பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Saturday, December 25, 2004

பங்குகளும், சந்தையும்

எந்தப் பங்குகளை வாங்கலாம் ? குறியீடு மேலும் உயருமா ? இந்தப் பங்குகளை இவ்வளவு விலைக்கு வாங்கினேன் ? இது மேலும் உயருமா, சரியுமா ? விற்கலாமா, வேண்டாமா ? இது தான் பங்குச் சந்தை அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.

தரகு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் முதலீட்டாளர் கருத்தரங்குக்கு சென்று பாருங்கள். அங்கு வரும் அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாமே "Forecasting" தான். இது எகிறுமா ? குறியீடு எகிறுமா ? அனலிஸ்டும் ஏதாவது பங்குகளை சொல்வார். இவர்களும் அதை வாங்கி அப்படியே அடைகாத்து கொண்டிருப்பார்கள். மறுபடியும் விற்கலாமா என்று ஒரு கேள்வியை வேறு சில அனலிஸ்டுகளிடம் கேட்பார்கள். தொலைக்காட்சி மற்றும் வணிகபத்திரிக்கைகளில் நிச்சயம் இந்தக் கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் நேரம். அறிக்கை தாக்கல் செய்திருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனம் அந்நிய செலவாணியால் எதிர்பார்த்ததை விட குறைந்த லாபமே பெற்றிருந்தது. எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சத்தில் எல்லோரும் பங்குகளை விற்க தொடங்க பங்குகள் சரியத் தொடங்கின. ஒரு பிரபல ஆங்கீலத் தொலைக்காட்சி சேனலில் "Buy/Sell" என்றொரு நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகும். முதலீட்டாளர்களின் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அனலிஸ்டுகள் கலந்து கொண்டு விடையளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் தான் 50 இன்போசிஸ் பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கியருப்பதாகவும் அதனை விற்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். முதலில் விடையளித்த அனலிஸ்ட் இன்போசிஸ் பங்குகள் தற்பொழுது 1700 ரூபாயில் இருப்பதால் அதை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம் என்றார். மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். மற்றொரு அனலிஸ்டோ இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் எகிறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொன்னார். கேள்வி கேட்ட முதலீட்டாளர் நிச்சயமாக குழம்பிப் போயிருப்பார். வந்தவரை போதும் என்று விற்றும் இருக்கலாம். அவர் மட்டுமின்றி அவரைப் போல அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்த சிலராவது பங்குகளை அச்சத்தில் விற்றிருக்கலாம். எனக்கும்
கூட கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற எண்ணத்தில் நானும் சிலப் பங்குகளை சில தினங்களுக்கு முன்பு தான் 1700 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அன்று பங்குகள் சரிந்து 1680 ரூபாயில் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏன் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்துத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. ஆனாலும் விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்து விட்டேன்.

இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பங்குகள் 1800க்கு எகிறியது. சில வாரங்களில் 2000ஐ கடந்து விட்டது. கேள்வி கேட்ட முதலீட்டாளர் விற்காமல் இருந்திருந்தால் ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் பார்த்திருக்க கூடும்.

யார் இந்த அனலிஸ்டுகள் ? அனலிஸ்டுகளுக்கு பங்குகளைப் பற்றி ஆராய்ந்து சொல்வது தான் தொழில். தாங்கள் ஆராய்ந்தவற்றை வெளியே சொல்லும் பொழுது தங்கள் தொழிலுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பான டிப்சையே தருவார்கள்.

நீங்கள் என்னிடமே எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று கேள்வி கேட்டால் நான் என்ன யோசிப்பேன் ?

நம்மை பெரிய ஆள் என்று நினைத்து இவர் கேள்வி கேட்பதால் முதலில் நம் பெயரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சொல்லும் பங்கு இவருக்கு லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. அதைப் போல மிகப் பெரிய நிறுவனப் பங்குகளாகத் தான் சிபாரிசு செய்ய வேண்டும். நஷ்டமடைந்தாலும் பெரிய நிறுவனத்தின் மேல் தான் பழி விழும். நம்முடைய டிப்ஸ் மேல் பழி விழாது. இவ்வாறு யோசித்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இன்போசிஸ் பங்குகளையோ, HDFC பங்குகளையோ வாங்குமாறு சிபாரிசு செய்யலாம். இன்போசிஸ் சரிந்தால் கூட எதிர்பார்க்காத சில நிலவரங்களால் இவ்வாறு சரிந்து விட்டது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் எந்த அனலிஸ்களிடமாவது கருத்து கேளுங்கள். ஒரு பெரிய நிறுவனப் பங்குகளையே அவர் சிபாரிசு செய்வார். வளர்ந்து வரும் நிறுவனங்களையோ, குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களையோ சொல்லவே மாட்டார். "இந்தப் பங்கு குறைந்த விலையில் இருந்த பொழுது, நான் என் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தேன். இன்று அது பல மடங்கு உயர்ந்து விட்டது" என்பார். இவ்வாறு குறைந்த விலையில் உள்ள நிறுவனங்கள் தற்பொழுது ஏதாவது உண்டா என்றால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அது நடக்காமல் போய் விட்டால் அவரது பெயரும், நிறுவனப் பெயரும் ரிப்பேராகி விடும். நடந்தப் பிறகே நம்மிடம் சொல்வார்கள்.

அதைப் போல "Forecasting" என்பதெல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியவை அல்ல. இந்த வருடம் 6000ஐ குறியீடு நெருங்குவதே கடினம் என்று சொன்னார்கள். இன்று 6500ல் இருக்கிறோம். ஒவ்வொரு இலக்கையும் கடக்கும் பொழுது சரியும் என்றார்கள். முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். பங்குச் சந்தை 2000ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி அடையும் என்று எத்தனைப் பேர் சரியாக கணித்தார்கள். அல்லது 2004 ஆம் ஆண்டு 6500 ஐ எட்டி விடும் என்று எத்தனை அனலிஸ்டுகள் கணித்துச் சொன்னார்கள். 2005ல் பங்குச் சந்தை இலக்கு என்ன என்று யாராலும் கணிக்க முடியுமா ? 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா ? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

அதைப் போல பொருளாதாரத்தை கணித்தால் பங்குச் சந்தையை கணிக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மந்தப்படும் (Recession) என்று ஒரு கருத்தும்
உண்டு. ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொருளாதாரம் மந்தப்படுவதில்லையே. பொருளாதார வல்லுனர்களால் ஏன் 2000ம் ஆண்டு பொருளாதாரம் மந்தமானதை முன்கூட்டியே கணிக்க வில்லை. முன்
கூட்டியே கணித்திருந்தால் பங்குகளை முன்கூட்டியே விற்றிருப்பார்கள். பங்குச் சந்தையும் முன்கூட்டியே சரிந்து போயிருக்கும்.

ஆக சந்தையை கணிப்பதென்பது இது வரை சரியாக நடந்ததில்லை. இனிமேல் நடக்குமா என்றும் தெரியவில்லை.

இது வரை கூறியதை வைத்து நான் உங்களைச் சந்தைப் பக்கம் வராதீர்கள் என்று சொல்வதாகத் தான் நீங்கள் நினைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

நான் சொல்ல வருவது "பங்குச் சந்தையில் நம்பிக்கை வைத்து முதலீடு
செய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்".

ICICI வங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாடெங்கும் கிளைகளை தொடங்கிக் கொண்டே இருந்தால், பயனாளர்களுக்காக வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால் அது மேலும் வளர்ச்சி அடைவதாகத் தானே பொருள். அப்பொழுது சந்தை 3000மாக இருந்தால் என்ன 6500 ஆக இருந்தால் என்ன.
நிறுவனம் வளரும் பொழுது பங்குகளின் விலையும் உயரத் தானே செய்யும். பின் எதற்கு பங்குக் குறியீடுகளைக் கண்டு அஞ்ச வேண்டும் ?

பங்குக் குறியீடுகள் உயரும் பொழுது எல்லாப் பங்குகளும் உயர்ந்து விடுகிறதா என்ன ? சில மாதங்களுக்கு முன்பு பங்குக் குறியீடுகள் எகிறிய பொழுது மென்பொருள் பங்குகள் எகிறிக் கொண்டே இருந்தது. வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டே இருந்தது. இப்பொழுது குறியீடு உயரும் பொழுது வங்கிப் பங்குகள்
உயர்கிறது. மென்பொருள் பங்குகள் சரிகிறது. குறியீடுகள் உயருவதாலேயே நாம் வாங்கிய பங்குகளும் உயர்ந்து விடாது. எந்தப் பங்குகளை நாம் தெரிவு செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் லாபமும், நட்டமும். அவ்வப் பொழுது சந்தையில் நிகழும் மாற்றங்களை கண்டு அஞ்சாமல் இருந்தால் நல்ல நிறுவனப் பங்கு எப்பொழுதும் லாபம் தரும்.

சரி..நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி தெரிவு செய்வது ? அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.


Leia Mais…
Sunday, December 19, 2004

பங்குச் சந்தையின் எதிர்காலம்

இந்த வாரம் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வைப் பெற்று விட்டு வெள்ளியன்று BSE 74 புள்ளிகளும், NSE 21 புள்ளிகளும் சரிந்தது. திங்களன்று நல்ல உயர்வுடன் தொடங்கி 6400 புள்ளிகளைக் கடந்த பிறகு, வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் குறியீடு சரிந்தது. நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு உயர்வுக்கும் அடுத்து லாப விற்பனையால் சரிவு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதைக் கண்டு அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. பங்குக் குறியீடு சரியும் பொழுது பங்குகளை வாங்குவதே காளைகளின் ஆளுமையில் இருக்கும் சந்தையில், லாபம் பெறுவதற்கான உத்தி. இந்தச் சரிவை, ஒரு வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும்.

இந்த வாரம் சரிந்த பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளே முதலிடத்தைப் பெறுகிறது. தொடரும் பங்காளிச் சண்டை தான் இந்தப் பங்குகளை கரடிகள் வசம் இழுத்துச் சென்று விட்டது. முகேஷ், அம்பானி சகோதரர்களிடையே நிகழும் சண்டை நாளுக்கு நாள் முற்றிக் கொண்டே இருப்பதால் தற்பொழுதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. பங்குச் சந்தையை பாதிக்க கூடிய எந்த நிகழ்வுகளும் மற்றப் பங்குகளில் நிகழாமல் பெரும்பாலான பங்குகள் லாப விற்பனையால் தான் சரிவடைந்தன.

இன்போசிஸ், விப்ரோ, TCS போன்ற மென்பொருள் பங்குகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் ஒரளவிற்கு லாபமுடன் இருந்தது. ஆனால் கடந்த வாரம் அதிகமாக கவனிக்கப்பட்டவை Pharma தொலைத்தொடர்பு மற்றும் வங்கிப் பங்குகள் தான்.

சரி...தற்பொழுதுள்ள நிலையில் எந்தப் பங்குகளை வாங்கலாம் ?

இதற்கு எல்லா காளைகளிடமிருந்தும் பதிலாக வரும் தகவல்

"இது வரை எந்தப் பங்குகள் அதிகம் உயரவில்லையோ, அந்தப் பங்குகளை வாங்கலாம்"

அந்தளவுக்கு எல்லா துறைகளிலுமே பங்குகள் உயர் விலையில் உள்ளது.

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது -

பங்குக் குறியீடு 5000ல் இருக்கும் பொழுதும், பங்கு விலை உயர் நிலையில் இருப்பதாகத் தான் சொன்னார்கள் (Current Valuations are stretched).
குறியீடு 5500, 6000 என ஒவ்வொரு இலக்கைத் தொட்ட பொழுதும் அதே கதை தான். தற்பொழுது 6400 என்ற இலக்கை தொடும் பொழுது இதே கதை தான்.

நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் இத்தகைய காளைச் சந்தையில் மேற்கொள்ள வேண்டிய உத்தி என்ன ?

இந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முதலீடுகளுக்குச் சாதகமாக இருந்த பொழுது 6200ஐ எட்டிய சந்தை, பின் இடதுசாரி ஆதரவை நம்பி காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் கடும் சரிவுற்றது. ஆனாலும் கடந்த இரு மாதங்களாக குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் குறியீடு புதிய வரலாறுகளை படைத்துக் கொண்டே இருக்கிறது. இது வரை சுமார் 8பில்லியன் டாலர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகம். இந்த முதலீடுகள் தொடர்ந்தால் தான் பங்குக் குறியீடுகள் மேலும் உயர முடியும்.

ஆசியாவில் மிக அதிக முதலீடு இந்தியச் சந்தையில் தான் செய்யப்படுகிறது. என்றாலும் இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவில் உள்ள சீனா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு முதலீடுகள் பெருமளவில் குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள மந்த நிலையே தற்பொழுது ஆசிய சந்தைகளில் முதலீடுகள் குவிவதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.5% மாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை அடையக் கூடும். அரசின் திட்டங்கள் சிறப்பாக அமையும் பட்சத்தில் 8% வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் அடைந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் வலுவாக உள்ளது. ஏனைய வளர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் பொழுது பணம் பெருகக் கூடிய இடத்தில் தானே முதலீடுகள் செய்வார்கள். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் வரையில் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி பெருகுவது, இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள், பொருளாதார அடித்தளம் போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசின் செயல்பாடுகளையும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்க கூடிய செய்திகளையும் பொறுத்தே சந்தையின் ஏற்றம் அமையும். இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை 8% மாகவும், பற்றாக்குறையை பெருமளவிலும் குறைக்க அறிவிக்கப்பட்ட செயல் திட்டங்கள், நிகழ்காலத்தில் செயல்படுத்த முடியாத ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பு போல மாறிவிட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தளவுக்கு அரசியல் சூழ்நிலைகளால் உள்நாட்டில் உயர்த்த முடியாமல் போனது, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அரசு அறிவித்த வரிச் சலுகை, இந்த உயர்வு பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி இலக்கையும் அடையமுடியவில்லை, பற்றாக்குறையையும் குறைக்க இயலவில்லை. வறட்சி, வெள்ளம் என்று இரண்டு சூழலிலும் விவசாயம் அல்லாடியது. ஆனாலும் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பற்றிய கனவில் சந்தை நடைபோடு கொண்டிருக்கிறது. இந்தியர்களுக்கு மட்டுமே இருந்த இந்தக் கனவு வெளிநாட்டவருக்கும் தொற்றிக் கொண்டதால் தான் முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் பகல் கனவு அல்ல. அரசின் செயல்பாடுகள் சரியாக அமைந்தால் நடக்க கூடிய ஓன்று தான். அரசு வேகமாக செயல்படவேண்டும்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான சலுகைகளை குறைத்தாகவேண்டும் என்று அரசுக்கு தொழில் துறையில் இருந்து, கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது நிர்பந்தம் ஏற்படும். எந்த அரசாலும் அரசியல் காரணங்களால் இந்த சலுகையை முற்றிலும் அகற்ற இயலாது. அப்படி அகற்றுவது மத்தியதர மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு பெரும் சுமையாக கருதப்படும். ஆனால் படிப்படியாக இந்தச் சலுகையை குறைக்கலாம். அதைப் போலவே எண்ணெய் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தத் துறையில் மட்டும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்கு நிறுவனங்களும் ஒரே துறையில் போட்டி நிறுவனங்களாக செயல்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றுவது எனப் பல திட்டங்களை அரசு யோசித்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் ஒன்றையும் செயல்படுத்த முடியவில்லை.

இது போலவே பொருளாதார சீர்திருத்தங்களும் வேகமாக செயல்படவில்லை. உள்கட்டமைப்பு இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாஜ்பாயின் கனவுத்திட்டமாக செயல்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் பூர்த்தியடையவில்லை. இத்தகைய உள்கட்டமைப்பு திட்டங்களில் லாபம் காண நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய தேவையிருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எளிதில் லாபம் கிடைக்கக்கூடிய துறைகளிலேயே முதலீடு செய்கின்றனர். அரசுக்கும், உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனத்திற்கும் சாதகமான ஒரு செயல்திட்டம் வரையப்பட வேண்டும். முதலீடுகளை லாபம் தரும் துறைகளில் தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்பட்டால் முதலீடுகள் தானாக இந்தத் துறையில் பெருகும் வாய்ப்பு ஏற்படும்.

இது மட்டுமில்லாமல் மாநில அரசுகள் அரசியல் காரணங்களுக்காக வாரி வழங்கும் இலவச மின்சாரம் போன்றவை சீர்திருத்தப்பட்டு, அரசுக்கு லாபம் வர வழி காணப்பட வேண்டும். மின் உற்பத்தியும், மின் வாரியங்களும் தனியார் மயமாக்கப்படுவது தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில் பகல் கனவு தான். என்றாலும் குறைந்தபட்சம் இலவச மின்சாரங்களையாவது நிறுத்த முயலவேண்டும். அப்பொழுது தான் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எந்தளவுக்கு செயல் வடிவம் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து தான் முதலீடுகள் மேலும் குவியும். சனவரி மாதத்தில் பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். அந்த அறிக்கையில் உள்ள நிலவரங்களுக்கேற்ப முதலீடுகள் பெருகவோ, சரியவோ வாய்ப்பு உள்ளது.

பங்குச் சந்தை தற்பொழுதுள்ள வரலாறு காணாத உயர் நிலையில் இருந்து அடுத்தக் கட்ட உயர் நிலைக்குச் செல்லும் என்ற கருத்தே முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஆதரமாக சில புள்ளி விபரங்களும் தரப்படுகிறது. 1992ல் பங்குச் சந்தை குறியீடு 4600ல் இருந்தது. 2004ல் 6400 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 40% வளர்ச்சி. ஆனால் இந்த 12 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6% வளர்ந்துள்ளது. இந்த நிலையில் பார்க்கும் பொழுது சந்தை இன்னும் அதிக உயர்வை பெற்றாக வேண்டும். இந்த வாதம் ஓரளவிற்கு ஏற்புடைய வாதமாகவே எடுத்துக் கொண்டாலும் இன்னொரு கோணத்தில் பார்க்கும் பொழுது, இந்த வளர்ச்சி ஏன் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.

அதற்கு முக்கிய காரணம் அரசியல் சூழ்நிலைகள். பல பிரதமர்களை இந்த இடைப்பட்ட காலத்தில் பார்த்து விட்டோம். அமைந்த பல ஆட்சிகளில் ஒரு நிலையான ஆட்சி வாஜ்பாய் தலைமையில் தான் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெருமளவில் எழுந்த பங்குச் சந்தை ஊழல், 2000ம் ஆண்டு உலகளவில் இருந்த பொருளாதார தேக்க நிலை போன்றவை இந்த உயர்வை பாதித்திருக்க கூடும். அதைப் போலவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்த பொழுது குறியீடு 700 புள்ளிகள் சரிந்தது. வாஜ்பாய் அரசே தொடர்ந்திருக்கும் பட்சத்தில் இதை விட அதிக உயர்வை பங்குச் சந்தை பெற்றிருக்கலாம்.


பொருளாதார காரணங்கள், அரசியல் நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் இவை எல்லாம் தான் பங்குச் சந்தையை சரிவுக்கும் உயர்வுக்கும் கொண்டு செல்கிறது. அவ்வப்பொழுது நிகழும் சரிவுகளை கண்டு அஞ்சாமல் முதலீடுகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தால் லாபம் நிச்சயம் தான்.

தற்பொழுது இந்திய மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதத்தினர் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். எஞ்சியுள்ளோர் வங்கிகள், அஞ்சல் துறை, அரசின் பத்திரங்கள் போன்ற
மிகவும் பாதுகாப்பான, ஆனால் லாபம் குறைந்த இடங்களில் தான் தங்கள் சேமிப்பை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எஞ்சியுள்ளோரையும் பங்குச் சந்தைக்கு அழைத்து வரக் கூடும். மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் எஞ்சியுள்ளோர் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது எதிர்காலத்தில் நிச்சயமாக பங்குச் சந்தை
ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்து வரும் வாரத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படாமல், நீண்ட கால முதலீட்டில், லாபம் தரக் கூடிய நல்லப் பங்குகளை தேர்வு செய்து, இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் நம் பொருளாதாரத்தையும் வளர்த்துக் கொள்பவர்களே புத்திசாலி முதலீட்டாளர்கள்.


Leia Mais…
Wednesday, December 15, 2004

உயர்வு...உயர்வு...உயர்வு...

எல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வரலாறு காணாத உயர்வு என்று அலறி கொண்டிருக்கிறது. BSE குறியீடு 77 புள்ளிகள் எகிறி 6,402 க்கும், NSE குறியீடு 22 புள்ளிகள் எகிறி 2,029 க்கும் வந்துள்ளது. வரலாறு காணாத உயர்வு என்று எல்லோரும் அலறும் பொழுது சாமானிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமும், குழப்பமுமே மேலிடுகிறது.

குறியீடு, ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்தரப்படுத்திக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கும். அது கீழ் நோக்கி சரியுமா இல்லை மேல் நோக்கி உயருமா என்பது வாங்குபவர், விற்பவர் எண்ணிக்கை, பங்குகளைப் பற்றிய செய்திகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்தது. கடந்த வாரம் லாப விற்பனையால் சரிந்த சந்தை, இந்த வாரம் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதால் எகிறுகிறது. வரலாறு காணாத உயர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தற்பொழுது உள்ள நிலையில் இருந்து ஒரு புள்ளி உயர்ந்தாலும், அது வரலாறு காணாத உயர்வு தான்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பங்குச் சந்தையும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி உயருமா என்று கேள்வி கேட்டு கொண்டே பல உயர்வுகளை கோட்டை விட்டு விடுவோம். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு சரிவிலும் நல்லப் பங்குகளை வாங்கி அடுத்த கட்ட குறியீடு உயர்வில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனலிஸ்டும் ஒரு கதை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு வணிக இதழும், தொலைக்காட்சியும் தங்களது யுகங்களையும் அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அதில் தெளிவான ஒரு முடிவு எடுப்பது நம் மனநிலையைச் சார்ந்தே அமையும்.

சரி.. இன்று எந்தப் பங்குகள் எகிறியது ?

இன்று எல்லா துறைகளிலுமே நல்ல ஏற்றம் இருந்தது. தொலைத்தொடர்பு பங்குகளான பார்தி பங்குகள், Pharma பங்குகளான ரான்பேக்சி, சன் பார்மா போன்றவை எகிறியது.

அதைப் போல சிறிது வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த மென்பொருள் பங்குகள் எகிறத் தொடங்கியது. இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பெரும்புள்ளிகள் தவிர மிட்கேப் (MidCap) மென்பொருள் பங்குகளான ஹேக்சாவேர், ஜியோமேட்ரிக் சாப்ட்வேர் போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

தொலைக்காட்சிப் பங்குகளான ZEE தொலைக்காட்சி பங்குகள் என்று மிக அதிக உயர்வைப் பெற்றது.

ஆட்டோப் பங்குகளான மாருதி, டாட்டா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா போன்றவையும் நல்ல ஏற்றம் பெற்றன.

இன்று எல்லா துறைகளிலும் நல்ல ஏற்றம் இருந்தது.

அடுத்து வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும் ?

பங்கு விலை தற்பொழுது எகிறி உள்ளதால் லாபம் எடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க கூடும். அப்பொழுது பங்குக் குறியீடு சற்று சரியும். சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்து, குறியீடு சரியும் பொழுது நல்லப் பங்குகளாக வாங்குவது நல்லது.

Leia Mais…
Sunday, December 12, 2004

அச்சம், எச்சரிக்கை

அச்சம், எச்சரிக்கை - இவை இரண்டும் தான் கடந்த வாரம் சந்தையை வழி நடத்தியது. வரலாறு காணாத உயர்வைப் பெற்றப் பிறகு, இதற்கு மேல் பங்குகள் விலை ஏறுமோ, ஏறாதோ என்ற அச்சத்தில் முதலீட்டாள்ர்கள் தங்களது பங்குகளை விற்றதாலும், புதிதாக பங்குகளை வாங்காமல் ஒரு வித எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் இருப்பதாலும் கடந்த வாரம் சந்தை மந்தமாக இருந்தது. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் 70 புள்ளிகள் சரிவுற்றது.

கடந்த வாரம் சரிவுற்ற பங்குகளில், சிலப் பங்குகள் சந்தையை அச்சப்படுத்திய செய்திகளால் சரிவுற்றது. ஏனைய பங்குகளில் பெரும்பாலானவை லாபம் பெறும் பொருட்டு முதலீட்டாளர்கள் விற்றவைத் தான்.

செய்திகளால் சரிவுற்ற பங்குகளில் ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தான் அதிகம் சரிவுற்றது.
சகோதரர்களிடையே தொடரும் தகராறால் முதலீட்டாளர்களுக்கு மறுபடியும் ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் மீது அச்சம். பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.

அடுத்ததாக மென்பொருள் பங்குகள். சில வாரங்களாகவே டாலரின் மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது. பிற நாணயங்களான, யுரோ, யென் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது. இது ஏற்றுமதியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாயின் மதிப்பில் உள்ள ஏற்ற நிலையால் மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தக் காலாண்டில் லாபம் குறைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி மென்பொருள் பங்குகளின் விலை ஏற்கனவே உச்சத்தில் இருப்பதால் இந்தப் பங்குகளை அனைவரும் விற்க தொடங்கி விட்டனர். இன்போசிஸ் நிறுவனப் பங்கு சில வாரங்களாகவே ரூ2000 - ரூ2100 க்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதைப் போலவே சத்யம், விப்ரோ மற்றும் ஏனைய மென்பொருள் பங்குகளும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பில் திடீர் விழ்ச்சி ஏற்பட்டது. இந்த விழ்ச்சி மற்றும் சத்யம், இன்போசிஸ் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கும் புதிய ADR (American Depository Receipt - அமெரிக்க பங்குச் சந்தையில் இந்தியப் பங்குகள் லிஸ்ட் செய்யப்படுவதற்கான அறிவிப்பு) போன்றவை சத்யம், மற்றும் இன்போசிஸ் பங்குகளுக்கு ஊட்டச்சக்தியாக அமையக்கூடும்.

உலகச் சந்தையில் ஸ்டீல் விலையின் சரிவால் SAIL, TISCO போன்ற ஸ்டீல் பங்குகள் சரிவுற்றன.

இந்தப் பங்குகள் தவிர பெரும்பாலான பங்குகள் முதலீட்டாளர்களின் லாப விற்பனை (Profit Booking) காரணமாகவே சரிவுற்றன.

பங்குகளின் விலை எகிறும் காளைச் சந்தையில் நம்மைப் போன்ற சாமானிய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்கள். தற்பொழுது, வங்கிகளின் சேமிப்பு கணக்கில் இருந்த நிறைய முதலீடுகள் பங்குச் சந்தையை நேக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வாரம் சந்தையில் உள்ள மந்த நிலை மற்றும் வெள்ளியன்று சந்தையின் சரிவு போன்றவை சாமானிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அச்சம் தேவையற்றது. தற்பொழுதுள்ள சந்தை நிச்சயமாக காளைச் சந்தை தான். சந்தையில் அவ்வப்பொழுது முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்பார்கள். பங்குக் குறியீடு சரியும். பின் சரிவுற்ற நிலையில் பங்குகளை வாங்கும் பொழுது சந்தை எகிறும். அது தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சந்தை மேலும் வலுவாக முன்னேற வேண்டுமானால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்த முதலீடுகள் குறைந்து போகும் எனச் சொல்வதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. கடந்த வாரம் கூட சுமார் 300 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக முதலீடுகள் குவிந்து விட்டதால், அடுத்து வரும் வாரங்களில் வர்த்தகம் மந்தமாகும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இது வரை அதிக ஏற்றம் காணாத துறைகளில் முதலீடு செய்வது பலனளிக்கும். கடந்த சில வாரங்களாக வங்கிப் பங்குகளின் விலை ஏறி விட்டது. அது போலவே டாலரின் வீழ்ச்சியாலும், விலை உச்சத்தில் இருப்பதாலும் மென்பொருள் பங்குகள் தற்பொழுது கவர்ச்சிகரமானவை அல்ல. தொலைத்தொடர்பு பங்குகள், Pharma போன்றவை லாபம் தரும். பெட்ரோல் விலையின் வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் விலை ஏறக்கூடும்.

நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் பங்குகளை வாங்க வேண்டும். சந்தையின் போக்கைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகளை வாங்குவது நல்லது. குறியிடுகள் சரிவது கண்டு அச்சமடைய தேவையில்லை. மாறாக அது நாம் புதிதாக பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.

Leia Mais…
Thursday, December 09, 2004

பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லக் கூடிய சில நல்ல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

முதலாவது, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ள முதலீட்டு கமிஷன். அரசாங்கத்திலுள்ள சில அதிகாரிகளைக் கொண்டு ஒரு உதாவாக்கரை கமிஷனை அமைக்காமல், திரு.ரத்தன் டாட்டா தலைமையில், ICICI யைச் சேர்ந்த திரு.அசோக் கங்குலி, HDFC ன் திரு.தீபக் பரேக் ஆகியோரைக் கொண்டு மூன்று நபர் முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்கும். இந்த முதலீடுகள் குறித்து முதலீட்டாளர்களின் கவலைகளை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதற்குரிய தீர்வுகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கும். ரத்தன் டாட்டா போன்ற தொழில் துறையின் மதிப்பைப் பெற்றவர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஒரு ஸ்டார் வேல்யுவுடன் முதலீட்டாளர்களை நிச்சயம் ஈர்க்கும்.

தற்பொழுதுள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.5% - 7% கடந்து, 8% முதல் 10% ஐ கடந்து இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் முன்னேற வேண்டுமானால் நாட்டின் உள்கட்டமைப்பின் தரம் உயர வேண்டும். தற்பொழுது பெங்களுர் போன்ற பெரிய நகரங்கள் பெருகி வரும் தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழி பிதுங்கிப் போய் உள்ளது. இன்போசிஸ் போன்ற இந்தியா நிறுவனங்களே பெங்களுர் தவிர முதலீடு செய்ய வேறு நகரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறது. சென்னை ஓரளவுக்கு அவர்களின் எதிர்பார்பை தீர்க்க கூடும். ஆனால் இங்கே கூட பழைய மகாபலிபுரம் சாலையில் திட்டமிடப்பட்ட வேகத்தில் I.T.ஹைவேக்கான வேலைகள் நகராமல் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே மகேந்திரா சிட்டி போன்ற தொழில் நகரங்களை செங்கற்பட்டு எல்லையில் தான் உருவாக்க முடிகிறது. பெரிய நகரங்களை விடுத்து இரண்டாவது கட்ட நகரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது கட்ட தொழில் நகரங்களை திட்டமிட்டு உருவாக்கினால் தான் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) இந்தியாவிற்குள் ஈர்க்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் 150 பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகிறது. தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைப் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் முதலீடு தேவை. ஆண்டுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு தேவைப்பட்டாலும், தற்பொழுது சுமார் 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கே முதலீடுகள் வருகிறது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நாடுகளில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருப்பதாக கூறப்பட்டாலும், சீனாவில் செய்யப்படும் 50 பில்லியன் முதலீட்டுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவிற்கு வரும் முதலீடு சொற்ப அளவு தான்.

தேவைப்படும் முதலீடுகளை ஈர்க்கத் தான் இந்த முதலீட்டு கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கமிஷனால் சாதிக்க முடியுமா ?

தொழில் துறையில் அனுபவம் உள்ளவர்களை உள்ளடக்கிய இந்தக் கமிஷனால் முதலீடுகளை இந்தியாவின் பக்கம் நிச்சயம் ஈர்க்க முடியும். அரசாங்க அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளை இந்தக் குழுவினால் புரிந்து கொள்ள இயலும். அவர்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லும். அரசாங்கத்திற்குள்ள சங்கடங்களையும் முதலீட்டாளர்களின் பிரச்சனைகளையும் அறிந்து அதற்கேற்ப ஒரு பேலன்சடு -Balanced நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முடியும். ஆனால் எல்லா கமிஷன்களையும் போல சில அரசியல் பிரச்சனைகளை இந்தக் கமிஷனும் எதிர்கொண்டே ஆக வேண்டும். இது இந்திய அரசியலில் தவிர்க்க இயலாதது. எந்தளவுக்கு அந்த பிரச்சனைகளுக்கு அரசாங்கம் ஈடுகொடுக்கிறதோ அந்தளவுக்குத் தான் இந்தக் குழுவின் வெற்றியும் இருக்கும்.

அடுத்ததாக இந்திய பங்குச் சந்தையில் குவியும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் (FII Investment). கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்களுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குவிந்துள்ளது. 2004ம் ஆண்டு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்களுக்கு முதலீடுகள் குவிந்துள்ளது. இது தான் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் ஒரு ஆண்டில் செய்யப்பட்டிருக்கும் மிக அதிக பட்ச முதலீடு. வெளிநாட்டு முதலீடுகள் பங்குச் சந்தையில் குவியும் பொழுது பங்குக் குறியீடுகள் எகிறும். இந்த ஆண்டு துவக்கத்தில் முதலீடுகளுக்கு சாதகமான பா.ஜ.க. அரசு இருந்த பொழுது முதல் நான்கு மாதங்கள் பங்குச் சந்தையில் முதலீடுகள் குவிந்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று இடதுசாரிகளின் ஆதரவால் அரசு அமைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டு முதலீடுகள் சரியத்தொடங்கியது. மிக மோசமாக மே மாதத்தில், இடதுசாரி தலைவர்களின் சில பொறுப்பற்ற பேச்சால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள, பங்குக் குறியீடு சரியத் தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்குப் பிறகு அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக முதலீடுகள் பெருகத் தொடங்கியது.

ஆனால் கடந்த இரு மாதங்களாக அந்நிய முதலீடு ஏன் இவ்வளவு வேகமாக குவிகிறது ? இந்திய பொருளாதாரம் மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் நம்பிக்கை, வலுவாக இருக்கும் நாட்டின் பொருளாதார அடித்தளம் எனப் பல காரணங்களை சொல்லலாம், என்றாலும் மிக முக்கிய காரணம் மந்தமடைந்துள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம். அந்தச் சந்தையில் முதலீடு செய்வதை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபம் தரும் என்பதால் பல முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஆசிய நாடுகளில் குவிக்கத் தொடங்கியுள்ளது. மார்கன் ஸ்டேன்லி கேப்பிடல் இண்டர்னேஷனல் (MSCI Index) ஆசியாவிற்கான குறியீட்டு உயர்வு விகிதத்தில் இந்தியா 12% உயர்வுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சீனா, கொரியா போன்ற நாடுகளை விட இந்தியப் பங்குச் சந்தையின் வளர்ச்சி இம் மாதம் அதிகரித்துள்ளது. இந்த முதலீடு அடுத்து வரும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றே தெரிகிறது, அடுத்த பட்ஜெட்டிற்குப் பிறகு பட்ஜெட்டிற்கு ஏற்ப முதலீடுகள் மேலும் குவியும் அல்லது குறைந்து போகும். ஆனால் முதலீடுகள் அதிகரிக்கத் தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு பங்குச் சந்தையில் குவிவது நல்ல செய்தி தான் என்றாலும் இந்திய பொருளாதாரம் மேலும் முன்னேக்கி நகர வெளிநாட்டு நேரடி முதலீடு பெருக வேண்டும். தனியார் வங்கிகளில் 74% அளவுக்கு அந்நிய முதலீடுகளை பெருக்குவதற்கான அறிவிப்பு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆனால் இன்னமும் நடைமுறைப் படுத்தப் படாமல் இருக்கும் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும். விவசாயம், மனித வள மேம்பாடு போன்ற இது வரை அதிகம் கண்டுகொள்ளப் படாமல் இருக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் தவிர கையிருப்பில் இருக்கும் அந்நிய செலவாணியை உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டமும் அரசிடம் உள்ளது.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவால்யா ஆகிய இந்தியாவின் சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களை உள்ளடக்கிய அரசு இந்திய பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நல்ல திட்டங்களை திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் தான், அதற்கு அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தான் இந்தியாவின் பொருளாதாரமும், பங்குச் சந்தையும் மேலும் வளர்ச்சி அடையும்.

Leia Mais…
Sunday, December 05, 2004

பங்கு வர்த்தகம் சூதாட்டமா ?

பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.

சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.

சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.

சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.

விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.

பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.

பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.
நான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.

மார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது ? அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன ? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.

அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம் (ஆராய்தல் பற்றிய முந்தையப் பதிவு). தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.

Leia Mais…
Thursday, December 02, 2004

வரலாறு காணாத உயர்வு

இந்த வார துவக்கத்தில், சந்தை கரடிகளின் வசமாகப் போவதாகத் தான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ரிலயன்ஸ் நிறுவனத்திற்காக அம்பானி சகோதரர்களிடையே நடைபெற்ற சொத்து தகராறு (இது பற்றிய பதிவுகள் - 1, 2) காரணமாக சந்தை சரியக்கூடுமென அனைவரும் எதிர்பார்க்க, அதற்கு நேர்மாறாக சந்தை எகிறத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கிக் குவிப்பதால் குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2004ம் ஆண்டு மட்டும் 7பில்லியன் டாலர்களுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். இந்த வாரமும் வெளிநாட்டு முதலீடுகளே பங்குக் குறியீடுகளை வரலாறு காணாத உச்சத்தை அடைய வழி வகுத்துள்ளது. தற்பொழுது BSE குறியீடு 6328 புள்ளிகளையும், NSE குறியீடு 2000 புள்ளிகளையும் எட்டியுள்ளது.

வங்கிப் பங்குகள், எண்ணெய் நிறுவனப் பங்குகள் என சில வாரங்களுக்கு முன்பு வரை யாருமே அதிகம் சீண்டாத பங்குகள் தான் சக்கை போடு போடுகிறது. செவ்வாயன்று அதிக எழுச்சியுடன் காணப்பட்ட இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் பங்குகள், அதற்குப் பின் சரிந்து விட்டது. கடந்த இரு வாரங்களாகவே மென்பொருள் பங்குகள் அதிக உயர்வைப் பெறவே இல்லை. ஏற்கனவே இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகள் மீது கவனம் செலுத்தவில்லை. அது மட்டுமில்லாமல், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதால், இந்தக் காலாண்டில் மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில், அந்நிய செலாவணியால் இழப்பு ஏற்படலாம் என்ற செய்தியும் முதலீட்டாளர்களை இந்தப் பங்குகள் வாங்க விடாமல் செய்து விட்டன.

வங்கிப் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களை கவர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்று எல்லா வங்கிப் பங்குகளுக்குமே உய்ர்வு தான். எந்த வங்கியையும் யாரும் விட்டு வைக்க வில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 585ஐ எட்டியுள்ளது. இந்தப் பங்கு கடந்த மாதம் 430க்கு அருகே தள்ளாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பங்குகளில் HDFC, SBI எனப் பெரும்புள்ளிகள் மட்டுமில்லாமல் சிறிய வங்கிகளான பாங்க ஆப் இந்தியா போன்றவையும் நல்ல உயர்வு பெற்றுள்ளன.

சொத்து தகராறு காரணமாக எங்கே சரிந்து போய் விடுமோ என அனைவரும் அஞ்சிய ரிலயன்ஸ் பங்குகள், இந்த வாரத் துவக்கம் முதலே எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. கடந்த வாரம் விலை சரிந்ததையடுத்து குறைந்த விலையில் இந்தப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ரிலயன்ஸ் நிறுவனத்தின் அடித்தளம் இந்தச் சொத்து தகராறால் சரிந்து விடப் போவதில்லை என்ற எண்ணமே முதலீட்டாளர்களை வழி நடத்தியது.

நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தையின் இந்த வார செயல்பாடுகள் கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும். எல்லோருடைய எதிர்பார்ப்பிற்கும் நேர்மாறாக சந்தையின் வர்த்தகம் அமைந்து விட்டது தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். Technical Analysis ம் இந்த வாரம் பொய்யாகி விட்டது. ரிலயன்ஸ் பங்குகளை விற்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தவர்களுக்கு, அந்தப் பங்குகள் லாபம் சம்பாதித்து கொடுத்தது கொஞ்சம் ஆச்சரியம் தான்.

பலரின் எதிர்பார்ப்புக்கும், Technical Analysis ம் நேர்மாறாக சந்தை ஏன் செயல்படுகிறது ?
சந்தை புரியாத புதிரா ?

பங்குச் சந்தையின் உயர்வு குறிப்பிட்ட நாளில் வாங்குபவர்கள், மற்றும் விற்பவர்களின் (Demand and Suppy) எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். இதனைப் பல நேரங்களில் சரியாக கணிக்க முடியாது. அந்த நாளில், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினால் பங்குகள் உயரும். எல்லோரும் பங்குகளை விற்க தொடங்கினால் சரியும். இந்த வாரம் அனலிஸ்டுகளின் எதிர்பார்ப்பும், Technical Analysis ம் பொய்த்துப் போனதன் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிப்பதால் தான். இதற்கெல்லாம் ஆருடம் கூற முடியாது. சந்தையை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனலிஸ்டுகள் சந்தை சரிந்து போகும் என்று சொல்லி விட்டார்களே என்று சந்தையில் இருந்து ஓடி விடக் கூடாது.

சரி... தற்பொழுது வரலாறு காணாத உயர்வை பெற்றாகி விட்டது. அடுத்து என்ன ? புதிதாக முதலீடு செய்யலாமா ?

சந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். குறியீடுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிக் குவிக்கும் பொழுது முன்னேறும். பின் முதலீட்டாளர்கள் லாபமடையும் பொருட்டு பங்குகளை விற்கும் பொழுது சரியும். அந்த அளவில் கொஞ்சம் தள்ளாடும். பின் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் பொழுது மறுபடியும் எகிறும். இது ஒரு சுழற்ச்சி தான்.
சந்தையை சரியவைக்க அல்லது எகிற வைக்க கூடிய செய்திகள் வராத வரையில் இந்த சுழற்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.

இந்த வாரம் கூட இந்த சுழற்ச்சி ஏற்பட்டது.

திங்கள், செவ்வாய் கிழமைகளில் பங்குக் குறியீடுகள் எகிறியது. புதனன்று சரிவுற்றது. இன்று மறுபடியும் எகிறியுள்ளது.

தன்னுடைய The Intelligent Investor என்ற புத்தகத்தில் Benjamin Graham, "புத்திசாலி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு முதலீடு செய்ய மாட்டார்கள். பங்குச் சந்தை உயரும் பொழுது முதலீடு செய்வதும், சரியும் பொழுது விற்பதும் Speculators ன் வேலை. சந்தைக் குறியீடுகள் உயரும் பொழுது, பங்குகளின் விலையை, அதன் மதிப்பைக் காட்டிலும் அதிகம் உயர்த்துவதும், சரியும் பொழுது பங்குகளின் விலையை அதன் மதிப்பை விடக் குறைப்பதும் Mr.Market ன் தன்மை. பங்குகளின் உண்மையான மதிப்பை விடக் குறைவாக வாங்கி, அதன் சரியான விலையை விட அதிக விலையில் யார் விற்கிறார்களோ, அவர்கள் தான் புத்திசாலி முதலீட்டாளர்கள்" என்று கூறுகிறார்.

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகிக் கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீட்டால் சந்தை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர்களின் முதலீடு குறையும் பொழுதோ, முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் பொழுதோ சந்தை சரியும். இந்தியா போன்று, வளர்ச்சி அடையும் பொருளாதாரத்தை விட்டு அவர்களால் விலக முடியாது. எனவே இந்த உயர்வில் இருந்து அடுத்த கட்ட உயர்வை நோக்கி நாம் நகரப் போவது நிச்சயம்.

ஏற்றமும், இறக்கமும் இருந்தால் தான் பங்குகளை வாங்கி லாபமடைய முடியும். தற்பொழுதுள்ள நிலையில் இருந்து குறியீடுகள் சற்று சரியும் பொழுது, பங்குகளை வாங்கி விடலாம். இன்னும் குறையட்டும் என்று எதிர்பாத்துக் கொண்டே இருந்தால், குறியீடுகள் திடீரென உயரும் பொழுது நம்மால் அந்த உயர்வில் பங்கெடுக்க முடியாமல் போகலாம். எனவே சரியான நேரத்தில் சரியான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

நாம் புத்திசாலி முதலீட்டாளராவது நம் கையில் தான் உள்ளது.

Leia Mais…