பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 8

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு)

1208, நாரிமன் பாயிண்ட், ஹர்ஷத் மேத்தாவின் கனவுத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகம். ஆம், கனவுத் தொழிற்சாலைத் தான். கனவுகளை முதலீட்டாளர்களுக்கு விற்பனைச் செய்யத Growmore Research & Asset Management Ltd என்ற பங்குத்தரகு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பங்குகளின் விலையை உயர்த்தும் வித்தைக்கு இங்கு தான் விதை விதைக்கப்பட்டது.

1991, நரசிம்மராவ் தலைமையில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை துவங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விதை விதைத்தார். இருக்கமாக மூடிவைக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரக் கதவுகள் அகலத் திறக்கப்பட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதினர். பங்குச்சந்தையின் மேதையான ஹர்ஷத் மேத்தாவும் இந்த பொருளாதார வளர்ச்சி பங்குச்சந்தைக்கு ஏற்றம் கொடுக்கும் என்று சரியாகக் கணித்தான். ஆனால் பங்குகள் வாங்குவதற்கு நிறையப் பணம்
தேவைப்படுமே ? அதற்கு தான் நாட்டின் வங்கித் துறையில் இருந்த ஓட்டையைப் பயன்படுத்தி பணத்தைச் சேகரித்தான். அதைத் தான் விரிவாக முந்தைய வாரங்களில் பார்த்தோம்.

சேகரிக்கப்பட்ட பணம் பங்குச்சந்தைக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை பல காலங்கள் இந்த ஊழல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கும். ஹர்ஷத் மேத்தாவின் கனவெல்லாம் பங்குச்சந்தை தானே ? எனவே இயல்பாக இந்தப் பணத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து விட்டான். பத்திர ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றொரு தரகரான ஹித்தன் தலால் வெறும் பத்திரத் தரகராக இருந்ததால் பங்குச்சந்தை ஊழலில் அதிகமாக அவனது பெயர் அடிபடவில்லை. ஹர்ஷத் மேத்தா பத்திர ஊழலில் சேர்த்தப் பணத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து பல வருடங்களாக தணியாமல் இருந்த தன் கனவைத் தணித்துக் கொண்டான். ஆனால் அதற்காக நாடு கொடுத்த விலை மிக அதிகம்.

ஜுன் 1991, மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 1170ல் இருந்தது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் குறியீடு 4467 புள்ளிகளை எட்டியது. 11 மாதங்களில் 3297 புள்ளிகள் உயர்வு. இந்தயப் பங்குச்சந்தை வரலாற்றின் பிரம்மிக்கத்தக்க உயர்வு. நரசிம்மராவ் அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அனைவரும் நினைத்தனர்.

ஜனவரி 1992, மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 2000 புள்ளிகளைக் கடந்தது. ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். ஹர்ஷத் மேத்தா எந்தப் பங்குகளில் முதலீடு செய்கிறானோ அதைப் அப்படியே பின்பற்றி முதலீடு செய்தால் போதும். நம் பணம் பெருகி விடும் என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கும், பிற தரகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. ஹர்ஷத் மேத்தாவிற்கு Big-Bull என்றச் செல்லப் பெயரும் பங்குச்சந்தை வட்டாரங்களில் சூட்டப்பட்டது. பங்குச்சந்தையில் எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அரசுக்கே அறிவுறுத்தும் வகையில் ஹர்ஷத் மேத்தா புகழ் பெற்றிருந்தான். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் கே.பி.கீதாகிருஷ்ணன் ஹர்ஷத் மேத்தாவை பங்குச்சந்தையில் எத்தகைய சீர்திருந்திருங்களை மேற்கொள்ளலாம் என்ற விவாதத்திற்கு அழைத்திருந்தார். ஹர்ஷத் மேத்தாவின் கருத்துக்கு மைய அரசே முக்கியத்துவம் கொடுத்தது என்னும் பொழுது சாதாரண முதலீட்டாளர்களை கேட்கவா வேண்டும். ஹர்ஷத் மேத்தவை அப்படியே பின்பற்றினர்.

ஊர் பெயர் தெரியாதப் பங்குகள் எல்லாம் எகிறின. கர்நாடகா பால் பியரிங் என்றொரு நிறுவனம். தற்பொழுது எந்தப் பங்குச்சந்தையிலும் இந்தப் பங்குகள் இல்லை. ஆனால் அன்றைக்கு ஹர்ஷத் மேத்தாவின் Growmore தரகு நிறுவனத்தின் Portfolio வில் இந்தப் பங்கு இருந்தது. பைசா பிரயோஜனம் இல்லாத இந்தப் பங்கு 1000 ரூபாயை எட்டியது.

பிப்ரவரி 1992, மைய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரம். குறியீடு 3000 ஐ எட்டியது. ஒரே மாதத்தில் பல மடங்கு உயர்வு. ஹர்ஷத் மேத்தா புகழின் உச்சியை அடைந்தான். 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப் பெரிய வீட்டில் ராஜா போல வாழ்ந்தான். அவனது வீட்டில் நீச்சல் குளம் தவிர ஒரு கோல்ப் மைதானமும் இருந்தது. பலக் கார்கள். இதில் 10 கார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஹர்ஷத் மேத்தவிற்கு மிகவும் பிடித்த கார் டோயோட்டா லெக்சஸ். இது போல பல டோயோட்டோ மாடல்கள் அவனிடம் இருந்தன.

பங்குச்சந்தை உயர்வதைக் கண்ட பலச் சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினர். பலரின் பல வருடச் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. தங்கள் ஓய்வுதியத்தையும் பலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள். ஹர்ஷத் மேத்தா எந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளானோ அந்தப் பங்குகளில் தான் அவர்கள் முதலீடு செய்தனர். கர்நாடகா பால் பியரிங் (Karnataka Ball Bearing), மஸ்தா லீசிங் (Mazda Leasing) போன்ற ஊர் பெயர் தெரியாதப் பங்குகள். சிறு முதலீட்டாளர்கள் இவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று தான் ஹர்ஷத் மேத்தாவும் எதிர்பார்த்தான். இந்தப் பங்குகள் எல்லாம் எகிறிக் கொண்டே இருந்தது.

ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திய வித்தைகளிலேயே மிக எளிமையான வித்தை பங்குச்சந்தையை உயர்த்தியது தான். பங்குச்சந்தையை உயர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நிறையப் (நிறைய….) பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் உயர்த்தலாம். ஒரு சிலர் கூட்டணி அமைத்தும் உயர்த்தலாம். இதற்கு தேவை மூளை கூட இல்லை. நிறையப் பணம். அவ்வளவு தான். ஹர்ஷத் மேத்தாவும் இதைத் தான் பின்பற்றினான். அவனுக்கு கைகொடுத்தது சிறு முதலீட்டாளர்களின் அறியாமை.

ஒரு பங்கு எவ்வாறு உயருகிறது ?

Demand/Supply இந்த சின்னத் தத்துவம் தான் பங்குகளின் விலையை உயர்த்துகிறது. ஒரு பொருளுக்கு தேவை அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பொருளின் விலை உயரும். தேவையில்லாதப் பொருள் அல்லது நிறையப்பேர் விற்கும் பொருள் கடுமையாகச் சரியும்.

ஹர்ஷத் மேத்தாவிற்கு வங்கிகளில் இருந்த பல ஓட்டைகள் மூலமாக நிறையப் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கினான். நிறையப் பணம் இருந்ததால் நிறையப் பங்குகளை அவனால் வாங்க முடிந்தது. அவன் வாங்கியப் பங்குகளின் விலை எகிறியது. இது செயற்கையாகச் செய்யப்படும் ஏற்றம். இந்த ஏற்றத்தைக் காணும் சிறு முதலீட்டாளர்கள் என்னச் செய்வார்கள் ? இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரே முதலீட்டு தத்துவம் தான். எந்தப் பங்கு விலை எகிறுகிறதோ அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். அவ்வளவு தான். ஹர்ஷத் மேத்தாவை பின்பற்றி அவன் முதலீடு செய்தப் பங்குகளையே எல்லோரும் வாங்குவார்கள். பங்குகள் மேலும் எகிறும்.

பங்குகளை வாங்குவதற்கான ஏற்ற விலையில் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஒரு முறை இருக்கிறது. அதற்கு பெயர் தான் டெக்னிகல் அனலிசிஸ். எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாத முறை இது. பங்குகளின் தற்போதையச் சூழலை வைத்து பங்குகளை வாங்கலாமா/வேண்டாமா என்று முடிவுச் செய்யும் முறை. இதில் பல முறைகள் இருக்கிறது என்றாலும், சிம்பிளாக சொல்வதென்றால் ஒரு பங்கு ஏற்றத்துடன் இருக்கும் பொழுது அந்தப் பங்குகளை வாங்கலாம் என்று தான் இந்த டெக்னிகல் அனலிசிஸ் பரிந்துரைக்கும். முதலீட்டாளர்களும் அதைத் தான் செய்வார்கள். ஏற்றத்துடன் இருக்கும் பங்குகளை அப்படியே வாங்குவார்கள். பங்குகளின் அடிப்படையை ஆராயும் முறையை சிறு முதலீட்டாளர்கள் கண்டு கொள்வதே இல்லை. அது தான் ஹர்ஷத் மேத்தா போன்ற பேராசைத் தரகர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் உயரும் பங்குகளை நோக்கி படையெடுத்தவுடன் விலை மேலும் எகிறும். தான் எதிர்பார்த்தது போல பங்குகள் விலை எகிறியவுடன், தன்னுடையப் பங்குகளை ஹர்ஷத் மேத்தா உடனே விற்பான். மொத்தமாக நிறையப் பங்குகள் விற்கப்படும் பொழுது பங்குகளின் விலைச் சரியும். ஹர்ஷத் மேத்தாவிற்கு மட்டும் நிறையப் பணம் கிடைக்கும். பாவம் அப்பாவி சிறு முதலீட்டாளர்கள். அவர்களின் சேமிப்பெல்லாம் கரைந்து போய்விடும்.

இவ்வளவு தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திய டெக்னிக். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது தான் அன்றைக்கு இந்தியப் பங்குச்சந்தையின் லட்சணம்.

மார்ச் 1992, ஹர்ஷத் மேத்தாவின் வித்தையால் குறியீடு 4000 புள்ளிகளை எட்டியது. ஹர்ஷத் மேத்தா தான் எல்லாப் பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திலும் காணப்பட்டான். அவன் தான் பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையான செல்வாக்கு. கரடிகளுக்கு வேர்கடலை கொடுத்து தான் பங்குச்சந்தையை வெற்றிக் கொண்டதாக சிம்பாளிக்காக கண்பித்தான் (இந்தத் தொடரின் முதல் பாகத்தை படியுங்கள், கரடிகளுக்கு வேர்கடலை கொடுத்த காரணம் புரியும்).

ஏப்ரல் 1992, குறியீடு 4400 ஐ எட்டியது. பலப் பங்குகள் பல மடங்கு அதிக விலையில் இருந்தது. ஹர்ஷத் மேத்தாவிற்கு மிகவும் பிடித்தமானப் பங்கு சிமெண்ட் நிறுவனமான ACCன் பங்குகள். இன்றைக்கு 370 ரூபாய் இருக்கும் இந்தப் பங்குகள் ஹர்ஷத் மேத்தாவால் 10,000 ரூபாயை எட்டியது. இது தவிர ரிலயன்ஸ், TISCO போன்ற பங்குகளும் ஹர்ஷத் மேத்தாவால் எகிற வைக்கப்பட்டன.

1992, ஏப்ரல் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. சுசித்தா தலால் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இந்த ஊழல் கதையை அம்பலப்படுத்தினார்.

ஹர்ஷத் மேத்தா என்ற தனி மனிதன் இந்தியப் பொருளாதாரத்தின் குறியீடு என்றுச் சொல்லப்படும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டை தன்னந்தனியாளாக 3000 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிற வைத்தான் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறதல்லவா ?

இந்த ஊழல் கதையை பற்றிச் சொல்லும் பொழுது 3500 கோடி பங்குச்சந்தை ஊழல் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஊழல் கதையை சுசித்தா தலால் வெளியிட்டப் பிறகு ஒரே வாரத்தில் குறியீடு சுமார் 2800 புள்ளிகள் சரிவுற்றது. 1,00,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள முதலீட்டாளர்களின் சேமிப்பு கரைந்துப் போனது. பல முதலீட்டாளர்கள், வங்கி ஊழியர்கள், தரகர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியப் பங்குச்சந்தையின் மாபெரும் உயர்வுக்கு காரணமாக ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையின் மாபெரும் சரிவிற்கும் காரணமானான். அவன் மேல் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஹர்ஷத் மேத்தா கைது செய்யப்பட்டான். அவனது பங்குகள், வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஆனால்…ஹர்ஷத் மேத்தாவின் கதை இத்துடன் நின்று விடவில்லை.

1208, நாரிமன் பாயிண்ட்ல் இருந்து, 1992ல் செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனமான Growmore Research & Asset Management Ltd, 1997ல் தம்யந்தி (Damayanti Group) என்ற பெயரில் மறுபடியும் பங்குச்சந்தையில் நுழைந்தது. இம் முறை ஹர்ஷத் மேத்தாவிற்கு பட்டுக்கம்பளம் விரித்தது, இந்த ஊழல் கதையை முதன் முதலில் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியா என்பது தான் வருத்தமான விஷயம்.

இந்த ஊழல் கதையின் இன்னும் பல விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 7

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு)

பங்குச்சந்தை தான் ஹர்ஷத் மேத்தாவின் கனவு. சாதாரணக் கனவு அல்ல. பெரியக் கனவு. “நான் கனவுகளை விற்க முயலுகிறேன். பணத்தை உருவாக்குவது மிக எளிதான வேலைத் தான். பணம் சம்பாதிக்கப் பங்குச்சந்தைக்கு வாருங்கள்” என்று முதலீட்டாளர்களுக்கு அவன் அழைப்பு விடுத்தான்.

பங்குச்சந்தை மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கோடிக்கணக்கான இந்திய முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்தான். இந்தியாவின் மாபெரும் பங்குச்சந்தை ஊழலுக்கு வித்திட்ட ஹர்ஷத் மேத்தா, அத் துறையைப் பற்றி கல்லூரிக்குச் சென்று படிக்காதவன். எல்லாம் அனுபவப் பாடம் தான். பல கஷ்டங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட வித்தை.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ராய்ப்பூர் தான் ஹர்ஷத் மேத்தாவின் சொந்த ஊர். தன் தம்பி அஸ்வினுடன் மும்பைக்கு குடியேறி நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காசாளாராக வேலைக்குச் சேர்ந்தான். பங்குச்சந்தை மீது ஒரு அபரிதமானக் காதல். காசாளாராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் உணவு இடைவேளையின் பொழுது மும்பை பங்குச்சந்தைக்கு ஓடி வருவான். அப்பொழுதெல்லாம் இணையம், கணினி மயமான வர்த்தகம் இல்லாத நேரம். பங்குகளைக் கூவி கூவி விற்பார்கள். அந்த வர்த்தகத்தின் மீது அவனுக்கு அபரிதமானக் காதல். பணம் சம்பாதிக்கும் திடமான வழி இது தான் என்று நம்பினான். பங்குகளைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன், கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான்.

பங்குகளைக் கற்பதே கொஞ்சம் கடினம் தான். அதில் நிபுணராக ஆவது அதைவிடக் கடினம். வெறும் ஏட்டுச் சுரக்காயைக் கொண்டு பணம் சம்பாதித்து விட முடியாது. ஹர்ஷத் மேத்தாவிற்கு ஏட்டுச் சுரக்காய் தெரியாது. அதனால் நிறைய நஷ்டம் அடைந்தான். நஷ்டங்கள் அவனுக்கு அனுபவத்தைக் கொடுத்தது. முதலீட்டில் தேர்ச்சிப் பெற்றான். அத்துடன் அவனது கனவு நின்றுவிடவில்லை. அவன் கனவின் முக்கியமான ஒன்று பங்குத் தரகராக வேண்டும் என்பதே. தரகராவது சாதாரணமான விஷயம் இல்லை. முதலில் ஒரு புரோக்கரிடம் கெஞ்சிக் கூத்தாடித் தான் சப் புரோக்கராகச் சேர்ந்தான். ஆனால் அதன் பிறகு அவனது வளர்ச்சி பிரம்மாண்டமானது.

ஹர்ஷத் மேத்தாவின் கனவு தான் அவனை ஒவ்வொரு கட்டத்திலும் வழி நடத்தியது. பங்குச்சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் பங்குச்சந்தையில் நுழைந்து, புரோக்கராக உயர்ந்ததுடன் அவனது கனவு நின்று விட வில்லை. "கனவுகளை காசாக்கலாம்" என்று யோசித்தான். இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தான் ஒரு வழிக்காட்டியாக மாற வேண்டும் என்று நினைத்தான். சினிமா ஸ்டார்கள் பின் அலையும் ரசிகர்கள் போல தன் பின்னால் முதலீட்டாளர்கள் அணிவகுக்க வேண்டும் என்று பேராசைப்பட்டான். அது தான் அவனை பங்குச்சந்தையின் மிகப் பெரிய புரோக்கர் (Big Bull) என்ற நிலைக்கு அழைத்துச் சென்றது. இந்த நிலைக்குச் செல்வதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி தான் அவனை இறுதியில் வில்லனாகவும் மாற்றியது.

அவனது கனவிற்கு ஏற்றாற்ப் போலவே அவன் தொடங்கியத் தரகு நிறுவனத்தின் பெயரும் அமைந்திருந்தது. தனது சகோதரர்கள், அஸ்வின் மேத்தா, ஜோதி மேத்தா ஆகியோருடன் இணைந்து அவன் தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் - Growmore Research & Asset Management Ltd. இந்தப் பெயருக்கு தகுந்தாற்ப் போலவே அவனது வளர்ச்சியும் அபாரமானதாக இருந்தது. பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். பல அட்டைப்படங்களை அலங்கரித்தான். இதற்கு உண்மையானக் காரணம் பங்குச்சந்தைக்கு வங்கிகளில் இருந்து கடத்தப்பட்ட பணம் தான். என்றாலும் இதைச் செயல்படுத்திய மூளை அபாரமானது.

ஆனால் ஹர்ஷத் மேத்தாவின் இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் ? அவன் மட்டுமே காரணமல்ல ? கடந்த சில வாரங்களாக நாம் கவனித்த வங்கிகளில் இருந்தச் சில ஓட்டைகள் மட்டுமே காரணமல்ல. நாம் அனைவருமே காரணகர்த்தாக்கள்.

நாம் எப்படி காரணமாகமுடியும் என்று கேட்கிறீர்களா ?

நம்முடைய அறியாமை தான். சிறு முதலீட்டாளர்கள் பலரின் அறியாமை. பங்குச்சந்தைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள். படிக்காதவர்கள் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். திவாலாகிப் போன நிதி நிறுவனங்களின் பின் அலைவார்கள். ஆனால் நம்மைப் போல நன்கு படித்தவர்கள் அறிவாளித்தனமாகச் சிலர் பேசினால், அவர்களை அதி புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறோம்.

ஒரு பங்கு உயரும் பொழுது, அந்தப் பங்குகள் ஏன் உயருகிறது ? இந்த உயர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. உயரும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சீக்கிரமாக நம் பணம் பல மடங்காகப் பெருக வேண்டும் என்ற பேராசை தான் தலைத்தூக்குகிறது. பங்குகளை ஆராய்வதற்கு நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண முதலீட்டாளர்கள், பங்குகளை நன்று அறிந்து, ஆய்வு செய்து நிறையப் பணம் சம்பாதித்தும் இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் தெரியாத ஒன்றை ஒருவன் செய்யும் பொழுது சிறு முதலீட்டாளர்களை மட்டுமே குறைச் சொல்லி என்னச் செய்வது என்று கேட்கிறீர்களா ?

ஆனால் ஹர்ஷத் மேத்தா ஒரு முறை மட்டுமே இதைச் செய்ய வில்லை. 1992 ஊழலுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளிவந்த ஹர்ஷத் மேத்தா 1997ல் மறுபடியும் இந்த ஊழலைச் செய்ய முயன்றான். ஓரளவுக்கு அதற்கு பலனும் கிடைத்தது. இது எதைக் காட்டுகிறது ? நம் அறியாமை என்பதைத் தவிர வேறு என்னச் சொல்வது.

இது தவிர ஊடகங்களின் பணத்தாசை. ஹர்ஷத் மேத்தாவை மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக கட்டியப் பத்திரிக்கைகள் பின் அவனை வில்லனாகச் சித்தரித்தன. பிறகு அவனைக் கொண்டே பணத்தை பெருக்க நினைத்தன.

1992ல் ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் 1997ல் தன் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்று முடிவுச் செய்தது. ஹர்ஷத் மேத்தாவைக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு முதலீட்டு பத்தியையும் தொடங்கியது.

பத்திரிக்கைகளின் பொறுப்பு எத்தகையது என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

இங்கு பணம் தான் பிரதானம். மற்றதெல்லாம் அர்த்தமற்றது. இதில் பாதிக்கப்படுவது முதலீட்டாளர்கள் அல்ல - “யோசிக்காமல் முதலீடு செய்யும் அறிவாளிகள்”

ஆனால் ஹர்ஷத் மேத்தாவை இன்றும் பலர் ஹீரோவாகத் தான் பார்க்கிறார்கள். பங்குச்சந்தையை உயர்த்தியதால், இந்தியப் பங்குச்சந்தையின் சூட்சமங்களை வெளிப்படுத்தியதால் அவனை பலர் ஹீரோவாகப் பார்கிறார்கள்.

பங்குச்சந்தையை உயர்த்திய ஹர்ஷத் மேத்தாவின் வித்தையை அடுத்தப் பதிவில் பார்ப்போம் மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 6

முந்தைய பகுதிகள் (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து)

கடந்தப் பாகத்தில் பத்திரங்களே இல்லாமல் கடன் பெறும் முறையை BR எனப்படும் Bank Receipt மூலம் செய்ய முடியும் என்று பார்த்தோம். இந்த BR கொண்டு பணம் பெறும் முறையையும் ஹர்ஷத் மேத்தா, ஹித்தன் தலால் போன்றப் பங்குத்தரகர்கள் தங்களின் பணத்தேவைக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

அதாவது பத்திரங்களே தேவைப்படாமல் ஏதாவது ஒரு வங்கியில் BR பெற்று விடுவார்கள். அந்த BRஐ கொண்டு Ready Forwards அல்லது ரெப்போ வர்த்தகம் மூலம் பிற வங்கிகளுக்கு விற்பார்கள். விற்கும் வங்கிக் கொடுக்கும் காசோலையை தங்களின் வங்கிக் கணக்குக்கு கொண்டுச் சென்று விடுவார்கள். இதற்காகப் பலச் சிறிய வங்கிகளை தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டார்கள். அதிகம் அறியப்படாத வங்கிகளான கர்நாட் வங்கி Bank of Karad - BOK), மெட்ரோபாலிட்டன் கூட்டுறவு வங்கி (Metropolitan Cooperative Bank - MCB) போன்ற வங்கிகளின் உயர் அதிகாரிகளை தங்களின் ஊழல் கூட்டணிக்கு உடந்தையாக கொண்டு செயல்படத் தொடங்கினார்கள். இந்த வங்கிகளில் இருந்து BR பெற்று அந்த BR பணமாக மாற்றப்பட்டு பங்குச்சந்தையில் நுழையும்.

இப்படி பல இடங்களில் இந்த ஊழல் கதைகள் நடந்து கொண்டிருந்தப் பொழுது இத்தகைய வர்த்தகங்களை கண்காணிக்கும் கட்டுப்பாடுகள் என்னாயிற்று ? கண்காணிப்பில் எங்கு ஓட்டை விழுந்தது ?

வங்கிகளின் பல்வேறு வர்த்தகத்திற்குப் பலப் பிரிவுகள் உண்டு. வங்கிகளில் ஒவ்வொரு பிரிவும் தனியாகவே செயல்படவேண்டும். வங்கி, யாரிடம் கடன் வாங்குவது/கொடுப்பது என்பதை முடிவுச் செய்ய ஒரு துறை இருக்கும். வாங்கியப் பத்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒரு பிரிவு உண்டு. அது போலவே SGL கணக்குகளில் இருக்கும் வங்கியின் பத்திர கணக்கு வழக்குகளை பராமரிக்கவும் ஒரு பிரிவு உண்டு.

இந்தப் பத்திரங்களைப் பாதுகாக்கும் பிரிவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இருப்பார்கள். இரண்டு அதிகாரிகள் இருந்தால், பத்திரங்களைப் பாதுகாப்பதில் ஊழல் நடக்கும் பட்சத்தில் அதிகாரிகளில் யாராவது ஒருவர் அதற்கு உடந்தையாகப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இரண்டு அதிகாரிகள் இருக்கும் முறை அமலில் இருந்தது.

ஆனால் நாம் இந்தத் தொடரின் 4வது அத்தியாயத்தில் பார்த்ததுப் போல கஸ்டோடியன் பாதுகாப்பில் இருக்க வேண்டிய பத்திரங்கள் யாரோ சில உயர் அதிகாரிகளிடம் விதிமுறையை மீறி இருந்தது. SGL கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இது போல மற்றொரு பெரிய ஓட்டை யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானலும் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்தச் சூழல். அதாவது BR மூலம் பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்க முடியும் என்பது அனைத்து வங்கிகளுக்கும் தெரியும். வங்கிகளில் Risk Management என்பது முக்கியமான ஒன்று. இந்த Risk Management ல் Market Risk, Credit Risk என்று பலப் பிரிவுகள் உண்டு. இதற்குள்ளெல்லாம் நாம் செல்ல வேண்டாம். Credit Risk என்பதைப் பற்றி மட்டும் கவனிப்போம்.

பெயரைப் போலவே இது கடன் கொடுப்பதால் வரும் பிரச்சனைகளை அலசும் பிரிவு. கடன் பெறும் வங்கியின் பயனாளர்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பார்களா என்று அலசி ஆரய்வது தான் இந்தப் பிரிவின் முக்கிய வேலை. பயனாளர்கள் ஒவ்வொருவரின் creditworthiness அலசப்பட்டு அவர்களின் மதிப்பிற்கேற்ப ஒரு உச்சவரம்பு விதிக்கப்படும். இதற்கு Limit என்றுப் பெயர். இந்த லிமிட்க்குள் தான் அவர்களுக்கு கடன் வழங்கப்படும். இதற்கு அதிகமாக கடன் வழங்கப்படமாட்டாது.

ஆனால் பத்திர ஊழல் நடைப்பெற்ற பொழுது, சிறிய வங்கிகளான கர்நாட் வங்கி போன்றவற்றுக்கு அதன் லிமிட்டை விட அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதனைச் செய்தது ஏதோ நம்மூர் வங்கிகள் மட்டுமல்ல. சர்வதேச வங்கியான Standard Chartered கூட லிமிட்டை கொஞ்சம் கூட மதிக்காமல் பல கோடிகளை சிறிய வங்கிகளுக்கு ரெப்போ மூலம் வாரி வழங்கியுள்ளது.

சரி..வங்கிகள் தான் இவ்வாறு கண்காணிப்பில் கோட்டை விட்டன என்றால், கண்காணிப்பதற்கென்றே இருக்கும் ரிசர்வ் வங்கி என்னச் செய்து கொண்டிருந்தது ?

ரிசர்வ் வங்கி அதன் கண்காணிப்பு பிரிவான PDO மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் என்று பார்த்தோம். PDO வின் வேலை வங்கிகளிடமிருக்கும் பத்திரங்களை எல்லாம் அதன் விற்பனைக்கேற்ப பராமரிப்பது. ஆனால் இந்தப் பராமரிப்பு சரியாகச் செய்யப்படவில்லை. SGL ரிசிப்டுகள் பவுன்சாகும் பட்சத்தில் வங்கிகளிடம் உடனடியாக அது தெரிவிக்கப்பட
வேண்டும். ஆனால் பேப்பர் ஒர்க் மூலம் பல செயல்கள் நடந்துக் கொண்டிருந்ததால் இது சரியாகப் பராமரிக்கப்படவில்லை.

இப்படி பல ஓட்டைகளுக்கிடையில் ஊழல் ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.

சரி.. நாம் கதைக்கு வருவோம். ஹர்ஷத் மேத்தா கதை என்று சொல்லிவிட்டு ஊரில் இருக்கும் அனைத்து கணக்கு வழக்குகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா ? என்னச் செய்வது ? மேலே கூறிய ஓட்டைகள் இல்லாவிட்டால் ஹர்ஷத் மேத்தா என்ற கிரிமினல் உருவாகியிருக்க மாட்டானே. ஒரு சிலர் ஹர்ஷத் மேத்தா இந்த ஊழலில் பலிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டான், பலப் பெரிய மீன்கள் இதில் சிக்காமல் தப்பி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது.

பல கோடி ரூபாய் பெருமானமுள்ள இந்த ஊழல் வங்கிகளின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. உயர் அதிகாரிகள் என்றால் மேலிடத்திலுள்ள மிகப் பெரிய அதிகாரிகள். ஆனால் இந்தத் தொடரின் நான்காவது பாகத்தில் கூறியிருந்த பவ்தேக்கர் போன்ற பல அப்பாவிகளை சிக்க வைத்து விட்டு பல உயர் அதிகாரிகள் தப்பி விட்டனர்.

ஒரு வெளிநாட்டு வங்கியில் Credit Risk Management பிரிவிற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நான் அந்தத் துறையில் தான் வேலைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பயனாளரின் (Counterparty) கணக்கு வழக்குகளும் கடுமையாக அலசப்படும். பல்வேறுச் சூழ்நிலைகளை செயற்கையாக உருவாக்கியும் அலசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வங்கியான Standard Chartered வங்கி கொஞ்சம் கூட அலசாமல் கடன் கொடுத்தது என்பதை ஏற்க முடியாது. விதிமுறைகளை மீறி கடன் கொடுக்க வேண்டுமென்றால் அந்த வங்கியின் முக்கிய அதிகாரிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். கைமாறியப் பணத்தில் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படவில்லை. ஹர்ஷத் மேத்தாவும் சில அதிகாரிகளும் தான் சிக்கிக்கொண்டனர். பெரிய மீன்கள் தப்பி விட்டனர்.

என்ன ஹர்ஷத்மேத்தாவை முதலில் வில்லன் என்றீர்கள், இப்பொழுது பலிகடா என்கிறீர்களே என்று கேட்கிறீர்களா ? ஹர்ஷத்மேத்தா நிச்சயம் வில்லன்தான். வில்லன்களின் இரு வகை இருக்கிறார்கள். மறைமுக வில்லன், நேரடி வில்லன். மறைமுக வில்லன்கள் பல நேரங்களில் தப்பி விடுகிறார்கள். நேரடி வில்லன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஹர்ஷத் மேத்தா நேரடி வில்லன்.

சரி…இந்த ஊழல் கதையில் பத்திரங்களின் பங்குகளை பார்த்து விட்டோம். இங்கிருந்து நகர்ந்து அடுத்த பதிவில் Dalal Street க்கு வருவோம். மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 5

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SGL ரிசிப்ட்ஸ்களை விற்கும். அதனை National Housing Board நிறுவனம் வாங்கும். இதற்கு இடைத்தரகராக ஹர்ஷத் மேத்தா செயல்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பத்திரங்களை விற்றப் பணம், ஸ்டேட் பாங்க் வங்கிக்கு செல்லாமல் ஹர்ஷத் மேத்தாவின் வங்கிக் கணக்குக்குச் சென்று விடும்.

நாம் இந்தத் தொடரின் மூன்றாவது அத்தியாத்தில் எப்படி வங்கிகள் தங்களுடைய Privileged/Corporate Customer களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கிறது என்று பார்த்தோம். அதாவது பெரிய நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு காசோலை வாங்காமல், வங்கிகளில் பெயரில் காசோலைப் பெற்று அதனை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொள்வார்கள். பரிவர்த்தனைச் செய்யும் பணத்திற்கு வட்டி இழப்பு ஏற்படாமல் இருக்கவே இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த முறையைத் தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திக் கொண்டான்.

பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதற்காக NHB, காசோலையை ஹர்ஷத் மேத்தாவிடம் கொடுக்கும். ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அந்தக் காசோலையை தங்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்து கொள்ளுமாறு சொல்வார்கள். நடைமுறையில் இருக்கும் சலுகைப் படி ஸ்டேட் பாங்க் வங்கிக்கு கிடைக்க வேண்டியப் பணம் ஹர்ஷத் மேத்தாவின் கணக்குக்குச் செல்லும். ஹர்ஷத் மேத்தா அந்தப் பணத்தினைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துப் பங்குகளை விலை உயரச் செய்வான்.

அவன் பங்குச் சந்தையில் பங்குகளை உயர வைத்த விதம் பற்றிப் பின்பு பார்க்கலாம். முதலில் இந்தப் பத்திரங்களின் கதையை கவனிப்போம்.

மேலே உள்ள ஊழல் கதையைப் படித்தவுடன், இது என்ன அவரவர் இஷ்டம் போல நடக்கும் கூத்தாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ?

சிலக் கட்டுப்பாடுகளும் இருக்கவேச் செய்தன. அந்தக் கட்டுப்பாடுகளை நிறுவி கண்காணிக்க வேண்டியப் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாட்டு முறையில் பல ஓட்டைகள் இருந்தன.

SGL ரிசிப்ட்சை மட்டுமே கொண்டு இந்த ஊழல் நடைபெற்று விட வில்லை. மற்றொரு முறையையும் தரகர்கள் கையாண்டனர். இதுவும் பத்திரப் பரிமாற்றத்தில் இருந்த ஒரு ஓட்டைத் தான்.

Bank Receipt எனப்படும் BR மூலமும் பலக் கோடி ரூபாய்கள் ஊழல் நடந்தது. அது என்ன BR ?

பத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதிலாக வாங்கும் வங்கியும் விற்கும் வங்கியும் ரிசிப்ட் மூலம் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்.

அதாவது பத்திரங்களை விற்கும் வங்கி இந்த BRல் பத்திரங்களை விற்பதாகக் கூறி வாங்கும் வங்கியிடம் கொடுக்கும். பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுக்கும் வங்கி, குறிப்பிட்ட தேதியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மறுபடியும் பத்திரங்களை திரும்பக் கொடுப்பதாக இந்த BRல் ஒப்புக் கொடுக்கும். ஏறத்தாழ இது ஒரு ஒப்பந்தம் போலத் தான். இந்த ஒப்பந்தங்களை வங்கிகள் வைத்திருக்கும் பத்திரங்களின் பேரில் தான் மேற்கொள்ள வேண்டும்.

பத்திரங்களின் சேமிப்புக் கணக்கான SGL கணக்கு மூலமாகவே பத்திரங்கள் பரிமாறப்படுகின்றன என்று கடந்தப் பதிவில் பார்த்தோம். உண்மையான அரசு கடன் பத்திரங்கள் எப்பொழுதும் பரிமாறப்படுவதேயில்லை. மாறாக, SGL கணக்கில் இருக்கும் பத்திரங்களுக்கு ஏற்ற அளவில் ஒரு காசோலைப் போல SGL ரிசிப்ட்ஸ் தான் வழங்கப்படும் என்றும் பார்த்தோம். இந்த முறைப் படி BR பயன்பாட்டில் இருந்திருக்கவே கூடாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி BR மூலம் பரிவர்த்தனைச் செய்யக்கூடாது. ஆனால் இந்த முறை தான் பத்திர ஊழலில் மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்த SGL ரிசிப்ட்சை Public Debt Office (PDO) எனப்படும் ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஒரு பிரிவு தான் தன் பொறுப்பில் வைத்திருந்தது. குறிப்பிட்ட அளவுக்கு பத்திரங்கள் இல்லாவிட்டால் வங்கிகள் கொடுக்கும் ரிசிப்ட்ஸ் பவுன்ஸ் ஆகக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே பத்திரங்கள் அளவு குறையும் பொழுது குறிப்பிட்ட வங்கிகளுக்கு அது முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு தெரிவிப்பதில் காலதாமதம் ஏற்படுதல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லாமே Paper Work காக இருந்தக் காலம்.

எனவே வங்கிகள் இந்த SGL ரிசிப்ட்சை அதிகமாகப் பயன்படுத்தாமல் நடைமுறை வசதிக்காக BR எனப்படும் Bank Receipt மூலமே தங்கள் பரிமாற்றதை செய்து கொண்டிருந்தன. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி இம் முறை வழக்கில் இருந்தது.

வங்கிகளுக்கு இந்த BR முறையில் பல வசதிகள் இருந்தன.

  • BR மூலம் பணப்பரிமாற்றம் நடக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கான இந்த டீல் முடிந்தவுடன் ஒப்பந்தமும் ரத்தாகிவிடும். பத்திரங்களை SGL மூலம் பரிமாறிக் கொள்வதிலுள்ள பிரச்சனைகள் இதில் கிடையாது.
  • பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறைக்கு BR உதவிகரமாக இருந்தது.

அது என்ன பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்கும் முறை ?

இதற்குப் பெயர் Short Selling. பங்குச் சந்தையிலும் பணச் சந்தையிலும் வழக்கிலிருக்கும் ஒரு முறை.

உங்களிடம் பத்திரங்களோ, பங்குகளோ இல்லாமலேயே விற்க முடியும்.

ஒரு நகையை விற்க வேண்டுமென்றால் உங்களிடம் கண்டிப்பாக நகை இருக்க வேண்டும். ஒரு பொருள் நம்மிடம் இருந்தால் தான் அதனை விற்க முடியும்.

ஆனால் பங்குகளிலும், பத்திரங்களிலும் மட்டும் தான் நம்மிடம் இல்லாதப் பத்திரங்களையும், பங்குகளையும் விற்க முடியும். இதற்கு பெயர் தான் Short Selling.

உதாரணமாக இன்போசிஸ் நிறுவனப் பங்கு சரியப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறது. தற்போதையச் சந்தை விலை 1900 ரூபாய். நீங்கள் ஒரு 100 பங்குகளை (உங்களிடம் இல்லாதப் பங்குகள்) விற்கலாம். சந்தைச் சரிகிறது. இன்போசிஸ் பங்குகளின் சந்தை விலை 1800 ரூபாய்க்குச் சரிந்து விடுகிறது. இப்பொழுது நீங்கள் 100 பங்குகளை வாங்கி விடலாம்.

நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 1800 = 1,80,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000

லாபம் = 10,000

இதற்கு நேர்மாறாக இன்போசிஸ் பங்குகள் விலை உயர்ந்து 2000ஐ எட்டினால், உங்களுடைய நஷ்டம் 10,000

நீங்கள் பங்குகள் வாங்கும் விலை 100 x 2000 = 2,00,000
நீங்கள் பங்குகள் விற்ற விலை 100 x 1900 = 1,90,000

இதே முறையில் பத்திரங்கள் இல்லாமலே விற்று லாபம் பார்க்கலாம்.

ஒரு பத்திரத்தின் சந்தை விலைச் சரியப்போகிறது என்ற செய்தி ஒரு வங்கிக்குத் தெரியவரும். உடனே தன்னிடம் இல்லாதப் பத்திரங்களுக்கு ஒரு BR கொடுத்து விற்று விடும். சந்தை விலைச் சரிந்தப் பிறகு குறைவான விலையில் பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இதன் மூலம் லாபம் கிடைக்கும்.

BRல் இருக்கும் பல வசதிகளுக்காக வங்கிகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்த வர்த்தக முறையில் ஊழல் செய்வதற்கும் வய்ப்புகள் இருந்தன. இந்த வாய்ப்புகளைத் தான் ஹர்ஷத் மேத்தாவும் பிற புரோக்கர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது பத்திரங்கள் இல்லாமலே பத்திரங்களை விற்று அந்தப் பணத்தைப் பங்குச்சந்தைக்கு கொண்டு வரும் முறை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஏதோ ஒரு வங்கி மூலம் ஒரு BR.

கிரிமினல் மூளையுடைய ஹர்ஷத் மேத்தாவிற்கு இதற்கா வழி கிடைக்காமல் போய் விடும் ?


மேலும் படிக்க

Fundamental Analysis - P/E - 2

கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம்.

பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

P/E எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தால் இது தெளிவாகும். கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் P/E கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்று சொல்வார்கள். பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை leading or projected P/E என்று சொல்வார்கள்.

பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது. ஒரு பங்கின் உண்மையான மதிப்பை விட அது எதிர்காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது, பங்குகளின் விலையை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.

P/E = Market Price / Earnings

இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

Market Price = P/E * Earnings

ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த (ஜனவரி 2005 நிலவரம்) காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தன. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி".

P/E அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E = 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

மாறாக P/E = 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

PEG = P/E / (projected growth in earnings)

ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

ஒரு நிறுவனத்தின் P/E = 30, வளர்ச்சி விகிதம் = 15% என்றால்

PEG = 30/15 = 2

PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

References : Buffettology, Peter Lynch - One up on the wall Street மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா : ஊழலின் கதை - 4

ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டனர். தாங்கள் செய்யாத ஊழலுக்காக சிலர் வேலையிழந்தனர். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த சில வங்கி மேலாளர்களின் வாழ்க்கைச் சிதைந்துப் போனது. அப்படிப்பட்ட அப்பாவி ஒருவரைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

பவ்தேக்கர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பல வருடங்கள் பணி புரிந்த உயர் அதிகாரி. மகாராஷ்டிராவில் பல கிராமப்பகுதிகளிலும், குட்டி நகரங்களிலும் பணி புரிந்தப் பிறகு மும்மைக்கு மாற்றலானார். இந்த மாற்றம் அவராகவே விரும்பி கேட்டுப் பெற்ற ஒன்று. குழந்தைகள் மும்மையில் படித்துக் கொண்டிருக்க, பவ்தேக்கர் பல நகரங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இனியாவது மும்மையில் குழந்தைகளுடன் இருக்கலாம் என்ற எண்ணமே அவரை இந்த மாற்றத்திற்கு தூண்டியது.

மும்மையில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் கிளையில் பணிபுரிய தொடங்கினார். இங்கே தான் விதி விளையாடியது. மும்மையில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உதவி மேலாளர் பதவி காலியாக, பவ்தேக்கர் அங்கு மாற்றப்பட்டார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் தான் அரசு கடன்பத்திரங்கள் இருக்கும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பல கிளைகளில் மும்மை தலைமை அலுவலகம், சென்னை, கல்கத்தா போன்ற மூன்றே வங்கிக் கிளைகள்தான் முதலீட்டு வங்கிப் பிரிவுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்தன. கடன்பத்திரங்கள், Subsidiary General Ledgers எனப்படும் SGL ரிசிப்ட் போன்றவையும் இங்கு தான் வைக்கப்பட்டிருந்தன. அதனை பாதுகாக்கும் பொறுப்பு கஸ்டோடியன் (custodian) எனப்படும் ஒரு அதிகாரிக்கு உண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமல் சீத்தாராம் எனப்படும் ஒரு உயர் அதிகாரியின் பொறுப்பிலேயே இந்த SGL ரிசிப்ட்ஸ் இருந்தது.

சீத்தாரம் உயரதிகாரியாக இருப்பதால் அவர் கையெழுத்திட்டு அனுப்பும் பல காசோலைகள் மற்றும் ரிசிப்ட்களை வங்கியில் இருந்த மற்ற அதிகாரிகள் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு கொண்டிருந்தனர். ஏன் அப்படி ? வங்கி மற்றும் அரசு அலுவலங்களில் அவ்வாறு தான் நடைமுறை. மேலதிகாரியே கையெழுத்திட்டு விட்டால் அப்பீல் ஏது ? எல்லோரும் கையொப்பமிட்டு தாங்கள் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்து கொண்டிருந்தனர்.

அப்படி என்ன தவறு அது ? SGL ரிசிப்ட்ஸ் என்றால் என்ன ?

