பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, November 08, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 4

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Subsidiary General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதிகாரியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Subsidiary General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது.

சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை.

(எந்த தவறும் செய்யாமல் இந்த வழக்கில் சிக்கிக்கொண்ட பவ்தேக்கர் இன்றும் நீதி கேட்டு இந்திய நீதிமன்றங்களின் வாசலில் நீதிக்காக காத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்பொழுது அது குறித்து நான் எழுதிய பதிவு - நியாயம் கேட்டு ஒரு போராட்டம்


இந்திய நீதிமன்றங்களின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக வலைப்பதிவுகளில் உலாவிக் கொண்டு இருக்கும் "சிலருக்கு" இது எல்லாம் தெரியாது என்று நம்புகிறேன். இடஒதுக்கீடு, மரணதண்டனை போன்ற வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள், இந்த வழக்கு குறித்தும் நீதிமன்றத்துக்கு ஆதரவாகவும், எனக்கு நீதிமன்றங்கள் செயல்படும் முறை தெரியவில்லை என்றும் பின்னூட்டம் எழுதி விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்)


2 மறுமொழிகள்:

தி.ராஸ்கோலு said...

சசி,

எளிதாகப் புரியும்படி எழுதுகிறீர்கள், நன்றி!

//இந்திய நீதிமன்றங்களின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக வலைப்பதிவுகளில் உலாவிக் கொண்டு இருக்கும் "சிலருக்கு" இது எல்லாம் தெரியாது என்று நம்புகிறேன். இடஒதுக்கீடு, மரணதண்டனை போன்ற வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள், இந்த வழக்கு குறித்தும் நீதிமன்றத்துக்கு ஆதரவாகவும், எனக்கு நீதிமன்றங்கள் செயல்படும் முறை தெரியவில்லை என்றும் பின்னூட்டம் எழுதி விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்)//

இவர்கள் செலக்டிவ் ஆகத் தான் ஆதரவுக் குத்தாட்டம் போடுவார்கள் என்பது தெரியாததா?

நீதிமன்றங்களே வேலை நிறுத்தம் செய்த ஊழியர்கள் மீது ஜெ. அரசு எடுத்த நடவடிக்கையைப் பாராட்டியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக AIIMS டாக்டர்கள் செய்த போராட்டத்தை ஆதரித்தும், இப்போது "மக்கள்" உணர்வை திருப்தி செய்யத் தூக்கு அறிவிப்பதுமாக செலக்டிவ் ஆகத் தானே செயல்படுகிறார்கள்!

Commonality வேறு எங்கேயோ உள்ளது.

மீண்டும் நன்றி

1:46 AM, November 09, 2006
சல்மான் said...

நான்கு அத்தியாங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான தொகுப்பு. பவ்.. அவர்கள் சந்தர்ப்பத்த வசமாக பலிகடாவானார் என்பது பரிதாபம். ஆனால், இது அவருக்கு பின்னே வரும் பல அப்பாவிகளுக்கு ஒரு பாடமாக இருக்குமல்லவா?

மேலும், நீதிமன்றம், facts - களை தாண்டி நடைமுறை அத்துமீறல்களை கணக்கில் கொள்ள ஆரம்பித்தால், நீதித்துறையின் கட்டமைப்பு குலைந்து subjective தீர்ப்புகள் தர ஏதுவாகி விடுமே?

9:31 PM, November 15, 2006