பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, November 16, 2006

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 7

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு)

பங்குச்சந்தை தான் ஹர்ஷத் மேத்தாவின் கனவு. சாதாரணக் கனவு அல்ல. பெரியக் கனவு. “நான் கனவுகளை விற்க முயலுகிறேன். பணத்தை உருவாக்குவது மிக எளிதான வேலைத் தான். பணம் சம்பாதிக்கப் பங்குச்சந்தைக்கு வாருங்கள்” என்று முதலீட்டாளர்களுக்கு அவன் அழைப்பு விடுத்தான்.

பங்குச்சந்தை மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்தான். இந்தியாவின் மாபெரும் பங்குச்சந்தை ஊழலுக்கு வித்திட்ட ஹர்ஷத் மேத்தா, அத் துறையைப் பற்றி கல்லூரிக்குச் சென்று படிக்காதவன். எல்லாம் அனுபவப் பாடம் தான். பல கஷ்டங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட வித்தை.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய்ப்பூர் தான் ஹர்ஷத் மேத்தாவின் சொந்த ஊர். தன் தம்பி அஸ்வினுடன் மும்பைக்கு குடியேறி நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காசாளாராக வேலைக்குச் சேர்ந்தான். பங்குச்சந்தை மீது ஒரு அபரிதமானக் காதல். காசாளாராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உணவு இடைவேளையின் பொழுது மும்பை பங்குச்சந்தைக்கு ஓடி வருவான். அப்பொழுதெல்லாம் இணையம், கணினி மயமான வர்த்தகம் இல்லாத நேரம். பங்குகளைக் கூவி கூவி விற்பார்கள். அந்த வர்த்தகத்தின் மீது அவனுக்கு அபரிதமானக் காதல். பணம் சம்பாதிக்கும் திடமான வழி இது தான் என்று நம்பினான். பங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன், கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான்.

பங்குகளைக் கற்பதே கொஞ்சம் கடினம் தான். அதில் நிபுணராக ஆவது அதைவிடக் கடினம். வெறும் ஏட்டுச் சுரக்காயைக் கொண்டு பணம் சம்பாதித்து விட முடியாது. ஹர்ஷத் மேத்தாவிற்கு ஏட்டுச் சுரக்காய் தெரியாது. அதனால் நிறைய நஷ்டம் அடைந்தான். நஷ்டங்கள் அவனுக்கு அனுபவத்தைக் கொடுத்தது. முதலீட்டில் தேர்ச்சிப் பெற்றான். அத்துடன் அவனது கனவு நின்றுவிடவில்லை. அவன் கனவின் முக்கியமான ஒன்று பங்குத் தரகராக வேண்டும் என்பதே. தரகராவது சாதாரணமான விஷயம் இல்லை. முதலில் ஒரு புரோக்கரிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் சப் புரோக்கராகச் சேர்ந்தான். ஆனால் அதன் பிறகு அவனது வளர்ச்சி பிரம்மாண்டமானது.

ஹர்ஷத் மேத்தாவின் கனவு தான் அவனை ஒவ்வொரு கட்டத்திலும் வழி நடத்தியது. பங்குச்சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் பங்குச்சந்தையில் நுழைந்து, புரோக்கராக உயர்ந்ததுடன் அவனது கனவு நின்று விட வில்லை. "கனவுகளை காசாக்கலாம்" என்று யோசித்தான். இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தான் ஒரு வழிக்காட்டியாக மாற வேண்டும் என்று நினைத்தான். சினிமா ஸ்டார்கள் பின் அலையும் ரசிகர்கள் போல தன் பின்னால் முதலீட்டாளர்கள் அணிவகுக்க வேண்டும் என்று பேராசைப்பட்டான். அது தான் அவனை பங்குச்சந்தையின் மிகப் பெரிய புரோக்கர் (Big Bull) என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது. இந்த நிலைக்குச் செல்வதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி தான் அவனை இறுதியில் வில்லனாகவும் மாற்றியது.

