பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, November 06, 2004

காளை வாரம்

இந்த வாரம் பங்குச்சந்தை காளைகளின் முழுமையான அதிக்கத்திலேயே இருந்தது. பல நல்ல செய்திகள் பங்கு வர்த்தகத்தை லாபமடைய வைத்தது. வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் புஷ்ஷின் வெற்றி, வங்கிகளில் அந்நிய முதலீடுப் பற்றிய நிதி அமைச்சரின் அறிவிப்பு, கச்சா எண்ணெய்யின் விலைக் குறைவு போன்றவையும், வார இறுதியில் பெட்ரோல் விலையேற்றம் மற்றும் NTPC பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட்தும் பங்குக் குறியீடுகளை உயரச் செய்துள்ளது.

எப்பொழுது ஏற்றப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடந்தேறி விட்டது. எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகளும் போராட்டத்தை அறிவித்து விட்டனர். உயர்வு அரசியலாக்கப்பட்டு விட்டது. வழக்கம் போல் ஜெயலலிதா, கருணாநிதியை குற்றம்சாட்டி இருக்கிறார். கருணாநிதியும் தன் பாணியில் விளக்கம் தந்திருக்கிறார்.

ஆனால் இந்த உயர்வு தவிர்க்க முடியாதது. கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
ஒரு பேரல் டாலர்40ல் இருந்து, 55ஐ எட்டி தற்பொழுது சற்று தணிந்து 50 டாலரில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விலையை ஏற்றினால் பணவீக்கம் அதிகரித்து விடக்கூடும் என்ற அச்சத்தில், கச்சா எண்ணெய் மீதான வரியை தளர்த்தி ஓரளவுக்கு அரசு நிலைமையை சமாளிக்க முயன்றது. ஆனால் நாட்டின் தேவையில் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவதால், வெளிநாட்டு விலைக்கெற்ப உள்நாட்டு விலையை ஏற்றாவிட்டால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சரிவு தான் ஏற்படும். ஏற்கனவே இந்த நிறுவனங்களின் லாபம் கடுமையாக சரிவடைந்துள்ளது. கடந்த காலாண்டு அறிக்கையிலேயே இது வெளிப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த விலையேற்றம் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை குறை சொல்ல முடியாது. அரசியல் காரணமாக சொல்பவர்கள் சொல்லி விட்டு போகட்டும்.

பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி சமையால் கியஸ் விலையும் எற்றப்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு சிலிண்டருக்கு ரூ20ம், ஒவ்வொரு மாதமும் ரூ5ம் மாக விலை ஏற்றம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ150க்கும் அதிகமான சலுகை விலையில் தான் சிலிண்டர்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உயர்வு கூட அரசின் சுமையை ஓரளவிற்கு குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தான்.

இந்த விலையேற்றத்தின் எதிரொலி வெள்ளியன்று பங்குச் சந்தையில் தெளிவாக தெரிந்தது. கச்சா எண்ணெய்யின் விலை எகிறும் போதெல்லாம் எண்ணெய் விற்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்து கொண்டேயிருக்கும். ஆனால் வெள்ளியன்று இந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. NSE பங்குச் சந்தையில் BPCLன் பங்குகள் 40ரூபாயும், HPCLன் பங்குகள் 20 ரூபாயும் எகிறியது.

கடந்த சில வாரங்களாக வங்கிப்பங்குகள் மீது யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ப.சிதம்பரம் வங்கித் துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தப்பிறகு வங்கிப் பங்குகளுக்கு ஏக கிராக்கி. 495 ரூபாயில் இருந்து சரிந்து 440ரூபாய்க்கு வந்து ஊசலாடிக் கொண்டிருந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பங்குகள் 498ஐ இந்த வாரம் தொட்டு நிற்கிறது. ICICI பங்கும் வெள்ளியன்று நல்ல லாபம் அடைந்தது. பொதுத்துறை வங்கிப் பங்குகளை விட ICICI, UTI போன்ற தனியார் வங்கிகள் அதிக லாபத்தை தரக் கூடும்.

சில வாரங்களாக வங்கிப் பங்குகளும், எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே இருந்தது. பெட்ரோல் விலை உயர்வும், வங்கிகளில் அந்நிய முதலீடு பற்றிய அறிவிப்பும் இந்தப் பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

NTPC நிறுவனத்தின் பங்குகள் வெள்ளியன்று பங்குச் சந்தையில் சேர்க்கப்பட்டது. மிக அதிக அளவில் நேற்று வர்த்தகம் செய்யப்பட்டதும் இந்தப் பங்கு தான். முதல் நாளிலேயே சுமார் 3661 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. ONGC, ரிலயன்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து மிக அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக NTPC இருக்கும். நேற்று வர்த்தக முடிவில் ரூ75ல் இருந்த இந்தப் பங்கு ஆறு முதல் ஒரு வருடத்தில் ரூ100ஐ தொடக்கூடும். IPO வில் குறைந்த பங்குகளைப் பெற்றவர்கள் இப்பொழுது இந்தப் பங்குகளை வாங்கலாம்.

0 மறுமொழிகள்: