பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

Budget 2006 - Short comment

உள்கட்டமைப்பிற்கு ஊக்குவிப்பு, நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சி, வரி விதிப்பில் மாறுதல், Populist அறிவிப்புகள் என ஒரு கூட்டுக்கலவையாக சிதம்பரம் இந்த ஆண்டின் பட்ஜெட்டினை அளித்திருக்கிறார்.

நல்ல பட்ஜெட், ஆனால் ஆச்சரியங்கள் எதுவும் இல்லை மேலும் படிக்க

லாலு, சிதம்பரம், பட்ஜெட் மசாலா

அடுத்த பட்ஜெட் சீசன் தொடங்கி விட்டது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என்று பிப்ரவரி இறுதி வந்தாலே முதளிட்டாளர்கள் மத்தியிலும், வியபாரிகள் தொடங்கி பெரிய கார்ப்ரேட் நிறுவனம் வரை ஒரே பரபரப்பாக இருக்கும். பட்ஜெட் குறித்த அலசல்கள், நிதியமைச்சரின் திட்டங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, பங்குச்சந்தையில் அது ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகள் போன்றவை அலசப்படும். ஆனால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, எந்தளவிற்கு முழுமையாக நிறைவேற்றப்படுகின்றன என்பதை பற்றி யாராவது அலசுகிறார்களா என்பது தெரியவில்லை. நிதியமைச்சர் அறிவிக்கும் சில திட்டங்கள் நிறைவேற்றப்படாமலே காணாமல் போய் விடுகின்றன.

இந்தியாவின் பட்ஜெட் உலகின் பல நாடுகளில் இருக்கும் நிதி நிறுவனங்களால் கவனிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகப்படியான விளம்பரம் பட்ஜெட்டிற்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த அதிகப்படியான விளம்பரம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே போய் விட்டது. பட்ஜெட் குறித்து ஜோசியர்களிடம் கருத்து கேட்கிறார்களாம், என்னத்தச் சொல்ல

பட்ஜெட் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு எதிர்பார்ப்பு இயல்பாக என்னுள் எழுந்து விடும். இதற்கு இந்தியாவின் வணிக ஊடகங்களிலும், ஆங்கில ஊடகங்களிலும் கொடுக்கப்படும் விளம்பரமும் முக்கிய காரணம். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் இல்லாததால் இந்திய ஊடகங்களின் இந்த விளம்பரம் என்னை எட்டாததால், ஒரு சிறு ஆர்வம் மட்டுமே உள்ளது.

பட்ஜெட்டிற்கும் எனக்குமான அறிமுகம் சிறு வயதிலேயே தொடங்கி விட்டது என்று சொல்லலாம். பட்ஜெட் நெருங்கும் சமயத்தில் சில பொருட்களை என் அப்பா எங்களுடைய கடையில் அதிகமாக வாங்கி வைக்கத் தொடங்குவார். உதாரணமாக சிகரெட். அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சிகரெட் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கும். பட்ஜெட் வரப் போவுது, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று எங்கள் கடைக்கு சப்ளை செய்யும் சப்ளையர்கள் சொல்வதை கடையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் நேரத்தில் கவனித்து இருக்கிறேன். எப்பொழுது பட்ஜெட் போடுவார்கள், அது பற்றி செய்திகளின் என்ன வாசிக்கிறார்கள், சிகரெட் விலை ஏறியிருக்கிறதா என்பதை கவனித்து ஓடிப்போய் அப்பாவிடம் சிகரெட் விலை ஏறியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இத்தகைய ஆர்வத்துடன் தான் பட்ஜெட் குறித்த செய்திகளை கவனிக்கத் தொடங்கினேன். பட்ஜெட் இரவு செய்திகளை நிச்சயமாக பார்த்து விடுவேன். மறுநாள் இந்துவில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை படித்து விடுவேன். பல விஷயங்கள் புரியாது. இருந்தாலும் ஒரு ஆர்வத்துடன் படிப்பேன். நாங்கள் முதன் முதலில் தொலைக்காட்சி பெட்டி வாங்கிய பொழுது பட்ஜெட்டிற்கு முன்பாக வாங்க வேண்டும் என்று கூறி என் அப்பா வாங்கியதும் ஞாபகத்தில் இருக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகு நாங்கள் வாங்கிய அதே தொலைக்காட்சிப் பெட்டி கொஞ்சம் விலையேறியதையும் கவனித்து என் அப்பாவிடம் கூறி இருக்கிறேன்.

ஒரு விஷயத்தை கவனிக்கலாம். பட்ஜெட் என்பது விலையேற்றத்திற்கான ஒரு வருடந்திர ஏற்பாடு என்பதாகத் தான் பல காலங்களாக இருந்து வந்திருக்கிறது. புதிய வரி விதிப்புகள், பொருட்களின் விலையில் மாற்றம் என்பது தான் பட்ஜெட்களின் நியதியாக இருந்துள்ளது. சிறுக சிறுக உயர்த்துப்படும் வரியில் இருந்து மாற்றம் பெற்று பொருளாதாரத்தை மாற்றும் திட்டங்களின் வடிவமாக பட்ஜெட் மாறியது 1991க்குப் பிறகு தான். மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை கொண்டு வந்தப் பின்பு தான் பட்ஜெட் தயாரிக்கும் முறையில் பல மாறுதல்களும் ஏற்ப்பட்டன. இந்தியாவின் Dream பட்ஜெட்டாக சிதம்பரத்தின் பட்ஜெட்டை கூறும் அதே நேரத்தில் இந்தியாவின் மோசமான பட்ஜெட்களில் ஒன்றாக மது தண்டவதேயின் பட்ஜெட்டை சொல்வார்கள். அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்துவதற்காக மிக அதிக அளவில் வரி விதிக்கப்பட்ட பட்ஜெட்டாக அது கூறப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பில் இன்று பல்வேறு நிர்பந்தங்களும், அரசியல் தொந்தரவுகளும், கூட்டணி நிர்ப்பந்தங்களும் எழவே செய்கின்றன. பட்ஜெட் என்பது ஒரு "populist" அறிவிப்பாக இருந்தாக வேண்டும். அதுவும் இன்று மைய அரசில் கூட்டாச்சி முறை வந்துள்ள நேரத்தில் பல துறைகள் பல்வேறு கூட்டணி கட்சிகளின் வசமுள்ள சூழ்நிலையில் தங்கள் மாநிலத்திற்கு ஓதுக்கீடுகளை பட்ஜெட்டில் கொண்டு வரவேண்டும் என்ற நிர்பந்தம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. இவர்கள் நிதியமைச்சர்களை நிர்பந்திக்கின்றனர். இவர்கள் ஒருபுறம் என்றால் பட்ஜெட்டில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென பொருளாதார வல்லுனர்களும், தொழில்துறையினரும் நிதியமைச்சரை மற்றொரு புறம் நிர்பந்திக்கின்றனர். இவை தவிர தன்னுடைய அரசாங்கம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்த வேண்டிய பிரதமர் மற்றும் ஆளும்கட்சியின் கொள்கைகள் இவற்றிடையே சிக்கித் தவித்து பட்ஜெட் இறுதியில் வெளிவரும் பொழுது ஒரு "கூட்டக்கலவையான மசாலாவாக" வந்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்தும் பட்ஜெட்டாக எல்லோரின் நோக்கங்களிலும் சிறிதளவாவது நிறைவேறினால் போதுமானது என்று நினைக்கும் நிலைக்கு இன்று பட்ஜெட் சென்று விட்டது.


கடந்த வாரம் தக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் சரக்கு கட்டணங்களில் உயர்வில்லாமலும், சிலவற்றில் வரி குறைக்கப்பட்டும் இருக்கும் அதே நேரத்தில் பயணிகள் கட்டணங்களிலும் உயர்வு இல்லை. தொழில் நிறுவனங்களுக்கும், பொதுஜனங்களுக்கும் சலுகை என்னும் பொழுது இது நல்ல பட்ஜெட் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. தற்பொழுது சரக்குகள் நத்தை வேகத்தில் செல்லும் நிலையை மாற்ற அதிவேக சரக்கு போக்குவரத்தை துவங்க தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கப்போவதாக லாலு அறிவிக்கிறார். தனியார் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி. பொதுத்துறை நிறுவனங்களின் சில பிரிவுகளை தனியார் மயமாக்குவதை பொருளாதார சீர்திருத்தமாக அந் நிறுவனங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் சலுகை என்பதான லாலுவின் டிரேட் மார்க் populist அறிவிப்பு அவருக்கும் அவரைச் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்புறம் ரயில்வே நிலையங்களில் Internet cafe, ATM, எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா என ஒரே கவர்ச்சிகரமான அறிவிப்புகள். இதனை ஒரு Balanced Budget என்று ஊடகங்கள் எழுதுகின்றன. ஆனால் இன்னும் எத்தனையோ நல்ல முயற்சிகளை எடுக்கலாம். ஆனாலும் எடுக்க முடியாத நிலையில் தான் இன்றைய அரசியல் சூழ்நிலை உள்ளது.

இனி இந்த சீசனின் உச்சகட்ட க்ளைமாக்ஸ் பொது பட்ஜெட் செவ்வாயன்று அரங்கேறும். ரயில்வே பட்ஜெட் ஒரு சின்ன மசாலா கலவை என்றால் இது பெரிய அளவிளான மசாலா கலவை. பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஒரு யாதார்த்தமான அணுகுமுறையை கையாள வேண்டுமென சிதம்பரம் கடந்த பட்ஜெட்டில் இடதுசாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இன்னும் அது வேண்டுகோளாகத் தான் இருக்கிறது. அவர்களுக்கும் யதார்த்தம் புரிந்ததாக தெரியவில்லை, அரசுக்கும் அதனை செயல்படுத்தி ஆட்சியை இழக்கும் தைரியம் இல்லை. இன்று பட்ஜெட் தயாரிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்று நமக்கு புரிகிற அதே நேரத்தில் அதனையே கூறிக்கொண்டிருப்பதும் அர்த்தமற்றவை.


இன்று சிதம்பரமாக இருந்தாலும், வேறு எந்தக் கூட்டணியின் நிதியமைச்சராக இருந்தாலும் "out of the box"ஆக சிந்தித்து புதிய வரிவிதிப்புகளை கொண்டு வந்து அரசுக்கு வருமானத்தையும், சாதாரண மக்களுக்கான Populist அறிவிப்புகளையும் வெளியிட்டாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். சீர்திருத்தங்கள் மூலமாக நிதி வருவாயை அதிகரிக்கலாம் என்றாலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது போன்றவை குறித்தெல்லாம் தற்போதைய அரசு அதிகம் பேச முடியாது. இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி எதையும் செய்து விட முடியாது. இந் நிலையில் புதிய வரி விதிப்பு சிந்தனைகளை கொண்டு வந்தால் தான் தொழில்துறையை அதிகம் பாதிக்காமலும், நடுத்தர வர்க்க மக்களின் வெறுப்பை எதிர்கொள்ளாமலும், சாதாரண மக்களுக்கான Populist அறிவிப்புகளை வெளியிடமுடியும். அப்படித் தான் கடந்த முறை "10,000" ரூபாய்க்கான வரியும், Fringe Benefits வரியும் கொண்டு வரப்பட்டது. இத்தகைய வரிகள் யாரையும் அதிகம் பாதிக்க வில்லை. அதே நேரத்தில் அரசுக்கு வருமானத்தையும் கொண்டு வந்தது. கடந்த முறை பிரேசில் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 10,000 ரூபாய்க்கான வரி போல இம்முறை அவர் எந்தப் புதிய வரியை கொண்டு வரப்போகிறார் என்பது அதிகம் கவனிக்கப்படும்.


புதிய வரி விதிப்புகள் குறித்து சிதம்பரம் பொருளாதார நிபுணர்களுடன் பிற நாடுகளின் முறைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மிக அதிக அளவிளான வருவாயை அரசுக்கு பெற்று தரவே செய்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பொருளாதாரம் ஆண்டுக்கு சுமார் 8% வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் 75% இருக்கும் தொழில் துறை, சர்வீஸ் துறை போன்றவை நல்ல வளர்ச்சியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் அரசின் வருவாயில் சுமார் 13% பல்வேறு மானியங்களுக்கும், சுமார் 22% அரசு செலுத்த வேண்டிய வட்டிகளுக்கும், 14% பாதுகாப்புச் செலவீனங்களுக்கும் சென்று விடுகிறது. இது போக எஞ்சியவை மாநிலங்களுக்கு மானியமாகவும், அரசின் பிற முக்கியமான திட்டங்களுக்கு செல்கிறது என மார்கன் ஸ்டேன்லி கூறுகிறது. இது மிகவும் குறைவு என்றும் உள்கட்டமைப்புக்கு அதிக ஒதுக்கீடு இல்லை என்பதும் பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு.

நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், இந்தப் பட்ஜெட்டில் பெரிய சீர்திருத்தங்கள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பில் அரசு அதிகளவில் முதலீடு செய்வது குறித்தும், நிதிப் பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 4%மாக (Fiscal deficit at 4% of GDP) சிதம்பரம் எப்படி கொண்டு வரப்போகிறார் என்பது குறித்தும் தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறந்த சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளும், கல்வி, சுகாதாரம் போன்றவையும் மிகவும் முக்கியமானவை. அரசு இதற்கு எந்தளவுக்கு செலவிடப்போகிறது என்பது கவனிக்கப்படும். சீனாவுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் மின்சாரம் இருமடங்கு அதிக விலையில் இருப்பதாகவும், துறைமுகங்களில் பொருள்களை ஏற்றுவதும், இறக்குவதற்குமான நடைமுறைகள் மிக மோசமாக இருப்பதாகவும் bloomberg தெரிவிக்கிறது. விமான நிலையங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. அதன் லட்சணம் எல்லோருக்கும் தெரியும். இதனை சரி செய்ய அரசு எத்தகைய திட்டங்களைக் கொண்டு வரப் போகிறது என்பதும் தொழில் துறை எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று. இதைத் தவிர வேறு எதையாவது கூறி சிதம்பரம் நம்மை வியப்பில் ஆழ்த்துவாரா என்று தெரியவில்லை.

சிதம்பரம், Balanced but slightly populist பட்ஜெட்டை கொடுக்கப் போகிறார் என்றே நான் நினைக்கிறேன். மேலும் படிக்க

நேற்று - பத்தாயிரம், நாளை ???



நன்றி : Economic Times



மேலும் படிக்க

இந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்

இந்திய மென்பொருள் சேவைத் துறையின் ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக ஆரோக்கியமாக இருந்தன. உண்மையில் மென்பொருள் சேவை அளிக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் மற்றும் வர்த்தகம் சக்கைப் போடு போட்டன.

மழை தொடர்ந்து பெய்தால் அங்கங்கே நூற்றுக் கணக்கில் முளைக்கும் காட்டுக் காளான்கள் போல அந்தச் சமயத்தில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நோக்கத்தில், மென்பொருள் சேவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், பெயரில் மட்டுமே 'இன்·போடெக்', 'இன்·போஸிஸ்' என்று இணைப்புச் சேர்த்துக் கொண்டு, ஏமாறக் காத்திருந்த பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய பேர்வழிகள் ஏராளம்.

செபி (SEBI) நிறுவனமும், இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு
  • முதலீட்டாளர்களுக்குக் களை எது பயிர் எது என்று அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
  • பங்குச் சந்தை வர்த்தக முறைகளை மேம்படுத்துவது, மற்றும்
  • நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவது
என்று நல்ல காரியம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இருந்தும் இந்தியப் பங்குச் சந்தை முறைகளில் இன்னமும் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளன. ஆகப் பெரிய ஓட்டை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

மண்டபத்தில் யாராவது சொல்லி செபிக்குத் தெரிந்ததா அல்லது அவர்களே கண்டு பிடித்தார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்டு பிடித்து விட்டார்கள். எப்படியோ செபி கண்கொத்திப் பாம்பாகச் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து முறைப் படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. பாராட்ட வேண்டியதுதான்.

காகிதப் பங்கு பத்திரங்கள் முறை வழக்கொழிந்து மின் பங்குகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. இதனால் பல முறைகேடுகள் ஒழிந்து விட்டன. இருந்தும் சமீபத்தில் இந்தியாவில் பல மின் பங்கு வைப்புக் கணக்குகளை (depository account) ஒருவரே பினாமி பெயர்களில் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வநதுள்ளது.

பங்கு வைப்புக் கணக்குகளை நடத்தும் நிறுவனங்கள் (Depository Participants) புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது வைப்பாளரின் அடையாளத்தை சந்தேகமறப் பெற வேண்டியது அவர்களின் முதன்மைப் பொறுப்பு. பினாமி கணக்குகள் ஏற்படுத்த முடியாமல் தடுக்க செபி இந்தப் பொறுப்புக்களையும், அவற்றிலிந்து தவறினால் கடும் விளைவுகளை DP நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கடும் எச்சரிக்கைகளையும் அறிவித்திருந்த போதும் இந்தக் கதி.

மிகப் பெயர் போன DP நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூட இந்தப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளன. ஒருவர் யெஸ் (Yes) வங்கியின் பங்குகளை முதன்மைச் சந்தையில் மிக அதிக அளவில் யாருக்கும் சந்தேகம் வராமல் வாங்கும் நோக்கத்தில் பல பினாமி கணக்குகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றியும் உள்ளார்.

அவர் எத்தனை கணக்குகள் ஏற்படுத்தினார் தெரியுமா? இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள்! இவர் வில்லாதி வில்லனென்றால், இவருக்குத் தம்பி ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய பினாமி கணக்குகள் சுமார் ஆயிரத்து ஐநூறு.

மனிதர் வாங்கிய பங்குகளை சந்தை அல்லாத வர்த்தகத்தில் (off market transaction) விற்ற கொஞ்ச நாளில் செபிக்கு எப்படியோ ஊசல் வாடை எட்டி விட்டது. மாட்டிக் கொண்டார் பாவம். கூடச் சேர்ந்து மாட்டிக் கொண்டிருக்கும் DP நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்புகளிலிருந்து தவறியதால் மாட்டிக் கொண்டனவா அல்லது திருட்டில் கூட்டாளிகளா என்பது இன்னமும் தெரியவில்லை. ஒரே ஆளுக்கு ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் என்றால் சந்தேகம் பலமாகதான் வருகிறது.

பலர் முதன்மைச் சந்தையில் பங்குகள் வாங்கி அவை சந்தையில் பட்டியலிடப் பட்டதும் அதிக விலையில் விற்று குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் ஆசையில் ஆழம் தெரியாமல் இந்த மாதிரிப் புதை சேறுகளில் காலை விட்டு விடுகிறார்கள். நான் தரமானவை என்று கருதும் பங்குகளில் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்வதால் முதன்மைச் சந்தை பக்கம் போவதேயில்லை.

வங்கிகள் தத்தம் முதலீடுகளை அதிகரிக்க பங்குச் சந்தையைக் கூடிய விரைவில் நாடக் கூடும். 2007 ஆண்டு வாக்கில் இந்திய வங்கிகள் BASEL II விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும். பொருளாதாரம் போகும் வேகத்தில், இந்திய வங்கிகள் துறை அபரிமிதமான் வளர்ச்சியைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றிப் பணம் பண்ணக் கூடிய விஷமிகளைக் கண்டறியக் கூடிய விழிப்பு முதலீட்டாளர்களிடம் வேண்டும் மேலும் படிக்க

வால்மார்ட் - என்ன பிரச்சனை ? - 2



சென்னையிலும், பெங்ளூரிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பெருகி வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவை கொடுக்கும் ஊதியம் போன்றவை சில நேரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு சமன்பாடு இல்லாத நம் சமுதாயத்தில் இந்த நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துவதாகவே எனக்கு தோன்றும். அரசு நிறுவனங்களிலும், பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை விட பல மடங்கு அதிக சம்பளத்தை மென்பொருள் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 30வயதிற்கும் உட்பட்ட இளைஞர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களைச் சார்ந்த, இவர்களைக் குறிவைத்து இயங்கும் பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உதாரணமாக உல்லாச கேளிக்கை இடங்கள். நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து, பேஷன் ஷோ வரை எங்களைப் போன்றவர்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயங்கள் ஒரு பகுதி சமுதாயத்திற்கு அந்நியமாக தோன்றுகிறது. பொருளாதர ரீதியில் ஒரு வீட்டுக் கடன் பெறும் பொழுது கூட எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை, முக்கியத்துவம் பிறருக்கு கிடைப்பதில்லை. இதுவெல்லாம் ஏற்கனவே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது போல தான் தோன்றுகிறது.

இன்று ஏதோ ஒரு டிகிரியுடன் நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே ஒரு நல்ல வேலையில் நுழைந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையில் என்ன செய்கிறோம், ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கும். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவிற்கு வருகின்றன வேலைகளில் 50%-70% வேலைகள் Production Support /Maintenance வேலைகள் தான். சமீபத்தில் ABN AMRO நிறுவனம் இன்போசிஸ் மற்றும் TCS நிறுவனங்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வேலைகளை கொடுத்தது. இதில் பெரும்பாலான வேலைகள் Production Support /Maintenance தான். இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mechanical Engineer) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Copy-paste செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் உள்ள பிற துறைகளில் நல்ல சம்பளம் இல்லை. ஏனெனில் outsourcing இந்த துறைகளில் குறைவாகவே உள்ளது அல்லது கொஞ்சமும் இல்லை.

ஒரு பிரிவினர் நிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருக்க கொஞ்சமாக படிப்பறிவு உள்ள semi-skilled or unskilled ஊழியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். மிகக் குறைந்த சம்பளம் தான். பணியும் கடினம். அவர்களுக்கு அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும். வேறு வழி கிடையாது.

மற்றொரு பிரிவினர் இருக்கின்றனர். எந்த வேலையும் கிடைக்காமல் சிலர் ஆட்டோ ஓட்டுகின்றனர். சிலர் டூ வீலர்களில் பொருள்களை பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள், தள்ளு வண்டிகளிலும், பிளாட்பாரங்களிலும் வியபாரம் செய்யும் சிலர் இப்படி ஒரு மிகப் பெரிய கூட்டம் தன் அன்றாட தேவைகளுக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

படித்தும் வேலை கிடைக்காத நிறையப் பேரை பார்த்திருக்கிறேன். கல்லூரியில் டிகிரி முடித்து விட்டு ஆட்டோ ஓட்டுபவர்களையும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் காவலர்களாக வேலை செய்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாதவர்கள் எங்கோ மூலை முடுக்குகளில் சின்ன கடை வைத்துக் கொள்வார்கள்.

"எங்கள் காலத்தில் இருந்தது போல் இன்று மளிகைக் கடையை வைத்து பணமெல்லாம் பெரிதாக சம்பாதித்து விட முடியாது. ஏதோ காலத்தை ஓட்டலாம்" என்று என் அப்பா சொல்வார். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கடைத் தெருவில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. இன்று மூலை முடுக்கெல்லாம், திரும்பிய பக்கமெல்லாம் கடைகள் தான். தெருவுக்கு தெரு குட்டிக் கடைகள் முளைத்து விட்டன.

இது எதனால் ஏற்பட்டது ? இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் ? இதனைச் செய்து தான் தீர வேண்டுமா ?

நல்ல வேலைவாய்ப்பு இருந்தால் இந்த வேலை இவர்களுக்கு தேவையில்லை தான். தற்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை ஒரு நிர்பந்தம் காரணமாக எழுவது. அவர்களுக்கு அதை செய்வதில் ஆர்வமோ, உடன்பாடோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனாலும் செய்து தான் தீர வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட முடியும்.

இந்தியா போன்ற மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நாட்டில் அரசாங்கமோ, இங்கிருக்கும் தனியார் நிறுவனங்களோ மட்டுமே வேலைவாய்ப்பை பெருக்கி கொடுத்து விட முடியாது. இவ்வளவு மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய நிறுவனங்களோ, மூலதனமோ இந்தியாவில் அதிகம் இல்லை.

கடந்த நிதி நிலை அறிக்கையில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. இது போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கைகளிலும் வரும். அதனைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அரசாங்கம் எப்படி இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் ? எங்கிருந்து பணம் வரும் ? எல்லாமே Populist அறிவிப்புகள். கூட்டணி கட்சிகளை/ஓட்டு வங்கிகளை திருப்தி படுத்தும் நடவடிக்கைகள். இது வரை அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டதென தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைக்களுக்கு என்ன தான் தீர்வு ஏற்பட முடியும் ?

வால்மார்ட், k-Mart/Sears, Target போன்ற நிறுவனங்களை இந்தியாவில் திறக்க அனுமதிப்பது முழுமையான தீர்வாகும் என்று சொல்லமுடியா விட்டாலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

எப்படி ?

வால்மார்ட் ஏதோ மளிகை சாமான்களை விற்கும் நிறுவனம் என்றோ, இருக்கின்ற மளிகைக் கடைகளை காலி செய்து விட்டு பணத்தை அள்ளிக் கொண்டு அமெரிக்காவிற்கு பறந்து விடும் என்றோ கூறப்படும் வாதங்கள் அர்த்தமற்றவை. வால்மார்ட் போன்ற நிறுவனங்களால் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை (Trade deficit) தற்பொழுது சுமார் 150பில்லியன் டாலர்கள். 1989ல் இது சுமார் 6பில்லியனாக இருந்தது. அடுத்து வந்த 14ஆண்டுகளில் இது பல மடங்கு உயர்ந்து 2003ல் 124 பில்லியனை எட்டியது. 2004ல் மற்றொரு 20% உயர்ந்து 150பில்லியன் டாலர்களை எட்டியது என அமெரிக்க அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

இது கூறும் தகவல்கள் என்ன ?

சீனாவின் ஏற்றுமதி மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது

இதற்கு முக்கிய காரணம் வால்மார்ட் போன்ற ரீடையல் நிறுவனங்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் அது உண்மை.

பொருளாதாரத்தில் Push, Pull என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. Push என்பது Manufacturing நிறுவனங்கள் தாங்கள் எந்தப் பொருள்களை உற்பத்திச் செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்து சந்தைக்கு அனுப்பும் முறை. இது தான் ஆரம்ப காலங்களில் - 1980 வரை வழக்கில் இருந்த முறை

Pull என்பது, ரீடையல் நிறுவனங்கள் சந்தையில் என்ன பொருள் விற்கும், எவ்வளவு விற்கும், அதற்கு பயனீட்டாளர்கள் என்ன விலை கொடுப்பார்கள், என்ன தரத்தில் அதனை எதிர்பார்ப்பார்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது.

இந்த Pull முறையைக் கொண்டு வந்து அமெரிக்கச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ரீடைல் நிறுவனங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக வால்மார்ட் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனா - அமெரிக்க Trade deficitல் வால்மார்ட்டின் பங்கு சுமார் 10% என்பதில் இருந்து வால்மார்ட் ஏற்படுத்திய தாக்கம் நமக்கு புரியும்.

வால்மார்டின் தாரக மந்திரம் ஒன்றே ஒன்று தான் - குறைந்த விலை




அமெரிக்காவெங்கிலும் இருக்கும் தன் கிளைகளுக்கு வால்மார்ட் மிகக் குறைந்த விலைக்கு பொருள்களை சீனாவில் இருந்து பெற்று வரும். அமெரிக்காவில் இருக்கும் தன் கிளைகளுக்கு சீனாவில் உற்பத்திச் செய்யும் பொருள்களை இறக்குமதி செய்யும். இதனால் சீனாவில் Manufacturing நிறுவனங்களின் வளர்ச்சி அதிகளவில் உயர்ந்தது. சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே சென்றது.

அமெரிக்காவில் செய்யப்பட்ட பல பொருள்களின் விலை அதிகமானதால் சீண்டுவார் இல்லாமல் போயின. அமெரிக்க Manufacturing நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. சுமார் 1.5மில்லியன் வேலைகளை அமெரிக்கர்கள் இழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் இழந்த வேலைகள் சீனாவிற்கு சென்றன. சீனாவில் பல வேலைவாய்ப்புகள் உருவாகின. சீனாவின் பொருளாதாரமும் Manufacturing மூலம் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டது.


இந்த மாற்றங்களை வால்மார்ட் எப்படி ஏற்படுத்தியது ? சீனாவிற்கு ஏற்பட்ட இது போன்ற மாற்றங்கள் இந்தியாவிலும் ஏற்பட முடியுமா ?

அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

மேலும் படிக்க

WALMART - என்ன பிரச்சனை ? - 1



சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

மேலும் படிக்க... மேலும் படிக்க