பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, March 03, 2005

பட்ஜெட் 2005 - 4 - Fringe Benefits Tax



இந்தப் பட்ஜெட்டின் மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம் - Fringe Benefits Tax. திரு.மாலன் தன் பதிவில் கூறியிருந்த இரண்டு இந்தியாவில், வளமான ஒரு இந்தியாவை எரிச்சல் படுத்தியிருக்கும் வரி.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் பலச் சலுகைகளுக்கு இந்த Fringe Benefits Tax மூலம் வரி விதிக்கப்படுகிறது. நிறுவனத்தின் நிறைய ஊழியர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்துவதால் இந்த வரி ஊழியர்களுக்கு விதிக்கப்படாமல் நிறுவனங்களுக்கு (Cost To Company) விதிக்கப்படுகிறது.

கீழே தரப்பட்டுள்ள பலச் சலுகைகளுக்கு இனி வரி விதிக்கப்படும்.

As many as eighteen categories of expenses are proposed to be covered. These include entertainment, festival celebrations, gifts, use of club facilities, food and beverages (excluding that at the work place), maintenance of guest house, conference, employee welfare, use of health clubs, sports and similar facilities, sales promotion including publicity, conveyance, tours and travel including foreign travel expenses, hotel boarding and lodging, running and maintenance of motor cars and aircrafts, consumption of fuel other than industrial fuel, use of
telephone, scholarship to the children of employees.

பெரிய பட்டியல் தான். இதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது - foreign travel expenses, hotel boarding and lodging. இதற்கு எழுந்த பலமான எதிர்ப்புக் காரணமாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த வரியால் அதிகம் பாதிப்படைவது மென்பொருள் நிறுவனங்கள் தான். வெளிநாட்டுப் பயணங்கள் மென்பொருள் நிறுவனங்களில் முக்கியமானது. வெளிநாட்டிற்கு System Study போன்றவற்றுக்குகாகச் செல்லும் வழக்கம் மென்பொருள் நிறுவனங்களின் தொழில் சார்ந்த நடைமுறை. வெளிநாட்டிற்குச் செல்லும் ஊழியர்களுக்கு வழங்கும் அலவுன்சங்கள், தங்கும் வசதிகள், போக்குவரத்துச் செலவுகள், இந்தியாவிற்கு பேசும் தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றுக்கு இப்பொழுது வரி கிடையாது.

உதாரணமாக நான் அமெரிக்காவிற்கு B1 விசாவில் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பயணம் மேற்கொள்ளாமல் என்னால் இங்கு வேலை செய்ய முடியாது. அங்குச் சென்று அங்குள்ள தேவைகளை அறிந்தப் பின் தான் இந்தியாவில் அந்தப் பணியைச் செய்ய முடியும்.

இதற்கான விமானச் செலவு தவிர அங்கு தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தொகையை அலவுன்சாக கொடுப்பார்கள். ஹோட்டலில் தங்கும் செலவு, போக்குவரத்துச் செலவு, தொலைபேசிச் செலவு என அனைத்தும் எனக்குத் தரப்படும் சலுகைகள்.

எனக்கு அலவுன்சாக தரப்படும் தொகையை நான் சேமித்து இந்தியாவிற்கு எடுத்து வந்தாலும், இந்தத் தொகைக்கு எந்த வரியும் கிடையாது. எனது நிறுவனம் தன் கைவசமுள்ள அந்நியச் செலவாணி மூலமாக எனக்கு இதனை தருவதால் எனது நிறுவனத்திற்கும் வரி கிடையாது.

ஆனால் சிதம்பரம், இவ்வாறு செலவு செய்யப்படும் தொகைக்கு வரி கொண்டு வந்துள்ளார். 30% வரி இந்த தொகை மீது விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த வரி எனக்கு விதிக்கப்படாது. எனது நிறுவனத்திற்க்கு விதிக்கப்படும் (Cost to Company).

இது தான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மென்பொருள் நிறுவனங்களில் வெளிநாட்டுப் பயணம் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கணிசமானத் தொகை இந்தப் பயணத்திற்காகச் செலவிடப்படுகிறது. இன்போசிஸ், விப்ரோ, சத்யம் போன்ற நிறுவனங்களின் லாபத்தில் சுமார் 1% இந்த புது வரிக்குச் சென்று விடும் என்று இந் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் சிறிய மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தப் புது வரி கணிசமான இழப்பை ஏற்படுத்தும். லாபத்தில் 5% மேல் இழப்பு ஏற்படும் என்று இந் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

சிலப் பிரிவுகளை மறுபரிசீலனைச் செய்வதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். தொழில் சார்ந்த செலவுகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணம் போன்றவற்றின் மீதான வரியில் மாற்றம் இருக்கும்.

ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மீதான வரி தொடரக்கூடும்.

மென்பொருள் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஏராளமானச் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த புது விரி காரணமாக எழக்கூடிய பிரச்சனனகள் குறித்து இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தச் சலுகைகள் பறிபோய் விடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சலுகைகளை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் சம்பளம் உயரக் கூடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக என் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு சம்பளம் தவிர ஒரு குறிப்பிட்ட தொகை பொழுபோக்குக்காக என் நிறுவனத்தால் ஒதுக்கப்படுகிறது. இது சம்பளம் தவிர கூடுதலாக தரப்படும் ஒரு சலுகை. இது எனக்கு பணமாக கிடைக்காது. சுற்றுலா, Fisherman Cove க்குச் சென்று ஜாலியாக ஒரு நாளைச் செலவிடுவது என்று இந்தப் பணம் செலவழிக்கப்படுகிறது. போக்குவரத்து, ஹோட்டலில் டின்னர் போன்றவற்றுக்குச் செலவிடப்படும் தொகைக்கு தற்பொழுது எந்த வரியும் கிடையாது. ஆனால் இந்தப் புது வரியால் 15% - 30% வரி விதிக்கப்படுகிறது.

இதனால் என்ன நடக்கும் ? எனக்கு இந்தச் சலுகை பறிபோகலாம்.

அல்லது இந்தச் சலுகைக்கிற்கு ஒதுக்கப்படும் தொகை சம்பளத்தில் சேர்க்கப்படலாம். நிறுவனங்களும் அதே தொகையைச் செலவு செய்யும் கூடுதல் வரியில் இருந்தும் தப்பிக்கும்.

இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஊழியர்களுக்கு பாதிப்பும் இருக்கும். பாதகமும் இருக்கும்.

நிதியமைச்சர் இந்தச் சலுகைகளை வெறும் பொழுதுபோக்குச் செலவுகளாக பார்ப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. இது பொழுது போக்குச் செலவுகள் தான் என்றாலும் நிறுவனங்கள் ஏன் இந்தச் செலவுகளைச் செய்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இதனையும் தொழில் சார்ந்தச் செலவாகத் தான் நான் நினைக்கிறேன்.

எப்படி ?

நாம் இப்பொழுது ஒரு புதிய மேலாண்மையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் மேலாண்மைக்கும் பிறத் துறைகளில் இருக்கும் மேலாண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. பத்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்குச் சென்றால் மேலாளரிடம் டோஸ் வாங்கும் கதையெல்லாம் அரசு நிறுவனங்களில், சிறிய நிறுவனங்களில் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நான் அனுபவப்பட்டதில்லை. சில மணி நேரங்கள் தாமதமாகச் சென்று சில மணிநேரங்கள் மட்டுமே பணியாற்றி விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். எந்த மேலாளரும் இதற்கு டோஸ் விட்டதில்லை. வெள்ளிக்கிழமை வந்தால் அலுவலகத்தில் இருக்கும் சிலர் 3 மணிக்கே வீட்டிற்கு கிளம்பி விடுவார்கள். யாரும் இதனையெல்லாம் கண்டு கொண்டதில்லை. இங்கு தேவை End Result மட்டுமே.

ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்துக் கொண்டிருக்காமல் ஒரு மாறுதல் தேடி சுற்றுலாவுக்கு தங்கள் ஊழியர்களை நிறுவனங்கள் அழைத்துச் செல்கின்றன. இது மாறுதலுக்காக மட்டும் இல்லை. Team Building என்றும் சொல்வார்கள். இந்தப் பயணம், பொழுதுபோக்கு மூலமாக பணியாற்றும் திறன் அதிகரிக்கரிக்கிறது (Productivity). இதனாலேயே இத்தகைய பொழுதுபோக்குகளுக்கு கணிசமானத் தொகை செலவழிக்கப்படுகிறது. இவ்வாறு செலவழிக்கப்படும் தொகைக்கு வரியும் இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்பொழுது நிறுவனங்கள் இந்தச் செலவுகளை தொடருமா என்று தெரியவில்லை. பெரிய நிறுவனங்கள் தொடரலாம். சிறிய நிறுவனங்கள் நிறுத்தலாம்.

இது தவிர அவ்வப்பொழுது ஊழியர்களுக்குச் சில Gifts வழங்கப்படும். இது ஊழியர்களை ஊக்கப்படுத்தும் ஒரு நடவடிக்கை. நிறுவனங்கள் CMM போன்ற நிலையை அடைந்தால் அதனைக் கொண்டாடும் விதத்தில் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுப் பொட்கள் வழங்குவார்கள். இது வெறும் Gifts அல்ல. இந்த வெற்றியில் உனக்கும் பங்கு இருக்கிறது என்று ஊழியர்களுக்கு அறிவிக்கும் செயல். இதன் மூலம் அவர்களின் Morale, Committment போன்றவையும் அதிகரிக்கிறது. இனி இந்தப் பரிசுகள் கேள்விக்குறி தான்.

இது தவிர ஊழியர்கள் பயன்படுத்தும் தொலைபேசிச் செலவுகள் போன்றவற்றுக்கும் இனி வரி உண்டு. வீட்டில் தொலைபேசி இருந்தாலும், கையில் செல்பேசி இருந்தாலும், அலுவலகத் தொலைபேசியையே பயன்படுத்தும் பலருக்கும் இனி பிரச்சனை தான் :-)

தனியார் நிறுவன ஊழியருக்கு தரப்படும் சலுகைக்கு இவ்வாறு வரியைக் கொண்டு வரும் அரசு, தன்னுடைய ஊழியர்களுக்கும் இந்த முறையை கொண்டு வருமா ? இந்த வரி மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு வரி உண்டு. ஆனால் "நம் மக்கள் பிரதிநிதிகள்" சென்னைக்கும் தில்லிக்கும் இடையே மேற்கொள்ளும் விமானப் பயணங்களுக்கு எந்த வரியும் இல்லை.

இதைப் போலவே அரசு ஊழியர்கள் அனுபவிக்கும் பலச் சலுகைகளுக்கு வரியே இல்லை. அரசு தனக்குத் தானே வரி விதித்து கொள்வதில் எவ்வித லாஜிக்கும் இல்லை தான். ஆனால் இந்த வரியால் எனது சலுகை பறிபோகிறது என்னும் பொழுது இது ஏற்றத் தாழ்வு தானே ?

ஒரு நிறுவனத்திற்கு Corporate Tax போன்ற வரி விதிக்கப்படுகிறது. தனது வரியெல்லாம் போக மீதம் உள்ள தொகையை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கும் உரிமை ஒரு நிறுவனத்திற்கு உண்டு. மாறாக நிறுவனம் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் வரி விதிப்பது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் மூக்கை நுழைப்பது போலத் தான்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இத்தகைய பொழுது போக்குகளுக்கு வரி விலக்கு 1997ல் ப.சிதம்பரத்தால் தான் அளிக்கப்பட்டது. அவரே அதனை மறுபடியும் மாற்றியிருக்கிறார்.

ஆனால் தொழில் சார்ந்தச் செலவுகளுக்கு வரியிருக்காது என்று நேற்று வெளியாகியுள்ள அறிவிப்பு நல்ல மாற்றம்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

நல்ல பதிவு. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைத் தவிர வேறு பிரசினைகளும் இருக்கின்றன.ஒரு பரந்த நோக்கில் , இன்று இந்தியப் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம், ' செலவழிப்பது' (கன்சம்ப்ஷன்) அதிகரித்திருப்பது ஒரு காரணம். மூன்று நான்கைந்து வருடங்கள் முன்பெல்லாம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும், பம்ப் பிரிம்ங் பொருளாதாரத்தை' உதைத்து எழுப்புவது' என்ற வசனங்களைக் கேட்டிருப்பீர்கள். இந்த பட்ஜெட்டில் அது இல்லை. அதன் ஒரு காரணம் செலவழிப்பது அதிகரித்ததால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள உந்துதல்தான்.
இன்னொரு அம்சம், இந்தியவின் ஜிடிபி யில் 52 சதவீதம் சேவைத் தொழில்கள். ஓட்டல், பயண ஏஜன்சி, உணவு விடுதிகள், போக்குவரத்து சேவைகள் இதெல்லாம் சேவைத் தொழில்தன். சேவைத் தொழிலுக்கு பண வரத்துக் குறைந்து வளர்ச்சி குன்றும்.
பொன்முட்டையிடும் வாத்தை அறுக்கிற வேலை இது.
மாலன்

5:07 AM, March 03, 2005
Anonymous said...

மாலன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. நான் இதனை ஒப்புக் கொள்கிறேன்.

வருமான வரி போன்றவற்றை குறைவாக வைப்பதன் முக்கிய இலக்கு மக்களை செலவழிக்க வைப்பதே. மக்கள் நிறைய செலவழித்தால் தான் பொருளாதாரம் வளர முடியும்.

அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைவது அம் மக்கள் அதிகம் செலவழிப்பதால் தான்.

பணம் அதிகம் உள்ள ஒரு துறைக்குப் புது வரி விதிப்பது, அந்தச் செலவுகளை முடக்கும் செயல் தான்.

5:46 AM, March 03, 2005
Anonymous said...

இது ஆஸ்திரேலியா மற்றும் நியுஜீலாந்து போன்ற நாடுகளிலிருந்து எடுத்து இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது போலத் தெரிகிறது.

http://www.anu.edu.au/finance/manual/1200/1201_1.htm
http://www.ird.govt.nz/fbt/overview/

நல்ல பதிவு.
-அலெக்ஸ் பாண்டியன்

By: Alex Pandian

9:06 AM, March 03, 2005