பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Saturday, December 25, 2004

பங்குகளும், சந்தையும்

எந்தப் பங்குகளை வாங்கலாம் ? குறியீடு மேலும் உயருமா ? இந்தப் பங்குகளை இவ்வளவு விலைக்கு வாங்கினேன் ? இது மேலும் உயருமா, சரியுமா ? விற்கலாமா, வேண்டாமா ? இது தான் பங்குச் சந்தை அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.

தரகு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் முதலீட்டாளர் கருத்தரங்குக்கு சென்று பாருங்கள். அங்கு வரும் அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாமே "Forecasting" தான். இது எகிறுமா ? குறியீடு எகிறுமா ? அனலிஸ்டும் ஏதாவது பங்குகளை சொல்வார். இவர்களும் அதை வாங்கி அப்படியே அடைகாத்து கொண்டிருப்பார்கள். மறுபடியும் விற்கலாமா என்று ஒரு கேள்வியை வேறு சில அனலிஸ்டுகளிடம் கேட்பார்கள். தொலைக்காட்சி மற்றும் வணிகபத்திரிக்கைகளில் நிச்சயம் இந்தக் கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் நேரம். அறிக்கை தாக்கல் செய்திருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனம் அந்நிய செலவாணியால் எதிர்பார்த்ததை விட குறைந்த லாபமே பெற்றிருந்தது. எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சத்தில் எல்லோரும் பங்குகளை விற்க தொடங்க பங்குகள் சரியத் தொடங்கின. ஒரு பிரபல ஆங்கீலத் தொலைக்காட்சி சேனலில் "Buy/Sell" என்றொரு நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகும். முதலீட்டாளர்களின் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அனலிஸ்டுகள் கலந்து கொண்டு விடையளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் தான் 50 இன்போசிஸ் பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கியருப்பதாகவும் அதனை விற்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். முதலில் விடையளித்த அனலிஸ்ட் இன்போசிஸ் பங்குகள் தற்பொழுது 1700 ரூபாயில் இருப்பதால் அதை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம் என்றார். மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். மற்றொரு அனலிஸ்டோ இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் எகிறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொன்னார். கேள்வி கேட்ட முதலீட்டாளர் நிச்சயமாக குழம்பிப் போயிருப்பார். வந்தவரை போதும் என்று விற்றும் இருக்கலாம். அவர் மட்டுமின்றி அவரைப் போல அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்த சிலராவது பங்குகளை அச்சத்தில் விற்றிருக்கலாம். எனக்கும்
கூட கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற எண்ணத்தில் நானும் சிலப் பங்குகளை சில தினங்களுக்கு முன்பு தான் 1700 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அன்று பங்குகள் சரிந்து 1680 ரூபாயில் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏன் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்துத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. ஆனாலும் விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்து விட்டேன்.

இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பங்குகள் 1800க்கு எகிறியது. சில வாரங்களில் 2000ஐ கடந்து விட்டது. கேள்வி கேட்ட முதலீட்டாளர் விற்காமல் இருந்திருந்தால் ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் பார்த்திருக்க கூடும்.

யார் இந்த அனலிஸ்டுகள் ? அனலிஸ்டுகளுக்கு பங்குகளைப் பற்றி ஆராய்ந்து சொல்வது தான் தொழில். தாங்கள் ஆராய்ந்தவற்றை வெளியே சொல்லும் பொழுது தங்கள் தொழிலுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பான டிப்சையே தருவார்கள்.

நீங்கள் என்னிடமே எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று கேள்வி கேட்டால் நான் என்ன யோசிப்பேன் ?

நம்மை பெரிய ஆள் என்று நினைத்து இவர் கேள்வி கேட்பதால் முதலில் நம் பெயரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சொல்லும் பங்கு இவருக்கு லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. அதைப் போல மிகப் பெரிய நிறுவனப் பங்குகளாகத் தான் சிபாரிசு செய்ய வேண்டும். நஷ்டமடைந்தாலும் பெரிய நிறுவனத்தின் மேல் தான் பழி விழும். நம்முடைய டிப்ஸ் மேல் பழி விழாது. இவ்வாறு யோசித்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இன்போசிஸ் பங்குகளையோ, HDFC பங்குகளையோ வாங்குமாறு சிபாரிசு செய்யலாம். இன்போசிஸ் சரிந்தால் கூட எதிர்பார்க்காத சில நிலவரங்களால் இவ்வாறு சரிந்து விட்டது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் எந்த அனலிஸ்களிடமாவது கருத்து கேளுங்கள். ஒரு பெரிய நிறுவனப் பங்குகளையே அவர் சிபாரிசு செய்வார். வளர்ந்து வரும் நிறுவனங்களையோ, குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களையோ சொல்லவே மாட்டார். "இந்தப் பங்கு குறைந்த விலையில் இருந்த பொழுது, நான் என் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தேன். இன்று அது பல மடங்கு உயர்ந்து விட்டது" என்பார். இவ்வாறு குறைந்த விலையில் உள்ள நிறுவனங்கள் தற்பொழுது ஏதாவது உண்டா என்றால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அது நடக்காமல் போய் விட்டால் அவரது பெயரும், நிறுவனப் பெயரும் ரிப்பேராகி விடும். நடந்தப் பிறகே நம்மிடம் சொல்வார்கள்.

அதைப் போல "Forecasting" என்பதெல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியவை அல்ல. இந்த வருடம் 6000ஐ குறியீடு நெருங்குவதே கடினம் என்று சொன்னார்கள். இன்று 6500ல் இருக்கிறோம். ஒவ்வொரு இலக்கையும் கடக்கும் பொழுது சரியும் என்றார்கள். முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். பங்குச் சந்தை 2000ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி அடையும் என்று எத்தனைப் பேர் சரியாக கணித்தார்கள். அல்லது 2004 ஆம் ஆண்டு 6500 ஐ எட்டி விடும் என்று எத்தனை அனலிஸ்டுகள் கணித்துச் சொன்னார்கள். 2005ல் பங்குச் சந்தை இலக்கு என்ன என்று யாராலும் கணிக்க முடியுமா ? 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா ? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

அதைப் போல பொருளாதாரத்தை கணித்தால் பங்குச் சந்தையை கணிக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மந்தப்படும் (Recession) என்று ஒரு கருத்தும்
உண்டு. ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொருளாதாரம் மந்தப்படுவதில்லையே. பொருளாதார வல்லுனர்களால் ஏன் 2000ம் ஆண்டு பொருளாதாரம் மந்தமானதை முன்கூட்டியே கணிக்க வில்லை. முன்
கூட்டியே கணித்திருந்தால் பங்குகளை முன்கூட்டியே விற்றிருப்பார்கள். பங்குச் சந்தையும் முன்கூட்டியே சரிந்து போயிருக்கும்.

ஆக சந்தையை கணிப்பதென்பது இது வரை சரியாக நடந்ததில்லை. இனிமேல் நடக்குமா என்றும் தெரியவில்லை.

இது வரை கூறியதை வைத்து நான் உங்களைச் சந்தைப் பக்கம் வராதீர்கள் என்று சொல்வதாகத் தான் நீங்கள் நினைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

நான் சொல்ல வருவது "பங்குச் சந்தையில் நம்பிக்கை வைத்து முதலீடு
செய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்".

ICICI வங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாடெங்கும் கிளைகளை தொடங்கிக் கொண்டே இருந்தால், பயனாளர்களுக்காக வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால் அது மேலும் வளர்ச்சி அடைவதாகத் தானே பொருள். அப்பொழுது சந்தை 3000மாக இருந்தால் என்ன 6500 ஆக இருந்தால் என்ன.
நிறுவனம் வளரும் பொழுது பங்குகளின் விலையும் உயரத் தானே செய்யும். பின் எதற்கு பங்குக் குறியீடுகளைக் கண்டு அஞ்ச வேண்டும் ?

பங்குக் குறியீடுகள் உயரும் பொழுது எல்லாப் பங்குகளும் உயர்ந்து விடுகிறதா என்ன ? சில மாதங்களுக்கு முன்பு பங்குக் குறியீடுகள் எகிறிய பொழுது மென்பொருள் பங்குகள் எகிறிக் கொண்டே இருந்தது. வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டே இருந்தது. இப்பொழுது குறியீடு உயரும் பொழுது வங்கிப் பங்குகள்
உயர்கிறது. மென்பொருள் பங்குகள் சரிகிறது. குறியீடுகள் உயருவதாலேயே நாம் வாங்கிய பங்குகளும் உயர்ந்து விடாது. எந்தப் பங்குகளை நாம் தெரிவு செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் லாபமும், நட்டமும். அவ்வப் பொழுது சந்தையில் நிகழும் மாற்றங்களை கண்டு அஞ்சாமல் இருந்தால் நல்ல நிறுவனப் பங்கு எப்பொழுதும் லாபம் தரும்.

சரி..நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி தெரிவு செய்வது ? அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.


Leia Mais…
Sunday, December 19, 2004

பங்குச் சந்தையின் எதிர்காலம்

இந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வைப் பெற்று விட்டு வெள்ளியன்று BSE 74 புள்ளிகளும், NSE 21 புள்ளிகளும் சரிந்தது. திங்களன்று நல்ல உயர்வுடன் தொடங்கி 6400 புள்ளிகளைக் கடந்த பிறகு, வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் குறியீடு சரிந்தது. நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு உயர்வுக்கும் அடுத்து லாப விற்பனையால் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. பங்குக் குறியீடு சரியும் பொழுது பங்குகளை வாங்குவதே காளைகளின் ஆளுமையில் இருக்கும் சந்தையில், லாபம் பெறுவதற்கான உத்தி. இந்தச் சரிவை, ஒரு வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும்.

இந்த வாரம் சரிந்த பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளே முதலிடத்தைப் பெறுகிறது. தொடரும் பங்காளிச் சண்டை தான் இந்தப் பங்குகளை கரடிகள் வசம் இழுத்துச் சென்று விட்டது. முகேஷ், அம்பானி சகோதரர்களிடையே நிகழும் சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே இருப்பதால் தற்பொழுதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையை பாதிக்க கூடிய எந்த நிகழ்வுகளும் மற்றப் பங்குகளில் நிகழாமல் பெரும்பாலான பங்குகள் லாப விற்பனையால் தான் சரிவடைந்தன.

இன்போசிஸ், விப்ரோ, TCS போன்ற மென்பொருள் பங்குகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரளவிற்கு லாபமுடன் இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதிகமாக கவனிக்கப்பட்டவை Pharma தொலைத்தொடர்பு மற்றும் வங்கிப் பங்குகள் தான்.

சரி...தற்பொழுதுள்ள நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் ?

இதற்கு எல்லா காளைகளிடமிருந்தும் பதிலாக வரும் தகவல்

"இது வரை எந்தப் பங்குகள் அதிகம் உயரவில்லையோ, அந்தப் பங்குகளை வாங்கலாம்"

அந்தளவுக்கு எல்லா துறைகளிலுமே பங்குகள் உயர் விலையில் உள்ளது.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது -

பங்குக் குறியீடு 5000ல் இருக்கும் பொழுதும், பங்கு விலை உயர் நிலையில் இருப்பதாகத் தான் சொன்னார்கள் (Current Valuations are stretched).
குறியீடு 5500, 6000 என ஒவ்வொரு இலக்கைத் தொட்ட பொழுதும் அதே கதை தான். தற்பொழுது 6400 என்ற இலக்கை தொடும் பொழுது இதே கதை தான்.

நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் இத்தகைய காளைச் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய உத்தி என்ன ?

இந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதலீடுகளுக்குச் சாதகமாக இருந்த பொழுது 6200ஐ எட்டிய சந்தை, பின் இடதுசாரி ஆதரவை நம்பி காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கடும் சரிவுற்றது. ஆனாலும் கடந்த இரு மாதங்களாக குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் குறியீடு புதிய வரலாறுகளை படைத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை சுமார் 8பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகம். இந்த முதலீடுகள் தொடர்ந்தால் தான் பங்குக் குறியீடுகள் மேலும் உயர முடியும்.

ஆசியாவில் மிக அதிக முதலீடு இந்தியச் சந்தையில் தான் செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவில் உள்ள சீனா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீடுகள் பெருமளவில் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையே தற்பொழுது ஆசிய சந்தைகளில் முதலீடுகள் குவிவதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5% மாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையக் கூடும். அரசின் திட்டங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் 8% வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அடைந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளது. ஏனைய வளர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் பொழுது பணம் பெருகக் கூடிய இடத்தில் தானே முதலீடுகள் செய்வார்கள். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் வரையில் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி பெருகுவது, இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள், பொருளாதார அடித்தளம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசின் செயல்பாடுகளையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்க கூடிய செய்திகளையும் பொறுத்தே சந்தையின் ஏற்றம் அமையும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை 8% மாகவும், பற்றாக்குறையை பெருமளவிலும் குறைக்க அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள், நிகழ்காலத்தில் செயல்படுத்த முடியாத ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு போல மாறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தளவுக்கு அரசியல் சூழ்நிலைகளால் உள்நாட்டில் உயர்த்த முடியாமல் போனது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அரசு அறிவித்த வரிச் சலுகை, இந்த உயர்வு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடையமுடியவில்லை, பற்றாக்குறையையும் குறைக்க இயலவில்லை. வறட்சி, வெள்ளம் என்று இரண்டு சூழலிலும் விவசாயம் அல்லாடியது. ஆனாலும் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பற்றிய கனவில் சந்தை நடைபோடு கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இருந்த இந்தக் கனவு வெளிநாட்டவருக்கும் தொற்றிக் கொண்டதால் தான் முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் பகல் கனவு அல்ல. அரசின் செயல்பாடுகள் சரியாக அமைந்தால் நடக்க கூடிய ஓன்று தான். அரசு வேகமாக செயல்படவேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான சலுகைகளை குறைத்தாகவேண்டும் என்று அரசுக்கு தொழில் துறையில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது நிர்பந்தம் ஏற்படும். எந்த அரசாலும் அரசியல் காரணங்களால் இந்த சலுகையை முற்றிலும் அகற்ற இயலாது. அப்படி அகற்றுவது மத்தியதர மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு பெரும் சுமையாக கருதப்படும். ஆனால் படிப்படியாக இந்தச் சலுகையை குறைக்கலாம். அதைப் போலவே எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் துறையில் மட்டும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு நிறுவனங்களும் ஒரே துறையில் போட்டி நிறுவனங்களாக செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு யோசித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஒன்றையும் செயல்படுத்த முடியவில்லை.

இது போலவே பொருளாதார சீர்திருத்தங்களும் வேகமாக செயல்படவில்லை. உள்கட்டமைப்பு இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாஜ்பாயின் கனவுத்திட்டமாக செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் பூர்த்தியடையவில்லை. இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்களில் லாபம் காண நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய தேவையிருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எளிதில் லாபம் கிடைக்கக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்கின்றனர். அரசுக்கும், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்திற்கும் சாதகமான ஒரு செயல்திட்டம் வரையப்பட வேண்டும். முதலீடுகளை லாபம் தரும் துறைகளில் தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்பட்டால் முதலீடுகள் தானாக இந்தத் துறையில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக வாரி வழங்கும் இலவச மின்சாரம் போன்றவை சீர்திருத்தப்பட்டு, அரசுக்கு லாபம் வர வழி காணப்பட வேண்டும். மின் உற்பத்தியும், மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படுவது தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பகல் கனவு தான். என்றாலும் குறைந்தபட்சம் இலவச மின்சாரங்களையாவது நிறுத்த முயலவேண்டும். அப்பொழுது தான் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எந்தளவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து தான் முதலீடுகள் மேலும் குவியும். சனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் உள்ள நிலவரங்களுக்கேற்ப முதலீடுகள் பெருகவோ, சரியவோ வாய்ப்பு உள்ளது.

பங்குச் சந்தை தற்பொழுதுள்ள வரலாறு காணாத உயர் நிலையில் இருந்து அடுத்தக் கட்ட உயர் நிலைக்குச் செல்லும் என்ற கருத்தே முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களும் தரப்படுகிறது. 1992ல் பங்குச் சந்தை குறியீடு 4600ல் இருந்தது. 2004ல் 6400 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 40% வளர்ச்சி. ஆனால் இந்த 12 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6% வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பார்க்கும் பொழுது சந்தை இன்னும் அதிக உயர்வை பெற்றாக வேண்டும். இந்த வாதம் ஓரளவிற்கு ஏற்புடைய வாதமாகவே எடுத்துக் கொண்டாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்த வளர்ச்சி ஏன் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு முக்கிய காரணம் அரசியல் சூழ்நிலைகள். பல பிரதமர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்து விட்டோம். அமைந்த பல ஆட்சிகளில் ஒரு நிலையான ஆட்சி வாஜ்பாய் தலைமையில் தான் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெருமளவில் எழுந்த பங்குச் சந்தை ஊழல், 2000ம் ஆண்டு உலகளவில் இருந்த பொருளாதார தேக்க நிலை போன்றவை இந்த உயர்வை பாதித்திருக்க கூடும். அதைப் போலவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பொழுது குறியீடு 700 புள்ளிகள் சரிந்தது. வாஜ்பாய் அரசே தொடர்ந்திருக்கும் பட்சத்தில் இதை விட அதிக உயர்வை பங்குச் சந்தை பெற்றிருக்கலாம்.


பொருளாதார காரணங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் இவை எல்லாம் தான் பங்குச் சந்தையை சரிவுக்கும் உயர்வுக்கும் கொண்டு செல்கிறது. அவ்வப்பொழுது நிகழும் சரிவுகளை கண்டு அஞ்சாமல் முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால் லாபம் நிச்சயம் தான்.

தற்பொழுது இந்திய மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ளோர் வங்கிகள், அஞ்சல் துறை, அரசின் பத்திரங்கள் போன்ற
மிகவும் பாதுகாப்பான, ஆனால் லாபம் குறைந்த இடங்களில் தான் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எஞ்சியுள்ளோரையும் பங்குச் சந்தைக்கு அழைத்து வரக் கூடும். மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் எஞ்சியுள்ளோர் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் நிச்சயமாக பங்குச் சந்தை
ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்து வரும் வாரத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படாமல், நீண்ட கால முதலீட்டில், லாபம் தரக் கூடிய நல்லப் பங்குகளை தேர்வு செய்து, இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் நம் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்பவர்களே புத்திசாலி முதலீட்டாளர்கள்.


Leia Mais…
Wednesday, December 15, 2004

உயர்வு...உயர்வு...உயர்வு...

எல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வரலாறு காணாத உயர்வு என்று அலறி கொண்டிருக்கிறது. BSE குறியீடு 77 புள்ளிகள் எகிறி 6,402 க்கும், NSE குறியீடு 22 புள்ளிகள் எகிறி 2,029 க்கும் வந்துள்ளது. வரலாறு காணாத உயர்வு என்று எல்லோரும் அலறும் பொழுது சாமானிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமும், குழப்பமுமே மேலிடுகிறது.

குறியீடு, ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்தரப்படுத்திக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கும். அது கீழ் நோக்கி சரியுமா இல்லை மேல் நோக்கி உயருமா என்பது வாங்குபவர், விற்பவர் எண்ணிக்கை, பங்குகளைப் பற்றிய செய்திகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்தது. கடந்த வாரம் லாப விற்பனையால் சரிந்த சந்தை, இந்த வாரம் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதால் எகிறுகிறது. வரலாறு காணாத உயர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தற்பொழுது உள்ள நிலையில் இருந்து ஒரு புள்ளி உயர்ந்தாலும், அது வரலாறு காணாத உயர்வு தான்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பங்குச் சந்தையும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி உயருமா என்று கேள்வி கேட்டு கொண்டே பல உயர்வுகளை கோட்டை விட்டு விடுவோம். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு சரிவிலும் நல்லப் பங்குகளை வாங்கி அடுத்த கட்ட குறியீடு உயர்வில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனலிஸ்டும் ஒரு கதை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு வணிக இதழும், தொலைக்காட்சியும் தங்களது யுகங்களையும் அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அதில் தெளிவான ஒரு முடிவு எடுப்பது நம் மனநிலையைச் சார்ந்தே அமையும்.

சரி.. இன்று எந்தப் பங்குகள் எகிறியது ?

இன்று எல்லா துறைகளிலுமே நல்ல ஏற்றம் இருந்தது. தொலைத்தொடர்பு பங்குகளான பார்தி பங்குகள், Pharma பங்குகளான ரான்பேக்சி, சன் பார்மா போன்றவை எகிறியது.

அதைப் போல சிறிது வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த மென்பொருள் பங்குகள் எகிறத் தொடங்கியது. இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பெரும்புள்ளிகள் தவிர மிட்கேப் (MidCap) மென்பொருள் பங்குகளான ஹேக்சாவேர், ஜியோமேட்ரிக் சாப்ட்வேர் போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

தொலைக்காட்சிப் பங்குகளான ZEE தொலைக்காட்சி பங்குகள் என்று மிக அதிக உயர்வைப் பெற்றது.

ஆட்டோப் பங்குகளான மாருதி, டாட்டா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா போன்றவையும் நல்ல ஏற்றம் பெற்றன.

இன்று எல்லா துறைகளிலும் நல்ல ஏற்றம் இருந்தது.

அடுத்து வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும் ?

பங்கு விலை தற்பொழுது எகிறி உள்ளதால் லாபம் எடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க கூடும். அப்பொழுது பங்குக் குறியீடு சற்று சரியும். சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்து, குறியீடு சரியும் பொழுது நல்லப் பங்குகளாக வாங்குவது நல்லது.

Leia Mais…
Sunday, December 12, 2004

அச்சம், எச்சரிக்கை

அச்சம், எச்சரிக்கை - இவை இரண்டும் தான் கடந்த வாரம் சந்தையை வழி நடத்தியது. வரலாறு காணாத உயர்வைப் பெற்றப் பிறகு, இதற்கு மேல் பங்குகள் விலை ஏறுமோ, ஏறாதோ என்ற அச்சத்தில் முதலீட்டாள்ர்கள் தங்களது பங்குகளை விற்றதாலும், புதிதாக பங்குகளை வாங்காமல் ஒரு வித எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் இருப்பதாலும் கடந்த வாரம் சந்தை மந்தமாக இருந்தது. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் 70 புள்ளிகள் சரிவுற்றது.

கடந்த வாரம் சரிவுற்ற பங்குகளில், சிலப் பங்குகள் சந்தையை அச்சப்படுத்திய செய்திகளால் சரிவுற்றது. ஏனைய பங்குகளில் பெரும்பாலானவை லாபம் பெறும் பொருட்டு முதலீட்டாளர்கள் விற்றவைத் தான்.

செய்திகளால் சரிவுற்ற பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான் அதிகம் சரிவுற்றது.
சகோதரர்களிடையே தொடரும் தகராறால் முதலீட்டாளர்களுக்கு மறுபடியும் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் மீது அச்சம். பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.

அடுத்ததாக மென்பொருள் பங்குகள். சில வாரங்களாகவே டாலரின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. பிற நாணயங்களான, யுரோ, யென் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பில் உள்ள ஏற்ற நிலையால் மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தக் காலாண்டில் லாபம் குறைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி மென்பொருள் பங்குகளின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதால் இந்தப் பங்குகளை அனைவரும் விற்க தொடங்கி விட்டனர். இன்போசிஸ் நிறுவனப் பங்கு சில வாரங்களாகவே ரூ2000 - ரூ2100 க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே சத்யம், விப்ரோ மற்றும் ஏனைய மென்பொருள் பங்குகளும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பில் திடீர் விழ்ச்சி ஏற்பட்டது. இந்த விழ்ச்சி மற்றும் சத்யம், இன்போசிஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கும் புதிய ADR (American Depository Receipt - அமெரிக்க பங்குச் சந்தையில் இந்தியப் பங்குகள் லிஸ்ட் செய்யப்படுவதற்கான அறிவிப்பு) போன்றவை சத்யம், மற்றும் இன்போசிஸ் பங்குகளுக்கு ஊட்டச்சக்தியாக அமையக்கூடும்.

உலகச் சந்தையில் ஸ்டீல் விலையின் சரிவால் SAIL, TISCO போன்ற ஸ்டீல் பங்குகள் சரிவுற்றன.

இந்தப் பங்குகள் தவிர பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்களின் லாப விற்பனை (Profit Booking) காரணமாகவே சரிவுற்றன.

பங்குகளின் விலை எகிறும் காளைச் சந்தையில் நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்கள். தற்பொழுது, வங்கிகளின் சேமிப்பு கணக்கில் இருந்த நிறைய முதலீடுகள் பங்குச் சந்தையை நேக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் சந்தையில் உள்ள மந்த நிலை மற்றும் வெள்ளியன்று சந்தையின் சரிவு போன்றவை சாமானிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அச்சம் தேவையற்றது. தற்பொழுதுள்ள சந்தை நிச்சயமாக காளைச் சந்தை தான். சந்தையில் அவ்வப்பொழுது முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்பார்கள். பங்குக் குறியீடு சரியும். பின் சரிவுற்ற நிலையில் பங்குகளை வாங்கும் பொழுது சந்தை எகிறும். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சந்தை மேலும் வலுவாக முன்னேற வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்த முதலீடுகள் குறைந்து போகும் எனச் சொல்வதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. கடந்த வாரம் கூட சுமார் 300 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக முதலீடுகள் குவிந்து விட்டதால், அடுத்து வரும் வாரங்களில் வர்த்தகம் மந்தமாகும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இது வரை அதிக ஏற்றம் காணாத துறைகளில் முதலீடு செய்வது பலனளிக்கும். கடந்த சில வாரங்களாக வங்கிப் பங்குகளின் விலை ஏறி விட்டது. அது போலவே டாலரின் வீழ்ச்சியாலும், விலை உச்சத்தில் இருப்பதாலும் மென்பொருள் பங்குகள் தற்பொழுது கவர்ச்சிகரமானவை அல்ல. தொலைத்தொடர்பு பங்குகள், Pharma போன்றவை லாபம் தரும். பெட்ரோல் விலையின் வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் விலை ஏறக்கூடும்.

நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்குகளை வாங்க வேண்டும். சந்தையின் போக்கைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகளை வாங்குவது நல்லது. குறியிடுகள் சரிவது கண்டு அச்சமடைய தேவையில்லை. மாறாக அது நாம் புதிதாக பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.

Leia Mais…
Thursday, December 09, 2004

பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லக் கூடிய சில நல்ல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

முதலாவது, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ள முதலீட்டு கமிஷன். அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளைக் கொண்டு ஒரு உதாவாக்கரை கமிஷனை அமைக்காமல், திரு.ரத்தன் டாட்டா தலைமையில், ICICI யைச் சேர்ந்த திரு.அசோக் கங்குலி, HDFC ன் திரு.தீபக் பரேக் ஆகியோரைக் கொண்டு மூன்று நபர் முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்கும். இந்த முதலீடுகள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதற்குரிய தீர்வுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கும். ரத்தன் டாட்டா போன்ற தொழில் துறையின் மதிப்பைப் பெற்றவர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஒரு ஸ்டார் வேல்யுவுடன் முதலீட்டாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.

தற்பொழுதுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.5% - 7% கடந்து, 8% முதல் 10% ஐ கடந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் முன்னேற வேண்டுமானால் நாட்டின் உள்கட்டமைப்பின் தரம் உயர வேண்டும். தற்பொழுது பெங்களுர் போன்ற பெரிய நகரங்கள் பெருகி வரும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழி பிதுங்கிப் போய் உள்ளது. இன்போசிஸ் போன்ற இந்தியா நிறுவனங்களே பெங்களுர் தவிர முதலீடு செய்ய வேறு நகரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சென்னை ஓரளவுக்கு அவர்களின் எதிர்பார்பை தீர்க்க கூடும். ஆனால் இங்கே கூட பழைய மகாபலிபுரம் சாலையில் திட்டமிடப்பட்ட வேகத்தில் I.T.ஹைவேக்கான வேலைகள் நகராமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மகேந்திரா சிட்டி போன்ற தொழில் நகரங்களை செங்கற்பட்டு எல்லையில் தான் உருவாக்க முடிகிறது. பெரிய நகரங்களை விடுத்து இரண்டாவது கட்ட நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது கட்ட தொழில் நகரங்களை திட்டமிட்டு உருவாக்கினால் தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) இந்தியாவிற்குள் ஈர்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகிறது. தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் முதலீடு தேவை. ஆண்டுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்பட்டாலும், தற்பொழுது சுமார் 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கே முதலீடுகள் வருகிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டாலும், சீனாவில் செய்யப்படும் 50 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவிற்கு வரும் முதலீடு சொற்ப அளவு தான்.

தேவைப்படும் முதலீடுகளை ஈர்க்கத் தான் இந்த முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கமிஷனால் சாதிக்க முடியுமா ?

தொழில் துறையில் அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கிய இந்தக் கமிஷனால் முதலீடுகளை இந்தியாவின் பக்கம் நிச்சயம் ஈர்க்க முடியும். அரசாங்க அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளை இந்தக் குழுவினால் புரிந்து கொள்ள இயலும். அவர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும். அரசாங்கத்திற்குள்ள சங்கடங்களையும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளையும் அறிந்து அதற்கேற்ப ஒரு பேலன்சடு -Balanced நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். ஆனால் எல்லா கமிஷன்களையும் போல சில அரசியல் பிரச்சனைகளை இந்தக் கமிஷனும் எதிர்கொண்டே ஆக வேண்டும். இது இந்திய அரசியலில் தவிர்க்க இயலாதது. எந்தளவுக்கு அந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கம் ஈடுகொடுக்கிறதோ அந்தளவுக்குத் தான் இந்தக் குழுவின் வெற்றியும் இருக்கும்.

அடுத்ததாக இந்திய பங்குச் சந்தையில் குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் (FII Investment). கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவிந்துள்ளது. 2004ம் ஆண்டு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்களுக்கு முதலீடுகள் குவிந்துள்ளது. இது தான் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரு ஆண்டில் செய்யப்பட்டிருக்கும் மிக அதிக பட்ச முதலீடு. வெளிநாட்டு முதலீடுகள் பங்குச் சந்தையில் குவியும் பொழுது பங்குக் குறியீடுகள் எகிறும். இந்த ஆண்டு துவக்கத்தில் முதலீடுகளுக்கு சாதகமான பா.ஜ.க. அரசு இருந்த பொழுது முதல் நான்கு மாதங்கள் பங்குச் சந்தையில் முதலீடுகள் குவிந்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று இடதுசாரிகளின் ஆதரவால் அரசு அமைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டு முதலீடுகள் சரியத்தொடங்கியது. மிக மோசமாக மே மாதத்தில், இடதுசாரி தலைவர்களின் சில பொறுப்பற்ற பேச்சால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள, பங்குக் குறியீடு சரியத் தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்குப் பிறகு அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக முதலீடுகள் பெருகத் தொடங்கியது.

ஆனால் கடந்த இரு மாதங்களாக அந்நிய முதலீடு ஏன் இவ்வளவு வேகமாக குவிகிறது ? இந்திய பொருளாதாரம் மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, வலுவாக இருக்கும் நாட்டின் பொருளாதார அடித்தளம் எனப் பல காரணங்களை சொல்லலாம், என்றாலும் மிக முக்கிய காரணம் மந்தமடைந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம். அந்தச் சந்தையில் முதலீடு செய்வதை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபம் தரும் என்பதால் பல முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஆசிய நாடுகளில் குவிக்கத் தொடங்கியுள்ளது. மார்கன் ஸ்டேன்லி கேப்பிடல் இண்டர்னேஷனல் (MSCI Index) ஆசியாவிற்கான குறியீட்டு உயர்வு விகிதத்தில் இந்தியா 12% உயர்வுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சீனா, கொரியா போன்ற நாடுகளை விட இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி இம் மாதம் அதிகரித்துள்ளது. இந்த முதலீடு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது, அடுத்த பட்ஜெட்டிற்குப் பிறகு பட்ஜெட்டிற்கு ஏற்ப முதலீடுகள் மேலும் குவியும் அல்லது குறைந்து போகும். ஆனால் முதலீடுகள் அதிகரிக்கத் தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு பங்குச் சந்தையில் குவிவது நல்ல செய்தி தான் என்றாலும் இந்திய பொருளாதாரம் மேலும் முன்னேக்கி நகர வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக வேண்டும். தனியார் வங்கிகளில் 74% அளவுக்கு அந்நிய முதலீடுகளை பெருக்குவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆனால் இன்னமும் நடைமுறைப் படுத்தப் படாமல் இருக்கும் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும். விவசாயம், மனித வள மேம்பாடு போன்ற இது வரை அதிகம் கண்டுகொள்ளப் படாமல் இருக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தவிர கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவாணியை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவால்யா ஆகிய இந்தியாவின் சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களை உள்ளடக்கிய அரசு இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நல்ல திட்டங்களை திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் தான், அதற்கு அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தான் இந்தியாவின் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் மேலும் வளர்ச்சி அடையும்.

Leia Mais…
Sunday, December 05, 2004

பங்கு வர்த்தகம் சூதாட்டமா ?

பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.

சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.

சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.

சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.

விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.

பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.

பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.
நான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.

மார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது ? அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன ? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.

அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம் (ஆராய்தல் பற்றிய முந்தையப் பதிவு). தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.

Leia Mais…
Thursday, December 02, 2004

வரலாறு காணாத உயர்வு

இந்த வார துவக்கத்தில், சந்தை கரடிகளின் வசமாகப் போவதாகத் தான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ரிலயன்ஸ் நிறுவனத்திற்காக அம்பானி சகோதரர்களிடையே நடைபெற்ற சொத்து தகராறு (இது பற்றிய பதிவுகள் - 1, 2) காரணமாக சந்தை சரியக்கூடுமென அனைவரும் எதிர்பார்க்க, அதற்கு நேர்மாறாக சந்தை எகிறத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கிக் குவிப்பதால் குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2004ம் ஆண்டு மட்டும் 7பில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். இந்த வாரமும் வெளிநாட்டு முதலீடுகளே பங்குக் குறியீடுகளை வரலாறு காணாத உச்சத்தை அடைய வழி வகுத்துள்ளது. தற்பொழுது BSE குறியீடு 6328 புள்ளிகளையும், NSE குறியீடு 2000 புள்ளிகளையும் எட்டியுள்ளது.

வங்கிப் பங்குகள், எண்ணெய் நிறுவனப் பங்குகள் என சில வாரங்களுக்கு முன்பு வரை யாருமே அதிகம் சீண்டாத பங்குகள் தான் சக்கை போடு போடுகிறது. செவ்வாயன்று அதிக எழுச்சியுடன் காணப்பட்ட இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள், அதற்குப் பின் சரிந்து விட்டது. கடந்த இரு வாரங்களாகவே மென்பொருள் பங்குகள் அதிக உயர்வைப் பெறவே இல்லை. ஏற்கனவே இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் மீது கவனம் செலுத்தவில்லை. அது மட்டுமில்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதால், இந்தக் காலாண்டில் மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில், அந்நிய செலாவணியால் இழப்பு ஏற்படலாம் என்ற செய்தியும் முதலீட்டாளர்களை இந்தப் பங்குகள் வாங்க விடாமல் செய்து விட்டன.

வங்கிப் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்று எல்லா வங்கிப் பங்குகளுக்குமே உய்ர்வு தான். எந்த வங்கியையும் யாரும் விட்டு வைக்க வில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 585ஐ எட்டியுள்ளது. இந்தப் பங்கு கடந்த மாதம் 430க்கு அருகே தள்ளாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பங்குகளில் HDFC, SBI எனப் பெரும்புள்ளிகள் மட்டுமில்லாமல் சிறிய வங்கிகளான பாங்க ஆப் இந்தியா போன்றவையும் நல்ல உயர்வு பெற்றுள்ளன.

சொத்து தகராறு காரணமாக எங்கே சரிந்து போய் விடுமோ என அனைவரும் அஞ்சிய ரிலயன்ஸ் பங்குகள், இந்த வாரத் துவக்கம் முதலே எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த வாரம் விலை சரிந்ததையடுத்து குறைந்த விலையில் இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ரிலயன்ஸ் நிறுவனத்தின் அடித்தளம் இந்தச் சொத்து தகராறால் சரிந்து விடப் போவதில்லை என்ற எண்ணமே முதலீட்டாளர்களை வழி நடத்தியது.

நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தையின் இந்த வார செயல்பாடுகள் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும். எல்லோருடைய எதிர்பார்ப்பிற்கும் நேர்மாறாக சந்தையின் வர்த்தகம் அமைந்து விட்டது தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். Technical Analysis ம் இந்த வாரம் பொய்யாகி விட்டது. ரிலயன்ஸ் பங்குகளை விற்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு, அந்தப் பங்குகள் லாபம் சம்பாதித்து கொடுத்தது கொஞ்சம் ஆச்சரியம் தான்.

பலரின் எதிர்பார்ப்புக்கும், Technical Analysis ம் நேர்மாறாக சந்தை ஏன் செயல்படுகிறது ?
சந்தை புரியாத புதிரா ?

பங்குச் சந்தையின் உயர்வு குறிப்பிட்ட நாளில் வாங்குபவர்கள், மற்றும் விற்பவர்களின் (Demand and Suppy) எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். இதனைப் பல நேரங்களில் சரியாக கணிக்க முடியாது. அந்த நாளில், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினால் பங்குகள் உயரும். எல்லோரும் பங்குகளை விற்க தொடங்கினால் சரியும். இந்த வாரம் அனலிஸ்டுகளின் எதிர்பார்ப்பும், Technical Analysis ம் பொய்த்துப் போனதன் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிப்பதால் தான். இதற்கெல்லாம் ஆருடம் கூற முடியாது. சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனலிஸ்டுகள் சந்தை சரிந்து போகும் என்று சொல்லி விட்டார்களே என்று சந்தையில் இருந்து ஓடி விடக் கூடாது.

சரி... தற்பொழுது வரலாறு காணாத உயர்வை பெற்றாகி விட்டது. அடுத்து என்ன ? புதிதாக முதலீடு செய்யலாமா ?

சந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். குறியீடுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கும் பொழுது முன்னேறும். பின் முதலீட்டாளர்கள் லாபமடையும் பொருட்டு பங்குகளை விற்கும் பொழுது சரியும். அந்த அளவில் கொஞ்சம் தள்ளாடும். பின் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் பொழுது மறுபடியும் எகிறும். இது ஒரு சுழற்ச்சி தான்.
சந்தையை சரியவைக்க அல்லது எகிற வைக்க கூடிய செய்திகள் வராத வரையில் இந்த சுழற்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.

இந்த வாரம் கூட இந்த சுழற்ச்சி ஏற்பட்டது.

திங்கள், செவ்வாய் கிழமைகளில் பங்குக் குறியீடுகள் எகிறியது. புதனன்று சரிவுற்றது. இன்று மறுபடியும் எகிறியுள்ளது.

தன்னுடைய The Intelligent Investor என்ற புத்தகத்தில் Benjamin Graham, "புத்திசாலி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு முதலீடு செய்ய மாட்டார்கள். பங்குச் சந்தை உயரும் பொழுது முதலீடு செய்வதும், சரியும் பொழுது விற்பதும் Speculators ன் வேலை. சந்தைக் குறியீடுகள் உயரும் பொழுது, பங்குகளின் விலையை, அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகம் உயர்த்துவதும், சரியும் பொழுது பங்குகளின் விலையை அதன் மதிப்பை விடக் குறைப்பதும் Mr.Market ன் தன்மை. பங்குகளின் உண்மையான மதிப்பை விடக் குறைவாக வாங்கி, அதன் சரியான விலையை விட அதிக விலையில் யார் விற்கிறார்களோ, அவர்கள் தான் புத்திசாலி முதலீட்டாளர்கள்" என்று கூறுகிறார்.

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீட்டால் சந்தை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீடு குறையும் பொழுதோ, முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் பொழுதோ சந்தை சரியும். இந்தியா போன்று, வளர்ச்சி அடையும் பொருளாதாரத்தை விட்டு அவர்களால் விலக முடியாது. எனவே இந்த உயர்வில் இருந்து அடுத்த கட்ட உயர்வை நோக்கி நாம் நகரப் போவது நிச்சயம்.

ஏற்றமும், இறக்கமும் இருந்தால் தான் பங்குகளை வாங்கி லாபமடைய முடியும். தற்பொழுதுள்ள நிலையில் இருந்து குறியீடுகள் சற்று சரியும் பொழுது, பங்குகளை வாங்கி விடலாம். இன்னும் குறையட்டும் என்று எதிர்பாத்துக் கொண்டே இருந்தால், குறியீடுகள் திடீரென உயரும் பொழுது நம்மால் அந்த உயர்வில் பங்கெடுக்க முடியாமல் போகலாம். எனவே சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் புத்திசாலி முதலீட்டாளராவது நம் கையில் தான் உள்ளது.

