பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, November 15, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 6

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து)

கடந்தப் பாகத்தில் பத்திரங்களே இல்லாமல் கடன் பெறும் முறையை BR எனப்படும் Bank Receipt மூலம் செய்ய முடியும் என்று பார்த்தோம். இந்த BR கொண்டு பணம் பெறும் முறையையும் ஹர்ஷத் மேத்தா, ஹித்தன் தலால் போன்றப் பங்குத்தரகர்கள் தங்களின் பணத்தேவைக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

அதாவது பத்திரங்களே தேவைப்படாமல் ஏதாவது ஒரு வங்கியில் BR பெற்று விடுவார்கள். அந்த BRஐ கொண்டு Ready Forwards அல்லது ரெப்போ வர்த்தகம் மூலம் பிற வங்கிகளுக்கு விற்பார்கள். விற்கும் வங்கிக் கொடுக்கும் காசோலையை தங்களின் வங்கிக் கணக்குக்கு கொண்டுச் சென்று விடுவார்கள். இதற்காகப் பலச் சிறிய வங்கிகளை தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டார்கள். அதிகம் அறியப்படாத வங்கிகளான கர்நாட் வங்கி Bank of Karad - BOK), மெட்ரோபாலிட்டன் கூட்டுறவு வங்கி (Metropolitan Cooperative Bank - MCB) போன்ற வங்கிகளின் உயர் அதிகாரிகளை தங்களின் ஊழல் கூட்டணிக்கு உடந்தையாக கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். இந்த வங்கிகளில் இருந்து BR பெற்று அந்த BR பணமாக மாற்றப்பட்டு பங்குச்சந்தையில் நுழையும்.

இப்படி பல இடங்களில் இந்த ஊழல் கதைகள் நடந்து கொண்டிருந்தப் பொழுது இத்தகைய வர்த்தகங்களை கண்காணிக்கும் கட்டுப்பாடுகள் என்னாயிற்று ? கண்காணிப்பில் எங்கு ஓட்டை விழுந்தது ?

வங்கிகளின் பல்வேறு வர்த்தகத்திற்குப் பலப் பிரிவுகள் உண்டு. வங்கிகளில் ஒவ்வொரு பிரிவும் தனியாகவே செயல்படவேண்டும். வங்கி, யாரிடம் கடன் வாங்குவது/கொடுப்பது என்பதை முடிவுச் செய்ய ஒரு துறை இருக்கும். வாங்கியப் பத்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒரு பிரிவு உண்டு. அது போலவே SGL கணக்குகளில் இருக்கும் வங்கியின் பத்திர கணக்கு வழக்குகளை பராமரிக்கவும் ஒரு பிரிவு உண்டு.

இந்தப் பத்திரங்களைப் பாதுகாக்கும் பிரிவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இருப்பார்கள். இரண்டு அதிகாரிகள் இருந்தால், பத்திரங்களைப் பாதுகாப்பதில் ஊழல் நடக்கும் பட்சத்தில் அதிகாரிகளில் யாராவது ஒருவர் அதற்கு உடந்தையாகப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இரண்டு அதிகாரிகள் இருக்கும் முறை அமலில் இருந்தது.

ஆனால் நாம் இந்தத் தொடரின் 4வது அத்தியாயத்தில் பார்த்ததுப் போல கஸ்டோடியன் பாதுகாப்பில் இருக்க வேண்டிய பத்திரங்கள் யாரோ சில உயர் அதிகாரிகளிடம் விதிமுறையை மீறி இருந்தது. SGL கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இது போல மற்றொரு பெரிய ஓட்டை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானலும் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தச் சூழல். அதாவது BR மூலம் பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்க முடியும் என்பது அனைத்து வங்கிகளுக்கும் தெரியும். வங்கிகளில் Risk Management என்பது முக்கியமான ஒன்று. இந்த Risk Management ல் Market Risk, Credit Risk என்று பலப் பிரிவுகள் உண்டு. இதற்குள்ளெல்லாம் நாம் செல்ல வேண்டாம். Credit Risk என்பதைப் பற்றி மட்டும் கவனிப்போம்.

பெயரைப் போலவே இது கடன் கொடுப்பதால் வரும் பிரச்சனைகளை அலசும் பிரிவு. கடன் பெறும் வங்கியின் பயனாளர்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பார்களா என்று அலசி ஆரய்வது தான் இந்தப் பிரிவின் முக்கிய வேலை. பயனாளர்கள் ஒவ்வொருவரின் creditworthiness அலசப்பட்டு அவர்களின் மதிப்பிற்கேற்ப ஒரு உச்சவரம்பு விதிக்கப்படும். இதற்கு Limit என்றுப் பெயர். இந்த லிமிட்க்குள் தான் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். இதற்கு அதிகமாக கடன் வழங்கப்படமாட்டாது.

ஆனால் பத்திர ஊழல் நடைப்பெற்ற பொழுது, சிறிய வங்கிகளான கர்நாட் வங்கி போன்றவற்றுக்கு அதன் லிமிட்டை விட அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதனைச் செய்தது ஏதோ நம்மூர் வங்கிகள் மட்டுமல்ல. சர்வதேச வங்கியான Standard Chartered கூட லிமிட்டை கொஞ்சம் கூட மதிக்காமல் பல கோடிகளை சிறிய வங்கிகளுக்கு ரெப்போ மூலம் வாரி வழங்கியுள்ளது.

சரி..வங்கிகள் தான் இவ்வாறு கண்காணிப்பில் கோட்டை விட்டன என்றால், கண்காணிப்பதற்கென்றே இருக்கும் ரிசர்வ் வங்கி என்னச் செய்து கொண்டிருந்தது ?

ரிசர்வ் வங்கி அதன் கண்காணிப்பு பிரிவான PDO மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் என்று பார்த்தோம். PDO வின் வேலை வங்கிகளிடமிருக்கும் பத்திரங்களை எல்லாம் அதன் விற்பனைக்கேற்ப பராமரிப்பது. ஆனால் இந்தப் பராமரிப்பு சரியாகச் செய்யப்படவில்லை. SGL ரிசிப்டுகள் பவுன்சாகும் பட்சத்தில் வங்கிகளிடம் உடனடியாக அது தெரிவிக்கப்பட
வேண்டும். ஆனால் பேப்பர் ஒர்க் மூலம் பல செயல்கள் நடந்துக் கொண்டிருந்ததால் இது சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இப்படி பல ஓட்டைகளுக்கிடையில் ஊழல் ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.

சரி.. நாம் கதைக்கு வருவோம். ஹர்ஷத் மேத்தா கதை என்று சொல்லிவிட்டு ஊரில் இருக்கும் அனைத்து கணக்கு வழக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா ? என்னச் செய்வது ? மேலே கூறிய ஓட்டைகள் இல்லாவிட்டால் ஹர்ஷத் மேத்தா என்ற கிரிமினல் உருவாகியிருக்க மாட்டானே. ஒரு சிலர் ஹர்ஷத் மேத்தா இந்த ஊழலில் பலிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டான், பலப் பெரிய மீன்கள் இதில் சிக்காமல் தப்பி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது.

பல கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த ஊழல் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. உயர் அதிகாரிகள் என்றால் மேலிடத்திலுள்ள மிகப் பெரிய அதிகாரிகள். ஆனால் இந்தத் தொடரின் நான்காவது பாகத்தில் கூறியிருந்த பவ்தேக்கர் போன்ற பல அப்பாவிகளை சிக்க வைத்து விட்டு பல உயர் அதிகாரிகள் தப்பி விட்டனர்.

ஒரு வெளிநாட்டு வங்கியில் Credit Risk Management பிரிவிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நான் அந்தத் துறையில் தான் வேலைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பயனாளரின் (Counterparty) கணக்கு வழக்குகளும் கடுமையாக அலசப்படும். பல்வேறுச் சூழ்நிலைகளை செயற்கையாக உருவாக்கியும் அலசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வங்கியான Standard Chartered வங்கி கொஞ்சம் கூட அலசாமல் கடன் கொடுத்தது என்பதை ஏற்க முடியாது. விதிமுறைகளை மீறி கடன் கொடுக்க வேண்டுமென்றால் அந்த வங்கியின் முக்கிய அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். கைமாறியப் பணத்தில் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை. ஹர்ஷத் மேத்தாவும் சில அதிகாரிகளும் தான் சிக்கிக்கொண்டனர். பெரிய மீன்கள் தப்பி விட்டனர்.

என்ன ஹர்ஷத்மேத்தாவை முதலில் வில்லன் என்றீர்கள், இப்பொழுது பலிகடா என்கிறீர்களே என்று கேட்கிறீர்களா ? ஹர்ஷத்மேத்தா நிச்சயம் வில்லன்தான். வில்லன்களின் இரு வகை இருக்கிறார்கள். மறைமுக வில்லன், நேரடி வில்லன். மறைமுக வில்லன்கள் பல நேரங்களில் தப்பி விடுகிறார்கள். நேரடி வில்லன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹர்ஷத் மேத்தா நேரடி வில்லன்.

சரி…இந்த ஊழல் கதையில் பத்திரங்களின் பங்குகளை பார்த்து விட்டோம். இங்கிருந்து நகர்ந்து அடுத்த பதிவில் Dalal Street க்கு வருவோம்.

0 மறுமொழிகள்: