பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Friday, November 26, 2004

முதலீட்டின் முதல் படி : ஆராய்தல்

அனலிஸ்டுகள், நம்மைக் குழப்புவது பற்றிப் பார்த்தோம்.

அவர்களைப் பற்றி இப்படி கூட கிண்டல் செய்வார்கள்.

வானிலை அறிவிப்பிற்கும், அனலிஸ்டுகளின் பங்குச் சந்தை அறிவிப்பிற்கும் என்ன ஒற்றுமை ?
இவர்கள் இருவரும் எது நடக்கும் என்று சொல்கிறார்களோ, அது நடக்காது.
நடக்காது என்று சொன்னால் நடந்து விடும்.

பல நேரங்களில் நாம் பிறர் சொல்வதைக் காது கொடுத்து கேட்பதே இல்லை. அது நமது தொட்டில் பழக்கமாகி விட்டது. அப்பா சொல்லி எதுவும் செய்யக்கூடாது என்ற முடிவில் சின்ன வயதில் இருந்தே திடமாக இருப்பதால், அந்தப் பழக்கம் பள்ளி, அலுவலகம் என்று தொடருகிறது. நாமே பல விடயங்களில் சிந்தித்து முடிவெடுக்கிறோம். பலருக்கு சிந்தனை செய்தே மண்டையில் கிரிக்கெட் பிட்சுகள் உருவாகி விடுகிறது.

பணம் என்று வந்து விட்டால், நிச்சயமாக மிக அதிகமாக சிந்திக்கிறோம். யாரோ சொல்வதைக் கேட்டு, வீட்டு கடன் வாங்குவதில்லை. என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என பல வருடங்கள் வாடகை வீட்டிலேயே இருந்து விட்டு, நாம் செட்டில் ஆன நினைப்பு வந்தவுடன் தான் வீடு வாங்குவதைப் பற்றி யோசிக்கிறோம். நான் கூட என்னுடைய ஆரம்ப கால சம்பாத்தியத்தை இப்படித் தான் யார் சொல்லியும் கேட்காமல் வீணாக்கினேன். வீடு ஒரு நீண்ட கால கடன். இந்த நீண்ட காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்லியே சில வருடங்கள் ஓடிப் போய் விட்டது. ஆரம்பத்திலேயே யோசித்திருந்தால் இந்நேரம் வீடு எனக்கு சொந்தமாகியிருக்கும். ஆனாலும் பாதகமில்லை. எனக்கு எது சரியென்று பட்டதோ அதையே செய்திருக்கிறேன். என்னுடைய பல நண்பர்களும் அப்படித் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய நெருங்கிய கல்லூரி நண்பன் ஒருவனிடம் பல ஆண்டுகளாக வீடு வாங்கு, வீட்டு வாடகை மிச்சம், வருமானவரி குறையும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் கேட்கவில்லை. இன்றும் வாடகை வீட்டில் தான் இருக்கிறான். அவன் கொடுத்த வாடகையை கொண்டு பாதி வீட்டுக் கடனை அடைத்திருக்கலாம். சமீபத்தில் அவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு லட்ச ரூபாயை பங்குகளில் முதலீடு செய்ய ஆலோசனைக் கேட்டான். எனக்கு நான் வாங்கிய பல பங்குகளே நஷ்டத்தில் முடிவடைந்திருக்கிறது. இதில் அடுத்தவருக்கு நான் சிபாரிசு செய்யப் போக அது நஷ்டம் அடைந்தால், அவன் என்னை குறை சொல்லி விடக் கூடாதே என்ற அச்சத்தில், நீயே யோசி என்றேன். ஆனாலும் விடாமல் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்தான். சில பங்குகளை சொன்னேன். அதையே வாங்கி விட்டான். இப்பொழுது அவனை விட எனக்குத் தான் பயமாக இருக்கிறது.

