பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 6

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து)

கடந்தப் பாகத்தில் பத்திரங்களே இல்லாமல் கடன் பெறும் முறையை BR எனப்படும் Bank Receipt மூலம் செய்ய முடியும் என்று பார்த்தோம். இந்த BR கொண்டு பணம் பெறும் முறையையும் ஹர்ஷத் மேத்தா, ஹித்தன் தலால் போன்றப் பங்குத்தரகர்கள் தங்களின் பணத்தேவைக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

அதாவது பத்திரங்களே தேவைப்படாமல் ஏதாவது ஒரு வங்கியில் BR பெற்று விடுவார்கள். அந்த BRஐ கொண்டு Ready Forwards அல்லது ரெப்போ வர்த்தகம் மூலம் பிற வங்கிகளுக்கு விற்பார்கள். விற்கும் வங்கிக் கொடுக்கும் காசோலையை தங்களின் வங்கிக் கணக்குக்கு கொண்டுச் சென்று விடுவார்கள். இதற்காகப் பலச் சிறிய வங்கிகளை தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டார்கள். அதிகம் அறியப்படாத வங்கிகளான கர்நாட் வங்கி Bank of Karad - BOK), மெட்ரோபாலிட்டன் கூட்டுறவு வங்கி (Metropolitan Cooperative Bank - MCB) போன்ற வங்கிகளின் உயர் அதிகாரிகளை தங்களின் ஊழல் கூட்டணிக்கு உடந்தையாக கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். இந்த வங்கிகளில் இருந்து BR பெற்று அந்த BR பணமாக மாற்றப்பட்டு பங்குச்சந்தையில் நுழையும்.

இப்படி பல இடங்களில் இந்த ஊழல் கதைகள் நடந்து கொண்டிருந்தப் பொழுது இத்தகைய வர்த்தகங்களை கண்காணிக்கும் கட்டுப்பாடுகள் என்னாயிற்று ? கண்காணிப்பில் எங்கு ஓட்டை விழுந்தது ?

வங்கிகளின் பல்வேறு வர்த்தகத்திற்குப் பலப் பிரிவுகள் உண்டு. வங்கிகளில் ஒவ்வொரு பிரிவும் தனியாகவே செயல்படவேண்டும். வங்கி, யாரிடம் கடன் வாங்குவது/கொடுப்பது என்பதை முடிவுச் செய்ய ஒரு துறை இருக்கும். வாங்கியப் பத்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒரு பிரிவு உண்டு. அது போலவே SGL கணக்குகளில் இருக்கும் வங்கியின் பத்திர கணக்கு வழக்குகளை பராமரிக்கவும் ஒரு பிரிவு உண்டு.

இந்தப் பத்திரங்களைப் பாதுகாக்கும் பிரிவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இருப்பார்கள். இரண்டு அதிகாரிகள் இருந்தால், பத்திரங்களைப் பாதுகாப்பதில் ஊழல் நடக்கும் பட்சத்தில் அதிகாரிகளில் யாராவது ஒருவர் அதற்கு உடந்தையாகப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இரண்டு அதிகாரிகள் இருக்கும் முறை அமலில் இருந்தது.

ஆனால் நாம் இந்தத் தொடரின் 4வது அத்தியாயத்தில் பார்த்ததுப் போல கஸ்டோடியன் பாதுகாப்பில் இருக்க வேண்டிய பத்திரங்கள் யாரோ சில உயர் அதிகாரிகளிடம் விதிமுறையை மீறி இருந்தது. SGL கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இது போல மற்றொரு பெரிய ஓட்டை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானலும் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தச் சூழல். அதாவது BR மூலம் பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்க முடியும் என்பது அனைத்து வங்கிகளுக்கும் தெரியும். வங்கிகளில் Risk Management என்பது முக்கியமான ஒன்று. இந்த Risk Management ல் Market Risk, Credit Risk என்று பலப் பிரிவுகள் உண்டு. இதற்குள்ளெல்லாம் நாம் செல்ல வேண்டாம். Credit Risk என்பதைப் பற்றி மட்டும் கவனிப்போம்.

பெயரைப் போலவே இது கடன் கொடுப்பதால் வரும் பிரச்சனைகளை அலசும் பிரிவு. கடன் பெறும் வங்கியின் பயனாளர்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பார்களா என்று அலசி ஆரய்வது தான் இந்தப் பிரிவின் முக்கிய வேலை. பயனாளர்கள் ஒவ்வொருவரின் creditworthiness அலசப்பட்டு அவர்களின் மதிப்பிற்கேற்ப ஒரு உச்சவரம்பு விதிக்கப்படும். இதற்கு Limit என்றுப் பெயர். இந்த லிமிட்க்குள் தான் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். இதற்கு அதிகமாக கடன் வழங்கப்படமாட்டாது.

ஆனால் பத்திர ஊழல் நடைப்பெற்ற பொழுது, சிறிய வங்கிகளான கர்நாட் வங்கி போன்றவற்றுக்கு அதன் லிமிட்டை விட அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதனைச் செய்தது ஏதோ நம்மூர் வங்கிகள் மட்டுமல்ல. சர்வதேச வங்கியான Standard Chartered கூட லிமிட்டை கொஞ்சம் கூட மதிக்காமல் பல கோடிகளை சிறிய வங்கிகளுக்கு ரெப்போ மூலம் வாரி வழங்கியுள்ளது.

சரி..வங்கிகள் தான் இவ்வாறு கண்காணிப்பில் கோட்டை விட்டன என்றால், கண்காணிப்பதற்கென்றே இருக்கும் ரிசர்வ் வங்கி என்னச் செய்து கொண்டிருந்தது ?

ரிசர்வ் வங்கி அதன் கண்காணிப்பு பிரிவான PDO மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் என்று பார்த்தோம். PDO வின் வேலை வங்கிகளிடமிருக்கும் பத்திரங்களை எல்லாம் அதன் விற்பனைக்கேற்ப பராமரிப்பது. ஆனால் இந்தப் பராமரிப்பு சரியாகச் செய்யப்படவில்லை. SGL ரிசிப்டுகள் பவுன்சாகும் பட்சத்தில் வங்கிகளிடம் உடனடியாக அது தெரிவிக்கப்பட
வேண்டும். ஆனால் பேப்பர் ஒர்க் மூலம் பல செயல்கள் நடந்துக் கொண்டிருந்ததால் இது சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இப்படி பல ஓட்டைகளுக்கிடையில் ஊழல் ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.

சரி.. நாம் கதைக்கு வருவோம். ஹர்ஷத் மேத்தா கதை என்று சொல்லிவிட்டு ஊரில் இருக்கும் அனைத்து கணக்கு வழக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா ? என்னச் செய்வது ? மேலே கூறிய ஓட்டைகள் இல்லாவிட்டால் ஹர்ஷத் மேத்தா என்ற கிரிமினல் உருவாகியிருக்க மாட்டானே. ஒரு சிலர் ஹர்ஷத் மேத்தா இந்த ஊழலில் பலிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டான், பலப் பெரிய மீன்கள் இதில் சிக்காமல் தப்பி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது.

பல கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த ஊழல் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. உயர் அதிகாரிகள் என்றால் மேலிடத்திலுள்ள மிகப் பெரிய அதிகாரிகள். ஆனால் இந்தத் தொடரின் நான்காவது பாகத்தில் கூறியிருந்த பவ்தேக்கர் போன்ற பல அப்பாவிகளை சிக்க வைத்து விட்டு பல உயர் அதிகாரிகள் தப்பி விட்டனர்.

ஒரு வெளிநாட்டு வங்கியில் Credit Risk Management பிரிவிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நான் அந்தத் துறையில் தான் வேலைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பயனாளரின் (Counterparty) கணக்கு வழக்குகளும் கடுமையாக அலசப்படும். பல்வேறுச் சூழ்நிலைகளை செயற்கையாக உருவாக்கியும் அலசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வங்கியான Standard Chartered வங்கி கொஞ்சம் கூட அலசாமல் கடன் கொடுத்தது என்பதை ஏற்க முடியாது. விதிமுறைகளை மீறி கடன் கொடுக்க வேண்டுமென்றால் அந்த வங்கியின் முக்கிய அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். கைமாறியப் பணத்தில் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை. ஹர்ஷத் மேத்தாவும் சில அதிகாரிகளும் தான் சிக்கிக்கொண்டனர். பெரிய மீன்கள் தப்பி விட்டனர்.

என்ன ஹர்ஷத்மேத்தாவை முதலில் வில்லன் என்றீர்கள், இப்பொழுது பலிகடா என்கிறீர்களே என்று கேட்கிறீர்களா ? ஹர்ஷத்மேத்தா நிச்சயம் வில்லன்தான். வில்லன்களின் இரு வகை இருக்கிறார்கள். மறைமுக வில்லன், நேரடி வில்லன். மறைமுக வில்லன்கள் பல நேரங்களில் தப்பி விடுகிறார்கள். நேரடி வில்லன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹர்ஷத் மேத்தா நேரடி வில்லன்.

சரி…இந்த ஊழல் கதையில் பத்திரங்களின் பங்குகளை பார்த்து விட்டோம். இங்கிருந்து நகர்ந்து அடுத்த பதிவில் Dalal Street க்கு வருவோம். மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 5

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SGL ரிசிப்ட்ஸ்களை விற்கும். அதனை National Housing Board நிறுவனம் வாங்கும். இதற்கு இடைத்தரகராக ஹர்ஷத் மேத்தா செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பத்திரங்களை விற்றப் பணம், ஸ்டேட் பாங்க் வங்கிக்கு செல்லாமல் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்குக்குச் சென்று விடும்.

நாம் இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாத்தில் எப்படி வங்கிகள் தங்களுடைய Privileged/Corporate Customer களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம். அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு காசோலை வாங்காமல், வங்கிகளில் பெயரில் காசோலைப் பெற்று அதனை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்வார்கள். பரிவர்த்தனைச் செய்யும் பணத்திற்கு வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்கவே இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த முறையைத் தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திக் கொண்டான்.

பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதற்காக NHB, காசோலையை ஹர்ஷத் மேத்தாவிடம் கொடுக்கும். ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் காசோலையை தங்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்து கொள்ளுமாறு சொல்வார்கள். நடைமுறையில் இருக்கும் சலுகைப் படி ஸ்டேட் பாங்க் வங்கிக்கு கிடைக்க வேண்டியப் பணம் ஹர்ஷத் மேத்தாவின் கணக்குக்குச் செல்லும். ஹர்ஷத் மேத்தா அந்தப் பணத்தினைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துப் பங்குகளை விலை உயரச் செய்வான்.

அவன் பங்குச் சந்தையில் பங்குகளை உயர வைத்த விதம் பற்றிப் பின்பு பார்க்கலாம். முதலில் இந்தப் பத்திரங்களின் கதையை கவனிப்போம்.

மேலே உள்ள ஊழல் கதையைப் படித்தவுடன், இது என்ன அவரவர் இஷ்டம் போல நடக்கும் கூத்தாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ?

சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கவேச் செய்தன. அந்தக் கட்டுப்பாடுகளை நிறுவி கண்காணிக்க வேண்டியப் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு முறையில் பல ஓட்டைகள் இருந்தன.

SGL ரிசிப்ட்சை மட்டுமே கொண்டு இந்த ஊழல் நடைபெற்று விட வில்லை. மற்றொரு முறையையும் தரகர்கள் கையாண்டனர். இதுவும் பத்திரப் பரிமாற்றத்தில் இருந்த ஒரு ஓட்டைத் தான்.

Bank Receipt எனப்படும் BR மூலமும் பலக் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்தது. அது என்ன BR ?

பத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதிலாக வாங்கும் வங்கியும் விற்கும் வங்கியும் ரிசிப்ட் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்.

அதாவது பத்திரங்களை விற்கும் வங்கி இந்த BRல் பத்திரங்களை விற்பதாகக் கூறி வாங்கும் வங்கியிடம் கொடுக்கும். பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கும் வங்கி, குறிப்பிட்ட தேதியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடியும் பத்திரங்களை திரும்பக் கொடுப்பதாக இந்த BRல் ஒப்புக் கொடுக்கும். ஏறத்தாழ இது ஒரு ஒப்பந்தம் போலத் தான். இந்த ஒப்பந்தங்களை வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களின் பேரில் தான் மேற்கொள்ள வேண்டும்.

பத்திரங்களின் சேமிப்புக் கணக்கான SGL கணக்கு மூலமாகவே பத்திரங்கள் பரிமாறப்படுகின்றன என்று கடந்தப் பதிவில் பார்த்தோம். உண்மையான அரசு கடன் பத்திரங்கள் எப்பொழுதும் பரிமாறப்படுவதேயில்லை. மாறாக, SGL கணக்கில் இருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ற அளவில் ஒரு காசோலைப் போல SGL ரிசிப்ட்ஸ் தான் வழங்கப்படும் என்றும் பார்த்தோம். இந்த முறைப் படி BR பயன்பாட்டில் இருந்திருக்கவே கூடாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி BR மூலம் பரிவர்த்தனைச் செய்யக்கூடாது. ஆனால் இந்த முறை தான் பத்திர ஊழலில் மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்த SGL ரிசிப்ட்சை Public Debt Office (PDO) எனப்படும் ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஒரு பிரிவு தான் தன் பொறுப்பில் வைத்திருந்தது. குறிப்பிட்ட அளவுக்கு பத்திரங்கள் இல்லாவிட்டால் வங்கிகள் கொடுக்கும் ரிசிப்ட்ஸ் பவுன்ஸ் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே பத்திரங்கள் அளவு குறையும் பொழுது குறிப்பிட்ட வங்கிகளுக்கு அது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லாமே Paper Work காக இருந்தக் காலம்.

எனவே வங்கிகள் இந்த SGL ரிசிப்ட்சை அதிகமாகப் பயன்படுத்தாமல் நடைமுறை வசதிக்காக BR எனப்படும் Bank Receipt மூலமே தங்கள் பரிமாற்றதை செய்து கொண்டிருந்தன. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இம் முறை வழக்கில் இருந்தது.

வங்கிகளுக்கு இந்த BR முறையில் பல வசதிகள் இருந்தன.

  • BR மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கான இந்த டீல் முடிந்தவுடன் ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். பத்திரங்களை SGL மூலம் பரிமாறிக் கொள்வதிலுள்ள பிரச்சனைகள் இதில் கிடையாது.
  • பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறைக்கு BR உதவிகரமாக இருந்தது.

அது என்ன பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறை ?

இதற்குப் பெயர் Short Selling. பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் வழக்கிலிருக்கும் ஒரு முறை.

உங்களிடம் பத்திரங்களோ, பங்குகளோ இல்லாமலேயே விற்க முடியும்.

ஒரு நகையை விற்க வேண்டுமென்றால் உங்களிடம் கண்டிப்பாக நகை இருக்க வேண்டும். ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் தான் அதனை விற்க முடியும்.

ஆனால் பங்குகளிலும், பத்திரங்களிலும் மட்டும் தான் நம்மிடம் இல்லாதப் பத்திரங்களையும், பங்குகளையும் விற்க முடியும். இதற்கு பெயர் தான் Short Selling.

உதாரணமாக இன்போசிஸ் நிறுவனப் பங்கு சரியப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறது. தற்போதையச் சந்தை விலை 1900 ரூபாய். நீங்கள் ஒரு 100 பங்குகளை (உங்களிடம் இல்லாதப் பங்குகள்) விற்கலாம். சந்தைச் சரிகிறது. இன்போசிஸ் பங்குகளின் சந்தை விலை 1800 ரூபாய்க்குச் சரிந்து விடுகிறது. இப்பொழுது நீங்கள் 100 பங்குகளை வாங்கி விடலாம்.

நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 1800 = 1,80,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000

லாபம் = 10,000

இதற்கு நேர்மாறாக இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்து 2000ஐ எட்டினால், உங்களுடைய நஷ்டம் 10,000

நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 2000 = 2,00,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000

இதே முறையில் பத்திரங்கள் இல்லாமலே விற்று லாபம் பார்க்கலாம்.

ஒரு பத்திரத்தின் சந்தை விலைச் சரியப்போகிறது என்ற செய்தி ஒரு வங்கிக்குத் தெரியவரும். உடனே தன்னிடம் இல்லாதப் பத்திரங்களுக்கு ஒரு BR கொடுத்து விற்று விடும். சந்தை விலைச் சரிந்தப் பிறகு குறைவான விலையில் பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் லாபம் கிடைக்கும்.

BRல் இருக்கும் பல வசதிகளுக்காக வங்கிகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வர்த்தக முறையில் ஊழல் செய்வதற்கும் வய்ப்புகள் இருந்தன. இந்த வாய்ப்புகளைத் தான் ஹர்ஷத் மேத்தாவும் பிற புரோக்கர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்று அந்தப் பணத்தைப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரும் முறை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஏதோ ஒரு வங்கி மூலம் ஒரு BR.

கிரிமினல் மூளையுடைய ஹர்ஷத் மேத்தாவிற்கு இதற்கா வழி கிடைக்காமல் போய் விடும் ?


மேலும் படிக்க

Fundamental Analysis - P/E - 2

கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம்.

பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

P/E எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தால் இது தெளிவாகும். கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் P/E கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்று சொல்வார்கள். பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை leading or projected P/E என்று சொல்வார்கள்.

பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது. ஒரு பங்கின் உண்மையான மதிப்பை விட அது எதிர்காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது, பங்குகளின் விலையை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.

P/E = Market Price / Earnings

இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

Market Price = P/E * Earnings

ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த (ஜனவரி 2005 நிலவரம்) காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தன. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி".

P/E அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E = 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

மாறாக P/E = 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

PEG = P/E / (projected growth in earnings)

ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

ஒரு நிறுவனத்தின் P/E = 30, வளர்ச்சி விகிதம் = 15% என்றால்

PEG = 30/15 = 2

PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

References : Buffettology, Peter Lynch - One up on the wall Street மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 4

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Subsidiary General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதிகாரியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Subsidiary General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது.

சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை.

(எந்த தவறும் செய்யாமல் இந்த வழக்கில் சிக்கிக்கொண்ட பவ்தேக்கர் இன்றும் நீதி கேட்டு இந்திய நீதிமன்றங்களின் வாசலில் நீதிக்காக காத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்பொழுது அது குறித்து நான் எழுதிய பதிவு - நியாயம் கேட்டு ஒரு போராட்டம்


இந்திய நீதிமன்றங்களின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக வலைப்பதிவுகளில் உலாவிக் கொண்டு இருக்கும் "சிலருக்கு" இது எல்லாம் தெரியாது என்று நம்புகிறேன். இடஒதுக்கீடு, மரணதண்டனை போன்ற வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள், இந்த வழக்கு குறித்தும் நீதிமன்றத்துக்கு ஆதரவாகவும், எனக்கு நீதிமன்றங்கள் செயல்படும் முறை தெரியவில்லை என்றும் பின்னூட்டம் எழுதி விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்)


மேலும் படிக்க

Fundamental Analysis - P/E - 1

முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, ஒரு நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, அந்தப் பங்குக்கு நாம் கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை Fundamental Analysis என்று சொல்வார்கள்.

பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள்.
  • Fundamental Analysis
  • Technical Analysis
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.

இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.

நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.

பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.

உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள் சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.

இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம்.

பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/E Ratio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.

ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).

ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.

P/E = Market Price / EPS

Market Price = பங்குகளின் சந்தை விலை
EPS = ஒரு பங்குடைய லாபம்

EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.

EPS = Net Profit / No. of outstanding shares

அதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS

ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்

EPS = 35,000 / 10,000 = 3.5

இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.

சரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.

P/E = Market Price / EPS

பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்
ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5

P/E = 35/3.5 = 10

இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது ?

P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.

மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.

நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.

மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)

நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).

இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.

இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.

இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?

P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) ?

1 என்று இருக்கும் பங்குகளில் தானே ? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.

அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire 10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.

நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிக வளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.

புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.

என்ன குழப்பமாக இருக்கிறதா ? அடுத்தப் பதிவில் P/E பற்றித் தொடர்கிறேன்.

குழப்பம் தெளிகிறதா என்று பார்ப்போம்.

References : Buffettology, Peter Lynch - One up on the wall Street

இந்தப் பதிவு ஜனவரி 24, 2005ல் எழுதப்பட்டது. இந்தப் பதிவின் பின்னூட்டங்களையும், தொடர்புடைய பிற சுட்டிகளையும் படிக்க இங்கே செல்லலாம் மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 3

பாகம் 1, பாகம் 2

கடந்த பதிவில் தரகர்களிடையே வங்கிகளின் கோடிக்கணக்கான பணம் எவ்வாறு கைமாறுகிறது என பார்த்தோம். இவ்வாறு பெரும் பணம் நம் மூலம் கைமாறும் பொழுது "அந்தப் பணத்தை நம் கணக்குக்கு கொண்டு செல்லலாமா ?” என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. சிலருக்கு தோன்றியவுடன் மறைந்து விடும். நியாயம் இல்லை என்றோ, அவ்வாறு செய்வதற்கான வழி வகை தெரியாமலோ, இல்லை பயத்திலோ இதைப் பெரும்பாலானோர் செய்வதில்லை. ஆனால் இதனை எப்படி செயல்படுத்த முடியும் என்று சிலர் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் தான் கிரிமினல்கள். ஹர்ஷத் மேத்தாவும் அதைத் தான் செய்தான்.

இவ்வாறு கைமாறும் பணத்தை தன் வங்கிக் கணக்குக்கு கொண்டு சென்று விட்டால் என்ன என்று தோன்றியவுடன் ஒரு வழி அவனுக்குத் தென்பட்டது. Account Payee காசோலைகள் குறிப்பிட்ட கணக்குகளில் மட்டுமே வரவு செய்யப்படும் என்பது நமக்கு தெரியும். என் பெயருக்கு வரும் காசோலையை உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் நிச்சயமாக வரவு செய்ய முடியாது. ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உண்டு.

ஒரு "வங்கியின் பெயரில்" Account Payee முறையில் வரும் காசோலைகள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் தவிர Current Account என்று சொல்லப்படுகிற ஒரு பெரிய நிறுவனத்தின் (Privileged/Corporate Customer) வங்கிக் கணக்குகளில் வரவு செய்து கொள்ள முடியும்.

ஏன் இந்த முறை பின்பற்றப்பட்டது ? இதுவும் ஒரு விதிமீறல் தான். ஆனால் வழக்கில் இருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமீறல்.

நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சுமார் 100 கோடி பணம் முதலீடு செய்ய உடனடியாகத் தேவைப் படுகிறது. ஒரு வங்கியிடமிருந்து (A வங்கி) கடன் பெறுகிறீர்கள். உங்களுடைய வங்கிக் கணக்கு வேறோரு வங்கியில் இருக்கிறது (B வங்கி). A வங்கியில் இருந்து, உங்கள் பெயருக்கு கடன் பெற்று B வங்கியில் உள்ள உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவு செய்ய வேண்டுமெனில் உங்களுக்கு குறைந்தது 2 நாட்கள் தேவைப்படும். முதலீடு, கடன் என்று வரும் பொழுது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முக்கியம். இவ்வாறு இரண்டு நாட்கள் உங்களுக்கு வர வேண்டிய பணம் காலதாமதாகும் பொழுது, அதனால் ஏற்படும் வட்டி இழப்பு மட்டும் பல லட்சங்கள்.

இதைத் தவிர்க்க சில முறைகளை வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கின்றன. இது எல்லா வங்கிகளும் தங்கள் Privileged Customer க்கு செய்து தரும் ஒரு வசதி. அதாவது நீங்கள் A வங்கியிடமிருந்து கடன் பெறும் பொழுது, உங்கள் பெயருக்கு கடன் பெறாமால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும் B வங்கியின் பெயரில் காசோலைகளைப் பெறுகிறீர்கள். ஏன் ?

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செல்லும் பொழுது, ரிசர்வ் வங்கியில் இரு வங்கிகளுக்குமே கணக்கு இருப்பதால் அதனைக் கொண்டு ஒரே நாளில் பணத்தைப் பெற்று விட முடியும். அதனால் B வங்கியின் பெயரில் பணத்தைப் பெற்று நீங்கள் தரும் காசோலை, உங்கள் வங்கிக் கணக்குக்கு உடனடியாக வரவு செய்யப்படும். இதன் மூலம் தேவையில்லாமல் ஏற்படும் காலதாமதம், வட்டி இழப்பு போன்றவை தவிர்க்கப்படும்.

பத்திரங்களும், காசோலைகளும் தரகர்கள் மூலமாகக் கைமாறும் பொழுது வங்கியின் பெயரில் வரும் காசோலையை தங்கள் கணக்குக்கு தரகர்கள் வரவு செய்து கொள்ளத் தொடங்கினர். அதாவது ஒரு வங்கியிடமிருந்து மற்றொரு வங்கிக்கு, பத்திரங்களைக் கொண்டு கடனாக வரும் தொகையை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொண்டு விட்டார்கள். இது கூட தவறில்லை தான். ஏனெனில் இவ்வாறு Repo மூலமாகச் செய்யப்படும் கடன் மிகவும் பாதுகாப்பான ஒரு கடன் முறை. தரகர்கள் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் சென்றாலும் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் எனும் பொழுது ஒரு நம்பகத்தன்மை இருந்தது.

பத்திரங்களைக் கொண்டு கடன் பெறும் முறையில் தரகர்கள் தங்கள் வங்கிக் கணக்குக்கு பணத்தைக் கொண்டு வந்து பின் வங்கிகளுக்கு தங்களின் கமிஷன் தொகையைக் கழித்துக் கொண்டு கடன் கொடுத்து கொண்டிருந்தனர். இவ்வாறு கடன் பெறும் முறையில் தரகர்கள் தயவு வங்கிகளுக்கு தேவைபட்டதால், இந்த நடைமுறை, அத்துமீறலாக இருந்தாலும் செவ்வனே நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த ஓட்டையைத் தான் ஹர்ஷத் மேத்தா மற்றும் ஹித்தன் தலால் போன்றோர் பயன்படுத்திக் கொண்டனர்.

பத்திரங்களைக் கொண்டு கடன் பெறும் முறையில், பத்திரங்களே இல்லாமல் கடன் பெற்று விடும் முறையை ஹர்ஷ்த் மேத்தா யோசிக்கத் தொடங்கினான். பத்திரங்களே இல்லாமல் எப்படி கடன் பெற முடியும் ? இவ்வாறு நடக்கும் பொழுது வங்கிகளைக் கண்காணித்து கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது ? ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு எப்படிச் சிதறிப் போனது ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம் மேலும் படிக்க