக்குறியீட்டின் உயர்வு இருக்க வில்லை. தினமும் புதிய உயர்வுகளைப் பெற்று கொண்டே தான் இருந்தது. அதனால் இந்த அறிக்கைகளை விட முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்க கூடிய Liquidity தான் பங்குக் குறியீடுகள் உயருவதற்கு முக்கிய காரணங்களாக இருந்து வந்திருக்கின்றன. எனவே பங்குச்சந்தையின் உயர்வையும் தாழ்வையும் இதனைச் சார்ந்தே பார்க்க வேண்டும்.

பங்குச்சந்தையில் சரிவதற்கான வாய்ப்பு இருந்து கொண்டே இருந்தாலும் சில விடயங்கள் பங்குச்சந்தையை நேற்று சரிய வைக்க முக்கிய காரணிகளாக இருந்துள்ளது
- அரசு சிமெண்ட் நிறுவனங்களிடம், சிமெண்ட் விலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறியது
- கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே இருந்த தங்கம் மற்றும் பிற உலோகங்களின் விலை சரிந்தது

போன்றவை இந்தியப் பங்கு குறியீடுகளின் சரிவுக்கு முக்கிய காரணம்.

Profit taking + Speculation இவை தான் இந்தச் சரிவிற்கு முக்கிய காரணம். இந்தச் சரிவு இன்னும் தொடரும் என்று சிலரும், பங்குக்குறியீடுகள் எகிறலாம் என்று சிலரும் கூறுகிறார்கள். பொதுவாக ஒரு பெரிய சரிவிற்குப் பிறகு குறியீடுகள் உயருவது தான் வாடிக்கை. பங்குகளின் குறைந்த விலையை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முற்படுவது வழக்கம். அது பங்குகளின் விலையை உயர்த்தும்.

மாறாக மேலும் சரிவு இருந்தாலும் கூட பங்குகளை வாங்குவது நல்லது தான்.



Graph : Hindu Businessline
மேலும் படிக்க

நியாயம் கேட்டு ஒரு போராட்டம்

இந்தியாவின் சட்டங்கள், நீதிமன்றங்கள் எப்பொழுதுமே சாமனிய மக்களை தான் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் இந்த சட்டங்களை தங்களுடைய செல்வாக்கு மூலமும், பணத்தின் மூலமும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செல்வாக்கு இல்லாத சாமானிய மனிதன், நீதிமன்றங்களுக்கு நடந்தே தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்து விடுகிறான். அதுவும் மிகப் பிரபலமான வழக்குகளில் மாட்டிக் கொண்டு விட்டால், கேட்கவே தேவையில்லை. பெரும் முதலைகள் தப்பி விடுவார்கள். சின்ன மீன்களை சட்டங்களும், நீதிமன்றங்களும், காவல் துறையும் வறுத்து எடுக்கும்.

அந்த நிலை தான் அருண் பவ்தேக்கர் என்னும் ஒரு சாமானிய மனிதருக்கு ஏற்பட்டுள்ளது. இவர் சிக்கிக் கொண்டது ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் வழக்கில். கடந்த 14ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறார். இதில் லாபமடைந்த பெரும்முதலைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இவருக்கு 5ஆண்டு கால கடுங்காவல் தண்டனை கடந்த வாரம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவர் செய்த தவறு என்ன ?

அரசாங்க அலுவலகங்களில், வங்கிகளில் நீங்கள் கவனித்திருக்கலாம். சில பேப்பர்கள் பலரின் மேஜைகளுக்கு செல்லும். பலர் கையெழுத்திட்டால் தான் அது செல்லுபடியாகும். அவ்வாறு ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் மும்பை கிளையில் உதவி மேலாளராக இருந்த பொழுது, பல ரிசிப்ட்ஸ்களுக்கு அவர் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப பவதேக்கர் கையெழுத்திட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட சில ரிசிப்ட்ஸ் ஹர்ஷத் மேத்தாவிற்கு ஊழல் செய்ய வாய்ப்பளித்தன. இதனை அவருடைய மேலதிகாரியான சீத்தாராமின் உத்தரவிற்கு ஏற்ப பவ்தேக்கர் கையொப்பம் இட்டார். இது ஊழலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது கூட அவருக்கு தெரியாது. ஆனால் ஹர்ஷத் மேத்தா விவகாரம் வெளியான பொழுது இதில் இவர் சிக்கிக் கொண்டார். பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. மிகுந்த இன்னல்களுக்கு உள்ளானார். அன்றாடச் செலவுகள், நீதிமன்ற செலவுகள் போன்றவற்றுக்கு கூட இவர் மிகுந்த சிரமப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் இவருக்காக போராடியது. ஸ்டேட் பாங்க் இந்த விவகாரத்தில் பவ்தேக்கருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி விட்டது. ஆனால் இப்பொழுது இவருக்கு தண்டனை என்று கோர்ட் கூறியிருக்கிறது.

மறுபடியும் இவர் கோர்ட்டுக்கு நடக்க வேண்டும். ஒரு சாதாரண வங்கி அதிகாரியாக இருந்து, கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இவர் மறுபடியும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இம்முறை சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல வேண்டும்


66 வயதான பவ்தேக்கர் இந்த வயதிலும் நியாயம் கேட்டு போராடி வருகிறார். இது பற்றிய விடியோவை பார்த்த பொழுது மிகுந்த மிகுந்த வேதனையாக இருந்தது.



இந் நிலையில் CNN-IBN இவருக்கு நியாயம் கிடைக்க போராடப் போவதாக கூறியிருப்பது மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. ஜெசிக்கா லால் போன்ற கவர்ச்சிகரமான பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒரு சாமானிய மனிதருக்கு CNN-IBN செய்யும் இந்த உதவி, ஊடகங்களின் போக்கில் ஒரு மாறுபட்ட தன்மையை கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் ராஜ்தீப்பின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

IBN News Report

2005ம் ஆண்டு நான் எழுதிய ஹர்ஷத் மேத்தா ஊழல் பற்றிய தொடரில் பவ்தேக்கர் பற்றி நான் எழுதியிருந்த ஒரு பதிவினை இங்கே மீள்பதிவு செய்கிறேன்

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Statutory General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Statutory General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது. சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை தனது குழந்தைகளுக்காக எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை. மேலும் படிக்க

Budget 2006 - Short comment

உள்கட்டமைப்பிற்கு ஊக்குவிப்பு, நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சி, வரி விதிப்பில் மாறுதல், Populist அறிவிப்புகள் என ஒரு கூட்டுக்கலவையாக சிதம்பரம் இந்த ஆண்டின் பட்ஜெட்டினை அளித்திருக்கிறார்.

நல்ல பட்ஜெட், ஆனால் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை மேலும் படிக்க

லாலு, சிதம்பரம், பட்ஜெட் மசாலா

அடுத்த பட்ஜெட் சீசன் தொடங்கி விட்டது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என்று பிப்ரவரி இறுதி வந்தாலே முதளிட்டாளர்கள் மத்தியிலும், வியபாரிகள் தொடங்கி பெரிய கார்ப்ரேட் நிறுவனம் வரை ஒரே பரபரப்பாக இருக்கும். பட்ஜெட் குறித்த அலசல்கள், நிதியமைச்சரின் திட்டங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, பங்குச்சந்தையில் அது ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகள் போன்றவை அலசப்படும். ஆனால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, எந்தளவிற்கு முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன என்பதை பற்றி யாராவது அலசுகிறார்களா என்பது தெரியவில்லை. நிதியமைச்சர் அறிவிக்கும் சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமலே காணாமல் போய் விடுகின்றன.

இந்தியாவின் பட்ஜெட் உலகின் பல நாடுகளில் இருக்கும் நிதி நிறுவனங்களால் கவனிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகப்படியான விளம்பரம் பட்ஜெட்டிற்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த அதிகப்படியான விளம்பரம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே போய் விட்டது. பட்ஜெட் குறித்து ஜோசியர்களிடம் கருத்து கேட்கிறார்களாம், என்னத்தச் சொல்ல

பட்ஜெட் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு எதிர்பார்ப்பு இயல்பாக என்னுள் எழுந்து விடும். இதற்கு இந்தியாவின் வணிக ஊடகங்களிலும், ஆங்கில ஊடகங்களிலும் கொடுக்கப்படும் விளம்பரமும் முக்கிய காரணம். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் இல்லாததால் இந்திய ஊடகங்களின் இந்த விளம்பரம் என்னை எட்டாததால், ஒரு சிறு ஆர்வம் மட்டுமே உள்ளது.

பட்ஜெட்டிற்கும் எனக்குமான அறிமுகம் சிறு வயதிலேயே தொடங்கி விட்டது என்று சொல்லலாம். பட்ஜெட் நெருங்கும் சமயத்தில் சில பொருட்களை என் அப்பா எங்களுடைய கடையில் அதிகமாக வாங்கி வைக்கத் தொடங்குவார். உதாரணமாக சிகரெட். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கும். பட்ஜெட் வரப் போவுது, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று எங்கள் கடைக்கு சப்ளை செய்யும் சப்ளையர்கள் சொல்வதை கடையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் நேரத்தில் கவனித்து இருக்கிறேன். எப்பொழுது பட்ஜெட் போடுவார்கள், அது பற்றி செய்திகளின் என்ன வாசிக்கிறார்கள், சிகரெட் விலை ஏறியிருக்கிறதா என்பதை கவனித்து ஓடிப்போய் அப்பாவிடம் சிகரெட் விலை ஏறியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இத்தகைய ஆர்வத்துடன் தான் பட்ஜெட் குறித்த செய்திகளை கவனிக்கத் தொடங்கினேன். பட்ஜெட் இரவு செய்திகளை நிச்சயமாக பார்த்து விடுவேன். மறுநாள் இந்துவில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து விடுவேன். பல விஷயங்கள் புரியாது. இருந்தாலும் ஒரு ஆர்வத்துடன் படிப்பேன். நாங்கள் முதன் முதலில் தொலைக்காட்சி பெட்டி வாங்கிய பொழுது பட்ஜெட்டிற்கு முன்பாக வாங்க வேண்டும் என்று கூறி என் அப்பா வாங்கியதும் ஞாபகத்தில் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகு நாங்கள் வாங்கிய அதே தொலைக்காட்சிப் பெட்டி கொஞ்சம் விலையேறியதையும் கவனித்து என் அப்பாவிடம் கூறி இருக்கிறேன்.

ஒரு விஷயத்தை கவனிக்கலாம். பட்ஜெட் என்பது விலையேற்றத்திற்கான ஒரு வருடந்திர ஏற்பாடு என்பதாகத் தான் பல காலங்களாக இருந்து வந்திருக்கிறது. புதிய வரி விதிப்புகள், பொருட்களின் விலையில் மாற்றம் என்பது தான் பட்ஜெட்களின் நியதியாக இருந்துள்ளது. சிறுக சிறுக உயர்த்துப்படும் வரியில் இருந்து மாற்றம் பெற்று பொருளாதாரத்தை மாற்றும் திட்டங்களின் வடிவமாக பட்ஜெட் மாறியது 1991க்குப் பிறகு தான். மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை கொண்டு வந்தப் பின்பு தான் பட்ஜெட் தயாரிக்கும் முறையில் பல மாறுதல்களும் ஏற்ப்பட்டன. இந்தியாவின் Dream பட்ஜெட்டாக சிதம்பரத்தின் பட்ஜெட்டை கூறும் அதே நேரத்தில் இந்தியாவின் மோசமான பட்ஜெட்களில் ஒன்றாக மது தண்டவதேயின் பட்ஜெட்டை சொல்வார்கள். அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்காக மிக அதிக அளவில் வரி விதிக்கப்பட்ட பட்ஜெட்டாக அது கூறப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பில் இன்று பல்வேறு நிர்பந்தங்களும், அரசியல் தொந்தரவுகளும், கூட்டணி நிர்ப்பந்தங்களும் எழவே செய்கின்றன. பட்ஜெட் என்பது ஒரு "populist" அறிவிப்பாக இருந்தாக வேண்டும். அதுவும் இன்று மைய அரசில் கூட்டாச்சி முறை வந்துள்ள நேரத்தில் பல துறைகள் பல்வேறு கூட்டணி கட்சிகளின் வசமுள்ள சூழ்நிலையில் தங்கள் மாநிலத்திற்கு ஓதுக்கீடுகளை பட்ஜெட்டில் கொண்டு வரவேண்டும் என்ற நிர்பந்தம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. இவர்கள் நிதியமைச்சர்களை நிர்பந்திக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் என்றால் பட்ஜெட்டில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென பொருளாதார வல்லுனர்களும், தொழில்துறையினரும் நிதியமைச்சரை மற்றொரு புறம் நிர்பந்திக்கின்றனர். இவை தவிர தன்னுடைய அரசாங்கம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்த வேண்டிய பிரதமர் மற்றும் ஆளும்கட்சியின் கொள்கைகள் இவற்றிடையே சிக்கித் தவித்து பட்ஜெட் இறுதியில் வெளிவரும் பொழுது ஒரு "கூட்டக்கலவையான மசாலாவாக" வந்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்தும் பட்ஜெட்டாக எல்லோரின் நோக்கங்களிலும் சிறிதளவாவது நிறைவேறினால் போதுமானது என்று நினைக்கும் நிலைக்கு இன்று பட்ஜெட் சென்று விட்டது.


கடந்த வாரம் தக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் சரக்கு கட்டணங்களில் உயர்வில்லாமலும், சிலவற்றில் வரி குறைக்கப்பட்டும் இருக்கும் அதே நேரத்தில் பயணிகள் கட்டணங்களிலும் உயர்வு இல்லை. தொழில் நிறுவனங்களுக்கும், பொதுஜனங்களுக்கும் சலுகை என்னும் பொழுது இது நல்ல பட்ஜெட் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தற்பொழுது சரக்குகள் நத்தை வேகத்தில் செல்லும் நிலையை மாற்ற அதிவேக சரக்கு போக்குவரத்தை துவங்க தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கப்போவதாக லாலு அறிவிக்கிறார். தனியார் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி. பொதுத்துறை நிறுவனங்களின் சில பிரிவுகளை தனியார் மயமாக்குவதை பொருளாதார சீர்திருத்தமாக அந் நிறுவனங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் சலுகை என்பதான லாலுவின் டிரேட் மார்க் populist அறிவிப்பு அவருக்கும் அவரைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்புறம் ரயில்வே நிலையங்களில் Internet cafe, ATM, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா என ஒரே கவர்ச்சிகரமான அறிவிப்புகள். இதனை ஒரு Balanced Budget என்று ஊடகங்கள் எழுதுகின்றன. ஆனால் இன்னும் எத்தனையோ நல்ல முயற்சிகளை எடுக்கலாம். ஆனாலும் எடுக்க முடியாத நிலையில் தான் இன்றைய அரசியல் சூழ்நிலை உள்ளது.

இனி இந்த சீசனின் உச்சகட்ட க்ளைமாக்ஸ் பொது பட்ஜெட் செவ்வாயன்று அரங்கேறும். ரயில்வே பட்ஜெட் ஒரு சின்ன மசாலா கலவை என்றால் இது பெரிய அளவிளான மசாலா கலவை. பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஒரு யாதார்த்தமான அணுகுமுறையை கையாள வேண்டுமென சிதம்பரம் கடந்த பட்ஜெட்டில் இடதுசாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இன்னும் அது வேண்டுகோளாகத் தான் இருக்கிறது. அவர்களுக்கும் யதார்த்தம் புரிந்ததாக தெரியவில்லை, அரசுக்கும் அதனை செயல்படுத்தி ஆட்சியை இழக்கும் தைரியம் இல்லை. இன்று பட்ஜெட் தயாரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்று நமக்கு புரிகிற அதே நேரத்தில் அதனையே கூறிக்கொண்டிருப்பதும் அர்த்தமற்றவை.


இன்று சிதம்பரமாக இருந்தாலும், வேறு எந்தக் கூட்டணியின் நிதியமைச்சராக இருந்தாலும் "out of the box"ஆக சிந்தித்து புதிய வரிவிதிப்புகளை கொண்டு வந்து அரசுக்கு வருமானத்தையும், சாதாரண மக்களுக்கான Populist அறிவிப்புகளையும் வெளியிட்டாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். சீர்திருத்தங்கள் மூலமாக நிதி வருவாயை அதிகரிக்கலாம் என்றாலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்றவை குறித்தெல்லாம் தற்போதைய அரசு அதிகம் பேச முடியாது. இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி எதையும் செய்து விட முடியாது. இந் நிலையில் புதிய வரி விதிப்பு சிந்தனைகளை கொண்டு வந்தால் தான் தொழில்துறையை அதிகம் பாதிக்காமலும், நடுத்தர வர்க்க மக்களின் வெறுப்பை எதிர்கொள்ளாமலும், சாதாரண மக்களுக்கான Populist அறிவிப்புகளை வெளியிடமுடியும். அப்படித் தான் கடந்த முறை "10,000" ரூபாய்க்கான வரியும், Fringe Benefits வரியும் கொண்டு வரப்பட்டது. இத்தகைய வரிகள் யாரையும் அதிகம் பாதிக்க வில்லை. அதே நேரத்தில் அரசுக்கு வருமானத்தையும் கொண்டு வந்தது. கடந்த முறை பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 10,000 ரூபாய்க்கான வரி போல இம்முறை அவர் எந்தப் புதிய வரியை கொண்டு வரப்போகிறார் என்பது அதிகம் கவனிக்கப்படும்.


புதிய வரி விதிப்புகள் குறித்து சிதம்பரம் பொருளாதார நிபுணர்களுடன் பிற நாடுகளின் முறைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மிக அதிக அளவிளான வருவாயை அரசுக்கு பெற்று தரவே செய்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பொருளாதாரம் ஆண்டுக்கு சுமார் 8% வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் 75% இருக்கும் தொழில் துறை, சர்வீஸ் துறை போன்றவை நல்ல வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் அரசின் வருவாயில் சுமார் 13% பல்வேறு மானியங்களுக்கும், சுமார் 22% அரசு செலுத்த வேண்டிய வட்டிகளுக்கும், 14% பாதுகாப்புச் செலவீனங்களுக்கும் சென்று விடுகிறது. இது போக எஞ்சியவை மாநிலங்களுக்கு மானியமாகவும், அரசின் பிற முக்கியமான திட்டங்களுக்கு செல்கிறது என மார்கன் ஸ்டேன்லி கூறுகிறது. இது மிகவும் குறைவு என்றும் உள்கட்டமைப்புக்கு அதிக ஒதுக்கீடு இல்லை என்பதும் பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு.

நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், இந்தப் பட்ஜெட்டில் பெரிய சீர்திருத்தங்கள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பில் அரசு அதிகளவில் முதலீடு செய்வது குறித்தும், நிதிப் பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக (Fiscal deficit at 4% of GDP) சிதம்பரம் எப்படி கொண்டு வரப்போகிறார் என்பது குறித்தும் தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளும், கல்வி, சுகாதாரம் போன்றவையும் மிகவும் முக்கியமானவை. அரசு இதற்கு எந்தளவுக்கு செலவிடப்போகிறது என்பது கவனிக்கப்படும். சீனாவுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் மின்சாரம் இருமடங்கு அதிக விலையில் இருப்பதாகவும், துறைமுகங்களில் பொருள்களை ஏற்றுவதும், இறக்குவதற்குமான நடைமுறைகள் மிக மோசமாக இருப்பதாகவும் bloomberg தெரிவிக்கிறது. விமான நிலையங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. அதன் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். இதனை சரி செய்ய அரசு எத்தகைய திட்டங்களைக் கொண்டு வரப் போகிறது என்பதும் தொழில் துறை எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று. இதைத் தவிர வேறு எதையாவது கூறி சிதம்பரம் நம்மை வியப்பில் ஆழ்த்துவாரா என்று தெரியவில்லை.

சிதம்பரம், Balanced but slightly populist பட்ஜெட்டை கொடுக்கப் போகிறார் என்றே நான் நினைக்கிறேன். மேலும் படிக்க

நேற்று - பத்தாயிரம், நாளை ???



நன்றி : Economic Times



மேலும் படிக்க