நான் தொடர்ந்து எனது பங்குகளை கண்காணித்துக் கொண்டே இருப்பேன். சந்தை நிலவரத்திற்கேற்ப அதனை விற்று விடுவேன். அவனுக்கும் சேர்த்து என்னால் கண்காணிக்க இயலுமா என்ன ? வீட்டு கடனில் இருக்கும் பலன்கள் தெளிவாக தெரிந்தாலும் தனக்கு ஏற்ப சிந்தித்து அதன்படியே செயல்படும் நண்பன், நான் சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல், பங்குகளில் ரிஸ்க் எடுப்பது ஏன் ? பங்குகள் என்றவுடன் ஏதோ கிரேக்கமும், ரோமனும் போலத் தான் புரியாத புதிராக நமக்கு தெரிகிறது. "பங்குச் சந்தையைப் புரிந்து கொள்வது கடினம். கடினமான கணக்கு வழக்கு" என்று நாம் நினைக்கிறோம். அதனால் யாராவது டிப்ஸ் கொடுத்தால் அதனை அப்படியே பின்பற்றுகிறோம்.

அனலிஸ்டுகளை பின்பற்றக் கூடாது என்று நான் சொல்வதால் அனலிஸ்டுகளை ஜோக்கர்கள் என்று நான் சொல்வதாக பொருளில்லை. அனலிஸ்டுகள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய நினைக்கும் பொழுது அந்த நிறுவனத்தைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அந்த நிறுவனத்திற்கே சென்று அதனை ஆய்வு செய்து, அங்குள்ள ஊழியர்களிடம் உரையாடி, அவர்களின் பயனாளர்களையும், போட்டியார்களையும் ஆராய்ந்து பிறகு அந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு தகுந்த விலையை நிர்ணயம் செய்து முதலீடு செய்வார்கள். அந்த நிறுவனத்தின் செயல்பாடு மாறுபடும் பொழுதோ, நிறுவனத்தின் போட்டியாளர்கள் புதிய திட்டத்துடன் பயனாளர்களை கவர்ந்து, தாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையும் பொழுதோ பங்குகளை விற்று விடுவார்கள்.

அனலிஸ்டுகள் சொன்னார்கள் என்று பங்குகளை வாங்குகிறோம். ஆனால் அவர்கள் விற்பதை நம்மிடம் சொல்லிவிட்டு விற்பதில்லை. அதனால் தான் பல நேரங்களில் அவர்களின் பேச்சைக் கேட்டு நாம் வாங்கிய பங்குகள் சரியும் பொழுது ஏமாந்து போகிறோம். அது போலவே அனலிஸ்டுகளின் கணக்குகள் பெரும்பாலும் Theoretical தான். இரு வேறு அனலிஸ்டுகள், ஒரே நிறுவனத்தைப் பற்றி இரண்டு வெவ்வெறு விதமான கோணங்களை தரக்கூடும். அதனால் தான் அனலிஸ்டுகள் சொல்வதை முற்றிலும் ஏற்காமல், முழுவதுமாக புறந்தள்ளாமல், அதனை அடிப்படையாகக் கொண்டு, நாமும் ஆய்வு செய்து, பங்குகளை வாங்கி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அனலிஸ்டுகள் போல நம்மால் பல கணக்குகளை போட இயலாமல் போகலாம். அதனால் ஒன்றும் பெரிய பாதகமில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் பல விடயங்களை கவனித்தாலே போதும். உதாரணமாக நாம் மென்பொருள் துறையில் இருந்தால், எந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்று பெரிய ஆய்வு செய்யத்தேவையில்லை. அதே துறையில் இருப்பதால் அந்த நிறுவனத்திற்கு ஏதாவது பிராஜட்கள் வந்திருக்கிறதா, புதிதாக க்ளயண்ட்கள் கிடைத்துள்ளார்களா என்ற தகவல்கள் நமக்கு எளிதாக கிடைத்து விடும். அதைப் போல வேலைக்குப் புதியதாக ஆட்கள் எடுக்கப்படுகிறதா, ஏதாவது பிராட்ஜட்கள் பறிபோய் விட்டதா என்ற தகவல்களைப் பொறுத்து நாம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

அதைப் போலவே நாம் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம், நம் அலுவலகத்தில் உள்ளவர்கள் எந்த வங்கியில் அதிகமாக கணக்கு வைத்திருக்கிறார்கள், வங்கியின் வசதிகள் பற்றி என்ன நினைக்கிறார்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து எல்லோரும் ஏன் ICICI போன்ற தனியார் வங்கிகள் பக்கம் போகிறார்கள், பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல்சர் திடீரென்று அதிக அளவில் நண்பர்கள் மத்தியில் பேசப்படுகிறதே, ஹீரோ ஹோண்டா பைக்குகளின் எண்ணிக்கை குறைகிறதே என நம் அன்றாட வாழ்வில் கவனிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பங்குகள் பற்றிய ஆய்வு தான். பங்குகளின் உயர்வையும், சரிவையும் இவை தானே தீர்மானிக்கிறது. பல்சர் பைக் நன்றாக இருக்கிறது என்ற நம் எண்ணமே, பஜாஜின் விற்பனை அதிகரிக்கும் என்ற செய்தியை தெரிவிக்கிறது அல்லவா ? விற்பனை அதிகரித்தால் அதன் சந்தை மதிப்பீடு உயரத்தானே செய்யும். முதலீடு செய்ய இவை தகுதியானப் பங்குகள் தான் என்ற செய்தியையும் இந்த ஆய்வு தெரிவிக்கும் அல்லவா ? ஆராய்ந்து பங்குகளை வாங்க வேண்டும். அதுவும் சரியான நேரத்தில் வாங்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒவ்வொரு மணித்துளியும் பணத்தின் நிலை மாறும். பல்சர் அறிமுகமாகி, விற்பனை சூடு பிடிக்கும் நேரத்தில், பாஜாஜின் பங்குகளை வாங்க வேண்டும். அதை விடுத்து தற்பொழுது வாங்கினால் அதன் லாபத்திற்கு உத்திரவாதம் இல்லை. நேரம் மிக முக்கியம்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஒன்றும் ஒரு பெரிய கலையில்லை. அனலிஸ்டுகள் ஒன்றும் சச்சின் போல பிறப்பிலேயே மேதைகளாக பிறப்பவர்கள் இல்லை. பங்குச் சந்தையின் மேதைகளுக்கு கூட அவர்கள் வாங்கிய எல்லாப் பங்குகளும் லாபத்தில் முடிந்ததில்லை. நாம் பத்து பங்குகளை வாங்கி, அதில் ஆறு லாபமடைந்தால் போதும். மற்ற நான்கு நஷ்டமானாலும் நமது Balance Sheet லாபமாகத் தான் இருக்கும்.

சரி...சென்னையின் (பெங்களுர், தில்லி என்ற எந்த நகரத்திலும்) சாலை நெரிசலில் அவஸ்தை படும் பொழுது, சமீப காலமாக கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதை பார்த்திருப்பீர்கள். பைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் கார்களுக்கு மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் என்ன ஆய்வில் இறங்க வேண்டியது தானே ?

பி.கு : இந்தப் பதிவு, பங்குச் சந்தை மேதை Peter Lynch ன் சில கருத்துகளை தழுவி எழுதப்பட்டது. அடுத்து வரும் சில பதிவுகளும் அவரைப் போன்ற மேதைகளின் எண்ண அலைகளில், என்னை பாதித்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டவையாகத் தான் இருக்கும்.

3 மறுமொழிகள்:

Badri Seshadri said...

How to think like Benjamin Graham and invest like Warren Buffett, by Lawrence Cunningham, McGraw Hill

மேலே உள்ள புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?

9:52 PM, November 26, 2004
தமிழ் சசி | Tamil SASI said...

இந்தப் புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை

7:03 AM, November 27, 2004
Anonymous said...

Robert G Allen - Multiple Streams of Income

Inthayum padiyungal...

Seshadri R

By: Seshadri R

9:23 AM, November 27, 2004