பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, February 28, 2005

பட்ஜெட் 2005 - 1



பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

இன்று பட்ஜெட் வாசித்த ப.சிதம்பரம், இதேக் குறளுடன் தன் பட்ஜெட் உரையை முடித்து ஒரு நல்ல பட்ஜெட்டைக் கொடுத்தார். நகரம், கிராமம் என்று எல்லா விரிந்து பரந்திருக்கும் இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், துறைக்கும் பட்ஜெட்டில் சமமாக சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.



விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற முக்கியத் துறைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாக இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கிறது

எதிர்பார்த்தது போலவே வரி விதிப்பில் நிறைய மாறுதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறைகளான ஜவுளி, பார்மா, மென்பொருள் போன்ற துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், ஜவுளித் துறைக்கு ஏரளமானச் சலுகைகளை அறிவித்தார்.

பார்மா துறையில் ஆய்வுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர சர்க்கரை ஆலைகள், கிராமப்புற நெசவுத் தொழில் போன்றவற்றுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளார்.

நாட்டில் 3ல் 2 பங்கு மக்கள் இருக்கும் விவசாயம் நாட்டின் GDPல் வெறும் 21% மட்டுமே இருப்பதால் விவசாயத்திற்கும், கிராமப் புற வளர்ச்சிக்கும் பட்ஜெட்டில் ஏராளமானச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

1.25 லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம்

66,820 கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள்

கிராமப்புற மக்களுக்கு 60 லட்சம் புதிய வீடுகள்

சுமார் 1 கோடி எக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி

கடந்தப் பட்ஜெட்டில் வருமான வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது கல்விக்கு பயன்படுத்தியது போல இந்தப் பட்ஜெட்டில் சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு கேடு செய்யும் பொருட்களின் வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது சுகாதாரத் துறைக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் பீடிக்கு செஸ் கிடையாது என்ற பொழுது பாராளுமன்றத்தில் ஒரே சிரிப்பலை

இது தவிர பெட்ரோல், டீசல் போன்றவற்றிலும் செஸ் விதிக்கப்பட்டு அது நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

குடிநீர் வசதிக்காக 4,750 கோடி செலவிடப்படும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக 83,000 கோடி ஒதுக்கப்படுகிறது

கல்விக்காக 18,337 கோடி ஒதுக்கப்படும். SC/ST மாணவர்களுக்கு கல்விச் செலவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிக்கத்து வங்கியதில் இருந்து அவை மிக அமைதியாக இருந்தாலும், இறுதியில் ஒரே கூச்சலுக்கிடையே தான் பட்ஜெட்டை முடித்தார்.

அதற்கு காரணம், வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு 10 ரூபாய் வரிச் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை தான்.

தேவையில்லாமல் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, வரிச் செலுத்தப்படாமல் நழுவி எங்கோ மறைந்து போய் விடுவதால் இந்த நடவடிக்கை என்று நிதியமைச்சர் கூறியதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இது கறுப்பு பணம், மற்றும் வரி ஏய்ப்பவர்கள் மீதான நடவடிக்கை என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
10,000 என்பது பெரிய தொகை இல்லை. வீட்டு வாடகை, பிறச் செலவுகளுக்காக மாதம் தோறும் பல குடும்பங்களுக்கு இந்தளவுக்கு ஒரே நாளில் பணம் தேவைப்படலாம். 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் என்ற வரி குறைவு தான் என்றாலும், ஏற்கனவே வருமான வரி செலுத்தியப் பிறகு வரும் தொகைக்கு நான் ஏன் மறுபடியும் வரிச் செலுத்த வேண்டும். இதில் எந்தவித லாஜிக்கும் இல்லை.

கறுப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பவர்களை நோக்கித் தான் இந்த முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றால் பணத்தின் உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது வேறு மாதிரியான ஒரு முறைக் கொண்டு வரப்பட வேண்டும்.

பட்ஜெட்டை எதிர்ப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருந்த எதிர்கட்சிகளுக்கு ஒரு காரணம் கிடைத்து விட, ஒரே கூச்சல் தான்.

பட்ஜெட் பற்றிய கண்ணேட்டம் அடுத்தப் பதிவிலும் தொடரும்

4 மறுமொழிகள்:

இராதாகிருஷ்ணன் said...

//வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு 10 ரூபாய் வரிச் செலுத்த வேண்டும்// இதுதான் எதற்கென்று புரியவில்லை. பொதுமக்கள் பெரும்பாலோர் இதை எதிர்க்கக்கூடுமாதலால், அரசு இவ்வறிவிப்பை ஒருவேளை திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூடும்; பெற்றுக்கொள்ளவேண்டுமென்பேன்.

12:44 PM, February 28, 2005
Anonymous said...

நேற்று நான் என் நிகழ்ச்சியில் சொன்னேன்: இந்தியாவிற்குள் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன.நாள்முழுஅவதையும் கணினிக்கு முன் அமர்ந்து வேலை செய்ய்பவர்கள் இருக்கிறார்கள். வாழ்நாளில் கணினியயே காணாதவர்களும் இருக்கிறார்கள். ஒரு வேளை காபிக்கு 40 ரூபாய் கொடுக்கிறவ்வர்கள் இருக்கிறார்கள். அந்த 40 ரூபாயை சம்பாதிக்க ஒருநாள் முழுக்க உழைக்க வேண்டியவர்களும் இருக்கிறார்கள். நோபல், புக்கர், புலிட்சர் என்று எழுத்துலகில் என்னவெல்லாம் பரிசுகள் உண்டோ அவற்றையெல்லாம் இந்தியர்கள் வென்றிருக்கிறார்கள். தன் பெயரைக் கூட எழுதத் தெரியாவர்கள் இருக்கிறார்கள்.ஒரு தலைவலிக்கு உடல்முழுவதும் நகரங்களில் ஸ்கேன் செய்து பார்த்துவிடக் க்குடிய வசதிகள் இருக்கின்றன.உயிருக்குப் போராடும் போது கூட உதவி கிடைக்காத கிராமங்கள் இருக்கின்றன.இந்தியாவிற்குள் இரண்டு இந்தியா ருக்க்கிறது.
இந்த கிராமப்புற இந்தியாவை இந்த பட்ஜெட் கனவுகள் நிறைவேறினால் கை தூக்கி விடலாம். ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைக்குமா? அதுதான் என் கவலை

10:27 PM, February 28, 2005
Anonymous said...

என் பெயர் உங்கள் பதிவுக்குப்பிடிக்கவில்லை போலும்!:-) மேலே உள்ள பதிவை இட்டவன் நாந்தான். என்னை அனாமதேயமாக்கிவிட்டது!

10:30 PM, February 28, 2005
Anonymous said...

சாதாரண மக்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். "ஒரேநாளில்" பத்தாயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் தான் வரி.. திட்டமிட்டு செலவு செயய் , பணத்ததை கையாள இந்தியர்க்கு இது உதவும். மேலும் ஊழல், கூலிப்படைக்கு தர, கருப்புப் பணம் இதற்குத் தான் இது சிக்கலான விதிமுறை. இது தான் இதில் உள்ள சிதம்பர ரகசியம்

12:06 AM, March 01, 2005