பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 2

பங்குச்சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பணச்சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

பணச்சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன் வாங்க/கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தை. இது குறைந்த காலத் தேவைகளுக்காக பணத்தை பரிமாறும் ஒரு இடம் என்று சொல்லலாம். அதிகபட்சமாக ஒரு வருடம், குறைந்தபட்சமாக ஒரு நாள் கூட கடன் வாங்கலாம்/கொடுக்கலாம். தங்களிடமிருக்கும் மிகுதியானப் பணத்தை வங்கிகள் இந்தச் சந்தையில் கடன் கொடுத்து வட்டி மூலமாக லாபம் அடையும். பணச் சந்தையில் கடன் பெறுவதற்கும்/கொடுப்பதற்க்கும் பல வழிகள் இருக்கின்றது. Call Money, Term Money, T-bills, Repo என்று பல வெவ்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறும் (இதற்கெல்லாம் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே தொடருவோம்).

இதில் Repo அல்லது Ready Forward Contracts என்ற கடன் பெறும் முறையை மட்டும் கவனிப்போம். ஏனெனில் நம்முடைய வில்லன் ஹர்ஷத் மேத்தாவின் புண்ணியத்தால் இதிலிருந்தப் பல ஓட்டைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது.

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள அரசுக் கடன்பத்திரங்களை பணச் சந்தையில் விற்று, தங்களின் குறுகிய காலத் தேவைக்காகப் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதனை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும்.

அதாவது, பத்திரங்களை விற்பவர், அதனை மறுபடியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பப்பெற்றுக் கொள்வதற்கும் சேர்த்தே ஒப்பந்தம் செய்வார். தற்பொழுது விற்கும் விலையையும், திரும்பப்பெற்றுக் கொள்ளும் விலையையும் முதலிலேயே தீர்மானித்து அதற்கேற்ப தான் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், பறிமாறப்படும் பணத்திற்கு, ரெப்போ விகிதம் (Repo rate) என்று சொல்லப்படும் வட்டி வசூலிக்கப்படும். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதை திரும்பப் பெற்று கொள்வதற்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்படுவதால் இதனை Repurchase Agreement (Repo) என்று சொல்வார்கள்.

வங்கிகள், தங்களின் குறைந்தகாலத் தேவைக்கு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தான் இந்த ரெப்போ வர்த்தகம் மூலம் பணச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.

சரி..வங்கிகள் எப்படி செயல்படுகின்றன - "வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக பணம் திரட்டுதல். திரட்டியப் பணத்தைக் கொண்டு கடன் வழங்குதல்".

ஆனால் தங்களிடம் இருக்கும் அனைத்துப் பணத்தையும் வங்கிகள் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கையிருப்பாக ஒவ்வொரு வங்கியும் தங்களிடமோ அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கள் கணக்கிலோ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனை Cash Reserve Ratio (CRR) என்று சொல்வார்கள். இவ்வாறு கையிருப்பாக வைத்திருப்பதால் பயனாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு உடனடி தேவையிருக்கும் பொழுது எளிதில் பணம் கிடைக்கும் (இதனால் தான் வங்கி வைப்பு நிதியில் நாம் எப்பொழுது கேட்டாலும் உடனே பணம் திரும்பக் கிடைக்கிறது).

இதைப் போலவே பணமாக இல்லாமல் தங்கமாகவோ, அரசு கடன் பாத்திரங்களாகவே மற்றொரு குறிப்பிட்ட சதவீதம் வங்கிகளின் கையிருப்பில் இருக்க வேண்டும். இதனை Statutory Liquidity Ratio (SLR) என்று சொல்வார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் பணத்தேவை, கடன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவ்வாறு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.

வங்கிகள், தங்களிடம் கையிருப்பில் இருக்கும் SLR விகிதம் குறையும் பொழுது அதனைச் சரி செய்ய புதிதாக கடன்பத்திரங்கள் வாங்குவதை விட ரெப்போ மூலம் குறுகியக் காலத்திற்கு கடன்பத்திரங்களை வாங்கிக் கொள்ளும்.

