பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Thursday, November 25, 2004

80,000 கோடிக்கான தகராறு

நம்மூரில் சில ஏக்கர் நிலத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொள்வதைப் பார்த்து இருக்கிறோம். வரப்பு தகராறுகள், வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அதை சுவரசியமான சண்டையாக பார்த்திருப்போம். அவை நமக்கு அவை எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுத்தியதில்லை. ஆனால் இன்று, யாரோ இருவரின் சொத்து தகராறு நம்மை பீதி அடைய வைக்கிறது. சண்டையிடப்படும் சொத்து மதிப்பு, பல ஆயிரம் கோடி. 80,000 கோடிக்கான தகராறு (அம்மாடியோவ்...). ரிலயன்ஸ் நிறுவனத்தின் உரிமைக்கான சண்டை, இப்பொழுது விஸ்ரூபம் எடுத்துள்ளது.

தீருபாய் அம்பானியின் மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் தான் இன்று எல்லா முதலீட்டாளர்களின் முதல் கவலை. சில மாதங்களாகவே வதந்தியாய் இருந்த செய்தி, இப்பொழுது வெளியாகி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. மறைந்த தீருபாய் அம்பானியின் இரு புதல்வர்கள் - முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. முகேஷ் மூத்தவர் - ரிலயன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர். அவரது இளைய சகோதரர் அனில் அம்பானி துணை சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்.

ரிலயன்ஸ் நிறுவன குழுமத்திற்குள் பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஓட்டுமொத்த ரிலயன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தனது தந்தை தன்னை தான் நியமித்துள்ளதாகவும், தானே இதன் தலைவர் என்றும் முகேஷ் அம்பானி கூறுகிறார். அனில் இதனை ஏற்கவில்லை. ரிலயன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி மீடியாக்களில் அதிகம் தலைக்காட்டாதவர். ஒட்டு மொத்த குழுமத்தின் தலைவராகவும், ரிலயன்ஸ் இன்போகாம் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தின் (ரிலயன்ஸ் செல்போன்) தலைவராகவும் இருக்கிறார். Reliance Energy மற்றும் Reliance Capital போன்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அனில் அம்பானி மீடியாக்களில் அதிகமாக தென்படுபவர். ராஜ்யசபாவில் சுயேட்சை உறுப்பினராக உள்ளார்.

இந்த இரு சகோதரர்கள் தவிர இரு சகோதரிகளும் இருக்கின்றனர். இவர்களிடையே சமரசம் செய்ய அவர்களது தாய் கோகிலா பென் ஈடுபட்டுள்ளார். ஆனால் பிரச்சனை முற்றி விட்டது. குடும்பத்தில் சமரசம் நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே நானே தலைவர் என்ற முகேஷின் அறிவிப்பு சமரசம் தோல்வி அடைந்து விட்டதையே காட்டுகிறது. இன்று அனில் அம்பானிக்கு ஆதரவாக உள்ளவர்கள் Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகி விட்டார்கள். சொத்து தகராறு தீவிரம் அடைவது, முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலியாகப் போகிறது.

இந்த சொத்து தகராறு, இன்று மட்டும் ரிலயன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டில் 2500 கோடி இழப்பீட்டை ஏற்படுத்தியுள்ளது.

ரிலயன்ஸ் பங்குகளில் இன்றைய சரிவு

Reliance Energy - விலை 549.10, சரிவு - ரூ34
Reliance Industries - விலை 503.55, சரிவு - ரூ11
Reliance Capital - விலை 136.25, சரிவு - ரூ3.75
IPCL - விலை 175.35, சரிவு - ரூ6.85

இன்று நல்ல லாபகரமாக சென்று கொண்டிருந்த வர்த்தகம், Reliance Energy நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து சிலர் விலகிய செய்தியால் கடுமையாக சரிவுற்றது. 589 ஐ எட்டிய Reliance Energy பங்குகள், இந்த செய்தியால் அனைவரும் பங்குகளை விற்க தொடங்க, 549க்கு சரிவுற்றது.

ரிலயன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களின் நிலை என்ன ?

ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவுற்று குறைந்த விலைக்கு வந்தவுடன், சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்கியுள்ளனர். ரிலயன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் எதிர்காலம், இத்தகைய சிக்கல்களால் பாதிப்படையாது என்று இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. நாட்டின் முதல் ஐந்து நிறுவனங்களில் ரிலயன்ஸ் நிறுவனமும் ஒன்று. அதன் சந்தை மதிப்பீடு 15பில்லியன். இத்தகைய நிறுவனம் இந்த சொத்து தகராறால் தொய்வடைந்து விடாது. ஆனால் பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லக் கூடுமென தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு பிரச்சனை செல்லுமா? சென்றால் தற்பொழுது உள்ள நிலையே இறுதி தீர்ப்பு வரும் வரையில் நீடிக்க கூடுமா இல்லை மாற்றங்கள் ஏற்படுமா ? நிர்வாகம் பாதிப்படையுமா ? ரிலயன்ஸ் ஒன்றும் மிகச் சிறந்த நிர்வாகத்தை கொண்ட நிறுவனம் அல்ல. தற்பொழுது தான் BSNL, MTNL போன்ற நிறுவனங்களுடனான பிரச்சனை முடிவடைந்தது. இது போன்ற பல நிர்வாக சிக்கல்கள் அவ்வப்பொழுது எழுந்ததுண்டு.

எனவே ரிலயன்ஸ் பங்குகள் மீது எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. ஏற்கனவே குறைந்த விலையில் பங்குகளை வாங்கியிருந்தால் பிரச்சனையின் போக்கிற்கு ஏற்றவாறு விற்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.

6000ஐ கடந்து 6100 ஐ நோக்கி சென்று கொண்டிருந்த சந்தை இப்பொழுது அம்பானிகளின் சொத்து தகராறால் 6000 அருகில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஏக்கருக்கும் குடுமிப்புடி சண்டை தான், 80,000 கோடிக்கும் அதே சண்டை தான்.

0 மறுமொழிகள்: