Wednesday, September 28, 2005
பணம் காய்க்கும் பங்குகள் - 1
அத்தகைய சில நல்லப் பங்குகளை "பணம் காய்க்கும் பங்குகள்" என்ற தலைப்பில் கூறலாம் என்று நினைக்கிறேன்.
இங்கு அவசியம் ஒரு Disclaimer கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையை 100% சரியாக கணிப்பது யாராலுமே முடியாத காரியம். சில கணிப்புகளின் அடிப்படையில் விலை உயரும் என்று நான் நம்புகிற/அல்லது பரவலாக நம்பப்படுகிற பங்குகளை தான், நான் இங்கு பரிந்துரை செய்யப் போகிறேன். அதே சமயம் சொல்லப்படுகின்ற உயர்வை இந்தப் பங்குகள் அடையாமலும் போகலாம். இங்கு சொல்லப்படும் பங்குகள் நீண்டகால முதலீட்டிற்கு உகந்த பங்குகளாகத் தான் இருக்கும். குறுகிய காலத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலீட்டாள்கள் மட்டும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
IDFC - INFRASTRCUTURE DEVELOPMENT AND FINANCE CORPORATION
இந்த ஆண்டு ஜூலை மாதம் IPO வந்த இந்தப் பங்குகளின், தற்போதைய விலை ரூ 71 . IPO விலையில் இருந்து தற்போதைய விலையை ஒப்பிடும் பொழுது முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே இந்தப் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம்.
ஏன் இந்தப் பங்குகளை வாங்கலாம் ?
IDFC நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். குறிப்பாக மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சாலைகள் போன்றவற்றுக்கு கடன் கொடுக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.
நாட்டின் பெருகிவரும் உள்கட்டமைப்பு தேவைகள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். 2005ம் ஆண்டில் இந் நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு கடன் தேவைகளில் 25% கடன் வழங்கியுள்ளது.
அது சரி.. கடன் கொடுக்கும் நிறுவனமாயிற்றே, கொடுக்கும் கடன் சரியாக வசூல் செய்யாவிட்டால் பிரச்சனை தானே ?
Non performing assets (NPA) என்பது திருப்பி செலுத்தப்படாத, நிலுவையில் நிற்கும் கடன். இந்தியாவில் உள்ள நிதி மற்றும் வங்கிகளின் முக்கிய பிரச்சனையே இந்த நிலுவையில் இருக்கும் கடன் தொகை தான். பல வங்கிப் பங்குகளை விட HDFC பங்குகள் மட்டும் எகிறிக் கொண்டே இருக்கிறதே எப்படி ? மிகவும் குறைவான NPA இருக்கும் வங்கிகளில் HDFC முக்கியமான நிறுவனம். அதாவது HDFC தான் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து விடுகிறது. IDFC யும் அது போலத் தான். IDFCக்கும் அந்தப் பிரச்சனை இல்லை.
இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமானால், உள்கட்டமைப்பு பெருக வேண்டும், உள்கட்டமைப்பு பெருகினால் IDFC மற்றும் இது போன்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வளரும். இந்த நிறுவனங்கள் உயர்ந்தால், அந்தப் பங்குகளை வாங்கும் நாமும் உயர்வோம். மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 9/28/2005 11:55:00 PM 6 comments:
Sunday, September 25, 2005
பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2
இந்தியப் பங்குச்சந்தை இந்த ஆண்டு 8000ஐ எட்டும் என்று மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே நம்பப்பட்டது. நான் கூட இது குறித்து அப்பொழுது ஒரு கட்டுரை எழுதினேன்.
எனவே குறியீடு 8000ஐ எட்டியது ஆச்சரியத்தை கொடுக்க வில்லை. ஆனால் அது எட்டப்பட்ட விதம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நிய முதலீடு, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறன.
கடந்த மாதம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி The Economist ல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை கேலி செய்துள்ளது. இது மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் என்றாலும், இந்தக் கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் உள்கட்டமையப்பு குறித்து இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. பல வருடங்களாக பொருளாதாரச் சீர்திருத்தம் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறது. இது தவிர நிலக்கரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்திருப்பதாக The Economist தெரிவிக்கிறது.
இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு கொடுத்து வரும் நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்களை தனியமார் மயமாக்கத்திற்கு எழுந்துள்ள பிரச்சனைகள் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன. இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் இத்தகைய அரசியல் தடைக்கற்களும், மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.
இத்தகைய சூழலில் பங்குச்சந்தை எந்தக் கவலையும் இல்லாமல் 8500 புள்ளிகளை எட்டுகிறது. இந்தியப் பங்குச்சந்தை குறியீடு உயர்வது இந்தியப் பொருளாதாரம் உயர்வதின் அறிகுறி என்ற வாதம் நிச்சயமாக சரியானது அல்ல. அது போல இந்தியா ஒளிர்கிறது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.
பின் எதனால் பங்குச்சந்தை உயர்கிறது ?
இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்ல, உலகின் பல பங்குச்சந்தைகளும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசியாவில் இந்தியாவை விட தாய்வான் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் குவிந்து கொண்டு இருக்கிறது.
ஏன் ? அது தான் Global liquidity
இப்பொழுது உலகில் நிலவும் பொருளாதார சூழல் தான் பல பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கியமான காரணம்
அமெரிக்காவின் கையிருப்பில் (Federal Reserve) இருக்கும் டாலர் மற்றும் உலகின் பல நாடுகளின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலவாணி, இவை தான்
Global liquidity எனப்படுகிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 20% அதிகரித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று liquidity இருந்ததில்லை என்று The Economist தெரிவிக்கிறது.
ஏன் இந்த நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது ?
அமெரிக்காவின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக (3.75%) இருக்கிறது. இந்த குறைவான வட்டி விகிதத்தை பயன்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் நிறுவனங்கள் பிற நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஆசியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் தங்கள் நாணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மிக அதிகமான அந்நியச் செலவாணி தேவை. எனவே அமெரிக்க டாலர் மற்றும் பாண்டுகளை (Bonds) அதிகளவில் வாங்கி தாங்கள் அந்நியச்செலவாணி கையிருப்பை அதிகப்படுத்துகின்றன (இது குறித்த எனது முந்தைய கட்டுரை - உலகின் பொது நாணயம்). அந்நியச் செலவாணி அதிகரிக்கும் பொழுது இந் நாடுகளின் கையிருப்பில் இருக்கும் உள்நாட்டுப் பணமும் அதிகரிக்கிறது. இது இந் நாடுகளில் உள்ள வங்கிகளின் பணக்கையிருப்பை அதிகரிக்கிறது.
வங்கிகள் இதனால் அதிக அளவில் கடன் கொடுக்க தயராக இருக்கிறன. வட்டியும் குறைகிறது. வட்டி குறைவதால் மக்கள் சேமிப்பை அதிகம் விரும்பவதில்லை. மாறாக வீடு மற்றும் பிற முதலீடுகளில் செலவழிக்கத் தொடங்குகின்றனர். மக்கள் செலவு செய்யும் பொழுது அது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.
இது தான் இப்பொழுது பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இருக்கும் வட்டியால் பொதுமக்களும் அதிக அளவில் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு பணம் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தற்பொழுது வசந்த காலம் தான். மக்கள் இதில் செய்துவரும் பெரும் முதலீடுகளால் அமெரிக்க வங்களில் கையிருப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த அதிகப்படியான பணத்தை இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் பிற பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். எனெனில் இங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். இதனால் பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் ? இது தொடருமா ?
இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. எப்படி ?
கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக செலவழிக்க தொடங்கும் பொழுது பொருட்களுக்கு இருக்கும் அதிகமான தேவையால் (Demand)
பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது பணவீக்கமும் குறைவாகத் தான் இருக்கிறது. காரணம், அமெரிக்கச் சந்தையில் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பொருட்கள் மலிவான விலையில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
ஒரு வித்தியாசமான பொருளாதார சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவி வருகிறது
சமீப காலாங்களில் அமெரிக்கவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார ஏற்றாதாழ்வுகளுக்கு உலகில் நிலவும் இந்த liquidity தான் காரணம் என்று சில பொருளாதார வல்லுனர்கள் நினைக்கின்றனர். இது ஆசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் டாலர் உலகின் பொது நாண்யமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் வெகுவிரைவில் சீன நாணயம், யூரோ நாணயம் போன்றவற்றால் பாதிப்படையும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர். அதனால் அமெரிக்க வட்டி வகிதத்தை உயர்த்தி பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சிலரின் கருத்து.
ஆனால் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும். அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே வட்டி விகிதங்களை அதிகப்படியாக உயர்த்தாமல் 0.25% என்ற விகிதத்தில் அமெரிக்கா குறைவாக படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.
உலகின் நிலவும் இந்த பொருளாதாரச் சூழல்களே இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் ஏனைய பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கிய காரணம்.
அது சரி.. இந்தியப் பங்குச்சந்தையை ஏன் இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிவைத்து உயர்த்துகின்றன ? இந்தியப் பங்குச்சந்தையின் Valuation மிக அதிகமாக இருக்கிறது என்று செல்கிறார்களே அது உண்மை தானா ? Valuation அதிகமாக இருப்பதால் இந்தியப் பங்குகள் மேலும் உயரும் சாத்தியங்கள் இருக்கிறதா ?
அடுத்தப் பதிவில் பார்க்கலாம் மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 9/25/2005 08:21:00 PM 1 comment:
Saturday, September 24, 2005
பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 1
நான் சென்னையில் இருந்து இங்கு வந்த பொழுது பங்குச்சந்தை 6000ஐ கடக்கும் நிலையில் இருந்தது. இங்கு வந்த சில மாதங்களில் குறியீடு 8000ஐ எட்டி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து வந்த சில நாட்களில், ஜெட் வேகத்தில் குறியீடு 8500ஐ எட்டி என்னை அச்சப்படுத்தியது. ஆம் ...குறியீட்டின் உயர்வு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையே ஏற்படுத்தியது.
இந்த உயர்வுக்கு என்ன காரணம் ? பங்குச்சந்தைக்கு ஏதேனும் சாதகமான சூழல் நிலவியதா ?
உண்மையில் பங்குச்சந்தையை உயர்த்தக் கூடிய, இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்த்தக் கூடிய எந்த நிகழ்வும் கடந்த சில மாதங்களில் நடக்க வில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால் குறியீடு அவற்றை பற்றிக் கவலை கொள்ள வில்லை. உயர்ந்து கொண்டே தான் இருந்தது. அது போலவே பங்குச்சந்தையின் உயர்வுக்கு பிறகு பங்குவிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய Correction கூட நிகழ வில்லை. இது போன்றவை தான் அனைவரது மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்தியப் பங்குச்சந்தையின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் - Global excess Liquidity. தற்பொழுது உலகில் இருக்க கூடிய மிக அதிக அளவிலான பண புழக்கம். இது பற்றி அலசுவதற்கு முன்பாக இந்த உயர்வின் காரணமாக எழுந்திருக்கும் ஊடக எண்ணங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவலை போன்றவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாம்.
இந்தியப் பங்குச்சந்தையின் எதிர்காலம் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. அடுத்து வரும் சில ஆண்டுகளில் குறியீடு 15,000 கடக்கும் என்ற பரவலான எண்ணத்தில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் அது படிப்படியாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கேற்ப வளர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறக்கூடிய சூதாட்ட மையமாக இந்தியப் பங்குச்சந்தை மாறி விடக்கூடாது.
ஹர்ஷத் மேத்தாவின் ஊழலால் பங்குச்சந்தை உயர்ந்த நிலையும் அதன் பிறகு கேத்தன் பராக்கின் கதையுடனும் தற்போதைய நிலை ஓப்பிட்டு பார்க்கப்படுகிறது. பிரதமர், நிதியமைச்சர், மைய அரசின் புலனாய்வு துறை, வருமான வரித் துறை போன்ற அனைத்து துறைகளும் பங்குச்சந்தையை கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியப் பங்குச்சந்தைக்கு பணம் வரும் வழிகள் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. வங்கிகளில் இருந்து ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தைக்கு பணத்தை மாற்றியது போல தற்பொழுது ஏதேனும் செய்யப்படுகிறதா என்பது குறித்து அரசாங்கம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. பங்குத் தரகர்களின் அலுவலகங்கள், வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது தேவை தானா என்று கேள்வி எழுப்பப்படுகிற அதே நேரத்தில் குப்பை நிறுவனங்களின் சூம்பிக் கிடந்த பங்குகள் விலை எகிறியுள்ளதை பார்க்கும் பொழுது பங்குச்சந்தையில் மற்றொரு ஊழல் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.
சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிகழ்வுகள் இந்தியப் பங்குச்சந்தையை உலகின் பல முண்ணனி பங்குச்சந்தைகளின் தரத்திற்கு இணையாக உயர்த்தி இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தை என்றில்லாமல் ஆசியாவில் இருக்க கூடிய பல பங்குச்சந்தையிலும் இந்த முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு 8.5 பில்லியன் டாலர்களுக்கு முதலீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இவர்களின் முதலீடு இது வரையில் 8பில்லியன் டாலரை எட்டி விட்டது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் செய்யும் முதலீடு தான் குறியீடுகளின் உயர்வுக்கு முக்கிய காரணம். சில பங்குங்களில் சில பங்குத் தரகர்களின் தகிடு தத்தங்கள் நடந்திருக்கிறது என்றாலும் இந்தியப் பங்குச்சந்தையின் மொத்த உயர்வுக்கும் காரணம் இந்த கோல்மால் வேலைகள் தான் என்று முடிவு செய்து விட முடியாது ? காளைச் சந்தையில் சில பங்குகளில் இது போன்றவை நிகழ்வது சர்வசாதாரணம்.
இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு முக்கிய காரணம், நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய Global Liquidity தான்.
இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்
எனது பங்குச்சந்தை பதிவை கடந்த சில மாதங்களாக வேலைப்பளு, இந்திய பங்குச்சந்தையை கவனிக்க முடியாத நேர வேறுபாடு போன்ற சூழலால் எழுத முடியாத நிலையில் இருந்தேன். எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்கள் பலருக்கு (சும்மா ஒரு பந்தா தான், கொஞ்சம் பேர் தான் மெயில் அனுப்பி இருந்தாங்க) முடிந்த வரையில் பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன். சிலருக்கு அனுப்ப முடியவில்லை. இவ்வாறான நண்பர்களின் ஆதரவு தான் மறுபடியும் என்னை எழுத தூண்டி இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 9/24/2005 02:16:00 PM 2 comments:
Friday, April 01, 2005
உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1
உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.
1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.
இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.
உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?
உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?
அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மை
உலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.
பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.
உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.
சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.
இந்த நிலை ஏற்படுமா ? அமெரிக்க டாலர் உலக நாணயாமாக இருக்கும் நாட்கள் எண்ணப்படுகிறதா ?
அடுத்தப் பதிவில் பார்ப்போம் மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 4/01/2005 01:02:00 AM 7 comments:
Wednesday, March 30, 2005
சந்தை ஏன் சரிகிறது ?
கடந்த சில வாரங்களாக சந்தை கடுமையாகச் சரிந்து கொண்டிருக்கிறது. மைய அரசின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வரலாறு காணாத உயர்வைப் பெற்று 7000ஐ தொட்டு விடும் என்று அனைவரும் எண்ணியதற்கு மாறாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 587 புள்ளிகள் சரிந்து விட்டது. இது போலவே தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 198 புள்ளிகள் சரிந்து விட்டது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1,47,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் சந்தையில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு இந்த வாரம் திங்களன்று நல்ல லாபமுடன் தொடங்கிய வர்த்தம் செவ்வாயன்று கடும் சரிவைச் சந்தித்து. காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவுடன் காணப்பட்ட சந்தை ஒரு கட்டத்தில் 180 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்திருந்தது. புதனன்றும் சந்தையில் கடுமையான தள்ளாட்டமே நிலவி பிறகு ஓரளவு லாபமுடன் வர்த்தகம் நிறைவுற்றது
ப.சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வேகமாக எகிறியச் சந்தை எதனால் இப்படி சரிந்து கொண்டிருக்கிறது ? ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ?
இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வும் தாழ்வும் இந்தியர்களின் கைகளில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளில் தான் சந்தையின் போக்கு இருக்கிறது.
உதாரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பார்தி பங்குகளில் ஏற்பட்ட சரிவை பார்த்தாலே சந்தையின் மொத்த போக்கும் புரிபடும். பார்தி பங்குகளில் தன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அன்று காலை 233 ரூபாயை எட்டிய பார்தி பங்குகள் இந்த செய்தி வெளியானவுடன் சரியத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் இனி பார்தி பங்குகளில் ஏற்றமிருக்காது என்று கருதி இந்தப் பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.
சந்தையின் மொத்த போக்கும் இதேப் போலத் தான் இருக்கிறது. சந்தையின் செண்டிமெண்டை மாற்றும் அதி வல்லமை மிக்கவர்களாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இருக்கின்றனர்.
அவர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து விலகுகிறார்களா ? கிடையாது. ஆனால் அவர்களின் முதலீடு குறைந்துள்ளது, அல்லது மேலும் குறையக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது.
ஏன் இந்த அச்சம் ?
- அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் அமெரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தியதும் மேலும் உயர்த்தக் கூடும் என்ற ஊகங்களும்
- கச்சா எண்ணெய்யின் விலையேற்றம்
பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மற்றும் பிற ஆசியப் பங்குச்சந்தைகளை லாபம் ஈட்டும் ஒரு இடமாக கருதியே முதலீடு செய்கின்றனர். அவர்களின் முதலீட்டிற்கு தேவைப்படும் நிதியும் மிக குறைந்த வட்டியில் அமெரிக்காவில் கிடைக்கிறது. அந்தப் பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் பொழுது ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் முதலீட்டிற்கு தேவைப்படும் பணத்தின் வட்டியும் அதிகரிக்கிறது.
வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் இங்கு ரிஸ்க் மிக அதிகம். அதிக வட்டியை கொண்டு பெற்ற பணத்தை ரிஸ்க் அதிகம் உள்ள நாடுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளின் சந்தையிலோ அல்லது பாண்ட் போன்ற Debt சந்தையிலோ முதலீடு செய்வதை பாதுகாப்பான நல்ல முதலீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் கருதக் கூடும். அதனால் அவர்களின் முதலீடு இந்திய மற்றும் பிற ஆசிய பங்குச்சந்தைகளில் குறையலாம். அவ்வாறு குறையும் பொழுது இந்தப் பங்குச்சந்தையின் உயர்வு கேள்விக்குறி தான்.
இந்த அச்சம் தான் இந்திய மற்றும் ஆசியாவில் உள்ள பிற பங்குச்சந்தைகளை சரிய வைக்கிறது.
செவ்வாயன்று மும்பை பங்குச்சந்தை சரிந்த பொழுது ஆசியாவில் இருக்கும் பிற பங்குச்சந்தைகளும் கடுமையாக சரிந்தன. ஜப்பானின் Nikkei குறியீடு 225 புள்ளிகளும், ஹாங்காங்கின் Seng 185 புள்ளிகளும், தென்கொரியாவின் Kospi 18 புள்ளிகளும், தாய்வானின் Taiex 87 புள்ளிகளும் சரிந்தன. இவையனைத்தும் 1.5% முதல் 2% அளவிலான சரிவு. இந்தியப் பங்குச்சந்தையின் சரிவு சுமார் 2.19%
ஆசிய நாடுகளில் காணப்படும் இந்தச் சூழ்நிலையே இந்தியப் பங்குச்சந்தையிலும் பிரிதிபலிக்கிறது.
வெளிநாட்டு முதலீடு பற்றிய இந்த அச்சம் சரியானதது தானா ?
ஜனவரி மாதத்திலும் இதே அச்சம் நிலவியது. பிறகு அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.25 என்ற குறைவான விகிதத்தில் மட்டுமே உயர்த்தப்பட்டதால் அந்த பாசிடிவ் செண்டிமெண்ட்டில் சந்தை எகிறியது. பிறகு பட்ஜெட்டை ஒட்டிய வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை முடக்கி கொண்டதால் சந்தை தடுமாறியது. பட்ஜெட்டிற்கு பிறகு வெளிநாட்டு முதலீடுகள் மறுபடியும் அதிகரிக்க குறியீடு 7000 ஐ நெருங்கியது. இப்பொழுது மறுபடியும் சரிகிறது.
சந்தையின் தற்போதைய சரிவு இப்பொழுதுள்ள சூழ்நிலைகளை ஒட்டிய தற்காலிக பின்னடைவு தான். முதலீட்டாளர்களின் இந்த அச்சம் தற்போதைய சூழ்நிலைகளைச் சார்ந்து இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை.
குறுகிய கால சாதக பாதகங்களை விட நீண்ட காலத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு இழுக்கும் அஸ்திரம் நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரம் அவர்களை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி இழுக்கும் வல்லமை கொண்டது. உலகில் வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று (மற்றொன்று சீனா). இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலீடுகளை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி நிச்சயமாக இழுக்கும். வளர்கின்ற பொருளாதாராங்களில் தான் அவர்களுக்கு லாபமும் அதிகம்.
சரி...அடுத்து என்ன நடக்கும் ?
இந்த ஆண்டு இது வரை சுமார் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அடுத்து நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் நிலவரத்தைப் பொறுத்து தங்கள் முதலீடுகளை மறுபடியும் சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய நிறுவனங்களின் அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சந்தை நல்ல முன்னேற்றம் அடையும்.
மும்பை பங்குச்சந்தை குறியீடு 6000 க்கும் கீழ் சரியும் வாய்ப்புகள் இருப்பதாக தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.
ஆனால் உண்மையில் பங்குகள் நமக்கு குறைவான விலையில் கிடைக்கின்றன, அல்லது மேலும் சரியும் பொழுது இன்னும் குறைவான விலையில் நமக்கு கிடைக்க போகின்றன என்பது தான் உண்மை.
ஒரு நல்ல முதலீட்டாளன் சந்தையில் எதிர்நீச்சல் போட வேண்டும். அதாவது சந்தை சரியும் பொழுது, அந்த சரிவு நிலையில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். சந்தை உச்ச நிலையில் இருக்கும் பொழுது பங்குகளை விற்று விட வேண்டும்.
இது நல்ல பங்குகளை குறைந்த விலையில் வாங்கக் கூடிய சரியான தருணம்.
(இன்றைய வர்த்தகம் தொடங்கி விட்டது. மும்பை பங்குச்சந்தை 80 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறிக் கொண்டு இருக்கிறது)
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 3/30/2005 11:35:00 PM 4 comments:
Monday, March 21, 2005
ஹர்ஷத் மேத்தா - 9

1992 ல் நடந்த பங்குச்சந்தை ஊழலுக்குப் பிறகு 1998ல் மறுபடியும் ஒரு புதிய ஊழலை ஹர்ஷத் மேத்தா செய்யத் துணிந்தான். இவ் வார தமிழோவியத்தில் ஹர்ஷத் மேத்தா 9ம் பாகத்தில் அது பற்றி எழுதியிருக்கிறேன்
மேலும் கடந்த வார சந்தை நிகழ்வுகள் குறித்து தமிழோவியம் பங்குச்சந்தைபார்வையில் ஒரு அலசல் - Block Deal மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 3/21/2005 06:20:00 AM No comments: