பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, November 07, 2004

பணவீக்கம்

இந்த வாரம் பணவீக்கம் 7.38% என்று அரசு அறிவித்திருக்கிறது.

அது என்ன பணவீக்கம்?

பணவீக்கம் 7.38% சதவீதம் என்றால், 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பொருளை நாம் ரூ107.38 க்கு வாங்குகிறோம் என்பது பொருள். பொருட்களின் விலை ஏறுவதால் நம்முடைய வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம்.

பணவீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது

உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கும்.

ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்க, ஆனால் பொருள் குறைவாக இருக்கும் பொழுது, பொருளின் விலை உயரும். மழை பொய்க்கும் பொழுது, அரிசி சரியாக சாகுபடியாகா விட்டால், அரிசி விலை உயரத் தானே செய்யும்.

இந்த நிலை தான் பணவீக்கம் எனப்படுகிறது. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் ?.

பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்களை முன்பு வாங்கியதை விட குறைவாகவே வாங்குவார்கள். இதனால் பணம் செலவழிக்கப்படாமல் போகும். பணப்புழக்கம் குறையும்.

பொருட்களை வாங்குபவர்கள் குறையும் பொழுது உற்பத்தி குறையும்.

உள்நாட்டு விலை உயர்வினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரும். அதனால் நம்முடைய உற்பத்தி பிற நாடுகளுடன் போட்டியிடமுடியாமல் நசுங்கிப் போகும். ஏற்றுமதியும் குறையும்.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலை கணக்கிடத்தான் பணவீக்க குறியீடு பல நாடுகளின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் இந்த பணவீக்க விகிதத்தை வெள்ளியன்று வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். எப்படி பங்குக் குறியீடு பங்குகளின் விலைக் குறியீடாக உள்ளதோ, அதைப் போன்றே விலைவாசி உயர்வுகளை கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும். இந்த குறியீடு தான் 7.38% மாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இது 7.1% மாக இருந்தது.

Wholesale Price Index மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய பொதுவான விலைவாசிக் குறியீடு.

- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படுகிறது.

- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு
- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)

இந்த பணவீக்க விகிதம் பங்குச்சந்தை முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் ?

பங்குச்சந்தை முதலீடுகளில், பணவீக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நீண்ட கால முதலீட்டில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியும் பணவீக்கம் உயர்வதற்கேற்ப உயரும் எனக் கருதப்படுகிறது. பணவீக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, பொருட்களின் விலை உயர்வால், ஒரு நிறுவனத்தின் மதிப்பும் அதிகமாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இது உண்மையான மதிப்பாகாது. பணவீக்கம் காரணமாக மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.

மோசமான பொருளாதார சூழ்நிலையில், பணவீக்கம் உயரும் பொழுது பங்கு முதலீடுகள் சுருங்கிப் போகலாம்.

நம்முடைய பொருளாதாரமும், பணவீக்கமும் எப்படி இருக்கிறது ?

பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரிப்பது கவலை அளித்தாலும் அச்சப்படும் விதத்தில் இல்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் செய்பவர்கள், இந்தப் பணவீக்க விகிதத்தின் மேல் கவனம் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது. சந்தையின் எதிர்பார்ப்பை விட பணவீக்கம் அதிகரிக்கும் பொழுது சந்தை சரியும். பணவீக்கம் குறையும் பொழுது சந்தை எகிறும்.

1 மறுமொழிகள்:

அன்பு said...

பணவீக்கம் பற்றி இதே போன்று அடிப்படை விளக்கம், முன்னொருமுறை பத்ரியோ/பிரகாஷோ கொடுத்திருந்தார்கள். உண்மையில் அன்றுதான் எனக்கு அதன் அர்த்தம் தெரியும். இன்று அதையும் மேம்படுத்தி, பங்குச்சந்தையில் அதன் பிரதிபலிப்பையும் சொல்லி விளக்கி இருக்கின்றீர்கள், நன்றி.

1:07 AM, November 26, 2004