அவனது கனவிற்கு ஏற்றாற்ப் போலவே அவன் தொடங்கியத் தரகு நிறுவனத்தின் பெயரும் அமைந்திருந்தது. தனது சகோதரர்கள், அஸ்வின் மேத்தா, ஜோதி மேத்தா ஆகியோருடன் இணைந்து அவன் தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் - Growmore Research & Asset Management Ltd. இந்தப் பெயருக்கு தகுந்தாற்ப் போலவே அவனது வளர்ச்சியும் அபாரமானதாக இருந்தது. பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். பல அட்டைப்படங்களை அலங்கரித்தான். இதற்கு உண்மையானக் காரணம் பங்குச்சந்தைக்கு வங்கிகளில் இருந்து கடத்தப்பட்ட பணம் தான். என்றாலும் இதைச் செயல்படுத்திய மூளை அபாரமானது.

ஆனால் ஹர்ஷத் மேத்தாவின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் ? அவன் மட்டுமே காரணமல்ல ? கடந்த சில வாரங்களாக நாம் கவனித்த வங்கிகளில் இருந்தச் சில ஓட்டைகள் மட்டுமே காரணமல்ல. நாம் அனைவருமே காரணகர்த்தாக்கள்.

நாம் எப்படி காரணமாகமுடியும் என்று கேட்கிறீர்களா ?

நம்முடைய அறியாமை தான். சிறு முதலீட்டாளர்கள் பலரின் அறியாமை. பங்குச்சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள். படிக்காதவர்கள் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். திவாலாகிப் போன நிதி நிறுவனங்களின் பின் அலைவார்கள். ஆனால் நம்மைப் போல நன்கு படித்தவர்கள் அறிவாளித்தனமாகச் சிலர் பேசினால், அவர்களை அதி புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறோம்.

ஒரு பங்கு உயரும் பொழுது, அந்தப் பங்குகள் ஏன் உயருகிறது ? இந்த உயர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. உயரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சீக்கிரமாக நம் பணம் பல மடங்காகப் பெருக வேண்டும் என்ற பேராசை தான் தலைத்தூக்குகிறது. பங்குகளை ஆராய்வதற்கு நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண முதலீட்டாளர்கள், பங்குகளை நன்று அறிந்து, ஆய்வு செய்து நிறையப் பணம் சம்பாதித்தும் இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரியாத ஒன்றை ஒருவன் செய்யும் பொழுது சிறு முதலீட்டாளர்களை மட்டுமே குறைச் சொல்லி என்னச் செய்வது என்று கேட்கிறீர்களா ?

ஆனால் ஹர்ஷத் மேத்தா ஒரு முறை மட்டுமே இதைச் செய்ய வில்லை. 1992 ஊழலுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளிவந்த ஹர்ஷத் மேத்தா 1997ல் மறுபடியும் இந்த ஊழலைச் செய்ய முயன்றான். ஓரளவுக்கு அதற்கு பலனும் கிடைத்தது. இது எதைக் காட்டுகிறது ? நம் அறியாமை என்பதைத் தவிர வேறு என்னச் சொல்வது.

இது தவிர ஊடகங்களின் பணத்தாசை. ஹர்ஷத் மேத்தாவை மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக கட்டியப் பத்திரிக்கைகள் பின் அவனை வில்லனாகச் சித்தரித்தன. பிறகு அவனைக் கொண்டே பணத்தை பெருக்க நினைத்தன.

1992ல் ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் 1997ல் தன் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்று முடிவுச் செய்தது. ஹர்ஷத் மேத்தாவைக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முதலீட்டு பத்தியையும் தொடங்கியது.

பத்திரிக்கைகளின் பொறுப்பு எத்தகையது என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

இங்கு பணம் தான் பிரதானம். மற்றதெல்லாம் அர்த்தமற்றது. இதில் பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள் அல்ல - “யோசிக்காமல் முதலீடு செய்யும் அறிவாளிகள்”

ஆனால் ஹர்ஷத் மேத்தாவை இன்றும் பலர் ஹீரோவாகத் தான் பார்க்கிறார்கள். பங்குச்சந்தையை உயர்த்தியதால், இந்தியப் பங்குச்சந்தையின் சூட்சமங்களை வெளிப்படுத்தியதால் அவனை பலர் ஹீரோவாகப் பார்கிறார்கள்.

பங்குச்சந்தையை உயர்த்திய ஹர்ஷத் மேத்தாவின் வித்தையை அடுத்தப் பதிவில் பார்ப்போம்

0 மறுமொழிகள்: