பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

வணக்கம்

என்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.

Monday, February 28, 2005

பட்ஜெட் 2005 - 2



பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தப் பொழுது தள்ளாடிக் கொண்டிருந்த பங்குச்சந்தை, சிதம்பரம் பட்ஜெட் உரையை முடித்ததும் துள்ளிக் குதித்து பின் மேல் நோக்கி எழும்பி வரலாறு காணாத உயர்வுடன் இன்றைய வர்த்தகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 144 புள்ளிகள் எகிறி 6,713.86 புள்ளிகளை எட்டியது. தேசியப் பங்குச்சந்தை, Nifty 43 புள்ளிகள் எகிறி 2,103.95 புள்ளிகளை எட்டியது.



கடந்த ஆண்டு நிதியமைச்சர், பங்குப் பரிவர்த்தனை வரி என்ற ஒன்றை அறிவிக்க சரிந்தப் பங்குச்சந்தை, இந்த ஆண்டு அந்த வரியில் பெரிய அளவில் உயர்வு ஏதும் இல்லாமல் இருந்தாலே போதும் என்று தான் எதிர்பார்த்தது.

அதேப் போல ஒரு சிறு உயர்வு மட்டுமே இந்தப் பட்ஜெட்டில் செய்யப்பட்டது. இது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ப.சிதம்பரம் கூறினார். உண்மை தான் 0.015%ல் இருந்து 0.02% ஆக உயரும் வரியால் எந்தப் பாதிப்பும் இல்லை.

இது தவிர மும்பை இப் பகுதியின் நிதித் தளமாக (Regional Finance Hub) மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர நிதி தொடங்குவது பற்றி SEBI பரிசீலிக்கும் என்றும் அறிவித்தார்.

வருமான வரியில் 1 இலட்சம் வரையிலான எந்த முதலீட்டிற்கும் வரி கிடையாது என்ற அறிவிப்பும் சந்தைக்கு ஊக்கமளிக்கும். அதாவது தற்பொழுது பலர் வரிச் சலுகைக்காகவே பல சேமிப்புகளை மேற்கொள்கிறார்கள். இவர்களை முதலீட்டாளர்களாக மாற்ற வேண்டும் என்று பட்ஜெட்டிற்கு முன்பே சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன் படி 1 இலட்சம் வரை எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதி (Mutual Funds) போன்றவற்றில் கூட முதலீடு செய்யலாம். 1 இலட்சத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே பென்ஷன் பண்ட் போன்றவைகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் இந்த அறிவிப்பும் பங்குச்சந்தையின் ஏற்றத்திற்கு உதவும்.

இது தவிர வங்கிகளின் CRR வரம்பு குறித்த அறிவிப்பும் ஒரு நல்ல அறிவிப்பு. வங்கிகள் தங்கள் நிதி நிலைமை அதிகரித்துக் கொள்ள முடியும். இன்று வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஏற்றம் இருந்தது.

நாட்டின் ஏற்றுமதியை 15,000 கோடி டாலராக 2009க்குள் அதிகரிக்கப்படும். அதற்காக விதிகள் மேலும் தாரளமயமாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

G7 மாநாட்டுக்கு தான் சென்றிருந்தப் பொழுது சீனா பெறும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை சீன நிதியமைச்சர் தன்னிடம் சுட்டிக் காட்டியதாகக் கூறிய நிதியமைச்சர், சுரங்கம், வர்த்தகம், பென்ஷன் (mining, trade, pension) போன்ற துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பது பற்றி பேசிய பொழுது, வெளிநாட்டு நேரடி முதலீடு மூலமாக மென்பொருள், தொலைத்தொடர்பு, ஆட்டோமோபைல் போன்ற துறைகளில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை சுட்டிக் காட்டி உறுப்பினர்கள் ஒரு யதார்த்த நிலையை எடுக்கும் படி வற்புறுத்தினார். இது இடதுசாரிகளை நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது அவையில் சிறு சலசலப்பு இருந்தது. இந்த சலசலப்பு ஆளும் கூட்டணியில் அடுத்து வரும் வாரங்களில் பெரும் கூச்சலாக மாறக் கூடும்.

சீனா கடந்த ஆண்டு மட்டும் சுமார் 60பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா பெற்றுள்ளது எவ்வளவு தெரியுமா...4 பில்லியன்.

பின் எப்படி நாம் சீனாவை எட்டிப் பிடிக்க முடியும்.

வருமான வரி விகிதத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  • 1 இலட்சம் வரை வருமான வரி கிடையாது
  • 1,00,000-1,50,000 - 10%
  • 1,50,000- 2, 00,000 - 20%
  • 2, 50, 000 அதிகமாக உள்ளவர்களுக்கு 30%

Standard deduction போன்ற வரி விலக்குகள் எல்லாம் இனி இருக்காது. ஆனால் போக்குவரத்து, கேண்டின் என சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தரும் சலுகைகளுக்கு வருமான வரி இருக்காது.


மகளிர், முதியோரின் ஆசியை பெருவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறி மகளிருக்கான வருமான வரி உச்ச வரம்பு 1, 25, 000 லட்சம் என்றும் முதியோருக்கு 1, 50,000 லட்சம் என்றும் அறிவித்தார்.

வருமான வரியின் மாற்றங்கள் எதிர்பார்த்தது தான் என்பதால் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்கு கொடுக்கப்படும் வரி விலக்குகள் தொடரும்.

Leia Mais…

பட்ஜெட் 2005 - 1



பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

இன்று பட்ஜெட் வாசித்த ப.சிதம்பரம், இதேக் குறளுடன் தன் பட்ஜெட் உரையை முடித்து ஒரு நல்ல பட்ஜெட்டைக் கொடுத்தார். நகரம், கிராமம் என்று எல்லா விரிந்து பரந்திருக்கும் இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், துறைக்கும் பட்ஜெட்டில் சமமாக சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.



விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற முக்கியத் துறைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாக இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கிறது

எதிர்பார்த்தது போலவே வரி விதிப்பில் நிறைய மாறுதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறைகளான ஜவுளி, பார்மா, மென்பொருள் போன்ற துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், ஜவுளித் துறைக்கு ஏரளமானச் சலுகைகளை அறிவித்தார்.

பார்மா துறையில் ஆய்வுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர சர்க்கரை ஆலைகள், கிராமப்புற நெசவுத் தொழில் போன்றவற்றுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளார்.

நாட்டில் 3ல் 2 பங்கு மக்கள் இருக்கும் விவசாயம் நாட்டின் GDPல் வெறும் 21% மட்டுமே இருப்பதால் விவசாயத்திற்கும், கிராமப் புற வளர்ச்சிக்கும் பட்ஜெட்டில் ஏராளமானச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

1.25 லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம்

66,820 கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள்

கிராமப்புற மக்களுக்கு 60 லட்சம் புதிய வீடுகள்

சுமார் 1 கோடி எக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி

கடந்தப் பட்ஜெட்டில் வருமான வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது கல்விக்கு பயன்படுத்தியது போல இந்தப் பட்ஜெட்டில் சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு கேடு செய்யும் பொருட்களின் வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது சுகாதாரத் துறைக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் பீடிக்கு செஸ் கிடையாது என்ற பொழுது பாராளுமன்றத்தில் ஒரே சிரிப்பலை

இது தவிர பெட்ரோல், டீசல் போன்றவற்றிலும் செஸ் விதிக்கப்பட்டு அது நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

குடிநீர் வசதிக்காக 4,750 கோடி செலவிடப்படும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக 83,000 கோடி ஒதுக்கப்படுகிறது

கல்விக்காக 18,337 கோடி ஒதுக்கப்படும். SC/ST மாணவர்களுக்கு கல்விச் செலவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிக்கத்து வங்கியதில் இருந்து அவை மிக அமைதியாக இருந்தாலும், இறுதியில் ஒரே கூச்சலுக்கிடையே தான் பட்ஜெட்டை முடித்தார்.

அதற்கு காரணம், வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு 10 ரூபாய் வரிச் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை தான்.

தேவையில்லாமல் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, வரிச் செலுத்தப்படாமல் நழுவி எங்கோ மறைந்து போய் விடுவதால் இந்த நடவடிக்கை என்று நிதியமைச்சர் கூறியதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இது கறுப்பு பணம், மற்றும் வரி ஏய்ப்பவர்கள் மீதான நடவடிக்கை என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
10,000 என்பது பெரிய தொகை இல்லை. வீட்டு வாடகை, பிறச் செலவுகளுக்காக மாதம் தோறும் பல குடும்பங்களுக்கு இந்தளவுக்கு ஒரே நாளில் பணம் தேவைப்படலாம். 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் என்ற வரி குறைவு தான் என்றாலும், ஏற்கனவே வருமான வரி செலுத்தியப் பிறகு வரும் தொகைக்கு நான் ஏன் மறுபடியும் வரிச் செலுத்த வேண்டும். இதில் எந்தவித லாஜிக்கும் இல்லை.

கறுப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பவர்களை நோக்கித் தான் இந்த முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றால் பணத்தின் உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது வேறு மாதிரியான ஒரு முறைக் கொண்டு வரப்பட வேண்டும்.

பட்ஜெட்டை எதிர்ப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருந்த எதிர்கட்சிகளுக்கு ஒரு காரணம் கிடைத்து விட, ஒரே கூச்சல் தான்.

பட்ஜெட் பற்றிய கண்ணேட்டம் அடுத்தப் பதிவிலும் தொடரும்

Leia Mais…
Sunday, February 27, 2005

ஹர்ஷத் மேத்தா - 8

இவ் வார தமிழோவியத்தில்

மற்றும்


Leia Mais…

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 4



நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. சரக்குகளுக்கான கட்டணப் பிரிவு 4000ல் இருந்து 80 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சரக்குகளின் பல வகையான கட்டணப் பிரிவுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ரயில்வேக்கு 650 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த பலருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். பயணிகள் கட்டணத்தை அதிகரிக்காதது, ரயில்வே வழங்கும் 6500 கோடி ரூபாய் பெருமானமுள்ள மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லாதது இவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் ரயில்வேத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது சாதாரண மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எந்த அரசும் முனைவதில்லை.

ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது போல, பொது பட்ஜெட்டும் இருக்குமா? பொது பட்ஜெட்டில் இருக்கக் கூடிய முக்கிய அம்சங்களை கொஞ்சம் கவனிப்போம்

நிதிப் பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பில் பல மாற்றங்கள் இருக்கும் என்று முந்தையப் பதிவில் பார்த்தோம். இதையே வெள்ளியன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவு படுத்துகிறது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இப்போதைக்கு இருக்காது என்பது தவிர வட்டி விகிதமும் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைச் செய்கிறது. இது போலவே குறைவான வரி விகிதம், ஆனால் பரவலான மக்களை வரிச் செலுத்த வைப்பது போன்றவையும் இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) பலத் துறைகளில் கொண்டு வருவதும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் பட்ஜெட்டில் இருக்க வேண்டும். ஏற்கனவே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள அரசு இந்த பட்ஜெட்டில் வர்த்தகத் துறையிலும் (Retail), பென்ஷன் பண்ட் போன்ற துறைகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இடதுசாரிகள் இதற்கு ஒத்துழைப்பு தருவார்களா என்பது தெரியவில்லை. குறிப்பாக வர்த்தகம் - Retail துறை நம் நாட்டில் பல இடங்களில் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது அமெரிக்க நிறுவனங்களான Wal-mart, GAP, JCPenny போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கும், பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியச் சந்தையை திறந்து விடும் முயற்சி. ஏற்கனவே பல நிறுவனங்கள் (Shoprite, Metro) போன்றவை இதற்காகக் காத்திருக்கின்றன. இதனால் நம் நாட்டில் முறைபடுத்தப்படாமல் இருக்கும் பல சிறு வியபாரிகள் பாதிப்படையக்கூடும் என்பதான பிரச்சனைகள் எழுப்பப்படும்.

இது தவிர வங்கித் துறையில் அரசு கொண்டு வர இருந்த FDI வருமா என்று தெரியவில்லை.

பொருளாதார ஆய்வறிக்கை வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இருக்கும் பல விதி முறைகளை எளிமையாக்கும்படி வலியுறுத்துகிறது. இது தவிர உள்கட்டமைப்புத் துறையில் அரசு செயல்படுவது தவறென்றும் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பை தனியாரிடம் ஒப்படைப்பது மூலம் தேவையில்லாத அரசியல் தலையீடுகளைத் தவிர்க்கலாம் என்பதே ஆய்வறிக்கையின் வாதம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கும் உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. அரசு, சாலைகள் மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பில் தற்பொழுது அதிகளவில் முதலீடு செய்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறையை அதிக அளவில் உள்கட்டமைப்பில் ஈடுபடுத்த வேண்டும். சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, மின்உற்பத்தி போன்ற துறைகளில் FDI அதிக அளவில் தேவைப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை பட்ஜெட் மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார ஆய்வறிக்கையைச் சார்ந்து பட்ஜெட் அமையும் பட்சத்தில் அது ஒரு கனவு பட்ஜெட்டாகவாக இருக்கும். ஆனால் பல நிர்பந்தங்களுக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அப்படி கனவு பட்ஜெட்டாக இருக்கும் வாய்ப்புகள் குறைவாகத் தான் இருக்கிறது.

பார்ப்போம்.. நாளை தெரிந்து விடும்.

நிறைய எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக சில நாட்களாக வலைப்பதிவுகளை படிக்கக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

விடைபெறும் முன் சில லைட்டான தகவல்கள்

  • கார் தயாரிப்புக்கு விதிக்கப்படும் வரி 8%ல் இருந்து 4%மாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் கார்களின் விலைக் குறையும்.
  • A.C. விலையும் குறையும். எனவே இந்தக் கோடை காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டு ஜாலியாக இருங்கள்.

Leia Mais…
Wednesday, February 23, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 3



காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமையவிருந்த நேரம். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அமைச்சகமான Disinvestment அமைச்சகம் இனி இழுத்து மூடப்படும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவிக்க, பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்த கேள்விக்குறி எழ, மே மாதம் 17 அன்று பங்குச்சந்தை 565 புள்ளிகள் சரிந்தது. அதே நாளில் ஒரு கட்டத்தில் பங்குச்சந்தை 800 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்திருந்தது. வர்த்தகம் சந்தையில் வர்த்தகம் இரு முறை நிறுத்தப்பட்டது.

இது தான் புதியதாக அமையவிருந்த காங்கிரஸ் அரசுக்கு பங்குச்சந்தை கொடுத்த வரவேற்பு. மறுநாள் சோனியா பிரதமர் பதவி ஏற்கப்போவதில்லை, மன்மோகன் சிங் பதவி ஏற்பார் என்றச் செய்தியே பங்குச்சந்தைக் குறியீட்டை 372 புள்ளிகள் உயர வைத்தது. மன்மோகன் சிங் மேல் அந்தளவுக்கு நம்பிக்கை.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சி.ரங்கராஜன் ஆகியோரை உள்ளடக்கிய கனவுக் கூட்டணி என்னச் செய்யப் போகிறது ? இவர்களை இடதுசாரிகள் சுதந்திரமாக செயல்பட விடுவார்களா ? கூட்டணி அரசின் நிர்பந்தங்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வருகின்ற பட்ஜெட் இருக்குமா ? 1997ல் ஒரு Dream பட்ஜெட்டைக் கொடுத்த ப.சிதம்பரம் இப்பொழுது என்னச் செய்யப் போகிறார் ? வரும் திங்களன்று விடைக் கிடைத்து விடும்.

இந்தப் பட்ஜெட்டில், வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டின் ஹைலைட்டே வரிச் சீர்திருத்தமாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு அது பற்றி ஒரு Hype நிலவுகிறது. அது பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் தான் இக் கட்டுரை.

தற்பொழுதுள்ள நிலையில் நாட்டின் GDP யுடன் ஒப்பிடும் பொழுது வரி வருவாய் வெறும் 9% தான். இந்தியாவைப் போலவே வளரும் நாடுகளாக இருக்கும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இது மிகக் குறைவு. உதாரணமாக பிரேசிலில் இது 20%. தற்போதைய 9%ல் இருந்து 11% மாக இதை உயர்த்த இந்தப் பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் இருக்கும். கேல்கர் கமிட்டியின் விரிச் சீர்த்திருத்தங்கள் இந்தப் பட்ஜெட்டில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. கேல்கர் கமிட்டி எளிமையான, குறைந்த விகிதத்தில் வரி விதிப்பதைப் பரிந்துரை செய்கிறது.

தற்பொழுது நம்முடைய ஒட்டு மொத்த வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. நாம் சேமிக்கும் சேமிப்புகள் (NSC), காப்பீடு, PF, வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது பிரிவு 88 கீழ் இருக்கும் விலக்குகள். இந்த விலக்குகளை EEE (Exempt Exempt Exempt) என்றுச் சொல்வார்கள். அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுதும், அந்தப் பணம் வட்டியால் பெருகும் பொழுதும், இறுதியில் அந்தப் பணத்தை நாம் எடுக்கும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இம் முறை மாறி EET (Exempt Exempt Tax) என்ற முறை அமலுக்கு வர இருக்கிறது. அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுது அந்தப் பணத்திற்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பணம் பெருகும் பொழுதும் வட்டிக்கு விலக்கு உண்டு. ஆனால் அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படும் பொழுது, எடுக்கப்படும் பணம் முழுமைக்கும் வரி விதிக்கப்படும். முதலீடு செய்யும் பொழுது தற்பொழுது கொடுக்கப்படும் 15% ரிபேட், இனி 30%மாக உயர்த்தப்படும். ஆனாலும் இறுதியில் வரி விதிக்கப்படும் பொழுது முதலீட்டாளருக்கு கிடைக்கும் பணத்தில் கணிசமானத் தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

இது போலவே Standard Deduction என்று சொல்லப்படும் வரி விலக்கும் இனி இருக்காது. தற்பொழுது 5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 30,000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 20,000 ரூபாயும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர மகளிருக்கு வழங்கப்படும் ஸ்பெஷல் வரி விலக்குகளும் இனி நீக்கப்படும். இவ்வாறு விரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பணம் முதலீடாக மாறுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே அரசுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த விலக்கு ஒழுங்காக வரிச் செலுத்தும் சம்பளம் வாங்கும் பிரிவிற்கு அளிக்கப்படும் சலுகையாகவே இது வரையில் இருந்தது. இனி இந்தச் சலுகை இருக்காது.

வாங்கும் சம்பளம் குறையும் சாத்தியக்கூறுகள் இருக்குதுங்கோ....

வீட்டுக்கடனுக்கு தற்பொழுது அளிக்கப்படும் சலுகை அப்படியே தொடரும் என்பது வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் (வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் ரூ1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது). வீட்டுக்கடனுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை முதலீட்டாளர்களுக்கு பலன்
தருவதோடு மட்டுமில்லாமல் வீட்டு வசதித் துறையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது என்பதால் இது அப்படியே தொடரும். ஆனால் கேல்கர் கமிட்டி இதனையும் நீக்க வேண்டும் என்று தான் பரிந்துரைச் செய்திருந்தது.

சம்பளம் வாங்கும் ஒரு பிரிவினருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களும் இந்தப் பரிந்துரையில் இருக்கிறது.

தற்போதைய வருமான வரிப் விதிப்பில் உள்ள முறைப்படி 50,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. இனி அந்த உச்ச வரம்பு 1,00,000 உயர்த்தப்படும்.

மொத்தத்தில் தற்பொழுது இருப்பது போல பல சிக்கலான கணக்கு வழக்குகள் இல்லாமல் வாங்கும் சம்பளத்தை/வருமானத்தை வரி விகிதத்துடன் கழித்து விட்டால் எஞ்சியுள்ளது தான் நம் வருமானம்.

எளிமையான வரி விகிதம் தானே ? நாம் ஆடிட்டரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. சுலபமாக கணக்கிடலாம் என்பது தான் நமக்கு கிடைக்கும் ஆதாயம்.

அதெல்லாம் சரி தான்... வருமானம் குறையுமேன்னு நினைக்கிறீங்களா ?

அரசின் சலுகைகள் ஏழை மக்களுக்குத் தான் வழங்கப்படவேண்டும். பல இடங்களில் பலச் சலுகைகளை அரசு வாரி வழங்கும் பொழுது, அரசின் கவனிப்பு தேவைப்படும் பல துறைகளின் வளர்ச்சியில் தேக்கமே நிலவுகிறது. அரசு, ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு செலவழிக்கும் தொகையை விட பெட்ரோல், சிலிண்டர் போன்றவற்றுக்கு வழங்கும் subsidies தான் மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு வழங்கும் சலுகை விலையினால் அரசுக்கு சுமார் 46,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர விவசாயத்திற்கு தரப்படும் பலச் சலுகைகள் (உரம்), அரசு குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து பெறும் தானியங்கள் போன்றவற்றாலும் அரசுக்கு கணிசமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்தச் சலுகைகளை படிப்படியாக நீக்கி தேவைப்படும் பிற துறைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலேக் கூறியுள்ள சலுகைகளை நீக்கினால் தான் ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு சலுகைகளைத் தர முடியும். இத் துறைகளுக்குத் தான் அரசின் தனி கவனிப்பு தேவைப்படுகிறது. இத் துறைகளுக்கு தற்பொழுது சுமார் 6 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்படுகிறது. இது பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.


தற்பொழுது வழங்கப்படும் தேவையில்லாத வரிச் சலுகைகளை நீக்குதல், அரசுக்கு வருவாய் தரும் புது வழிகளை உருவாக்குதல் போன்றவற்றால் மூலமே கவனிப்பின்றி கிடக்கும் பலத் துறைகளின் மீது அரசு கவனம் செலுத்த முடியும். இந்தப் பட்ஜெட் அதற்கான ஆரம்பமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இவை எல்லாம் அனுமானங்கள் தான். சிதம்பரம் எந்தளவுக்கு இதற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பது திங்களன்று தெரிந்து விடும்.



முந்தையப் பதிவுகள் - 1, 2

Leia Mais…
Sunday, February 13, 2005

ஹர்ஷத் மேத்தா - 6

ஹர்ஷத் மேத்தா பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியப் பொழுது, இது பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. 1991ல் நடந்தக் கதை. எனவே இதைப் பற்றி அதிகமாக இணையத்தில் தகவல்கள் இல்லை. IIMல் இது பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எங்கள் அலுவலகத்தில் இருக்கும் கேப்பிடல் மார்க்கெட் பிரிவு நண்பர்களின் ஆய்வுகள் எனக்கு உதவி புரிந்தது. இந்த ஊழல் பற்றி "The Scam" என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளிவந்தது. இந்த ஊழலை வெளியுலகுக்கு கொண்டு வந்த சுசித்தா தலால் எழுதியப் புத்தகம். இதைக் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியுமா என்று முயற்சி செய்தேன். சென்னையில் எங்குமே இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. மும்பைக்குத் தொடர்பு கொண்டு இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்திடமே கேட்ட பொழுது இந்தப் புத்தகம் தற்பொழுது அச்சில் இல்லை. கைவசம் ஒரு புத்தகம் கூட இல்லை என்றார்கள். இந்தப் புத்தகத்திற்காக இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.



இந்த ஊழல் பற்றி ஒரு Balanced கருத்தையே ஹர்ஷத் மேத்தா கதையில் கொடுக்க முயன்றுள்ளேன். முயற்சி வெற்றியடைந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இவ்வார தமிழோவியத்தில் இந்த ஊழல் கதையின் 6 வது பாகம் வெளிவந்துள்ளது.

Leia Mais…

பட்ஜெட்டை எதிர்நோக்கி

எந்தத் திசையில் நகருவது என்று தெரியாமல் கடந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் நிலவியது. பட்ஜெட்டை ஒட்டிய சில வாரங்களில் முதலிட்டாளர்களின் எச்சரிக்கை, சந்தையை எந்த திசையிலும் செல்ல விடாமல் அலைக்கழிக்கும். அது பற்றி இவ்வார தமிழோவியத்தில் ஒரு அலசல் - "பட்ஜெட்டை எதிர்நோக்கி"

Leia Mais…
Tuesday, February 08, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 2



அரசுக்கு வரும் வருமானம், செலவு ஆகிய இரண்டையும் சென்றப் பதிவில் கூறியிருந்த வருவாய் வரவு செலவுத் திட்டம், முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் அடக்கி விடலாம்.

நாம் இப்பொழுது அரசுக்கு வருமானம் கிடைக்கக் கூடியச் சில வரி முறைகளைக் கவனிப்போம்.

சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். பலருக்கு இதுப் பற்றி விரிவாகவே தெரிந்திருக்கும். ஒரு சிறு விளக்கம் மட்டும் தர முயன்றுள்ளேன்.

வருமானம் நமக்கு பல வழிகளில் கிடைக்கிறது. சம்பளம், வியபாரம், வீட்டு வாடகை, முதலீட்டு லாபம் என்று பல வழிகளில் கிடைக்ககூடிய வருமானங்களுக்கு நாம் வரிச் செலுத்த வேண்டும்.

ஆண்டு வருமானம் 50,000 வரை உள்ளவர்களுக்கு வருமானவரி கிடையாது. அதற்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு சம்பளத்திற்கு ஏற்றாற்ப் போல வருமான வரி விகிதமும் மாறும். அதைப் போல நிலம், வீடு போன்ற சொத்துகளை விற்பதால் கிடைக்கும் லாபத்திற்கும் வரிச் செலுத்த வேண்டும். பங்குகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வரிச் செலுத்த வேண்டும். இதனை முதல் இலாப வரி அல்லது மூலதனலாப வரி (Capital Gains tax) என்றும் சொல்லலாம். ஆனால் பங்குகள் வாங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு அதனை விற்கும் பொழுது Capital Gains tax ல் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது தவிர நம்முடைய சம்பளத்தின் ஒரு பகுதிக்கும் சில முதலீட்டுகளுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. ஆண்டு வருமானம் 1,50,000க்குள் இருந்தால் 20% விலக்கு உண்டு. 5 லட்சத்தைக் கடந்தால் ஒன்றும் கிடையாது. நம்முடைய PF, காப்பீடு, NSC, அரசு பத்திரங்கள் போன்றவற்றுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. பிரிவு 88, 88C, 88D போன்ற பல பிரிவுகளில் வருமான வரி விலக்கு உண்டு. நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தற்பொழுது வீட்டுக் கடனில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் வரும் என்று பல வருடங்களாகச் செல்லப்பட்டாலும் இது வரை இதில் எந்த மாற்றமும் வரவில்லை. இந்தப் பட்ஜெட்டிலும் மாற்றம் இருக்க கூடாது என்பது தான் பல நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ணம்.

இந்தப் பட்ஜெட்டில் கேல்கர் கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கேல்கர் கமிட்டி பரிந்துரையில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், இக் கமிட்டி பரிவு 88ன் கீழ் இருக்கும் சில வருமான வரிச் சலுகைகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அரசு இதனை அமல்படுத்துமா என்று தெரியவில்லை.

நாட்டிலேயே ஒழுங்காக வருமான வரிச் செலுத்துவது சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் தான். ஒழுங்காக வரிச் செலுத்துபவர்கள் மேல் மேலும் பாரம் கொடுக்காமல் நாட்டின் Tax base அதிகரிக்கப்பட வேண்டும்.

வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையே Tax base எனப்படுகிறது. இந்தியாவில் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 3 கோடி பேர் மட்டுமே வரி கட்டுகிறார்கள். வரி ஏய்த்தல் இங்கு தான் அதிகமாக இருக்கிறது. குறைவான வரி மூலம் அதிகமானவர்களை நாணயமாக வரிச் செலுத்த வைக்க முடியும்.

பொதுவாக அரசு விதிக்கும் வரிகளில் இரண்டுப் பிரிவுகள் இருக்கிறது

  • நேரடி வரி
  • மறைமுக வரி
நேரடி வரி - வருமானவரி, சொத்துவரி, இலாப வரி போன்றவை நேரடி வரி என்று சொல்லப்படும் வரிகள். இந்த வரிகளை நாம் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறோம்.

மறைமுக வரி - விற்கப்படும் பொருளின் மீதான வரி. இந்த வரி பொருள்கள் மீது விதிக்கப்பட்டாலும் இறுதியில் நம் தலையில் தானே விழுகிறது. இது நாம் நேரடியாக இல்லாமல் பொருளின் மீதான விலையுடன் சேர்த்துச் செலுத்துகிறோம்.

இப்பொழுது சர்சையில் இருக்கும் முக்கியமான ஒரு வரி VAT - Value added Tax, மதிப்புக் கூட்டு வரி / மதிப்பு ஆக்க வரி.

ஒரு பொருள் தயாரிப்பில் பல இடங்களில் அதன் மதிப்புக் கூட்டப்படுகிறது. ஒரு மோட்டார் வாகான தயாரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் இடத்தில் இதற்கு சுங்கவரி, விற்பனை வரி போன்றவை உண்டு. இந்த உதிரிப்பாகங்களை பெற்று வாகனம் தயாரிக்கும் நிறுவனம் மற்றொரு முறை சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்த வேண்டும்.

உதிரிபாகம் 10 ரூபாய் என்றால், அதனை தயாரிக்கும் நிறுவனம் அதற்குச் சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்துகிறது. அந்த உதிரிப்பாகத்தைப் பெற்று வாகனம் தயாரிக்கும் நிறுவனம், தன் தயாரிப்புச் செலவாக 50 ரூபாயை செலவழித்து பொருள் செய்யும் பொழுது மற்றொரு முறை உதிரிப்பகத்தின் விலையான 10 ரூபாய்க்கும் சேர்த்து வரிச் செலுத்த வேண்டும். அதாவது 60 ரூபாய்க்கு வரிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பல நிலைகளில் வரிச் செலுத்த வேண்டிய நிலை. ஒரு பொருளின் மொத்த வரி 10% என்றால், இது பல நிலைகளில் கட்டப்படும் பொழுது 10% கடந்து விடுகிறது. இவ்வாறான வரி விதிப்பு முறை பொருட்களின் தயாரிப்புச் செலவையும் பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது.

ஆனால் VAT முறைப் படி வாகனம் தயாரிக்கும் நிறுவனம் 50 ரூபாய்க்கு மட்டும் வரிச் செலுத்தினால் போதும். ஏனெனில் ஏற்கனவே ஒரு உதிரிப்பாகத்தின் விலையான 10 ரூபாய்க்கு வரிச் செலுத்தப்பட்டு விட்டது.

இது பலனளிக்கும் திட்டம் தானே ? நிச்சயமாக. வரி குறைவதால் பொருள் தயாரிப்புச் செலவு குறையும். நிறுவனங்களுக்கு லாபம். அந்தப் பொருள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் நுகர்வோருக்கும் லாபம் தான்.

பின் ஏன் சர்சை ? பிரச்சனை ?

சுங்கவரி மைய அரசாலும், விற்பனை வரி மாநில அரசாலும் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான வரி விதிப்பு முறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறன. மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படுமோ என்ற அச்சம். இது தவிர பல பொருட்கள் இந்த VAT முறையின் கீழ் வருவதால் இது வரை வரிச் செலுத்தாத வியபாரிகளுக்கும் அச்சம். கணக்கு வழக்குகளை சரியாகப் பராமரிக்கும் நிர்பந்தமும் இருக்கிறது. சரியாக கணக்கு இருந்தாலும் அதிகாரிகளின் தொந்தரவு இருக்கும் என்று வியபாரிகள் அஞ்சுகிறார்கள்.

இப்படி பலப் பிரச்சனைகளுடன் இந்த வரி விதிப்பு முறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

சரி..வரியில் இருந்து கொஞ்சம் நகர்ந்து பட்ஜெட்டின் பிறப் பகுதிகளுக்கு வருவோம்

மானியக் கோரிக்கைகள் (Demands for grants)

நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு அமைச்சகத்துக்குமான நிதித் திட்டங்களை அறிவிக்கும். இந்தத் திட்டங்கள் மக்களவையில் ஒட்டெடுப்புக்கு விடப்படும். இதைத் தான் மானியக் கோரிக்கைகள் என்றுச் சொல்வார்கள். பொதுவாக ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் (துறைக்கும்) ஒரு மானியக் கோரிக்கைத் தான் மக்களவையில் முன்வைக்கப்படும். பெரியத் துறையாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் மக்களவையில் சமர்பிக்கப்படும்.

மானியக் கோரிக்கைகள் நிறைவேறியப் பிறகு, அந்த அமைச்சகத்திற்கான நிதி Appropriation bills என்னும் நிதி ஒதுக்கீட்டு மசோதா மூலம் குறிப்பிட்ட துறைக்கு வழங்கப்படும்.

நிதி மசோதா (Finance Bill)

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டுமே மக்களவையால் நிறைவேற்றப்படும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வழக்கில் இருக்கும் வரி போன்றவற்றை அப்படியே தொடரவும், சில மாற்றங்களை செய்யவும் நிதி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசு இத்தகைய நிதி மசோதாக்களையே தாக்கல் செய்யும்.

பட்ஜெட் பற்றாக்குறை (Budget deficit)

சுலபமானக் கணக்குத் தான், ஆனால் இதனைக் கட்டுக்குள் வைப்பது அவ்வளவு சுலபமில்லை.

வருவாய் - செலவுகள், இவைத் தான் பற்றாக்குறை.

வருவாய் வரவு செலவுத் திட்டம், முதலீட்டு வரவு செலவுத் திட்டம் என இவை இரண்டையும் கொண்டு இந்தப் பற்றாக்குறை கணக்கிடப்படும்.
நம் நாட்டில் வருவாயை விட செலவுகள் அதிகமாக இருப்பதால், வருவாய் - செலவுகள் என்றாலே பற்றாக்குறைத் தான். சில நாடுகளில் பற்றாக்குறை இருக்காது. மிகுதியானப் பணம் கையிருப்பில் இருக்கும். இதற்கு Surplus என்றுப் பெயர்.

நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit)

மேலே இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையுடன், அரசு வாங்கியிருக்கும் கடனையும் சேர்த்தால் வருவது தான் நிதிப் பற்றாக்குறை அல்லது Fiscal deficit

Direct Investment - நேரடி முதலீடு - புதிதாகத் தொழில்களில் செய்யப்படும் முதலீடு. இது வெளிநாட்டினர் மூலமாக வந்தால் - FDI - வெளிநாட்டு நேரடி முதலீடு. இதுவும் சர்சைகளில் இருக்கும் ஒரு பிரச்சனை. இடதுசாரி தலைவர்கள் இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே எதிர்க்கும் பிரச்சனை. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. கடந்த வாரம் தான் தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு 74% மாக உயர்த்தப்பட்டது. பல துறைகளுக்கும் இவ்வாறான FDI தேவைப்படுகிறது. நிதியமைச்சர் என்னச் செய்யப்போகிறார் என்று பார்ப்போம்

பணக்கொள்கை/கடன் கொள்கை (Monetary policy) - பணப்புழக்கம், வட்டி விகிதம் போன்றவற்றை சீராக வைக்கும் அரசின் செயல்திட்டமே பணக்கொள்கை/ கடன் கொள்கை எனப்படுகிறது.

நிதிக்கொள்கை (Fiscal policy) - பொருளாதாரத்தைச் செலுத்தும் முக்கியமானத் திட்டங்களில் அரசின் நிதிக்கொள்கை முக்கியமான இடத்தை வகிக்கிறது. குறைவான நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்வது. அதன் மூலம் பொருட்களுக்கானத் தேவையை அதிகரிப்பது. தேவை அதிகரிக்கும் பொழுது உற்பத்தி பெருகுவதால் நாட்டின் பொருளாதாரமும் ஏற்றமடையும்.

தொடர்ந்து அடுத்தப் பதிவில் பட்ஜெட் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலவேறு ஊடகங்களில் படித்த, கேட்டச் செய்திகளையும் எனது கருத்துகளையும் எழுதுகிறேன்.

முந்தையப் பதிவு

References : Economic Times

Leia Mais…
Sunday, February 06, 2005

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1



பிப்ரவரி மாதம் என்றாலே பட்ஜெட் மாதம், ஒரு வித பரபரப்பு அனைவருக்கும் ஏற்படுகிறது. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். வீட்டுக் கடனுக்கு வருமான வரி விலக்கு நீடிக்குமா, வரி விகிதம் உயருமா என்று பல்வேறு கவலைகள். முன்பெல்லாம் புதிதாக பொருள் வாங்க நினைப்பவர்கள் பட்ஜெட்டுக்கு முன்பே பொருள் வாங்கிவிடுவார்கள். பட்ஜெட் என்றாலே வரி உயர்வு, விலையேற்றம் என்று இருந்தக் காலம். வணிகர்கள் பட்ஜெட்டுக்கு முன்பு நிறையப் பொருட்களை வாங்கித் தங்கள் கிடங்குகளில் சேமித்துக் கொள்வார்கள்.

ஆனால் பட்ஜெட் என்பது வரி விதிப்பது மட்டும் அல்லவே. பட்ஜெட் என்பது என்ன ?அதில் இருக்கும் பலப் புரியாத வார்த்தைகளுக்குப் பொருள் என்ன ? அதைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது.


Bougette என்ற ஆங்கில வார்த்தைத் தான் கொஞ்சம் மருவி Budget என்றாகி விட்டது. Bougette என்றால் "Pouch" என்று பொருள். இங்கிலாந்து பாரளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் பொழுது பேப்பர்களை இந்த Bougetteல் எடுத்து வந்து, பிறகு பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தான் கொஞ்சம் மருவி இன்று பட்ஜெட் என்ற சொல்லாக்கத்தில் வழங்கப்படுகிறது.



இந்தியாவில் பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. 1999 வரை பட்ஜெட் மாலை 5 மணிககுத் தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் வசதிக்காக பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதனை அப்படியே பல வருடங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். February 27, 1999 அன்று யஷ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்தப் பொழுது முதன் முறையாக 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பிறகு அதுவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதியமைச்சகத்திடம் இருந்தாலும் பிற துறை அமைச்சகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. நிதியமைச்சகம் பிற அமைச்சகத்திடமும், திட்டக்குழுவிடமும் ஆலோசனைக் கேட்கும். பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பிற துறை அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி போன்ற விவரங்கள் பெறப்படும். ஜனவரி மாதத்தில் பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் துறையினர், தொழிற்ச்சங்கங்கள் போன்ற பல்வேறு குழுக்களுடன் நிதியமைச்சர் ஆலோசணைச் செய்வார்.

தற்பொழுது, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தவிர நிதியமைச்சக ஆலோசகராக இருக்கும் பார்த்தசாரதி, திட்டக்குழு துணைத் தலைவராக இருக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத்தலைவராக இருக்கும் சி.ரங்கராஜன் போன்றோருக்கும் பட்ஜெட் தயாரிப்பில் முக்கியப் பங்கு இருக்கிறது. தயாரிக்கப்பட்ட பட்ஜெட் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகே மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு பட்ஜெட் மீது ஒரு மாதம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். இதில் எதிர்கட்சிகள் மாற்றங்களை கொண்டுவர நினைத்தால் வெட்டுத் தீர்மானங்களை கொண்டு வரலாம். அல்லது சில மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இறுதியாக நிதி ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். ஏப்ரல் முதல் தேதியன்று பட்ஜெட் அமலுக்கு வரும். அடுத்த வருடம் மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் (ஏப்ரல் 1, 2005 முதல் மார்ச் 31,2006 வரை). பிறகு அடுத்த பிப்ரவரியில் (2006) அடுத்த ஆண்டிற்கான (2006 -2007) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்தியாவில் மைய அரசால் இரண்டு நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.

பொது பட்ஜெட் - நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும்




ரயில்வே பட்ஜெட் - ரயில்வே அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.




முதலில் ரயில்வே பட்ஜெட்டும், அதற்குப் பிறகு பொதுப் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

மைய அரசு தவிர ஒவ்வொரு மாநில அரசும் அம் மாநிலத்திற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இது தான் பட்ஜெட் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

பட்ஜெட்டில் பலப் புரியாத நிதி வார்த்தைகள் இருக்கும். அத்தகைய நிதி வார்த்தைகளை இப்பொழுது கவனிப்போம்.

அரசாங்கத்திற்கு வரும் பணம், செலவுச் செய்யப்படும் பணம் போன்றவை எங்கு பராமரிக்கப்படுகின்றன ?

அரசாங்கத்தில் இருக்கும் பணம் பல்வேறு கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். இதுப் பற்றிய விவரங்கள் பட்ஜெட்டில் இருக்கும். அந்தக் கணக்குகளை முதலில் பார்ப்போம்.

பொதுவாக மூன்று கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.

  • The Consolidated Fund of India (CFI)
  • Public Account
  • Contingency Fund
இவையே இந்த மூன்று கணக்குகள்

The Consolidated Fund of India (CFI)

அரசுக்கு பல வழியில் கிடைக்கும் வருவாய் CFI ல் வைக்கப்பட்டிருக்கும். அரசுக்கு செலுத்தப்படும் வரி, கடன் தொகைகளுக்கான வட்டி, பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடண்ட்கள் போன்றவை இங்கு வைக்கப்பட்டிருக்கும். இது தான் அரசின் பொதுவான நிதி. இந்த நிதியத்தில் இருந்து பணம் பெற பாரளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. பெரும்பாலும் ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு தேவையான நிதியை மானியக் கோரிக்கைகள் மூலம் மக்களவையின் ஒப்புதல் கொண்டு பெற்றுக் கொள்ளும்.

Public Account என்பது அரசுக்கு சொந்தமில்லாதப் பணம் இருக்கும் கணக்கு. அதாவது அரசு பொதுமக்களிடமிருந்து PF, சிறுசேமிப்பு போன்றவற்றின் மூலம் பெறும் பணம். இந்த நிதியில் இருந்து அரசு எடுக்கும் பணத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.

Contingency Fund என்பது எதிர்பாராச் செலவு நிதி. இயற்கைச் சீற்றங்கள் போன்ற எதிர்பாராச் செலவுகளுக்காகப் பராமரிக்கப்படும் நிதி. இதில் இருந்து பணம் பெற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை (பிரதமரின் பொது நிவாரண நிதி, எதிர்பாராச் செலவு நிதி என்று இரு வேறு நிதிக் கணக்குகள் இருக்கின்றன)

பட்ஜெட்டில் இரு வகையானப் பிரிவுகள் இருக்கின்றன
  • Revenue Budget எனப்படும் வருவாய் வரவு செலவுத் திட்டம்
  • Capital Budget எனப்படும் முதலீட்டு வரவு செலவுத் திட்டம்
Revenue Budget - வருவாய் வரவு செலவுத் திட்டம்

வருவாய்த் துறையில் அரசுக்கு கிடைக்கும் வரவினம் மற்றும் செலவினம் போன்றவற்றின் நிதி நிலையை அறிவிக்கும் பட்ஜெட் தான் Revenue Budget

அரசுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி போன்ற வரி விதிப்பு (Tax revenue) மூலம் கிடைக்கும் வருவாய், அரசு வழங்கியுள்ள கடன் தொகைக்கான வட்டி, அரசு முதலீடு செய்யும் பணத்திற்கான டிவிடண்ட் எனப் பல வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அரசுக்கு கிடைக்கும் வருவாய் Revenue receipts - வருவாய் வரவினம் என்றுச் சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒய்வுதியம், அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் போன்றவை வருவாய்ச் செலவினம் - Revenue Expenditure ஆகும். வருவாய்ச் செலவினம் என்பது பணம் கரைந்துப் போகும் செலவுகள் மட்டுமே. புதிதாகத் தொழில் துறையில் செய்யப்படும் மூலதனம் போன்ற செலவுகள் இதில் வராது.

இந்த வருவாய் வரவினம் மற்றும் வருவாய்ச் செலவினம் இவற்றின் Balance Sheet தான் Revenue Budget எனப்படும் வருவாய் நிதிநிலை அறிக்கை

Capital Budget - முதலீட்டு வரவு செலவுத் திட்டம்

புதிதாக முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் அரசுக்கு புதிதாக கிடைக்கும் கடன் போன்றவை இந்த முதலீட்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரும்.

தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், தொழில்கள் போன்றவற்றில் செய்யும் முதலீடுகளே முதலீட்டுச் செலவு - Capital Expenditure எனப்படுகிறது. இது தவிர மாநில அரசுக்கு மைய அரசு வழங்கும் கடன் போன்றவையும் இந்தப் பிரிவின்கீழ் வரும்.

அரசு பொதுமக்களிடம் இருந்து பெறும் கடன், ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பிற நாடுகளிடமிருந்து பெறும் கடன் போன்றவை முதலீட்டு வரவினம் - Capital receipts என்று அழைக்கப்படுகிறது.

முதலீட்டுச் செலவினம், முதலீட்டு வரவினம் இவற்றின் நிதி நிலைத் தான் முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகும்.

என்ன...நிதிச் சம்பந்தமான வார்த்தைகளைப் படித்தவுடன் தூக்கம் வருகிறதா ?

சரி...அடுத்தப் பதிவில் பிற முக்கியமான வார்த்தைகளைப் பார்ப்போம்.



(நிதிப் பற்றாக்குறையை குறைக்க வழியே தெரியலை... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா)

References : Economic Times

Leia Mais…

ஹர்ஷத் மேத்தா - 5

இந்த வார தமிழோவியத்தில் ஹர்ஷத் மேத்தா தொடரின் 5ம் பாகம்







Leia Mais…
Wednesday, February 02, 2005

நல்ல நிறுவனத்தின் குணங்கள் - 4 - P/E Ratio

கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E ம் அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம். பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

P/E எப்படி கணக்கிடப்படுகிறது ? கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்றுச் சொல்வார்கள் (பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை
leading or projected P/E என்றுச் சொல்வார்கள்).

பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது.

P/E = Market Price / Earnings

இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

Market Price = P/E x Earnings

ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தது. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி". P/E ம் அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

மாறாக P/E 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

PEG = P/E / (projected growth in earnings)

ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

ஒரு நிறுவனத்தின் P/E 30, வளர்ச்சி விகிதம் 15% என்றால்

PEG = 30/15 = 2

PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

Fundamental Analysis பற்றி அடுத்து வரும் பதிவுகளிலும் தொடர்ந்துப் பார்ப்போம்.


முந்தையப் பதிவு

Leia Mais…
Tuesday, February 01, 2005

சந்தையின் செண்டிமெண்ட்

பங்குச்சந்தைக்கும் தமிழ் சினிமாவுக்கும் பொதுவான ஒரு குணம் உண்டு. என்ன என்று தெரியுமா ? செண்ட்டிமெண்ட். தமிழ் சினிமாவுக்கு அம்மா செண்ட்டிமெண்ட், தாலி செண்டிமெண்ட் என்று பலச் செண்டிமெண்ட்கள் இருப்பது போலப் பங்குச்சந்தையின் உயர்வுக்கும் சில செண்டிமெண்ட்கள்
தேவைப்படுகின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருக்கும் சந்தையை ஊக்கப்படுத்த நிச்சயமாக ஒரு பலமான செண்டிமெண்ட் தேவைப்பட்டது. ஒரு வழியாகக் கடந்த வாரம் அது கிடைத்தது.

கடந்த திங்களன்று (ஜனவரி 24) நடந்த முதல் வர்த்தகத்திலேயே குறியீடுகள் சுமார் 77 புள்ளிகள் சரிவடைந்தவுடன், தொடர்ந்து சந்தைச் சரிவடையக் கூடும் என்றே தோன்றியது. இந்த வாதத்தையே பெரும்பாலானப் பங்குச் சந்தை வல்லுனர்களும், பத்திரிக்கைகளும் முன்வைத்தன. இதோடு சேர்த்து கடந்த வாரம் வியாழனன்று (ஜனவரி 27) டிரைவேட்டிவ்ஸ் காண்ட்ராக்ட் (Derivatives) முடிவடைவதால், சந்தை மேலும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றே அனைவரும் கருதினர். சந்தையில் உள்ள தடுமாற்றமானச் சூழலில் டிரைவேட்டிவிஸ் காண்ட்ராக்ட்டை பிப்ரவரி மாதத்திற்கு யாரும் தொடர மாட்டார்கள், பங்குகளை பங்குச்சந்தையில் விற்று விடுவார்கள் என்ற எண்ணமே பரவலாக இருந்தது.

அனைவரின் எதிர்பார்புக்கும் மாறாக கடந்த செவ்வாயன்று (ஜனவரி 25) குறியீடு 56 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சந்தையை உற்சாகப்படுத்தின. இதோடு சேர்த்து பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்திருந்தால் இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முதலீட்டாளர்கள் முனைந்தனர். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FII), உள்நாட்டு நிறுவனங்கள் தவிர சிறு முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கினர். ஒரு கட்டத்தில் குறியீடு சுமார் 100 புள்ளிகள் உயர்ந்திருந்தது. குறிப்பாக வங்கி, ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் முதலீடு அதிகமாக இருந்தது.

ஆட்டோமோபைல் துறையில் ஆர்வம் பெருகியதற்கு காரணம் மாருதி நிறுவனத்தின் எதிர்பார்ப்பை மிஞ்சிய அறிக்கையே. இந்தக் காலாண்டில் மாருதி சுமார் 239 கோடி ரூபாய் லாபம் கண்டுள்ளது. கடந்த காலாண்டின் லாபமான 140 கோடியுடன் ஒப்பிடும் பொழுது இது சுமார் 70% உயர்வு. பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கைச் சந்தைக்கு ஏமற்றமளித்த நிலையில் மாருதியின் அறிக்கை அந்தப் பங்குகளை எகிறச் செய்தது. இந்தியர்கள் நிறையக் கார்களை வாங்கிக் குவிக்கிறார்கள் போலும். டூ விலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இரு நிறுவனங்களின் இரு வேறான அறிக்கை இதனையேக் குறிக்கிறது.

மாருதியின் உயர்வுக்கு இது மட்டுமே காரணமல்ல. அரசிடம் இருக்கும்
மாருதியின் உரிமையில் 8% மற்றும் BHEL நிறுவனத்தின் 10% உரிமையையும் அரசு விற்கக் (Disinvestment) கூடுமென்று செய்திகள் வெளியாயின. இந்தச்
செய்திகளும் மாருதியின் பங்குகளை சுமார் 3% அளவுக்கு உயர்த்தி 422
ரூபாய்க்கு கொண்டு வந்தன.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப் போவதில்லை என்ற இந்தக் கூட்டணி அரசின் கொள்கை முடிவில் ஏற்பட்ட மாற்றம் அனைவருக்கும் வியப்பையே ஏற்படுத்தியது. வழக்கம் போல் இடதுசாரிக்கட்சிகள் நிதி அமைச்சரைக் குற்றம் சாட்டத் துவங்கினர். கூட்டணி அரசின் கொள்கை வரைவான CMPல் இருந்து விலகி அரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழ, இந்த Disinvestment திட்டம் இப்போதைக்கு இருக்காது என்பதே இறுதி நிலவரம்.

மற்றொரு பொதுத்துறை நிறுவனமான NTPCம் ஒரு நல்ல அறிக்கையைக் கொடுக்க சந்தையில் பாசிடிவ் செண்டிமெண்ட் கரைபுரண்டு ஒடத் துவங்கியது. இந்தக் காலாண்டில் NTPC 1365.5 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த காலாண்டின் லாபம் 819 கோடி. இது சுமார் 66% உயர்வு. இந்த உயர்வுக்கு ஏற்றாற் போல NTPC
பங்குகளும் உயரத் தொடங்கின. NTPC பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம்
இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இதைப் போலவே HDFC நிறுவனமும் நல்ல அறிக்கையைக் கொடுத்தது.

புதனன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு சந்தைக்கு விடுமுறை. இந்திய இராணுவத்தின் ஏற்ற மிகு அணிவகுப்பை பார்த்தச் சந்தை அதே மிடுக்குடன் வியாழன்று (ஜனவரி 27) எகிறத் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, சுமார் 76 புள்ளிகள் உயர்ந்து 6239 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச்சந்தைக் குறியீடு, NSE Nifty, 23 புள்ளிகள் உயர்ந்து 1955 புள்ளிகளுடனும் வியாழனன்று வர்த்தகம் முடிவடைந்தது.

வியாழனன்று (ஜனவரி 27) முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதைப் போலவே ஏற்கனவே பங்குகளை விற்று வைத்தவர்களும் பங்குகளை வாங்கி லாபமடைய முனைந்தனர். சில நிறுவனங்களின் வியக்கத்தக்க காலாண்டு அறிக்கைகள் சந்தையை உற்சாகத்தில் ஆழ்த்தின.

பார்தி நிறுவனம் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. இந்தக் காலாண்டில்
பார்தி நிறுவனத்தின் லாபம் 70% அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் சுமார்
191 லாபம் ஈட்டிய பார்தி, இந்தக் காலாண்டில் சுமார் 372 கோடி லாபம்
ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது லாபம் 90% உயர்ந்துள்ளது.
நாட்டின் செல்பேசித் தொடர்புச் சந்தையில் ஏர்டெல்லின் பங்கு 26%. பார்தி
பங்குகள் ஒரு கட்டத்தில் சுமார் 5% உயர்ந்திருந்தது.

வியாழனன்று (ஜனவரி 27) உயர்ந்தப் பிறப் பங்குகளில் முக்கியமானவை மென்பொருள் நிறுவனமான ஹேக்சாவேர். இந்தப் பங்குகள் ஒரே நாளில் சுமார் 16% உயர்வைப் பெற்றன. இதைப் போலவே ஜவுளிப் பங்குகளான அரவிந்த் மில்ஸ், பாம்மே டையிங் போன்றவையும் லாபமடைந்தன.

அரவிந்த் மில்ஸ் நிறுவனம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் பொழுது 19%
உயர்வையும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 89% உயர்வையும்
பெற்றிருக்கின்றது. இந்தப் பங்குகளுக்கு வரும் நாட்களில் நல்ல
ஏற்றமிருக்கும்.

இறுதியாகக் கடந்த வெள்ளியன்றும், நேற்றும் குறியீடுகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப் பெரிய உயர்வை பெற்றன. வெள்ளியன்று, குறியீடு சமார் 17
9 புள்ளிகள் எகிறியது. இதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுத்த ஒரு சிறப்பான அறிக்கையே காரணம். சந்தையின் செண்டிமெண்ட் நல்ல மாற்றத்தை எதிர்கொண்டு விட்டது. கடந்த வாரம், மூன்றே நாட்களில் குறியீடு சுமார் 236 புள்ளிகள் எகிறியது.

இந்த வாரமும், திங்களன்று குறியீடு சுமார் 137 புள்ளிகள் எகிற நான்கு நாட்களில் குறியீடு 350 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறி விட்டது. சந்தையில் உற்சாகம் கரைப்புரண்டு ஓடியது. இன்று எதிர்பார்த்த மாதிரியே லாபவிற்பனையால் குறியீடு சற்று சரிவடைந்துள்ளது.

சரி...அடுத்து என்ன நடக்கும். எனது முந்தையப் பதிவுகளில் கூறியிருந்ததுப் போல சந்தை சரிவை எதிர்கொண்ட சூழ்நிலையில் சந்தையில் பங்குகளை வாங்கியிருந்தால், இப்பொழுது லாபம் அடைந்திருக்கலாம். இப்பொழுது குறியீடு மேலும் எகிறுவதும் சரிவதும் அடுத்து வரும் நிகழ்வுகளைப் பொறுத்தே அமையும்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சந்தையில் மறுபடியும் தங்களது முதலீடுகளைக் குவிக்க தொடங்கியுள்ளனர். கடந்த வெள்ளியன்று சுமார் 140 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், திங்களன்று 203 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுகள் தொடரும் பட்சத்தில் குறியீடுகள் எகிறிக் கொண்டே இருக்கும். தற்போதைய முதலீடு, நிறுவனங்களின் சிறப்பான அறிக்கை மற்றும் பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு போன்றவையாலேயே ஏற்பட்டது.

கடந்த வாரம் வெளிநாட்டு முதலீடுகளைப் பற்றிய அச்சம் Associated Chambers
of Commerce and Industry (Assocham) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் வெளிப்பட்டது. மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் இந்த வருட துவக்க மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குறையும் என்று தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 8.5 பில்லியன் டாலர்
முதலீடுகளைக் குவித்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளைப் பொறுத்தே வரும் நாட்களில் இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வு இருக்கும். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தையை விட்டு அவர்களால விலகி இருக்க முடியாது.

Leia Mais…