இவ்வாறு பத்திரங்களை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஒன்றுச் சேர்ப்பது தான் தரகர்களின் வேலை. ஒப்பந்தம் வங்கிகளுக்கிடையே செய்யப்படும். பத்திரங்களையும் பணத்தையும் வங்கிகள் தான் பறிமாறிக் கொள்ள வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இங்கே தான் சில விதிமீறல்கள் நடைபெறத் தொடங்கின.

பத்திரங்களை விற்பவர்கள், பத்திரங்களை நேரடியாக வாங்குபவர்களிடம் கொடுக்காமல் தரகர்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைப் போலவே பணத்திற்கான காசோலை நேரடியாக பத்திரங்களை விற்றவர்களிடம் செல்லாமல் தரகர்கள் வழியாக செல்லத் தொடங்கியது.

இவ்வாறு பத்திரங்களும் காசோலைகளும் தரகர்கள் மூலமாகவே வங்கிகளுக்கு செல்லத் தொடங்கியது. இதில் ஒன்றும் தவறு இல்லை. தரகர்களைக் கொண்டு தான் வர்த்தகத்தை நடத்த முடியும். வங்கிகளுக்கும் இந்த முறையில் வசதி இருந்தது. வங்கிகளின் தேவையை தரகர்களால் எளிதாகப் பூர்த்திச் செய்யமுடிந்தது. இந்தியாவில் எங்குமே காணப்படும் சாதாரணமான விதிமீறல்.

ஆனால் ஹர்ஷ்த் மேத்தாவின் கிரிமினல் மூளை இதிலிருந்த ஓட்டைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது, இருந்த நரசிம்மராவ் அரசு, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்த நேரம். இனி தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் வசந்தகாலம் தான் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தை உயரத் தொடங்கியது. இந்தக் காளைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.

சந்தை உயருவதாலும், லாபம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தரகர்களும், முதலீட்டு நிறுவனங்களும் பணச் சந்தையில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். பணச் சந்தையில் புரளும் கோடிக்கணக்கானப் பணத்தை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து விட்டால், பல மடங்கு லாபம் பார்க்கலாம்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு இதிலிருந்த ஓட்டைகளும் வாய்ப்புகளும் புரிபடத் தொடங்கியது.

முதல் பகுதி மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - ஊழலின் கதை - 1

பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதி பல நாட்களாகி விட்டன. எழுத வேண்டும் என்று நினைத்தாலும் அது குறித்த ஆர்வம் குறைந்து விட்டது. இந்தியாவில் இருந்த பொழுது பங்குச்சந்தையை தினமும் கவனிக்கும் பழக்கம் இருந்தது. அதற்கான நேரமும் இருந்தது. ஆனால் இங்கு வந்தப் பிறகு வார இறுதியில் மட்டுமே சில மணி நேரங்கள் கிடைக்கும் நிலையில் இயல்பாக பங்குச்சந்தை போன்ற வறண்ட, நிறையப் பேர் படிக்க விரும்பாத பதிவுகளை எழுதும் ஆர்வம் குறைந்து விட்டது. கடந்த வாரம் பங்குச்சந்தை குறித்து எழுதும் குப்புசாமி செல்லமுத்துவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, வலைப்பதிவுகளில் பங்குச்சந்தை குறித்து எழுதுவது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு அவருக்கும் ஏற்பட்டு இருப்பதை உணர்ந்தேன். தமிழ் வலைப்பதிவு உலகில் இருக்கும் பதிவர்கள்/வாசகர்களிடையே பங்குச்சந்தைக் குறித்து படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்

என்றாலும், பல நண்பர்கள், குறிப்பாக நண்பர் ரமணி போன்றவர்கள் பங்குச்சந்தை பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தாதால் அந்த ஆர்வத்தை மீண்டும் கொண்டு வரும் பொருட்டு எனது பழைய பங்குச்சந்தை பதிவுகளை மீள் பதிவு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இப்பொழுது ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் குறித்து நான் முன்பு எழுதிய தொடரை மீள்பதிவு செய்கிறேன்.

தற்பொழுது சில மாதங்களாக (2005 ஜனவரி மாதம்) பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது. SEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ?

இத்தகைய காளைச் சந்தையில் (Bull Market) பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.

பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் SEBI கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகும் சில ஊழல் நடந்தேறியது தனிக்கதை.

சாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று (2005 ஜனவரி மாதம்) சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்தப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டன. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இது எப்படி ஏற்பட்டது ? இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் “Big Bull”. அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வும், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,
கரடிகள் சரிவையும் குறிக்கும்)

இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான் (தன் ஊழல் டெக்னிக்கை யாரும் கண்டுபிடிக்க முடியாது என அவன் அப்பொழுது நம்பினான்).

சாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான் உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய அதிகப் பணம் தேவைப்பட்டது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடிக்கடி ஹர்ஷத் மேத்தா செல்ல தொடங்கியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.

ஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.

ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் “இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் ” என்று சொன்னானாம்.

அந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து பார்ப்போம். மேலும் படிக்க

9/11 : WTC : பொருளாதாரம்

அமெரிக்கர்களின் மனதில் இருந்து ஆற்ற முடியாத காயமாக உலக வர்த்தக மையம் தகர்ப்பு அமைந்து விட்டது. 9/11 சமயத்தில் இங்கு காணப்படும் மக்களின் உணர்ச்சிமயமான உணர்வுகள், தொலைக்காட்கள் தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டே இருக்கும் 9/11 நிகழ்ச்சிகள் என அவர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்தை உணரமுடிகிறது. WTC தகர்க்கப்பட்டு 5ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில் அதனைச் சுற்றிய சில நினைவுகள், அதன் தகர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், உலக பொருளாதாரத்தை மாற்றி எழுதிய அந்த நிகழ்வு குறித்து இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை முதன் முதலில் நேரில் பார்த்தது 2000ம் ஆண்டு தான். அப்பொழுது மூன்று மாத பயணமாக அமெரிக்க வந்திருந்தேன். இரட்டை கோபுரங்களுக்கு அருகாமையில் இருக்கும் உலக நிதி மையத்தில் (World Financial Center) தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் இரட்டைக் கோபுரங்களுக்கு Path ரயிலில் வந்து பிறகு உலக வர்த்தக மையத்தைக் கடந்து அலுவலகம் செல்ல வேண்டும். அந்தக் கட்டிடங்களை பல முறை நிமிர்ந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். உலக வர்த்தக மையத்தின் முன்னால் ஒரு Fountain இருக்கும். மதிய வேளைகளில் நண்பர்களுடன் அந்த Fountain அருகில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருப்பது வாடிக்கை. அங்கிருந்த மிகப் பெரிய Globe சிதிலமடைந்த நிலையில் இப்பொழுது மேன்ஹாட்டன் பேட்டரி பார்க்கில் வைக்கப்பட்டிருக்கிறது.

2001ம் ஆண்டு மறுபடியும் இங்கு வந்த பொழுது இரட்டைக் கோபுரங்களின் உச்சிக்கு சென்றது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. அது ஒரு சாதாரண நிகழ்வாக கூட அமைந்திருக்கலாம். ஆனால் அடுத்த சில மாதங்களில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பொழுது அது எனக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகி விட்டது. கோபுரங்கள் எரிந்து கொண்டிருந்த பொழுது இந்தியாவில் இருந்த நான், WTCல் நான் எடுத்துக்கொண்ட
புகைப்படங்களையும், இரட்டை கோபுரங்கள் எரிவதையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது என் மனதில் பதிவாகியது.

இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலை காரணமாகக் கொண்டு அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் WTC தாக்குதலின் பொழுது அமெரிக்காவிற்காக பரிதாபப்பட்டதும், என்னுடைய நாட்டின் ஒரு பகுதி தாக்கப்பட்டது போல உணர்ந்ததும் உண்மை.

இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டப் பிறகு பலருக்கு, குறிப்பாக நிதி நிறுவனங்களில் வேலைப் பார்த்தவர்களுக்கும், மென்பொருள் துறைகளில் வேலை பார்த்தவர்களுக்கும் ஒரு சோதனையானக் காலம். நான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தின் சர்வர்கள் (Servers) மற்றும் backup tape's போன்றவை மிகப் பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட WTCல் தான் வைக்கப்பட்டிருந்தன. WTCயுடன் இவற்றையும் பல நிறுவனங்கள் இழந்தன. இவை நிதி நிறுவனங்களின் செயல்பாட்டின் உயிர் நாடி. பல நிதி நிறுவனங்கள் ஸ்தம்பித்தன.

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட அடுத்த சில நாட்கள் எந்த வேலையும் இல்லை. நான் அப்பொழுது offshoreல் இருந்தேன். எங்களுடைய Source Code முற்றிலும் அழிந்து போயிருந்தது. ஒருவாறு பழைய Source Code எங்கிருந்தோ ஒரு backup tapeல் கண்டெடுத்ததர்கள். இது ஒரு பழைய version. ஆனாலும் வேறு வழியில்லை. உடனடியாக அதனை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. எங்களுடைய System ஒரு Batch processing system. System வேலை செய்யாததால் தினமும் கணிசமான இழப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அது உடனடியாக வேலை செய்ய வைக்கப்பட்டால் தான் எங்களுடைய வேலையும் நிலைக்கும் என்ற நிலையில், மிகவும் கடினப்பட்டு சில நாட்களில் அதனை நிர்மாணித்தோம்.

அதனை சரி செய்து நிர்மாணத்த பொழுது எங்களை பாரட்டக் கூட யாருக்கும் அவகாசம் இருக்க வில்லை. Onsiteல் வேலைப் பார்த்த பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நாங்கள் offshoreல் இருந்ததால் தப்பித்தோம். ஒரு கட்டத்தில் புதிய Development எதுவும் செய்வதில்லை, இருக்கின்ற வேலையை பராமரித்தால் போதுமானது என்ற நிலைக்கு பல நிறுவனங்கள் வந்திருந்தன.

இந்தக் கட்டத்தில் தான் Outsourcing அதிகப் பிரபலம் அடையத் தொடங்கியது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்புக்கு முன்பு வரை outsourcingஐ பரிசோதனை முறையில் செய்யத் தொடங்கிய பல நிறுவனங்கள், அதனை செய்தே தீர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. ஏனெனில் அவர்கள் நிறுவனத்தின் செலவை குறைத்தே ஆக வேண்டிய தேவை இருந்தது.

இரட்டைக் கோபுரங்களின் தகர்ப்புக்கு பிறகு தங்களுடைய உள்கட்டமைப்பை இழந்த பல நிதி நிறுவனங்கள், இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள, தங்களுடைய மென்பொருள்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தன. இத்தகைய ஒரு சூழ்நிலை மறுபடியும் ஏற்பட்டாலும் தங்களுடைய வர்த்தகம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பது நிதி நிறுவனங்களின் முக்கிய தேவையாக இருந்தது. அதனால் உருவானது தான் Disaster recovery மென்பொருட்கள். இன்று ஒரு தாக்குதல் நடந்து எங்களுடைய சர்வர்கள் நாசமானாலும், வர்த்தகம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடைபெறும். அந்த தாக்குதல் நடைபெற்ற முந்தைய நிமிடம் வரையிலான data மிகப் பாதுகாப்பாக மற்றொரு இடத்தில் சேகரிக்கப்பட்டு விடும். இன்று பல நிறுவனங்கள் SRDF - Symmetrix Remote Data Facility என்ற ஒரு மென்பொருளை பயன்படுத்துகின்றன. வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையிலும் அந்த Data மற்றொரு இடத்தில் சேமிக்கப்படும். உதாரணமாக நியூயார்க்கில் நடைபெறும் வர்த்தக data, நியூஜெர்சியில் ஒரு சாதாரண, அதிகப் பிரபலம் இல்லாத இடத்தில் அந்த நிமிடமே சேமிக்கப்படும். நியூயார்க் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சர்வர் நாசமானால் நியூஜெர்சியில் இருக்கும் சர்வர் மூலம் பெரிய பாதிப்பு இல்லாமல் வர்த்தகத்தை தொடர முடியும்.

இரட்டைக் கோபுரங்களின் தாக்குதல் மூலம் அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை அசைத்து பார்க்கலாம் என்பது தான் அல்கொய்தாவின் நோக்கம். ஆனால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் மேலும் வலுவாக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது.

உலகின் முதலாளித்துவம் மிகவும் வலுவாகியிருக்கிறது என்று சொன்னால் கம்யூனிஸ்ட்கள் சண்டைக்கு வருவார்கள். ஆனாலும் அது தான் உண்மை.

எப்படி உலகப் பொருளாதாரம் வலுவடைந்தது ? அடுத்தப் பதிவில் பார்க்கலாம் மேலும் படிக்க

நியூஜெர்சி பட்ஜெட்டின் அரசியல்

நம்ம ஊர் அரசியல்வாதிகளை மிஞ்சக்கூடிய "சூப்பர் அரசியல்" காமெடி நியூஜெர்சியில் நடந்தேறி உள்ளது. நியூஜெர்சி கவர்னர் கோர்சைன் தனது பட்ஜெட்டில் கூறிய புதிய விற்பனை வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவரது கட்சியை சேர்ந்த டெமாக்ராட் உறுப்பினர்களுடன் நடந்த மோதலால், பட்ஜெட்டை ஜூலை 1 காலவரைக்குள் நிறைவேற்ற முடியவில்லை.

பட்ஜெட்டை ஜூலை 1க்குள் நிறைவேற்றாததால், அரசாங்கம் எந்த செலவீனங்களையும் செய்ய முடியாது. இதனால் அத்தியாவசிய ஊழியர்கள் தவிர பலருக்கு தற்காலிக "சம்பளம் இல்லாத விடுப்பு" வழங்கப்பட்டது. அதாவது நியூஜெர்சியின் மொத்த அரசு பணியாளர்களான 84,000 பேரில் 45,000பேருக்கு பட்ஜெட் நிறைவேற்றும் வரை வேலையில்லை. அரசுப் பணிகள் முடங்கிப் போயின.

இதைத் தவிர இங்குள்ள அட்லாண்ட்டிக் சிட்டியின் பிரபலமான சூதாட்ட மையங்களில், இந்த சூதாட்டங்களைக் கண்காணிக்க கூடிய அரசின் கண்காணிப்பாளர்கள் வேலைக்கு வராததால், இங்கிருக்கும் பல கேசினோக்கள் இழுத்து மூடப்பட்டன. இதனால் சுமார் 36,000க்கும் மேலான கேசினோ ஊழியர்களுக்கு கடந்த புதன்கிழமையில் இருந்து வேலையில்லை.

ஒரு வாரமாக நடந்த இந்தப் பிரச்சனை, ஒரு வழியாக கவர்னருக்கும், அவரது எதிர்தரப்பு டெமாக்ராட் கோஷ்டியான ராபர்ட்சுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு நேற்று காலை பட்ஜெட் ஒப்புக்கொள்ளப்பட்டு இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

பட்ஜெட் பிரச்சனை இது தான்.

கவர்னர் கோர்சைன் நியூஜெர்சியின் பட்ஜெட் பற்றாக்குறையான 4.5பில்லியன் டாலர்களை சரிக்கட்ட விற்பனை வரியை தற்போதைய 6%ல் இருந்து 7%மாக உயர்த்த வேண்டும் என்கிறார். இந்த வரி விதிப்பு மூலம் கிடக்கும் நிதி, பற்றாக்குறையை சரிக்கட்டவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கவர்னர் உறுதியாக இருந்தார். இந்த புதிய வரி விதிப்பு மூலம் 1.1பில்லியன் திரட்ட முடியும். ஆனால் சராசரி நியூஜெர்சி குடும்பத்தின் செலவு வருடத்திற்கு சுமார் 275டாலர்கள் அதிகரிக்கும்.

ஆனால் அவருடைய எதிர்தரப்பான ராபார்ட்ஸ், இந்த விற்பனை வரியை ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த விற்பனை வரி விதிப்பிற்கு பதிலாக அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்களின் வருமான வரியை உயர்த்துவது, சூதாட்ட வரிகளை உயர்த்துவது, செலவீனங்களைக் குறைப்பது போன்றவற்றைச் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் கவர்னர் வருமான வரியை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் அவரது பட்ஜெட்டை அசம்லியில் நிறைவேற்ற அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே ஒப்புக்கொள்ள வில்லை. இதனால் எழுந்த நெருக்கடி தான் ஜூலை 1 காலவரைக்குள் பட்ஜெட்டை நிறைவேற்றாத சூழ்நிலை எழுந்து அரசுப் பணிகள் முடங்கிப் போயின.

ஒரு வழியாக நேற்று காலை, விற்பனை வரி மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டு அதிக அளவில் இருக்கும் சொத்து வரியை (Property tax) குறைக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சமரசத்துடன் ராபர்ட்சும், கவர்னர் கோர்சைனும் சமரசம் செய்து கொண்டனர். பட்ஜெட்டும் அமலுக்கு வந்துள்ளது

இந்தப் பிரச்சனையால் அட்லாண்டிக் சிட்டியில் இருக்கும் சூதாட்ட மையங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 16மில்லியன் வருமானத்தை இழந்திருக்கின்றன. இந்த சூதாட்ட மையங்கள் மூலம் நியூஜெர்சி அரசுக்கு வர வேண்டிய வரியையும் அரசு இழந்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்குப் பிண்ணனியில் இருக்க கூடிய காரணம், உள்ளூர் அரசியல் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ராபர்ட்சுக்கும், கோர்சைனுக்கும் டெமாக்ரட் கட்சிக்குள் இருக்கும் போட்டி காரணமாகவே இந்தப் பிரச்சனை எழுந்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியிருந்தது. கவர்னர் கோர்சைனுக்கும், கெம்டவுன் கவுண்டியைச் (Camden County) சார்ந்தவர்களுக்கும் இருக்கும் அதிகார போட்டியின் வெளிப்பாடு தான் இந்தப் பிரச்சனை என அந்த செய்தி தெரிவித்து இருந்தது.

கவர்னர் மூன்று மாதங்களுக்கு முன்பே தனது பட்ஜெட்டை சமர்ப்பித்தார் என்று தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் ஒரு வாரம் அரசுப் பணிகள் முடங்கிப் போகும் அளவுக்கு இந்தப் பிரச்சனை சென்றது மிக மோசமான நிர்வாக முறையின் வெளிப்பாடு தான். மேலும் படிக்க

சரியும் குறியீடு

இந்தியப் பங்குச்சந்தை எப்பொழுது சரியும் என பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தனர். அந்தச் சரிவு நேற்று நிகழ்ந்து விட்டது. மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (BSE) 463புள்ளிகள் சரிந்ததுள்ளது. தேசியப் பங்குச் சந்தை (NSE) 147.10 புள்ளிகள் சரிந்துள்ளது. ஒரே நாளில் ரூபாய் 100,000 கோடி முதலீட்டாளர்களின் மதிப்பு சரிவடைந்துள்ளது.

இந்தச் சரிவு நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று தான் என்ற வகையில் பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. என்றாலும் ஒரே நாளில் ஏற்பட்ட இந்தச் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாக ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல், கடந்த பாரளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியடைந்து இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற பொழுது என வெகு சில தருணங்களில் தான் இந்தளவுக்குச் சரிவு இருந்தது. ஆனால் இம் முறை அத்தகைய பெரிய trigger எதுவும் இல்லை என்றாலும் நீண்ட நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க தொடங்க, அத்துடன் மேலும் சில காரணங்களும் சேர்ந்து கொண்டு பங்குச்சந்தையை சரிய வைத்து விட்டது.

இந்தியப் பங்குச்சந்தையே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்பத் தான் ஆடிக் கொண்டிருக்கிறது. பங்குக் குறியீடுகளின் உயர்வு இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகளைச் சார்ந்து இருக்க வில்லை. பல பங்குகளின் விலை மிகவும் உச்சகட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. மார்கன் ஸ்டேன்லி கடந்த மாதம் ஆசியாவிலேயே இந்தியப் பங்குச்சந்தையின் விலை தான் மிக அதிக அளவில் இருப்பதாக தெரிவித்து இருந்தது. பங்குச் சந்தை சரியக் கூடும் என்றாலும் 11,000 புள்ளிகளுக்கு கீழே போகக் கூடிய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து இருந்தது.

பொதுவாக பங்குச்சந்தை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்ட பல ஆய்வு அறிக்கைகளுக்கு ஏற்ப பங்குக்குறியீட்டின் உயர்வு இருக்க வில்லை. தினமும் புதிய உயர்வுகளைப் பெற்று கொண்டே தான் இருந்தது. அதனால் இந்த அறிக்கைகளை விட முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்க கூடிய Liquidity தான் பங்குக் குறியீடுகள் உயருவதற்கு முக்கிய காரணங்களாக இருந்து வந்திருக்கின்றன. எனவே பங்குச்சந்தையின் உயர்வையும் தாழ்வையும் இதனைச் சார்ந்தே பார்க்க வேண்டும்.

பங்குச்சந்தையில் சரிவதற்கான வாய்ப்பு இருந்து கொண்டே இருந்தாலும் சில விடயங்கள் பங்குச்சந்தையை நேற்று சரிய வைக்க முக்கிய காரணிகளாக இருந்துள்ளது
- அரசு சிமெண்ட் நிறுவனங்களிடம், சிமெண்ட் விலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கூறியது
- கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே இருந்த தங்கம் மற்றும் பிற உலோகங்களின் விலை சரிந்தது

போன்றவை இந்தியப் பங்கு குறியீடுகளின் சரிவுக்கு முக்கிய காரணம்.

Profit taking + Speculation இவை தான் இந்தச் சரிவிற்கு முக்கிய காரணம். இந்தச் சரிவு இன்னும் தொடரும் என்று சிலரும், பங்குக்குறியீடுகள் எகிறலாம் என்று சிலரும் கூறுகிறார்கள். பொதுவாக ஒரு பெரிய சரிவிற்குப் பிறகு குறியீடுகள் உயருவது தான் வாடிக்கை. பங்குகளின் குறைந்த விலையை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முற்படுவது வழக்கம். அது பங்குகளின் விலையை உயர்த்தும்.

மாறாக மேலும் சரிவு இருந்தாலும் கூட பங்குகளை வாங்குவது நல்லது தான்.



Graph : Hindu Businessline
மேலும் படிக்க

நியாயம் கேட்டு ஒரு போராட்டம்

இந்தியாவின் சட்டங்கள், நீதிமன்றங்கள் எப்பொழுதுமே சாமனிய மக்களை தான் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள் இந்த சட்டங்களை தங்களுடைய செல்வாக்கு மூலமும், பணத்தின் மூலமும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். ஆனால் இவ்வாறு செல்வாக்கு இல்லாத சாமானிய மனிதன், நீதிமன்றங்களுக்கு நடந்தே தன்னுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்து விடுகிறான். அதுவும் மிகப் பிரபலமான வழக்குகளில் மாட்டிக் கொண்டு விட்டால், கேட்கவே தேவையில்லை. பெரும் முதலைகள் தப்பி விடுவார்கள். சின்ன மீன்களை சட்டங்களும், நீதிமன்றங்களும், காவல் துறையும் வறுத்து எடுக்கும்.

அந்த நிலை தான் அருண் பவ்தேக்கர் என்னும் ஒரு சாமானிய மனிதருக்கு ஏற்பட்டுள்ளது. இவர் சிக்கிக் கொண்டது ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் வழக்கில். கடந்த 14ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறார். இதில் லாபமடைந்த பெரும்முதலைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இவருக்கு 5ஆண்டு கால கடுங்காவல் தண்டனை கடந்த வாரம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவர் செய்த தவறு என்ன ?

அரசாங்க அலுவலகங்களில், வங்கிகளில் நீங்கள் கவனித்திருக்கலாம். சில பேப்பர்கள் பலரின் மேஜைகளுக்கு செல்லும். பலர் கையெழுத்திட்டால் தான் அது செல்லுபடியாகும். அவ்வாறு ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் மும்பை கிளையில் உதவி மேலாளராக இருந்த பொழுது, பல ரிசிப்ட்ஸ்களுக்கு அவர் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப பவதேக்கர் கையெழுத்திட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட சில ரிசிப்ட்ஸ் ஹர்ஷத் மேத்தாவிற்கு ஊழல் செய்ய வாய்ப்பளித்தன. இதனை அவருடைய மேலதிகாரியான சீத்தாராமின் உத்தரவிற்கு ஏற்ப பவ்தேக்கர் கையொப்பம் இட்டார். இது ஊழலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது கூட அவருக்கு தெரியாது. ஆனால் ஹர்ஷத் மேத்தா விவகாரம் வெளியான பொழுது இதில் இவர் சிக்கிக் கொண்டார். பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. மிகுந்த இன்னல்களுக்கு உள்ளானார். அன்றாடச் செலவுகள், நீதிமன்ற செலவுகள் போன்றவற்றுக்கு கூட இவர் மிகுந்த சிரமப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் இவருக்காக போராடியது. ஸ்டேட் பாங்க் இந்த விவகாரத்தில் பவ்தேக்கருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி விட்டது. ஆனால் இப்பொழுது இவருக்கு தண்டனை என்று கோர்ட் கூறியிருக்கிறது.

மறுபடியும் இவர் கோர்ட்டுக்கு நடக்க வேண்டும். ஒரு சாதாரண வங்கி அதிகாரியாக இருந்து, கடந்த 14 ஆண்டுகளாக நீதிமன்றங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் இவர் மறுபடியும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இம்முறை சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல வேண்டும்


66 வயதான பவ்தேக்கர் இந்த வயதிலும் நியாயம் கேட்டு போராடி வருகிறார். இது பற்றிய விடியோவை பார்த்த பொழுது மிகுந்த மிகுந்த வேதனையாக இருந்தது.



இந் நிலையில் CNN-IBN இவருக்கு நியாயம் கிடைக்க போராடப் போவதாக கூறியிருப்பது மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. ஜெசிக்கா லால் போன்ற கவர்ச்சிகரமான பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒரு சாமானிய மனிதருக்கு CNN-IBN செய்யும் இந்த உதவி, ஊடகங்களின் போக்கில் ஒரு மாறுபட்ட தன்மையை கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் ராஜ்தீப்பின் நல்ல நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

IBN News Report

2005ம் ஆண்டு நான் எழுதிய ஹர்ஷத் மேத்தா ஊழல் பற்றிய தொடரில் பவ்தேக்கர் பற்றி நான் எழுதியிருந்த ஒரு பதிவினை இங்கே மீள்பதிவு செய்கிறேன்

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Statutory General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Statutory General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது. சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை தனது குழந்தைகளுக்காக எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை. மேலும் படிக்க