Leia Mais…
Friday, November 26, 2004

முதலீட்டின் முதல் படி : ஆராய்தல்

அனலிஸ்டுகள், நம்மைக் குழப்புவது பற்றிப் பார்த்தோம்.

அவர்களைப் பற்றி இப்படி கூட கிண்டல் செய்வார்கள்.

வானிலை அறிவிப்பிற்கும், அனலிஸ்டுகளின் பங்குச் சந்தை அறிவிப்பிற்கும் என்ன ஒற்றுமை ?
இவர்கள் இருவரும் எது நடக்கும் என்று சொல்கிறார்களோ, அது நடக்காது.
நடக்காது என்று சொன்னால் நடந்து விடும்.

பல நேரங்களில் நாம் பிறர் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. அது நமது தொட்டில் பழக்கமாகி விட்டது. அப்பா சொல்லி எதுவும் செய்யக்கூடாது என்ற முடிவில் சின்ன வயதில் இருந்தே திடமாக இருப்பதால், அந்தப் பழக்கம் பள்ளி, அலுவலகம் என்று தொடருகிறது. நாமே பல விடயங்களில் சிந்தித்து முடிவெடுக்கிறோம். பலருக்கு சிந்தனை செய்தே மண்டையில் கிரிக்கெட் பிட்சுகள் உருவாகி விடுகிறது.

பணம் என்று வந்து விட்டால், நிச்சயமாக மிக அதிகமாக சிந்திக்கிறோம். யாரோ சொல்வதைக் கேட்டு, வீட்டு கடன் வாங்குவதில்லை. என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என பல வருடங்கள் வாடகை வீட்டிலேயே இருந்து விட்டு, நாம் செட்டில் ஆன நினைப்பு வந்தவுடன் தான் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறோம். நான் கூட என்னுடைய ஆரம்ப கால சம்பாத்தியத்தை இப்படித் தான் யார் சொல்லியும் கேட்காமல் வீணாக்கினேன். வீடு ஒரு நீண்ட கால கடன். இந்த நீண்ட காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்லியே சில வருடங்கள் ஓடிப் போய் விட்டது. ஆரம்பத்திலேயே யோசித்திருந்தால் இந்நேரம் வீடு எனக்கு சொந்தமாகியிருக்கும். ஆனாலும் பாதகமில்லை. எனக்கு எது சரியென்று பட்டதோ அதையே செய்திருக்கிறேன். என்னுடைய பல நண்பர்களும் அப்படித் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய நெருங்கிய கல்லூரி நண்பன் ஒருவனிடம் பல ஆண்டுகளாக வீடு வாங்கு, வீட்டு வாடகை மிச்சம், வருமானவரி குறையும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் கேட்கவில்லை. இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கிறான். அவன் கொடுத்த வாடகையை கொண்டு பாதி வீட்டுக் கடனை அடைத்திருக்கலாம். சமீபத்தில் அவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு லட்ச ரூபாயை பங்குகளில் முதலீடு செய்ய ஆலோசனைக் கேட்டான். எனக்கு நான் வாங்கிய பல பங்குகளே நஷ்டத்தில் முடிவடைந்திருக்கிறது. இதில் அடுத்தவருக்கு நான் சிபாரிசு செய்யப் போக அது நஷ்டம் அடைந்தால், அவன் என்னை குறை சொல்லி விடக் கூடாதே என்ற அச்சத்தில், நீயே யோசி என்றேன். ஆனாலும் விடாமல் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்தான். சில பங்குகளை சொன்னேன். அதையே வாங்கி விட்டான். இப்பொழுது அவனை விட எனக்குத் தான் பயமாக இருக்கிறது.

நான் தொடர்ந்து எனது பங்குகளை கண்காணித்துக் கொண்டே இருப்பேன். சந்தை நிலவரத்திற்கேற்ப அதனை விற்று விடுவேன். அவனுக்கும் சேர்த்து என்னால் கண்காணிக்க இயலுமா என்ன ? வீட்டு கடனில் இருக்கும் பலன்கள் தெளிவாக தெரிந்தாலும் தனக்கு ஏற்ப சிந்தித்து அதன்படியே செயல்படும் நண்பன், நான் சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல், பங்குகளில் ரிஸ்க் எடுப்பது ஏன் ? பங்குகள் என்றவுடன் ஏதோ கிரேக்கமும், ரோமனும் போலத் தான் புரியாத புதிராக நமக்கு தெரிகிறது. "பங்குச் சந்தையைப் புரிந்து கொள்வது கடினம். கடினமான கணக்கு வழக்கு" என்று நாம் நினைக்கிறோம். அதனால் யாராவது டிப்ஸ் கொடுத்தால் அதனை அப்படியே பின்பற்றுகிறோம்.

அனலிஸ்டுகளை பின்பற்றக் கூடாது என்று நான் சொல்வதால் அனலிஸ்டுகளை ஜோக்கர்கள் என்று நான் சொல்வதாக பொருளில்லை. அனலிஸ்டுகள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைக்கும் பொழுது அந்த நிறுவனத்தைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கே சென்று அதனை ஆய்வு செய்து, அங்குள்ள ஊழியர்களிடம் உரையாடி, அவர்களின் பயனாளர்களையும், போட்டியார்களையும் ஆராய்ந்து பிறகு அந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தகுந்த விலையை நிர்ணயம் செய்து முதலீடு செய்வார்கள். அந்த நிறுவனத்தின் செயல்பாடு மாறுபடும் பொழுதோ, நிறுவனத்தின் போட்டியாளர்கள் புதிய திட்டத்துடன் பயனாளர்களை கவர்ந்து, தாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையும் பொழுதோ பங்குகளை விற்று விடுவார்கள்.

அனலிஸ்டுகள் சொன்னார்கள் என்று பங்குகளை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் விற்பதை நம்மிடம் சொல்லிவிட்டு விற்பதில்லை. அதனால் தான் பல நேரங்களில் அவர்களின் பேச்சைக் கேட்டு நாம் வாங்கிய பங்குகள் சரியும் பொழுது ஏமாந்து போகிறோம். அது போலவே அனலிஸ்டுகளின் கணக்குகள் பெரும்பாலும் Theoretical தான். இரு வேறு அனலிஸ்டுகள், ஒரே நிறுவனத்தைப் பற்றி இரண்டு வெவ்வெறு விதமான கோணங்களை தரக்கூடும். அதனால் தான் அனலிஸ்டுகள் சொல்வதை முற்றிலும் ஏற்காமல், முழுவதுமாக புறந்தள்ளாமல், அதனை அடிப்படையாகக் கொண்டு, நாமும் ஆய்வு செய்து, பங்குகளை வாங்கி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அனலிஸ்டுகள் போல நம்மால் பல கணக்குகளை போட இயலாமல் போகலாம். அதனால் ஒன்றும் பெரிய பாதகமில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களை கவனித்தாலே போதும். உதாரணமாக நாம் மென்பொருள் துறையில் இருந்தால், எந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்று பெரிய ஆய்வு செய்யத்தேவையில்லை. அதே துறையில் இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு ஏதாவது பிராஜட்கள் வந்திருக்கிறதா, புதிதாக க்ளயண்ட்கள் கிடைத்துள்ளார்களா என்ற தகவல்கள் நமக்கு எளிதாக கிடைத்து விடும். அதைப் போல வேலைக்குப் புதியதாக ஆட்கள் எடுக்கப்படுகிறதா, ஏதாவது பிராட்ஜட்கள் பறிபோய் விட்டதா என்ற தகவல்களைப் பொறுத்து நாம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

அதைப் போலவே நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம், நம் அலுவலகத்தில் உள்ளவர்கள் எந்த வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கிறார்கள், வங்கியின் வசதிகள் பற்றி என்ன நினைக்கிறார்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து எல்லோரும் ஏன் ICICI போன்ற தனியார் வங்கிகள் பக்கம் போகிறார்கள், பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல்சர் திடீரென்று அதிக அளவில் நண்பர்கள் மத்தியில் பேசப்படுகிறதே, ஹீரோ ஹோண்டா பைக்குகளின் எண்ணிக்கை குறைகிறதே என நம் அன்றாட வாழ்வில் கவனிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பங்குகள் பற்றிய ஆய்வு தான். பங்குகளின் உயர்வையும், சரிவையும் இவை தானே தீர்மானிக்கிறது. பல்சர் பைக் நன்றாக இருக்கிறது என்ற நம் எண்ணமே, பஜாஜின் விற்பனை அதிகரிக்கும் என்ற செய்தியை தெரிவிக்கிறது அல்லவா ? விற்பனை அதிகரித்தால் அதன் சந்தை மதிப்பீடு உயரத்தானே செய்யும். முதலீடு செய்ய இவை தகுதியானப் பங்குகள் தான் என்ற செய்தியையும் இந்த ஆய்வு தெரிவிக்கும் அல்லவா ? ஆராய்ந்து பங்குகளை வாங்க வேண்டும். அதுவும் சரியான நேரத்தில் வாங்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒவ்வொரு மணித்துளியும் பணத்தின் நிலை மாறும். பல்சர் அறிமுகமாகி, விற்பனை சூடு பிடிக்கும் நேரத்தில், பாஜாஜின் பங்குகளை வாங்க வேண்டும். அதை விடுத்து தற்பொழுது வாங்கினால் அதன் லாபத்திற்கு உத்திரவாதம் இல்லை. நேரம் மிக முக்கியம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஒன்றும் ஒரு பெரிய கலையில்லை. அனலிஸ்டுகள் ஒன்றும் சச்சின் போல பிறப்பிலேயே மேதைகளாக பிறப்பவர்கள் இல்லை. பங்குச் சந்தையின் மேதைகளுக்கு கூட அவர்கள் வாங்கிய எல்லாப் பங்குகளும் லாபத்தில் முடிந்ததில்லை. நாம் பத்து பங்குகளை வாங்கி, அதில் ஆறு லாபமடைந்தால் போதும். மற்ற நான்கு நஷ்டமானாலும் நமது Balance Sheet லாபமாகத் தான் இருக்கும்.

சரி...சென்னையின் (பெங்களுர், தில்லி என்ற எந்த நகரத்திலும்) சாலை நெரிசலில் அவஸ்தை படும் பொழுது, சமீப காலமாக கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். பைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் கார்களுக்கு மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன ஆய்வில் இறங்க வேண்டியது தானே ?

பி.கு : இந்தப் பதிவு, பங்குச் சந்தை மேதை Peter Lynch ன் சில கருத்துகளை தழுவி எழுதப்பட்டது. அடுத்து வரும் சில பதிவுகளும் அவரைப் போன்ற மேதைகளின் எண்ண அலைகளில், என்னை பாதித்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டவையாகத் தான் இருக்கும்.

Leia Mais…
Thursday, November 25, 2004

80,000 கோடிக்கான தகராறு

நம்மூரில் சில ஏக்கர் நிலத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். வரப்பு தகராறுகள், வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அதை சுவரசியமான சண்டையாக பார்த்திருப்போம். அவை நமக்கு அவை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் இன்று, யாரோ இருவரின் சொத்து தகராறு நம்மை பீதி அடைய வைக்கிறது. சண்டையிடப்படும் சொத்து மதிப்பு, பல ஆயிரம் கோடி. 80,000 கோடிக்கான தகராறு (அம்மாடியோவ்...). ரிலயன்ஸ் நிறுவனத்தின் உரிமைக்கான சண்டை, இப்பொழுது விஸ்ரூபம் எடுத்துள்ளது.

தீருபாய் அம்பானியின் மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் தான் இன்று எல்லா முதலீட்டாளர்களின் முதல் கவலை. சில மாதங்களாகவே வதந்தியாய் இருந்த செய்தி, இப்பொழுது வெளியாகி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. மறைந்த தீருபாய் அம்பானியின் இரு புதல்வர்கள் - முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. முகேஷ் மூத்தவர் - ரிலயன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர். அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்.

ரிலயன்ஸ் நிறுவன குழுமத்திற்குள் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஓட்டுமொத்த ரிலயன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தனது தந்தை தன்னை தான் நியமித்துள்ளதாகவும், தானே இதன் தலைவர் என்றும் முகேஷ் அம்பானி கூறுகிறார். அனில் இதனை ஏற்கவில்லை. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி மீடியாக்களில் அதிகம் தலைக்காட்டாதவர். ஒட்டு மொத்த குழுமத்தின் தலைவராகவும், ரிலயன்ஸ் இன்போகாம் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தின் (ரிலயன்ஸ் செல்போன்) தலைவராகவும் இருக்கிறார். Reliance Energy மற்றும் Reliance Capital போன்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அனில் அம்பானி மீடியாக்களில் அதிகமாக தென்படுபவர். ராஜ்யசபாவில் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.

இந்த இரு சகோதரர்கள் தவிர இரு சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களிடையே சமரசம் செய்ய அவர்களது தாய் கோகிலா பென் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிரச்சனை முற்றி விட்டது. குடும்பத்தில் சமரசம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நானே தலைவர் என்ற முகேஷின் அறிவிப்பு சமரசம் தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. இன்று அனில் அம்பானிக்கு ஆதரவாக உள்ளவர்கள் Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகி விட்டார்கள். சொத்து தகராறு தீவிரம் அடைவது, முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலியாகப் போகிறது.

இந்த சொத்து தகராறு, இன்று மட்டும் ரிலயன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் 2500 கோடி இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது.

ரிலயன்ஸ் பங்குகளில் இன்றைய சரிவு

Reliance Energy - விலை 549.10, சரிவு - ரூ34
Reliance Industries - விலை 503.55, சரிவு - ரூ11
Reliance Capital - விலை 136.25, சரிவு - ரூ3.75
IPCL - விலை 175.35, சரிவு - ரூ6.85

இன்று நல்ல லாபகரமாக சென்று கொண்டிருந்த வர்த்தகம், Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து சிலர் விலகிய செய்தியால் கடுமையாக சரிவுற்றது. 589 ஐ எட்டிய Reliance Energy பங்குகள், இந்த செய்தியால் அனைவரும் பங்குகளை விற்க தொடங்க, 549க்கு சரிவுற்றது.

ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களின் நிலை என்ன ?

ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவுற்று குறைந்த விலைக்கு வந்தவுடன், சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கியுள்ளனர். ரிலயன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் எதிர்காலம், இத்தகைய சிக்கல்களால் பாதிப்படையாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. நாட்டின் முதல் ஐந்து நிறுவனங்களில் ரிலயன்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் சந்தை மதிப்பீடு 15பில்லியன். இத்தகைய நிறுவனம் இந்த சொத்து தகராறால் தொய்வடைந்து விடாது. ஆனால் பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லக் கூடுமென தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு பிரச்சனை செல்லுமா? சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா ? நிர்வாகம் பாதிப்படையுமா ? ரிலயன்ஸ் ஒன்றும் மிகச் சிறந்த நிர்வாகத்தை கொண்ட நிறுவனம் அல்ல. தற்பொழுது தான் BSNL, MTNL போன்ற நிறுவனங்களுடனான பிரச்சனை முடிவடைந்தது. இது போன்ற பல நிர்வாக சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்ததுண்டு.

எனவே ரிலயன்ஸ் பங்குகள் மீது எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. ஏற்கனவே குறைந்த விலையில் பங்குகளை வாங்கியிருந்தால் பிரச்சனையின் போக்கிற்கு ஏற்றவாறு விற்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.

6000ஐ கடந்து 6100 ஐ நோக்கி சென்று கொண்டிருந்த சந்தை இப்பொழுது அம்பானிகளின் சொத்து தகராறால் 6000 அருகில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஏக்கருக்கும் குடுமிப்புடி சண்டை தான், 80,000 கோடிக்கும் அதே சண்டை தான்.

Leia Mais…
Saturday, November 20, 2004

பங்கு விலையும், முதலீடும்

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சாமானியர்களுக்கு, பங்குச் சந்தையின் வல்லுனர்களான - Analysts கள் சொல்வது பல நேரங்களில் ஏதோ ஒரு ஜோசியக்காரனின் ஆருடம் போலத் தான் தோன்றும். சில நேரங்களில் அவர்கள் சொல்வதற்கு எதிர் மாறாக வர்த்தகம் நடப்பது தான், பங்குச் சந்தையின் நுட்பங்களைப் பற்றி தெரியாதவர்களை குழப்புகிறது. எல்லாம் அறிந்தவர்களுக்கே, சந்தை புரியாத புதிராக இருக்கும் பொழுது, நமக்கெல்லாம் அது தேவை தானா என்று சந்தையில் இருந்து ஓடி விடுகின்றனர். அதற்கு தற்பொழுதய உதாரணம், வங்கிப் பங்குகள்.

சில வாரங்களுக்கு முன்பு வரை எல்லா அனலிஸ்டுகளும், தரகர்களும் கூறியது - "வங்கிப் பங்குகளுக்கு ஏற்றம் இல்லை". வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது அவை தீண்டத்தகாதவையாகவே பலருக்கு தென்பட்டது. ரூ490ல் இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 440க்கு சரிவுற்ற பொழுது, வங்கிப் பங்குகள் மேலும் சரியக் கூடும் என்றே ஆருடம் சொன்னார்கள். ஆனால் கடந்த இரு வாரங்களில் வங்கிப் பங்குகள் எகிறத் தொடங்கி விட்டது. இந்த வாரம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 530ஐ எட்டியது.

பங்குகள் விலை சரிவடைவது தான், பங்குகள் வாங்குவதற்கான உகந்த சூழ்நிலை என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண முதலீட்டாளரை, சரிவு நிலையில் பங்குகளை வாங்க விடாமல் செய்வது இந்த அனலிஸ்டுகள் தான். பங்குகள் சரியும் பொழுது இன்னும் சரியும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நாம் அச்சத்தில் முதலீடு செய்யாமல் இருப்போம். நாம் அசந்த நேரத்தில் சந்தை ஏதோ ஒரு செய்தியால் பற்றிக் கொண்டு எகிறும்.

விலை ஏறும் பொழுதும் ஒரு பிரச்சனை இருக்கிறது. "இதற்கு மேல் ஏறுவதற்கு வாய்ப்பு இல்லை, பங்குகளின் விலை - Valuations, அதிகமாக இருக்கிறது" என்று யாராவது சொல்வார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே, பங்குகள் சில ரூபாய்கள் எகிறும். நாம் குழம்பிப் போய், எப்பொழுது வாங்குவது என்று புரியாமல், சந்தை பக்கமே வராமல், நமது பணத்தை வீட்டு பீரோவிலோ, வங்கியின் சேமிப்பு கணக்கிலோ தூங்க வைத்து விடுவோம்.

பங்குச் சந்தையின் அடிப்படையே வாங்குவது, விற்பது தான். விற்பவர் இருந்தால் தான், நாம் வாங்க முடியும். இருவரின் எதிர்மறையான எண்ணங்கள் தான் சந்தையின் வர்த்தகத்தை தீர்மானிக்கிறது. பங்குகள் விலை இனி ஏறாது என ஒருவர் தீர்மானித்து, பங்குகளை விற்பார். இந்தப் பங்குகள் விலை ஏறும் என ஒருவர் தீர்மானித்து அதனை வாங்குவார். இருவரும் தங்கள் செயல்களுக்கு பல காரணங்கள் சொல்வார்கள். வாங்குபவர்கள் அதிகமாக இருந்தால் விலை உயர்வதும், யாருமே அதனை சீண்டாத பொழுது விலை சரிவடைவதும் எல்லா பொருட்களுக்கும் பொதுவானது தான். பங்குகளுக்கும் அவை பொருந்தும். அனலிஸ்டுகளின் கருத்துகளையும் நாம் அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்காமல், முற்றிலும் புறம்தள்ளாமல் அதன் உட்கருத்தை ஆராய்ந்து நமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

தன்னுடைய "One up on the Wall Street" என்ற புத்தகத்தில் Peter Lynch என்ற புகழ்பெற்ற பங்குச் சந்தை மேதை, "பங்குச் சந்தையில் நாம் அதிகம் பொருட்படுத்தக் கூடாத ஒன்று பங்குகளின் விலையே. ஆனால் எல்லோராலும் அது தான் மிக அதிகமாக கவனிக்கப்படுகிறது" என்று சொல்கிறார். இதனை படிக்கும் பொழுது என்ன எதோ உளறுகிறார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அதனை ஆராயும் பொழுதோ, இல்லை நடைமுறை அனுபவத்திலோ தான் உட்கருத்தை கண்டு கொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடை (பங்கு விலை x மொத்தப் பங்குகள்) ஆராய்ந்து, அது மேலும் உயரக் கூடுமா என்று கணித்து அதற்கேற்ப பங்குகளை வாங்க வேண்டும். நீண்ட கால முதலீடு தான் பங்கு முதலீட்டிற்கு உகந்தது. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதன் வள்ர்ச்சிக்கு ஏற்றாற் போலத்தான் உயரும். ஒரு நிறுவனம் படிப்படியாகத் தான் உயர முடியும். திடீரென்று உயர்ந்து விடாது.
அதனால் பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும், அதற்கு நாம் கொடுக்கும் விலை உகந்தது தானா என்று தீர்மானிக்க வேண்டும்.

நம்முடைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கடந்த மாத துவக்கத்தில் இந்தப் பங்கு 410 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பின் விலை ஏறி 500ஐ தொட்டது. பின் சரிந்து, 440 க்கு வந்தது. தற்பொழுது உயர்ந்து, 530க்கு வந்துள்ளது. இது தான் பங்குகளின் தன்மை.

410க்கு வாங்கி 500ஐ தொட்டவுடன் லாபம் போதும் என்று விற்கலாம். தவறில்லை. ஆனால் 490 க்கு வாங்கி, அது 440க்கு வரும் பொழுது தான் நம்முடைய பொறுமை சோதிக்கப் படுகிறது. பங்கு வர்த்தகத்தில் பொறுமை மிக அவசியம். சரிந்து போய் விட்டதே என்று விற்று விட்டால், பின் 530க்கு அது வரும் பொழுது நொந்து கொள்ள வேண்டியது தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற மிகப் பெரிய வங்கியின் நீண்ட கால செயல்பாடு எப்படி இருக்கும் ? அதனுடைய இரண்டு ஆண்டு வளர்ச்சியில் நாம் முதலீடு செயத் 490 அதிகமாகுமா, சரிந்து போகுமா ? இந்த ஆராய்ச்சியின் முடிவு, நம்மை இந்த சரிவு தற்காலிகமானது தான் என்று முடிவு செய்ய வைக்கும். பங்குகளின் விலையை பொருட்படுத்தாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பற்றிய நீண்டகால திட்டத்தில், நம்முடைய முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டு சந்தையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்போம்.


Leia Mais…
Monday, November 15, 2004

அடுத்த இலக்கு? 6100 !!

6000ஐ எட்டுவோமா என்று குறியீடுகளைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். கடந்த வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 6000ஐ எட்டியது. சந்தையின் அடுத்த இலக்கு ?

தேர்தல் சமயத்தில் 6000ல் இருந்து சரிந்த சந்தை தற்பொழுது தான் மறுபடியும் அந்த இலக்கை அடைந்திருக்கிறது. புதிய அரசு பதவி ஏற்றப் பிறகு சந்தை நல்ல ஏற்றமுடன் தான் சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட்க்கு முன்பு வரை இடதுசாரிகளை உள்ளடக்கிய அரசின் பொருளாதார கொள்கைப் பற்றிய அச்சத்தில், திக்குதெரியாத காட்டில் திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சந்தைக்கு பட்ஜெட்டுக்குப் பிறகு நல்ல ஏற்றம்.

இந்த உயர்வு ஒரு நீண்ட கால காளைச் சந்தைக்கான அறிகுறி எனப் பலர் சொல்கின்றனர். அடுத்த பட்ஜெட்டை எதிர்பாருங்கள் என ப.சிதம்பரம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அரசின் பொருளாதார கொள்கையில் பெரிய மாற்றம் இல்லாத வரையில், இடதுசாரிகள் தற்பொழுது உள்ளது போலவே அவ்வப்பொழுது ஏதாவது உளறிக் கொண்டு பெரிய தலைவலி கொடுக்காமல் இருந்தால் சந்தை 6000ஐ கடந்து இன்னும் முன்னேறக் கூடும்.

வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதங்களும் இனி உயரும். வீட்டுக் கடன் உள்ளவர்கள் இனி அதிக EMI செலுத்தவேண்டியது தான். சரிந்து கொண்டே இருந்த இந்த வட்டி கடந்த ஒரு வருடமாக ஓரே நிலையில் தான் இருந்தது. இந்த ஒரு வருடத்தில், தங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்த வட்டியைக் காட்டி அதிகரித்துக் கொண்ட வங்கிகள், தற்பொழுது 0.25% முதல் 0.5% வரை வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடும். HDFC நிறுவனம் தன்னுடைய floating வட்டி விகிதங்களை உயர்த்திவிட்டது. அதைப் போலவே சில வங்கிகள் தங்களுடைய வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளனர்.

கடந்த வாரம், HDFC, சத்யம் பங்குகள் அதிக லாபம் அடைந்தன. வட்டி விகிதங்கள் உயர்த்தப் படுவதால் HDFC பங்குகள் உயர்ந்தன. HDFC பங்குகள் இந்த வாரமும் தொடர்ந்து உயரக் கூடுமென காளைகள் தெரிவிக்கின்றன. ஆனால் புதிதாக இந்தப் பங்குகளை வாங்க நினைப்பவர்கள், லாப விற்பனையால் விலை சரிவடைந்தவுடன் வாங்கலாம்.

வழக்கம் போல இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள் தொடர்ந்து உயரக் கூடும். இன்போசிஸ் 2100ஐ நோக்கி நகரும். மென்பொருள் பங்குகளில் பெரிய நிறுவனங்களான TCS, இன்போசிஸ், விப்ரோ போன்ற பங்குகள் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளதால் midcap நிறுவனப் பங்குகள் மீது கவனம் செலுத்தலாம் என சில Analysts கள் தெரிவிக்கின்றனர்.

6000ஐ எட்டி, லாப விற்பனையால் சரிந்த குறியீடு, 6100 முதல் 6200ஐ அடுத்த இலக்காக கொண்டு நகரக் கூடும். தற்பொழுதுள்ள சந்தை நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடும். குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலைப் படாமல் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்தால் பணத்தைப் பெருக்கலாம்.

Leia Mais…
Sunday, November 07, 2004

பணவீக்கம்

இந்த வாரம் பணவீக்கம் 7.38% என்று அரசு அறிவித்திருக்கிறது.

அது என்ன பணவீக்கம்?

பணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம்.

பணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது

உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும்.

ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும்.

இந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?.

பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும்.

பொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும்.

உள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும்.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். எப்படி பங்குக் குறியீடு பங்குகளின் விலைக் குறியீடாக உள்ளதோ, அதைப் போன்றே விலைவாசி உயர்வுகளை கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும். இந்த குறியீடு தான் 7.38% மாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 7.1% மாக இருந்தது.

Wholesale Price Index மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய பொதுவான விலைவாசிக் குறியீடு.

- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படுகிறது.

- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு
- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)

இந்த பணவீக்க விகிதம் பங்குச்சந்தை முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் ?

பங்குச்சந்தை முதலீடுகளில், பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நீண்ட கால முதலீட்டில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பணவீக்கம் உயர்வதற்கேற்ப உயரும் எனக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, பொருட்களின் விலை உயர்வால், ஒரு நிறுவனத்தின் மதிப்பும் அதிகமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இது உண்மையான மதிப்பாகாது. பணவீக்கம் காரணமாக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.

மோசமான பொருளாதார சூழ்நிலையில், பணவீக்கம் உயரும் பொழுது பங்கு முதலீடுகள் சுருங்கிப் போகலாம்.

நம்முடைய பொருளாதாரமும், பணவீக்கமும் எப்படி இருக்கிறது ?

பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பது கவலை அளித்தாலும் அச்சப்படும் விதத்தில் இல்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் செய்பவர்கள், இந்தப் பணவீக்க விகிதத்தின் மேல் கவனம் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. சந்தையின் எதிர்பார்ப்பை விட பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது சந்தை சரியும். பணவீக்கம் குறையும் பொழுது சந்தை எகிறும்.

Leia Mais…

காளைகளின் தகவல்கள்

கடந்த வாரம் மிக லாபகரமான ஒரு வாரமாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகள் இந்த வாரம் பங்குக் குறியீடுகளை உயர்த்தியுள்ளது. குறியீடு 6000ஐ தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது. கடந்த வாரம் வியாக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் வார்த்தம் லாபத்திலேயே நிறைவுற்றது.

இந்த வாரமும், பங்குச்சந்தைக்கு ஆரோக்கியமான வாரமாகத் தான் இருக்கும்.

பங்குகளில் இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர் (HLL), ரிலயன்ஸ் பங்குகள் சிறந்த முதலீடாக இருக்கக் கூடும்.
அதிலும் குறிப்பாக இன்போசிஸ் பங்குகள் ரூ2000 ஐ கடக்கும்.

வங்கிப் பங்குகளுக்கு தற்பொழுது மவுசு அதிகரித்துள்ளது. பொதுத் துறைப் பங்குகளை விட தனியார் வங்கிகளான ICICI, HDFC Bank, UTI போன்றவற்றின் பங்குகள் விலை ஏறக்கூடுமென காளைகள் தெரிவிக்கின்றன. Business Line பத்திரிக்கை, ING Vysya Bank பங்குகளை வாங்கலாம் என சிபாரிசு செய்கிறது. பொதுவாக வங்கிப் பங்குகளில் கடந்த சில வாரங்களில் பெரிய ஏற்றம் நிகழவில்லை. அதனால் இந்தப் பங்குகளில் தற்பொழுது ஏற்றம் இருக்கும்.

கச்சா எண்ணெய் விலை ஏற்றப்பட்டிருப்பதால், எண்ணெய் நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றின் விலை மேலும் ஏறக்கூடும்.

தொடர்ந்து நல்ல விலை ஏற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதால், முதலீட்டாளர்களின் லாப விற்பனை இந்த வாரம் நடக்கலாம். Day Trading இல் சற்று உஷாராக இருக்க வேண்டும்.

Leia Mais…
Saturday, November 06, 2004

காளை வாரம்

இந்த வாரம் பங்குச்சந்தை காளைகளின் முழுமையான அதிக்கத்திலேயே இருந்தது. பல நல்ல செய்திகள் பங்கு வர்த்தகத்தை லாபமடைய வைத்தது. வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் வெற்றி, வங்கிகளில் அந்நிய முதலீடுப் பற்றிய நிதி அமைச்சரின் அறிவிப்பு, கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவு போன்றவையும், வார இறுதியில் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் NTPC பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட்தும் பங்குக் குறியீடுகளை உயரச் செய்துள்ளது.

எப்பொழுது ஏற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடந்தேறி விட்டது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் போராட்டத்தை அறிவித்து விட்டனர். உயர்வு அரசியலாக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல் ஜெயலலிதா, கருணாநிதியை குற்றம்சாட்டி இருக்கிறார். கருணாநிதியும் தன் பாணியில் விளக்கம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த உயர்வு தவிர்க்க முடியாதது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
ஒரு பேரல் டாலர்40ல் இருந்து, 55ஐ எட்டி தற்பொழுது சற்று தணிந்து 50 டாலரில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விலையை ஏற்றினால் பணவீக்கம் அதிகரித்து விடக்கூடும் என்ற அச்சத்தில், கச்சா எண்ணெய் மீதான வரியை தளர்த்தி ஓரளவுக்கு அரசு நிலைமையை சமாளிக்க முயன்றது. ஆனால் நாட்டின் தேவையில் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவதால், வெளிநாட்டு விலைக்கெற்ப உள்நாட்டு விலையை ஏற்றாவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சரிவு தான் ஏற்படும். ஏற்கனவே இந்த நிறுவனங்களின் லாபம் கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த காலாண்டு அறிக்கையிலேயே இது வெளிப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை குறை சொல்ல முடியாது. அரசியல் காரணமாக சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.

பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி சமையால் கியஸ் விலையும் எற்றப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு சிலிண்டருக்கு ரூ20ம், ஒவ்வொரு மாதமும் ரூ5ம் மாக விலை ஏற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ150க்கும் அதிகமான சலுகை விலையில் தான் சிலிண்டர்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உயர்வு கூட அரசின் சுமையை ஓரளவிற்கு குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தான்.

இந்த விலையேற்றத்தின் எதிரொலி வெள்ளியன்று பங்குச் சந்தையில் தெளிவாக தெரிந்தது. கச்சா எண்ணெய்யின் விலை எகிறும் போதெல்லாம் எண்ணெய் விற்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்து கொண்டேயிருக்கும். ஆனால் வெள்ளியன்று இந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. NSE பங்குச் சந்தையில் BPCLன் பங்குகள் 40ரூபாயும், HPCLன் பங்குகள் 20 ரூபாயும் எகிறியது.

கடந்த சில வாரங்களாக வங்கிப்பங்குகள் மீது யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ப.சிதம்பரம் வங்கித் துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தப்பிறகு வங்கிப் பங்குகளுக்கு ஏக கிராக்கி. 495 ரூபாயில் இருந்து சரிந்து 440ரூபாய்க்கு வந்து ஊசலாடிக் கொண்டிருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பங்குகள் 498ஐ இந்த வாரம் தொட்டு நிற்கிறது. ICICI பங்கும் வெள்ளியன்று நல்ல லாபம் அடைந்தது. பொதுத்துறை வங்கிப் பங்குகளை விட ICICI, UTI போன்ற தனியார் வங்கிகள் அதிக லாபத்தை தரக் கூடும்.

சில வாரங்களாக வங்கிப் பங்குகளும், எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே இருந்தது. பெட்ரோல் விலை உயர்வும், வங்கிகளில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பும் இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

NTPC நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று பங்குச் சந்தையில் சேர்க்கப்பட்டது. மிக அதிக அளவில் நேற்று வர்த்தகம் செய்யப்பட்டதும் இந்தப் பங்கு தான். முதல் நாளிலேயே சுமார் 3661 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ONGC, ரிலயன்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக NTPC இருக்கும். நேற்று வர்த்தக முடிவில் ரூ75ல் இருந்த இந்தப் பங்கு ஆறு முதல் ஒரு வருடத்தில் ரூ100ஐ தொடக்கூடும். IPO வில் குறைந்த பங்குகளைப் பெற்றவர்கள் இப்பொழுது இந்தப் பங்குகளை வாங்கலாம்.

Leia Mais…
Wednesday, November 03, 2004

பணம் சம்பாதிக்க சில விதிகள்

பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.

விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது
விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது

மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.

முதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்தப் பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.

பலர் பல வழிகளை கையாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.

வாரன் பப்பட் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.

உதாரணமாக 10 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 கோடியாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து கோடியை எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.

இந்த முறையில் வாரன் பப்பட அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது

சிலர் பங்குக் குறியீடுகளில் உள்ளப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

அதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல், இந்திய மென்பொருள் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுத்தும் (அல்லது ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம்) என்பதை மென்பொருள் துறைகளில் உள்ளவர்களுக்கும், மென்பொருள் பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும். தேர்தலின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharma பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.

மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலைச் சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.

பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விழிகளைப் பின்பற்றலாம்.

இந்த வார சந்தை நிலவரம்

இந்த வாரம் - காளை வாரம். பங்குக் குறியீடுகள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ் முன்னிலையில் இருந்ததால், இன்று தொடக்கத்திலேயே உயரத் தொடங்கிய சந்தை, இன்றைய வர்த்தக முடிவில் BSE குறியீடு 88 புள்ளிகள் உயர்ந்து 5,843 லும், NSE 24புள்ளிகள் உய்ர்ந்து 1,837 லும் இருந்தது. செவ்வாயன்று அதிபர் தேர்தலின் முடிவுகள் பற்றிய அச்சத்தில் மென்பொருள் பங்குகள் சரிந்திருந்தன. ஆனால் புஷ் வெற்றி நிச்சயம் என்ற எண்ணத்தில் இன்று மென்பொருள் பங்குகள் நல்ல லாபகரமாக இருந்தது.

அதைப் போலவே கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த வங்கிப் பங்குகள், நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வங்கித் துறையில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பால் உயரத் தொடங்கியுள்ளது (வழக்கம் போலவே இடதுசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்).

இன்று எல்லா துறைகளிலுமே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர். புஷ் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனிப் பங்குச் சந்தைக்கு குஷி தான்.

Leia Mais…
Sunday, October 31, 2004

பங்குகளை விற்கலாமா ?

பணத்தை பெருக்குவதற்காகத் தான் பங்குகளை வாங்குகிறோம். பங்குகளை விற்றால் தான் பணத்தை பெருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் பங்குகளை விற்பதே இல்லை. ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டில் (IPO) பங்குகளை வாங்குவார்கள். அது என்னவோ அசையா சொத்துப் போல அப்படியே வைத்திப்பார்கள். பிறகு பங்கு விலை சரியத் தொடங்கும் பொழுது பங்குகளை விற்று விட்டு லபோ திபோ என்று அடித்து கொள்வார்கள்.

என் நண்பர் ஒருவர் TCS பங்குகளை வாங்கினார். TCS பங்குகள் பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் நாளில் பங்குகளை விற்று விடலாம் என்று சொன்னேன்.

"TCS பங்குகளை யாராவது விற்பார்களா? 49க்கு விண்ணப்பம் செய்து 17 தான் கிடைத்திருக்கிறது. இதை விற்க சொல்கிறாயே" என்று என்னை கோபித்து கொண்டார்.

ஆனால் உண்மையில் அன்று விற்றிருந்தால் நல்ல லாபம் பார்த்திருக்கலாம்.

வாங்கும் விலை
17 x 850 = 14,450.00

பங்குச் சந்தையில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்ட நாளில் இதன் விலை 1200க்கு எகிறி, பின் சரிந்தது. நம்முடைய பங்குகளை 1150க்கு விற்றிருந்தால், எவ்வளவு லாபம் வரும்

விற்கும் விலை
17 x 1150 = 19550

லாபம் = ரூ 5000

TCS நல்ல நிறுவனம் தான். நல்லப் பங்கு தான். அதற்காக அப்படியே அதனை வைத்து கொண்டிருப்பதால் நாம் லாபம் அடையப் போவதில்லை. பங்குகளில் அவ்வப் பொழுது லாபத்தை எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். பங்குகள் விலை ஏறும் பொழுது விற்று விட்டு பின் விலைக் குறையும் பொழுது வாங்க வேண்டும். இதே TCS பங்குகள் பின் 950க்கு சரிந்து பொழுது மறுபடியும் வாங்கியிருக்கலாம். சுலபமாக சில ஆயிரங்கள் லாபம் பார்த்திருக்கலாம். பங்குகள் வாங்குவது விற்பதற்கே என்பது நம் மனதில் பதிய வேண்டும்.

என்னுடைய இன்னொரு நண்பர் இருக்கிறார். பங்குகளில் பணத்தை முதலீடு செய்து விட்டு, அந்தப் பக்கமே செல்ல மாட்டார். திடீரென்று ஒரு நாள் மறுபடியும் சந்தைப் பக்கம் வந்து அலறி அடித்து அவரது தரகரைக் கூப்பிட்டு பங்குகளை விற்கச் சொல்வார். பிறகு பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று சபிப்பார்.

தினமும் ஏற்றமும் இறக்கமும் உள்ள சந்தையில் நம் சேமிப்பின் மதிப்பில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நம் பணத்தை கிடப்பில் போட்டு விடக் கூடாது. தினமும் சந்தையை கவனித்து கொண்டிருந்தால் மிகவும் நல்லது. அது முடியா விட்டால் வாரத்திற்கு இரு முறையாவது நம் பங்குகளின் மதிப்பை கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகளின் எதிர்கால விலை எவ்வாறு இருக்கும், இப்பொழுது விற்பதால் லாபமா, இல்லை இன்னும் அதிக லாபம் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆராய வேண்டும். பங்குகளின் விலை ஏறப்போவதில்லை என்று தெரிந்து விட்டால் அதனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியம் என்ன ? விற்று விட்டு, விலை ஏறக் கூடிய நல்லப் பங்குகளாக வாங்கலாம்.

அதைப் போலவே பங்குகள் விலை சரியும் பொழுது உடனே விற்க கூடாது. இப்படி செய்வதால் நம்முடைய சேமிப்பு குறைந்து கொண்டே இருக்கும். எதனால் பங்கு சரிகிறது என்று ஆராய வேண்டும். நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சில நேரங்களில் சரியும். விலை சரிந்து கொண்டே தான் இருக்கும் என தெரிந்தால் விற்கலாம்.

பங்குகள் வாங்கி விற்பதில் இத்தகைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் நிச்சயம் நம் பணம் பெருகும்.

சரி..இந்த வாரம் சந்தை எப்படி இருக்கும்

சில வாரங்களாக சரிந்து கொண்டே இருந்த சந்தை, கடந்த வாரம் RBI யின் நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு முன்னேறத் தொடங்கியது. நீண்ட கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது முதலீட்டாளார்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. இவைத் தவிர கச்சா எண்ணெய்யின் விலை கடந்த வாரம் குறையத் தொடங்கியதும் சந்தையின் செயல்பாட்டில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. முதலீட்டாளர்களுக்கு சில அறிக்கைகள் உற்சாகம் அளித்தாலும், சில அறிக்கைகள் ஏமாற்றம் அளித்தது. அறிக்கைகளின் ஏற்றத் தாழ்விற்கேற்ப இதுவரை பங்குகளின் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இனிமேல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் போன்றவை தான் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும். சந்தை காளையாவதும், கரடியாதும் இந்த நிலவரங்களைப் பொறுத்து தான் அமையும்.

கச்சா எண்ணெய 55 டாலரில் இருந்து 52 டாலருக்கு வந்துள்ளது மிக நல்ல செய்தி. அமெரிக்கா தேர்தலுக்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறையக்கூடும்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இம் மாதமும் அதிக அளவில் பங்குகளை வாங்கியுள்ளனர்.

இந்த வார காளைகளின் தகவல் - "பங்குக் குறியீடு 6000ஐ எட்டும் என்று பலர் சொல்கின்றனர். பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்"

Leia Mais…
Thursday, October 28, 2004

கச்சா எண்ணெய்

இன்போசிஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வரப்பிரசாதம். சென்ற காலாண்டு அறிக்கையின் பொழுது ரூ1400 ஆக இருந்தது. சிறந்த காலாண்டு அறிக்கையினால் ரூ 1600க்கு தாவியது. இந்த மாத துவக்கத்தில் 1700 ரூபாயில் இருந்து இப்பொழுது ரூ1950ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த மாதம் மட்டும் 250 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அதிக லாபம் அடைந்த பங்கு இன்போசிஸ் தான். நீங்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தால் இன்று தனுஷ் அடைந்திருக்கும் சந்தோஷத்தை அடைந்திருக்கலாம் (அது யாரு தனுஷ் - நம்ம தலீவரோட(?) மருமகன் தான்)

இன்று சந்தையில் மென்பொருள் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. முதலீட்டாளார்கள் மென்பொருள் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

ஏறிக்கொண்டே இருந்த கச்சா எண்ணெய் திடீரென்று விலை குறைந்து போக இன்று முதலீட்டாளர்களுக்கு ஒரே குஷி. பங்குகளை வாங்கிக் குவிக்க தொடங்கினர். சந்தையின் இந்த உற்சாக நிலையினால் BSE குறியீடு 53 புள்ளிகள் உயர்ந்து 5716ஐ எட்டியது. NSE 16 புள்ளிகள் ஏற்றம் கண்டு 1800 ஐ மறுபடியும் நெருங்கியது.

திங்களன்று கரடியின் ஆக்கிரமிப்பில் இருந்த சந்தை இந்த வாரம் கடுமையாக சரியும் என அனைவரும் அலற, இப்பொழுது அனைவரும் சந்தை எகிறும் என காளைகளுக்கு ஓட்டு போட்டு விட்டனர்.

RBI யின் நிதிக் கொள்கையும், கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவும் சந்தைக்கு விட்டமின் சக்தி கொடுத்திருக்கிறது

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் பதுக்கலில் ஈடுபடுவதால் தான் இந்தளவுக்கு விலை ஏறுவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். கச்சா எண்ணெய் பேரலுக்கு 1டாலர் ஏறும் பொழுது, நாட்டின் வளர்ச்சி விகிதம் 0.5% குறைகிறது

RBI யும் நாட்டின் வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலேயே பாதிப்படைவதாக கூறியிருக்கிறது.

இன்று கச்சா எண்ணெய் கொஞ்சம் இறங்கியிருக்கிறது. இது தொடருமா ?

Leia Mais…
Tuesday, October 26, 2004

RBI யின் நிதி கொள்கை

ரிசர்வ் வங்கி இன்று தனது இடைக்கால நிதி மற்றும் கடன் கொள்கையை அறிவித்து இருக்கிறது. எதிர்பார்த்தபடியே, 2004-2005 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6% முதல் 6.5% மாக இருக்கும் என அறிவித்திருக்கிறது. முன்பு 6.5% முதல் 7% மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி விகிதம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைந்த அளவிலான பருவ மழை போன்ற காரணங்களால் குறையக் கூடும் என தெரிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்கமும் முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5% என்ற இலக்கை கடந்து, 6.5% மாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

ஆனால் வட்டி விகிதத்தை தற்பொழுதுள்ள 6% என்ற நிலையில் இருந்து அதிகரிக்கவில்லை. வட்டி விகிதத்தை அதிகரிப்பது நிறுவனங்களின் முதலீடுகளை குறைத்து, நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால் அதனை அப்படியே விட்டுள்ளது.

ஆனால ரெப்போ வட்டி விகிதம் 4.75% ஆக மாறி இருக்கிறது. (ரெப்போ - Repo - Repurchase Agreement என்பது மிக குறைந்த கால பணபறிமாற்றத்திற்கான ஒரு வர்த்தகம். தன்னிடம் உள்ள Securities ஐ வைத்து கடன் பெறுவது. ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இந்த Securities ஐ திரும்ப பெற்று கொள்வார்கள். திரும்ப பெற்றுக் கொள்ளும் உத்திரவதத்துடன் இந்த வர்த்தகம் நடைபெறுவதால் இதனை - Repurchase Agreement என்று சொல்வார்கள்)

இந்த ரெப்போ விகித மாற்றம் தொழில் துறையை அதிகம் பாதிக்காது.

வட்டி விகிதம் உயர்த்தப் படாததால் நிறுவனங்களின் முதலீட்டிற்கு பாதிப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக இருந்த்து. மதியம் வரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த குறியீடு, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவித்தப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டது.

நேற்று முதலீட்டாளர்களின் விற்பனையால் BSE குறியீடு 60 புள்ளிகள் சரிவு கண்டது. இந்த சரிவு இன்று மதியத்திற்கு பிறகு நடந்த வர்த்தகத்தில் ஈடு செய்யப்பட்டது. BSE குறியீடு 70 புள்ளிகள் உயர்ந்து 5,651 லும் NSE 24 புள்ளிகள் உயர்ந்து 1,781 லும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

நேற்று சந்தை சரிவடைந்த பொழுதும் நல்ல லாபகரமாக இருந்த இன்போசிஸ், இன்றும் 40 ரூபாய்க்கும் அதிகமாக விலை ஏறியது. கடந்த சில நாட்களாக சரிவு முகமாக இருந்த சத்யம் இன்று அதிக லாபம் அடைந்தது.

வங்கிப் பங்குகளான ஸ்டேட் பாங்க் (SBI), இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (IOB), பாங்க ஆப் பரோடா போன்றவையும் நல்ல முன்னேற்றம் கண்டன.

HINDALCO, TISCO, SAIL போன்ற உலோகப் பங்குகளும், ரிலயன்சும் இன்று லாபகரமாக இருந்தன.

Leia Mais…
Sunday, October 24, 2004

தத்தளிக்கும் சந்தை

கடந்த வாரத்தை பார்க்கும் பொழுது, எல்லா நாட்களிலும் பங்கு வர்த்தகம் மந்த நிலையிலேயே இருந்தது. செவ்வாயன்று இறுதி ஒரு மணி நேரத்தில் சந்தை உயர்ந்ததை தவிர வேறு நல்ல நிகழ்வுகள் கடந்த வாரம் நடக்க வில்லை. இந்த உயர்வு கூட அடுத்து வந்த நாட்களில் சரிந்து போய் விட்டது.

கடந்த வாரம் சரிவடைந்த பங்குகளில் குறிப்பிடத் தக்கது சத்யம் பங்குகள். இரண்டாம் காலாண்டில் நல்ல லாபம் ஈட்டினாலும் வரும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் forcast ஏமாற்றம் அளிக்கிறது. மென்பொருள் துறையில் பெரிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, TCS போன்றவை தான் எதிர்காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும்.

இந்த வாரம் சரிவுக்குச் சென்ற மற்றொரு முக்கியமான பங்கு ரிலயன்ஸ். இன்போசிஸ் கூட சில வாரங்களுக்கு முன் தொட்ட தனது உயர்ந்த விலையான 1820 இல் இருந்து சரிந்து இன்று 1770 இல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. விப்ரோவும் இது போலத் தான்.

மொத்ததில் இந்த வாரம் காளைகளின் ஒரு வரி தகவல் - "சந்தையில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்".

கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, சில இடை நிலை நிறுவனங்களின் ஏமாற்றம் அளிக்கும் அறிக்கைகள், அந்த நிறுவனங்களின் எதிர்கால லாபம் குறித்த கவலை போன்றவை பங்குச் சந்தையின் ஏற்றத்தை மந்தப் படுத்த கூடும்

நல்ல பங்குகள் கூட சரிவு முகமாக இருக்கிறது. பங்குகள் சற்று கிழ் நோக்கி செல்லக் கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டு இருங்கள், வெளியேறி விடாதீர்கள்.

புதிதாக முதலீடு செய்ய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள். சந்தை செல்லும் திசையை கணித்து அதற்கு ஏற்றாற் போல் செயல் படுங்கள்.

சந்தை தற்பொழுது தத்தளித்து கொண்டிருக்கிறது. ஆனால் முழ்கி விடாது. மெதுவாக கரையேறி விடும்

Leia Mais…
Saturday, October 23, 2004

பங்குக் குறியீடு - 2

பங்குக் குறியீடுகளை இரு முறையில் உருவாக்கலாம்.

  • சந்தை மூலதன நிறையிட்ட குறியீடு (Market Capitalization weighted Index)
  • பங்கு விலை நிறையிட்ட குறியீடு (Price weighted Index)

சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும்.

உதாரணமாக விப்ரோ நிறுவனத்திற்கு இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 1 கோடி, ஒரு பங்கு விலை 600 ரூபாய் என்று கணக்கிடும் பொழுது, அதனுடைய சந்தை மூலதனம் (Market Capitalization) = 1 கோடி x 600 = 600 கோடி

பங்குக் குறியீடு உருவாக்கப் படும் பொழுது அந்தக் குறியீட்டில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மூலதனத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாக கொண்டு தான் அடுத்து வரும் நாட்களில் பங்குச் சந்தையின் சரிவுகளும், உயர்வுகளும் கணக்கிடப்படும். இதனை அடிப்படை சந்தை மூலதனம் (Base Market capitalization) என்று சொல்வார்கள்.

இதனைப் போன்றே பங்குக் குறியீட்டின் அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) உருவாக்கப் படும்.

உதாரணமாக ஒரு குறியீடு

நான்கு நிறுவனங்களை இந்தக் குறியீட்டில் கொண்டு வருவோம்

இன்போசிஸ்
பங்குகள் = 100
விலை = 1000
சந்தை மூலதனம் = 100 x 1000 = 100000

விப்ரோ
பங்குகள் = 50
விலை = 500
சந்தை மூலதனம் = 50 x 500 = 25000

ONGC
பங்குகள் = 75
விலை = 600
சந்தை மூலதனம் = 75x 600= 45000

TISCO
பங்குகள் = 25
விலை = 150
சந்தை மூலதனம் = 25x150= 3750

இந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மூலதனத்தை கொண்டு ஒரு குறியீட்டின் அடிப்படை சந்தை மூலதனம் கணக்கிடப் படுகிறது.

அடிப்படை சந்தை மூலதனம் = 100000 + 25000 + 45000 + 3750 = 173750

அதனைக் கொண்டு குறியீட்டில் உள்ள பங்குகளின் மதிப்பீடு கணக்கிடப் படுகிறது.


பங்கு மதிப்பீடு

இன்போசிஸ் = 100000/173750 = 0.575539568

விப்ரோ = 25000/173750 = 0.143884892

ONGC = 45000/173750 = 0.258992806

TISCO = 3750/173750 = 0.021582734

மொத்த மதிப்பீடு = 0.575539568 + 0.143884892 + 0.258992806 + 0.021582734 = 1.0

அடிப்படைக் குறியீட்டு எண் (Base Index) 1000 என எடுத்துக் கொண்டால்

பங்குக் குறியீடு
1.0 x 1000 = 1000

இதன் அடிப்படையில், பங்கு விலையின் மாற்றங்களைக் கொண்டு குறியீட்டின் ஏற்றமும் சரிவும் கணக்கிடப் படுகிறது

இன்போசிஸ், விப்ரோ பங்குகளில் உயர்வும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் ஏற்படும் பொழுது குறியீடு மாற்றத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?

விலை

இன்போசிஸ் = 1120
விப்ரோ = 600
ONGC = 435
TISCO = 25

இந்த விலை மாற்றத்தால் சந்தை மூலதனமும், மதிப்பீடும் மாறுகிறது.

குறியீட்டில் உள்ள ஏற்ற இறக்க நிலைகளையும் அதனால் மாறும் மதிப்பீடுகளையும், அடிப்படை சந்தை மூலதனம் மூலமாகவே கணக்கிடப் படும்.

இன்போசிஸ் = 100 X 1120 = 112000 = 112000/173750 = 0.644604317

விப்ரோ = 50x 600 = 30000 = 30000/173750 = 0.172661871

ONGC = 75 x 435 = 32625 = 32625/173750 = 0.187769784

TISCO = 25 x 25 = 625 = 625/173750 = 0.003597122

பங்குகளின் மொத்த மதிப்பீடு = 0.644604317 + 0.172661871 + 0.187769784 + 0.003597122 = 1.008633094

இப்பொழுது குறியீட்டின் நிலை ?

1000 x 1.008633094 = 1008.63

பங்குக் குறியீடு 8.63 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இந்த சந்தை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு தான் BSE மற்றும் NSE குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

NSE குறியீடு 50 பங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் இடம் பெறும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 500 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நாட்களிலும், அந்தப் பங்கு, வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை பூர்த்தி செய்யும், முதல் 50 நிறுவனங்கள் மட்டுமே குறியீட்டில் இடம் பெறும்.