பணத்தைச் சேமிக்கும் வங்கிக் கணக்குகள், பங்குகளை வைக்கும் டீமேட் கணக்குகள் போல கடன்பத்திரங்கள் வைக்கும் கணக்கு தான் SGL கணக்கு என்னும் Subsidiary General Ledger கணக்கு. இது ரிசர்வ் வங்கியில் இருக்கும் கடன்பத்திரக் கணக்கு. தங்களிடமுள்ள கடன் பத்திரங்களை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இங்கு தான் வைத்துக் கொள்ளும். கடன் பத்திரங்களை வாங்கும், விற்கும் வங்கிகளும், நிறுவனங்களும் இந்த SGL ரிசிப்ட் வழியாகவே கடன் பத்திரங்களைப் பரிமாறிக் கொள்ளும். அதாவது பத்திரங்களை விற்கும் வங்கியின் SGL கணக்கில் இருந்து விற்கும் பத்திரங்கள் கழித்துக் கொள்ளப்படும். அந்தப் பத்திரங்களை வாங்கும் வங்கியின் கணக்குகளில் இது வரவு செய்து கொள்ளப்படும். SGL ரிசிப்ட்ஸ் என்பது ஒரு காசோலைப் போலத் தான். "விற்கும் வங்கி" ஒரு ரிசிப்ட்டில் பத்திர விவரங்களை எழுதி கையொப்பமிட்டு அதனை "வாங்கும் வங்கிக்கு" கொடுக்கும். SGL கணக்குகளில் பத்திரங்கள் இருந்தால் அது பத்திரங்களை வாங்கும் வங்கிக் கணக்குக்குச் செல்லும். கணக்குகளில் பத்திரங்கள் இல்லாதப் பட்சத்தில் காசோலை பவுன்ஸ் ஆவதுப் போல இந்த ரிசிப்ட்களும் பவுன்ஸ் ஆகும்.

இந்த ரிசிப்ட்களை வைத்துத் தான் ஹர்ஷத் மேத்தா விளையாடினான். அந்த விளையாட்டில் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி குட்டி மீன் தான் பவ்தேக்கர். ஹர்ஷத் மேத்தா விலைக் கொடுத்து வாங்கிய அதிகாரிகள் தான் சீத்தாரம் போன்றவர்கள்.

சீத்தாரமுக்கு இந்த SGL ரிசிப்ட்களை வைத்துக் கொள்ளும் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் தான் அதனை வைத்திருந்தார். சீத்தாராம் தயாரிக்கும் வவுச்சர் மற்றும் ரிசிப்ட்களை பவ்தேக்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கையொப்பமிட்டு அடுத்த மேஜைக்கு அனுப்பி விடுவார்கள். அந்த SGL ரிசிப்டஸ் ரிசர்வ் வங்கி கணக்குக்கு செல்லும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான் பங்குகளை விற்பவர். அதாவது ஹர்ஷத் மேத்தா - சீத்தாராம் கூட்டணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கடன் பத்திரங்களை விற்கத் தொடங்கினார்கள். இந்தப் பத்திரங்களை வாங்க மற்றொரு வங்கி வேண்டுமே ? வாங்குவதற்கு ஒரு வங்கி இருந்தால் தானே பணம் கிடைக்கும்.

ஹர்ஷத் மேத்தாவின் வலையில் சிக்கிய வங்கி தான் NHB எனப்படும் National Housing Board நிறுவனம். ஸ்டேட் பாங்க் பத்திரங்களை விற்கும், NHB பத்திரங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் (ஸ்டேட் பாங்க் ஏன் பத்திரங்களை விற்க வேண்டும் என்பதற்கு இத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தை படியுங்கள்).

ஸ்டேட் பாங்க் பத்திரங்களை NHB க்கு விற்கிறது, NHB அந்தப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு பணம் தருகிறது. இந்த வர்த்தகம் ஹர்ஷத் மேத்தா என்ற தரகர் மூலம் நடைபெறுகிறது.

சரி..இதில் என்ன பிரச்சனை. கொடுக்கல் வாங்கல் இரு வங்கிகளுக்கிடையே தானே நடைபெறுகிறது. ஹர்ஷத் மேத்தா எந்த விதத்தில் இதில் ஊழல் செய்தான் ?

கொஞ்சம் இத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தை படித்துப் பாருங்கள். உங்களுக்கே எப்படி ஊழல் நடைபெற்றது என்பது புரியும். நானும் இந்த ஊழல் கதையை ஐந்தாம் அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறேன்.

இந்த அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதும் முன்பு பவ்தேக்கர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?

ஒரு பாவமும் அறியாத, தனது உயரதிகாரியால் கையெழுத்திட்டு அனுப்பப்பட்ட ரிசிப்ட்டுக்கு பின்னால் உள்ள சதி தெரியாமல் கையொப்பமிட்ட பவ்தேக்கர் இந்த ஊழல் கதை வெளிப்பட்டவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது சேமிப்புகளை கொண்டு வாங்கிய நகைகள், வீடு போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விட்டன. வங்கியின் மேலாளராக, உயரதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர், பிறகு தனது அன்றாட தேவைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்கம் திரட்டிக் கொடுத்த நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் மன உறுதியுடன் இந்தச் சவாலை எதிர்கொண்டார்.

ஆனால் மன உறுதி இல்லாமல், சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு பயந்து சில வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டனர். காரணம் - யாரோ சிலரின் பணத்தாசை.

(எந்த தவறும் செய்யாமல் இந்த வழக்கில் சிக்கிக்கொண்ட பவ்தேக்கர் இன்றும் நீதி கேட்டு இந்திய நீதிமன்றங்களின் வாசலில் நீதிக்காக காத்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அப்பொழுது அது குறித்து நான் எழுதிய பதிவு - நியாயம் கேட்டு ஒரு போராட்டம்


இந்திய நீதிமன்றங்களின் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக வலைப்பதிவுகளில் உலாவிக் கொண்டு இருக்கும் "சிலருக்கு" இது எல்லாம் தெரியாது என்று நம்புகிறேன். இடஒதுக்கீடு, மரணதண்டனை போன்ற வழக்குகளில் நீதிமன்றங்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள், இந்த வழக்கு குறித்தும் நீதிமன்றத்துக்கு ஆதரவாகவும், எனக்கு நீதிமன்றங்கள் செயல்படும் முறை தெரியவில்லை என்றும் பின்னூட்டம் எழுதி விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்)


மேலும் படிக்க