குறியீட்டில் இடம் பெறும் நிறுவனம் இந்தத் தகுதிகளை இழக்கும் பட்சத்தில் அந்த நிறுவனம் குறியீட்டில் இருந்து நீக்கப்படும். பல துறையைச் சார்ந்த பங்குகளின் குழுமமாக குறியீடு உருவாக்கப் பட்டுள்ளதால் ஒரு துறைக்குள் இருக்கும் ஏற்றமும் சரிவும் இதனை பெரிதும் பாதிக்காது.

NSE ல் பல குறியீடுகள் இருக்கின்றன. இதன் S&P CNX Nifty குறியீடு தான் பொதுவான குறியீடு. அடிப்படைக் குறியீடாக 1000ல் தொடங்கி இன்று 1800ஐ தொட்டு நிற்கிறது. இந்தக் குறியீடு 1995ல் உருவாக்கப் பட்டது.

NSE ன் மற்ற குறியீடுகள்.

CNX Nifty Junior - இது CNX Nifty க்கு அடித்தபடியாக அதிக சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்களை உள்ளடக்கியது. இதனைப் போன்றே பல குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் (Sector) தனிக் குறியீடுகளும் உள்ளது. இந்தக் குறியீடுகளை கொண்டு அந்தத் துறையின் ஏற்றங்களையும் சரிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. இதில் இடம் பெறக் கூடிய நிறுவனங்களின் தகுதி NSE ல் உள்ளது போலத் தான். ஆரம்ப குறியீடாக 100ல் தொடங்கி இன்று 5600 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடு 1986ல் உருவாக்கப் பட்டது.

இதிலும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனிக் குறியீடு உள்ளது.
BSETECK
BSEPSU
BANKEX

இந்தக் குறியீடுகள் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் bseindia.com, nseindia.com போன்ற இணையத் தளங்களுக்கு செல்லலாம்.

Leia Mais…
Wednesday, October 20, 2004

பங்குக் குறியீடு - 1

இன்று பங்குக் குறியீடு சரிந்து விட்டது, ஏற்றம் கண்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே...அது என்ன பங்குக் குறியீடு ? அதன் ஏற்றமும் சரிவும் எதனால் ஏற்படுகிறது ?

Index என சொல்லப் படுகின்ற குறியீடு, பலப் பங்குகளின் குழுமம். பல துறையைச் சேர்ந்த பங்குகளை ஒன்று சேர்த்து உருவாக்கப் படுவது. உதாரணமாக BSE குறியீடு 30 பங்குகளைக் கொண்டது. NSE 50 பங்குகளைக் கொண்டது. இந்தக் குறியீடு நாட்டின் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தையின் நிலவரத்தையும் தெளிவாக தெரிவிக்கும் விதமாக உருவாக்கப் படுகிறது.

பல துறையைச் சேர்ந்த சிறந்த நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம் பெறும் (Diversification). ஒவ்வொரு பங்குக்கும் குறியீட்டில் ஒரு மதிப்பீடு தரப்படுகிறது. அன்றைய தினத்தில் அந்தப் பங்கு ஏறுவதாலும் சரிவடைவதாலும் அதனுடைய மதிப்பீடு குறியீட்டில் மாறும்.

இன்போசிஸ் பங்குகள் லாபமாக இருக்கும் பொழுது அதன் விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு, குறியீட்டில் உள்ள மதிப்பீட்டு புள்ளிகள் உயரும். TISCO சரியும் பொழுது அதன் மதிப்பீட்டு புள்ளிகள் சரியும்.

இதோ ஒரு சிறிய குறியீடு

இன்போசிஸ், விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், ONGC, TISCO பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.

இன்போசிஸ் = +8
விப்ரோ = +2
TISCO = -2
ONGC = -3
உயர்வு = +10
சரிவு = -5
குறியீட்டின் நிலை = 5 புள்ளிகள் உயர்வு

TISCO, விப்ரோ பங்குகள் விலையில் ஏற்றமும், இன்போசிஸ், ONGC பங்குகளில் சரிவும் நிலவுவதாக கணக்கில் கொள்வோம்.

இன்போசிஸ் = -5
விப்ரோ = +2
TISCO = +2
ONGC = -3
உயர்வு = +4
சரிவு = -8
குறியீட்டின் நிலை = 4 புள்ளிகள் சரிவு

இந்தியா அணு ஆயுதம் வெடிக்கும் பொழுதும், சோனியா பிரதமர் பதவியை ஏற்க மறுத்து ஒரு நிலையற்ற தன்மை ஏற்றப் பட்ட பொழுதும் Speculators மற்றும் முதலீட்டாளர்கள் பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சத்தில் பங்குகளை விற்க தொடங்கும் பொழுது, பங்குகளின் விலை சரிந்து அதன் மதிப்பீட்டு புள்ளிகளுக்கு ஏற்றவாறு இந்தக் குறியீடுகளும் சரிகிறது.

இன்போசிஸ் = -10
விப்ரோ = -6
TISCO = -4
ONGC = -8
உயர்வு = +0
சரிவு = -28
குறியீட்டின் நிலை = 28 புள்ளிகள் சரிவு

இதனை மிக எளிதாக எழுதி விட்டாலும், இந்தப் பங்குகளை உருவாக்குவதிலும், இதன் சரிவுகளை கணக்கிடுவதிலும் சில முறைகள் இருக்கின்றன.

Leia Mais…

கரடியாட்டம்

கடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது. செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் BSE மற்றும் NSE குறியீடுகள் முறையே 58, 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது. சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.

இன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து BSE 66 புள்ளிகள் சரிவுடன் 5,672 லும், NSE 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1,790 லும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8% சதவீதம் அதிகம். ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது (25 ரூபாய் வீழ்ச்சி).

இது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ், விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன

பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கையும் கடுமையான சரிவையே சந்தித்தது.

இன்று அறிக்கை தாக்கல் செய்து மிகுதியான லாபம் அடைந்த பங்கு குஜராத் அம்புஜா சிமெண்ட்.

நேற்று காளை, இன்று கரடி, நாளை ??

Leia Mais…
Monday, October 18, 2004

Speculation

நான் முன்பு எழுதிய "ஒரு நாள் வர்த்தகத்தின்" தொடர்ச்சியாக இதனைப் படியுங்கள்.

Day trading ஒரு ரிஸ்க்கான வேலை. அன்றைக்கு லாபகரமாக இருக்கின்ற பங்குகளை வாங்கிக் கூட நஷ்டம் அடைய முடியும். சரிந்து கொண்டிருக்கிற பங்குகளை வாங்கிக் கூட லாபம் பார்க்க முடியும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் அந்தப் பங்குகளை விற்க தொடங்க, விலை சரிந்து நாம் நஷ்டம் அடைவோம். இதில் நாம் கடைப் பிடிக்கும் எந்த ஒரு உத்தியும் நிரந்தரமாக பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நாளில் சந்தை நிலவரத்தைப் பொருத்துத் தான் நமது லாபமும் நஷ்டமும். சில நிறுவனங்கள் இதற்கான டிபஸ் தருகின்றன. ஆனால் இவற்றின் வெற்றி சதவீதம் 50% மட்டுமே. சில நாட்களில் அவர்கள் சொல்லும் அத்தனை உத்திகளும் நஷ்டத்தில் முடிவடைந்திருக்கின்றன.

பல நிறுவனங்கள் இதற்கான மென்பொருள்களை தருகின்றன. sharekhan.com, 5paisa.com, indiabulls.com, kotakstreet.com போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதில் சில நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கான தரகு தொகையை முன்கூட்டியே வசூலித்து விடுகின்றனர். நாம் அந்த தரகுத் தொகைக்கு கட்டாயமாக வர்த்தகம் செய்தாக வேண்டும். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை நமக்கு அற்பமாக தெரியும். சந்தை சரிவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் அந்தப் பக்கம் செல்ல மாட்டோம். தரகுத் தொகை பறிபோய் விடும்.

Day trading நம்மை ஈர்ப்பதற்கான ஒரே காரணம், அதிக முதலீடு இல்லாமல், ஒரு குட்டி வியபாரத்தை வீட்டில் இருந்து கொண்டே சொகுசாக பார்க்கலாம் என்பது தான். ஆனால் இதில் சரிவும் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரம் லாபம் பார்த்த தொகையை விட அதிகமாக ஒரே நாளில் காணாமல் போனதும் உண்டு. மிகவும் டென்ஷனான வேலை இது. ஒரு நாள் முழுவதும் இதற்கென ஒதுக்க கூடிய சூழ்நிலை இருந்தால் நல்லது. அலுவலகத்தில் இருந்து கொண்டே இதில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. என்றாவது ஒரு நாள் நம்மை கவிழ்த்து விடும்.

பத்தாயிரம் முதலீட்டிற்கு எழுபதாயிரம் பங்குகள் வாங்கலாம் என்பது தான் நம்மை ஈர்க்கும் கவர்ச்சி வாசகம். ஆனால் நீண்ட நாள் முதலீட்டிற்கு கூட இப்பொழுது இது போன்ற வசதிகளை தரகு நிறுவனங்கள் தருகின்றன. நம்மிடம் இருக்கும் பணத்தை விட இரு மடங்கு அதிகமாக பங்குகளை வாங்கலாம். அந்த தொகைக்கான வட்டியை வசூலித்து கொள்வார்கள். இது கடன் வாங்குவது போலத் தான் என்றாலும், நல்ல நிறுவனங்களின் பங்குகள் தரும் லாபத்தை கணக்கில் எடுத்து கொள்ளும் பொழுது, வட்டி ஒன்றும் பெரிய தொகை இல்லை.

Day Trading அல்லது Speculation க்கும், பங்குகளில் முதலீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. Speculation னில் அதிக ரிஸ்க் இருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதில் அது குறைவு.


Leia Mais…

சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரம்

துவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம், இறுதியில் சரிவடைந்தது. அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற்பனையால் BSE 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும், NSE 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது.

மென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது. பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது. ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது.

இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் HDFC ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது. லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் - ICICI வங்கி, டாபர், BHEL.

இன்றைய வர்த்தகம் முழுமையாக கரடிகளின் ஆளுமையிலேயே இருந்தது.

Leia Mais…
Sunday, October 17, 2004

காளைகளின் தகவல்கள்

இந்த வார காளைகளின் தகவல்கள்

ஓவ்வொரு வாரமும், இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும், வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது, முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது. "Technical Charts"ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும். சில நேரங்களில் பொய்த்துப் போகும். ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால், ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் ?!.

இதோ நான் திரட்டிய தகவல்கள்

மென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் (Profit Booking) இதன் விலையில் சரிவு ஏற்பட்டது. மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும்.

கடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது. உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும், சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும். இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் (Hindalco, SAIL, NALCO, TISCO) சரிவடைந்தன. இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும்.

தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும். ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

ONGC, ரிலயன்ஸ் ஆகியப் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. இந்த வாரமும் இவை தொடரக் கூடும்.

வரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.

வெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா, கரடிகளின் பிடியிலேயே தொடருமா ?

ஆவலுடன் காத்திருக்கிறேன்

Leia Mais…
Friday, October 15, 2004

ஒரே நாள் வர்த்தகம்

இன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் "Intra Day Trading" பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன். இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நல்லா பணம் பார்க்கலாம். நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும்.

அதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும். நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது. லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க.

அது என்ன "Intra Day/Margin Trading".

இன்றே பங்குகளை வாங்கி, விற்று விட வேண்டும்.

நம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க. அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம். இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு Exposure தருகின்றன.

சரி.. மறுபடியும் ஒரு கணக்கு

நேற்று இன்போசிஸ் பங்கு 100 ரூபாய் வரை விலை ஏறியது.

பங்குத் தரகு, பங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது. பங்குத் தரகு, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம். தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு. சில நிறுவனங்கள், அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர்.

தோராயமாக 15 பைசா (பங்குத் தரகு + பங்குப்பரிவர்த்தனை) என்று வைத்து கொள்வோம்.

வாங்கும் விலை
40 x 1740 = 69600
தரகு = 69600 x .0015 = 104.40
மொத்த வாங்கும் விலை = 69,704.40

விற்கும் விலை 1800 (லாபம் போது சாமி என்று இந்த விலைக்கு விற்றிருந்தால்)

விற்கும் விலை
40x 1800 = 72,000
தரகு = 72,000 x .0015 = 108
மொத்த விற்கும் விலை = 72,108.00

லாபம் = 2187.60

பத்தாயிரம் முதலீடுக்கு கிடைக்கும் லாபம் 2187.60

சரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ? ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும். அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம்.

சரியும் பங்குகளில் கூட லாபம் பார்க்க முடியும். எப்படி ?

பங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும். இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் fluctuations ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம்.

இந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள Real time charts மூலம் பார்க்கலாம். அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

nseindia வில் உள்ள வரைப் படத்திற்கான சுட்டி

இந்த வர்த்தகத்தில் உள்ள தொல்லைகள்

கணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம். லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம்

சந்தை நிலவரத்தை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்

நாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும்.

இந்த வர்த்தகத்திற்கு நம்மிடம் இருக்கும் மிகுதியான பணத்தை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

நம்முடைய அவசர தேவைகளுக்கான பணத்தை இதில் கொண்டு வரவே கூடாது

Leia Mais…
Thursday, October 14, 2004

மென்பொருள் ஆளுமை

மென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது. மேலும், கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு, அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி, இறுதியில் BSE 36 புள்ளிகளும், NSE 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது. விப்ரோ, சத்யம், பாட்னி, HCL போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன. இன்போசிஸ் 1800 - 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன். ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ ?

சத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே, இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ ?

பெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் BPCL போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் - HINDALCO, NALCO, SAIL, TISCO இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன.

ஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும்.


Leia Mais…