பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

இந்திய முதன்மைப் பங்குச் சந்தை ஆபத்துகள்

இந்திய மென்பொருள் சேவைத் துறையின் ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் அந்தத் துறையின் வளர்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மிக ஆரோக்கியமாக இருந்தன. உண்மையில் மென்பொருள் சேவை அளிக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களின் பங்கு விற்பனைகள் மற்றும் வர்த்தகம் சக்கைப் போடு போட்டன.

மழை தொடர்ந்து பெய்தால் அங்கங்கே நூற்றுக் கணக்கில் முளைக்கும் காட்டுக் காளான்கள் போல அந்தச் சமயத்தில், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நோக்கத்தில், மென்பொருள் சேவைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், பெயரில் மட்டுமே 'இன்·போடெக்', 'இன்·போஸிஸ்' என்று இணைப்புச் சேர்த்துக் கொண்டு, ஏமாறக் காத்திருந்த பங்கு முதலீட்டாளர்களை ஏமாற்றிய பேர்வழிகள் ஏராளம்.

செபி (SEBI) நிறுவனமும், இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் விழித்துக் கொண்டு
  • முதலீட்டாளர்களுக்குக் களை எது பயிர் எது என்று அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது
  • பங்குச் சந்தை வர்த்தக முறைகளை மேம்படுத்துவது, மற்றும்
  • நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவது
என்று நல்ல காரியம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இருந்தும் இந்தியப் பங்குச் சந்தை முறைகளில் இன்னமும் மிகப் பெரிய ஓட்டைகள் உள்ளன. ஆகப் பெரிய ஓட்டை இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

மண்டபத்தில் யாராவது சொல்லி செபிக்குத் தெரிந்ததா அல்லது அவர்களே கண்டு பிடித்தார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கண்டு பிடித்து விட்டார்கள். எப்படியோ செபி கண்கொத்திப் பாம்பாகச் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து முறைப் படுத்தும் முனைப்பில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது. பாராட்ட வேண்டியதுதான்.

காகிதப் பங்கு பத்திரங்கள் முறை வழக்கொழிந்து மின் பங்குகள் வழக்கத்திற்கு வந்து விட்டன. இதனால் பல முறைகேடுகள் ஒழிந்து விட்டன. இருந்தும் சமீபத்தில் இந்தியாவில் பல மின் பங்கு வைப்புக் கணக்குகளை (depository account) ஒருவரே பினாமி பெயர்களில் ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வநதுள்ளது.

பங்கு வைப்புக் கணக்குகளை நடத்தும் நிறுவனங்கள் (Depository Participants) புதிய கணக்குகளை ஆரம்பிக்கும் போது வைப்பாளரின் அடையாளத்தை சந்தேகமறப் பெற வேண்டியது அவர்களின் முதன்மைப் பொறுப்பு. பினாமி கணக்குகள் ஏற்படுத்த முடியாமல் தடுக்க செபி இந்தப் பொறுப்புக்களையும், அவற்றிலிந்து தவறினால் கடும் விளைவுகளை DP நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கடும் எச்சரிக்கைகளையும் அறிவித்திருந்த போதும் இந்தக் கதி.

மிகப் பெயர் போன DP நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கூட இந்தப் பொறுப்பில் இருந்து தவறியுள்ளன. ஒருவர் யெஸ் (Yes) வங்கியின் பங்குகளை முதன்மைச் சந்தையில் மிக அதிக அளவில் யாருக்கும் சந்தேகம் வராமல் வாங்கும் நோக்கத்தில் பல பினாமி கணக்குகளை ஏற்படுத்தி அவற்றின் மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றியும் உள்ளார்.

அவர் எத்தனை கணக்குகள் ஏற்படுத்தினார் தெரியுமா? இரண்டு மூன்றல்ல. சுமார் ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள்! இவர் வில்லாதி வில்லனென்றால், இவருக்குத் தம்பி ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் ஏற்படுத்திய பினாமி கணக்குகள் சுமார் ஆயிரத்து ஐநூறு.

மனிதர் வாங்கிய பங்குகளை சந்தை அல்லாத வர்த்தகத்தில் (off market transaction) விற்ற கொஞ்ச நாளில் செபிக்கு எப்படியோ ஊசல் வாடை எட்டி விட்டது. மாட்டிக் கொண்டார் பாவம். கூடச் சேர்ந்து மாட்டிக் கொண்டிருக்கும் DP நிறுவனங்களும், வங்கிகளும் பொறுப்புகளிலிருந்து தவறியதால் மாட்டிக் கொண்டனவா அல்லது திருட்டில் கூட்டாளிகளா என்பது இன்னமும் தெரியவில்லை. ஒரே ஆளுக்கு ஆறாயிரத்து ஐநூறு கணக்குகள் என்றால் சந்தேகம் பலமாகதான் வருகிறது.

பலர் முதன்மைச் சந்தையில் பங்குகள் வாங்கி அவை சந்தையில் பட்டியலிடப் பட்டதும் அதிக விலையில் விற்று குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் ஆசையில் ஆழம் தெரியாமல் இந்த மாதிரிப் புதை சேறுகளில் காலை விட்டு விடுகிறார்கள். நான் தரமானவை என்று கருதும் பங்குகளில் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்வதால் முதன்மைச் சந்தை பக்கம் போவதேயில்லை.

வங்கிகள் தத்தம் முதலீடுகளை அதிகரிக்க பங்குச் சந்தையைக் கூடிய விரைவில் நாடக் கூடும். 2007 ஆண்டு வாக்கில் இந்திய வங்கிகள் BASEL II விதிகளுக்குக் கட்டுப் பட வேண்டும். பொருளாதாரம் போகும் வேகத்தில், இந்திய வங்கிகள் துறை அபரிமிதமான் வளர்ச்சியைக் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை வைத்து ஏமாற்றிப் பணம் பண்ணக் கூடிய விஷமிகளைக் கண்டறியக் கூடிய விழிப்பு முதலீட்டாளர்களிடம் வேண்டும் மேலும் படிக்க

வால்மார்ட் - என்ன பிரச்சனை ? - 2



சென்னையிலும், பெங்ளூரிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பெருகி வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவை கொடுக்கும் ஊதியம் போன்றவை சில நேரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு சமன்பாடு இல்லாத நம் சமுதாயத்தில் இந்த நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துவதாகவே எனக்கு தோன்றும். அரசு நிறுவனங்களிலும், பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை விட பல மடங்கு அதிக சம்பளத்தை மென்பொருள் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 30வயதிற்கும் உட்பட்ட இளைஞர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களைச் சார்ந்த, இவர்களைக் குறிவைத்து இயங்கும் பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உதாரணமாக உல்லாச கேளிக்கை இடங்கள். நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து, பேஷன் ஷோ வரை எங்களைப் போன்றவர்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயங்கள் ஒரு பகுதி சமுதாயத்திற்கு அந்நியமாக தோன்றுகிறது. பொருளாதர ரீதியில் ஒரு வீட்டுக் கடன் பெறும் பொழுது கூட எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை, முக்கியத்துவம் பிறருக்கு கிடைப்பதில்லை. இதுவெல்லாம் ஏற்கனவே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது போல தான் தோன்றுகிறது.

இன்று ஏதோ ஒரு டிகிரியுடன் நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே ஒரு நல்ல வேலையில் நுழைந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையில் என்ன செய்கிறோம், ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கும். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவிற்கு வருகின்றன வேலைகளில் 50%-70% வேலைகள் Production Support /Maintenance வேலைகள் தான். சமீபத்தில் ABN AMRO நிறுவனம் இன்போசிஸ் மற்றும் TCS நிறுவனங்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வேலைகளை கொடுத்தது. இதில் பெரும்பாலான வேலைகள் Production Support /Maintenance தான். இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mechanical Engineer) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Copy-paste செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் உள்ள பிற துறைகளில் நல்ல சம்பளம் இல்லை. ஏனெனில் outsourcing இந்த துறைகளில் குறைவாகவே உள்ளது அல்லது கொஞ்சமும் இல்லை.

ஒரு பிரிவினர் நிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருக்க கொஞ்சமாக படிப்பறிவு உள்ள semi-skilled or unskilled ஊழியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். மிகக் குறைந்த சம்பளம் தான். பணியும் கடினம். அவர்களுக்கு அந்த வேலையைத் தான் செய்ய வேண்டும். வேறு வழி கிடையாது.

மற்றொரு பிரிவினர் இருக்கின்றனர். எந்த வேலையும் கிடைக்காமல் சிலர் ஆட்டோ ஓட்டுகின்றனர். சிலர் டூ வீலர்களில் பொருள்களை பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள், தள்ளு வண்டிகளிலும், பிளாட்பாரங்களிலும் வியபாரம் செய்யும் சிலர் இப்படி ஒரு மிகப் பெரிய கூட்டம் தன் அன்றாட தேவைகளுக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

படித்தும் வேலை கிடைக்காத நிறையப் பேரை பார்த்திருக்கிறேன். கல்லூரியில் டிகிரி முடித்து விட்டு ஆட்டோ ஓட்டுபவர்களையும், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் காவலர்களாக வேலை செய்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாதவர்கள் எங்கோ மூலை முடுக்குகளில் சின்ன கடை வைத்துக் கொள்வார்கள்.

"எங்கள் காலத்தில் இருந்தது போல் இன்று மளிகைக் கடையை வைத்து பணமெல்லாம் பெரிதாக சம்பாதித்து விட முடியாது. ஏதோ காலத்தை ஓட்டலாம்" என்று என் அப்பா சொல்வார். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கடைத் தெருவில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. இன்று மூலை முடுக்கெல்லாம், திரும்பிய பக்கமெல்லாம் கடைகள் தான். தெருவுக்கு தெரு குட்டிக் கடைகள் முளைத்து விட்டன.

இது எதனால் ஏற்பட்டது ? இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் ? இதனைச் செய்து தான் தீர வேண்டுமா ?

நல்ல வேலைவாய்ப்பு இருந்தால் இந்த வேலை இவர்களுக்கு தேவையில்லை தான். தற்பொழுது அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை ஒரு நிர்பந்தம் காரணமாக எழுவது. அவர்களுக்கு அதை செய்வதில் ஆர்வமோ, உடன்பாடோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனாலும் செய்து தான் தீர வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட முடியும்.

இந்தியா போன்ற மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நாட்டில் அரசாங்கமோ, இங்கிருக்கும் தனியார் நிறுவனங்களோ மட்டுமே வேலைவாய்ப்பை பெருக்கி கொடுத்து விட முடியாது. இவ்வளவு மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க கூடிய நிறுவனங்களோ, மூலதனமோ இந்தியாவில் அதிகம் இல்லை.

கடந்த நிதி நிலை அறிக்கையில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. இது போன்ற அறிக்கைகள் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கைகளிலும் வரும். அதனைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அரசாங்கம் எப்படி இவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் ? எங்கிருந்து பணம் வரும் ? எல்லாமே Populist அறிவிப்புகள். கூட்டணி கட்சிகளை/ஓட்டு வங்கிகளை திருப்தி படுத்தும் நடவடிக்கைகள். இது வரை அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டதென தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைக்களுக்கு என்ன தான் தீர்வு ஏற்பட முடியும் ?

வால்மார்ட், k-Mart/Sears, Target போன்ற நிறுவனங்களை இந்தியாவில் திறக்க அனுமதிப்பது முழுமையான தீர்வாகும் என்று சொல்லமுடியா விட்டாலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

எப்படி ?

வால்மார்ட் ஏதோ மளிகை சாமான்களை விற்கும் நிறுவனம் என்றோ, இருக்கின்ற மளிகைக் கடைகளை காலி செய்து விட்டு பணத்தை அள்ளிக் கொண்டு அமெரிக்காவிற்கு பறந்து விடும் என்றோ கூறப்படும் வாதங்கள் அர்த்தமற்றவை. வால்மார்ட் போன்ற நிறுவனங்களால் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை (Trade deficit) தற்பொழுது சுமார் 150பில்லியன் டாலர்கள். 1989ல் இது சுமார் 6பில்லியனாக இருந்தது. அடுத்து வந்த 14ஆண்டுகளில் இது பல மடங்கு உயர்ந்து 2003ல் 124 பில்லியனை எட்டியது. 2004ல் மற்றொரு 20% உயர்ந்து 150பில்லியன் டாலர்களை எட்டியது என அமெரிக்க அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

இது கூறும் தகவல்கள் என்ன ?

சீனாவின் ஏற்றுமதி மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது

இதற்கு முக்கிய காரணம் வால்மார்ட் போன்ற ரீடையல் நிறுவனங்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் அது உண்மை.

பொருளாதாரத்தில் Push, Pull என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. Push என்பது Manufacturing நிறுவனங்கள் தாங்கள் எந்தப் பொருள்களை உற்பத்திச் செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும், எங்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்து சந்தைக்கு அனுப்பும் முறை. இது தான் ஆரம்ப காலங்களில் - 1980 வரை வழக்கில் இருந்த முறை

Pull என்பது, ரீடையல் நிறுவனங்கள் சந்தையில் என்ன பொருள் விற்கும், எவ்வளவு விற்கும், அதற்கு பயனீட்டாளர்கள் என்ன விலை கொடுப்பார்கள், என்ன தரத்தில் அதனை எதிர்பார்ப்பார்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது.

இந்த Pull முறையைக் கொண்டு வந்து அமெரிக்கச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ரீடைல் நிறுவனங்கள் ஏற்படுத்தின. குறிப்பாக வால்மார்ட் அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனா - அமெரிக்க Trade deficitல் வால்மார்ட்டின் பங்கு சுமார் 10% என்பதில் இருந்து வால்மார்ட் ஏற்படுத்திய தாக்கம் நமக்கு புரியும்.

வால்மார்டின் தாரக மந்திரம் ஒன்றே ஒன்று தான் - குறைந்த விலை




அமெரிக்காவெங்கிலும் இருக்கும் தன் கிளைகளுக்கு வால்மார்ட் மிகக் குறைந்த விலைக்கு பொருள்களை சீனாவில் இருந்து பெற்று வரும். அமெரிக்காவில் இருக்கும் தன் கிளைகளுக்கு சீனாவில் உற்பத்திச் செய்யும் பொருள்களை இறக்குமதி செய்யும். இதனால் சீனாவில் Manufacturing நிறுவனங்களின் வளர்ச்சி அதிகளவில் உயர்ந்தது. சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே சென்றது.

அமெரிக்காவில் செய்யப்பட்ட பல பொருள்களின் விலை அதிகமானதால் சீண்டுவார் இல்லாமல் போயின. அமெரிக்க Manufacturing நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. சுமார் 1.5மில்லியன் வேலைகளை அமெரிக்கர்கள் இழந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் இழந்த வேலைகள் சீனாவிற்கு சென்றன. சீனாவில் பல வேலைவாய்ப்புகள் உருவாகின. சீனாவின் பொருளாதாரமும் Manufacturing மூலம் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டது.


இந்த மாற்றங்களை வால்மார்ட் எப்படி ஏற்படுத்தியது ? சீனாவிற்கு ஏற்பட்ட இது போன்ற மாற்றங்கள் இந்தியாவிலும் ஏற்பட முடியுமா ?

அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

மேலும் படிக்க

WALMART - என்ன பிரச்சனை ? - 1



சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

மேலும் படிக்க... மேலும் படிக்க

பணம் காய்க்கும் பங்குகள் - 1 - Follow-up

கடந்த வாரம் IDFC பங்குகளை வாங்கலாம் என்று இங்கு பரிந்துரை செய்யப்பட்டது

இந்து பிஸ்னஸ் லைன் பத்திரிக்கையும் இன்று வெளியிட்டுள்ள தனது முதலீட்டு பரிந்துரையில் அதேப் பங்குகளை வாங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள் மேலும் படிக்க

சென்ஸெக்ஸ் தொட்ட கடந்த மாத உச்சம் - 8722 !!

[முன்னுரை: தமிழ் சசி என்னை நம்பி இங்கே எழுத் இடம் அளித்திருக்கிறார். அவருக்குப் பணிவான வந்தனம். அவரது நம்பிக்கை வீண்போகாமலிருக்க முயற்சிப்பேன் என்ற உறுதிமொழியுடன் இந்த முதல் பதிவைப் பதிக்கிறேன். நான் பங்குச் சந்தையைப் பற்றிக் கற்றது கைமண் அளவு. கற்றுக் கொள்ள வேண்டியது கடலளவு. ஆகவே என் கருத்துக்களில் தவறிருந்தால் மன்னித்துத் தயங்காமல் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொண்டு மேலும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன். -உதயகுமார் நளினசேகரன்]

சென்ஸெக்ஸ் குறியீடு கடந்த செப்டம்பர் மாதம் இறுதி நாள் வர்த்தகத்தில் 8634 என்ற அளவில் முடிவுற்றது. குறியீடு இந்த ஆண்டு 8000 என்ற அளவைத் தாண்டினால் கவலைப் பட வேண்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன் இந்திய நிதியமைச்சர் கூறி வந்தார். இப்பொழுது என்னவென்றால், பங்குச் சந்தை வளர்ச்சி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது என்கிறார்.

பங்குச் சந்தை வல்லுனர்கள் கூட பங்கு விலை/ஈட்டும் வருவாய் (Price/Earnings) விகிதம் 17 அல்லது 18 என்ற ஆரோக்கியமான அளவிலேயே உள்ளதால் கவலையில்லை என்று தெரிவிக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்த விகிதங்கள் இன்னமும் 13 முதல் 15 என்ற அளவில்தான் உள்ளன.

இது ஒரு புறமிருக்க, நாம் இந்த வளர்ச்சியைப் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம்.

இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் எனக்குத் தெரியும் வாய்ப்புகளில் சில:
  • ப்ரிக் (BRIC) அறிக்கையின் படி இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளுக்குச் சிறப்பாக இருக்கப் போகிறது. 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் ஆக அதிகம் மக்கள் உழைக்கும் வயதில் இருக்கப் போகிறார்கள்
  • தகவல் தொழில் நுட்பத் துறையில் அமெரிக்காவின் 50 சதவிகித்திற்கும் அதிகமான சேவை நுகர்வுகள் இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன. தற்போது ABN Amro போன்ற ஒப்பந்தங்களின் நோக்கைப் பார்த்தால் ஐரோப்பியத் துணைக் கண்டத்திலிருந்தும் இந்தியச் சேவை நுகர்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன
  • மருத்துவச் சுற்றுலா (medical tourism) துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி
  • வாகனங்கள், மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித் துறையானது உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதித் தேவை அளவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியால் சிறப்பாக வளர்ந்து வருகிறது
  • பன்முக நூலிழை ஒப்பந்தம் அமலில் இருந்து விலக்கப் பட்ட பிறகு சீனாவின் மேல் அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஏற்படுத்திய ஏற்றுமதித் தடையால் இந்தியாவின் துணி மற்றும் ஆடை உற்பத்தித் துறை எதிர்பார்க்கும் வளர்ச்சி
  • சராசரி இந்தியனின் போக்கு எதிர்காலப் பொறுப்புகளை முன்னோக்கி சேமிக்கும் நோக்கிலிருந்து செலவழித்து மகிழும் போக்கிற்கு மாறிக் கொண்டிருப்பதால் அவரது நுகரும் போக்கு (Consumerism) வளர்ந்து அதனால் சந்தையில் உற்பத்திப் பொருட்களுக்கு தேவை அதிகரித்திருக்கும் நிலை
  • இந்த ஆண்டு பருவமழை இது வரை நல்ல அளவில் உள்ளதால் விவசாயத் துறையும் நல்ல விளைவுகளை எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு
  • நடந்து முடிந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 8 சதவிகிதத்தைத் தாண்டியிருக்கிறது. விவசாயத் துறையின் வளர்ச்சி மட்டுப் பட்டிருந்தாலும், உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன
  • இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றப் போவது வங்கித் துறை. தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய முதலீடுகளுக்குத் தேவையான பணத்தைச் சந்தையிலிருந்து புரட்டித் தொழில் வளர்ச்சிக்குத் தர வேண்டிய கடமை இந்தத் துறைக்கு உள்ளது

ஆக, பல நோக்கிலிருந்து பார்த்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சிச் செய்திகள் ஆரோக்கியமான எதிர்பார்ப்பைத் தருவதாக உள்ளன.

இந்த வளர்ச்சிக்கு ஆபத்தாகப் போகக் கூடும் சில போக்குகள் என்ன?

  • பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் இந்தியா மில்லினியம் வளர்ச்சிக் குறிக்கோள்களில் - அதாவது மனித வள மேம்பாட்டில் பின் தங்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது
  • இன்னமும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உழைக்கும் வயதில் இருப்பவர் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் தேவை. அவற்றை நம்மால் தக்க சமயத்தில் ஏற்படுத்த முடியவில்லையென்றால் விளையக் கூடிய பின்விளைவுகள் பாதகமானவை
  • இந்த நிலையில் இடது சாரிக் கட்சிகள் சில பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒரு புறம் பல்லாயிரக் கணக்கில் பல்கிப் பெருகி வரும் சேவை மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படக் கூடும் ஆபத்தைக் கருத்தில் கொள்ள முயற்சி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. அதிக வருவாய் மற்றும் சற்றே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இந்தியனுக்கு அளிக்கக் கூடிய அத்தகைய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க யோசனைகள் செய்வதாகத் தெரியவில்லை. அதரப் பழமையான சில தொழிலாளர் நலச் சட்டங்களை, ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன், அடைகாத்து வருகிறார்கள்
  • பண்ணை மற்றும் விவசாயத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் (சாலைகள், குளிர்பதன வசதிகள்) மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. இதற்கான தொழில்நுட்பதை இறக்குமதி செய்து தேவையான முதலீடுகளைச் செய்யக் வல்ல தனியாரின் அந்நிய முதலீடுகளுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்
  • அரசின் தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்றவை அரசுக்கு ஏகப் பட்ட பொருட் செலவைத் தரக் கூடியவை. இந்தத் திட்டங்கள் எந்தத் திசையில் செல்லப் போகின்றன என்பதில் தெளிவில்லை
  • பேசல் II நியமங்களை அமலுக்குக் கொண்டு வந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கும் அரசு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை வழங்க வேண்டிய வங்கிகளில் அதன் முதலீட்டு விகிதத்தைக் குறைக்க இயலவில்லை. முறையான செலவுகளுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்கும் நம் அரசு, வங்கிகளில் தனது முதலீட்டை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் அதிகரிக்கப் போவது எப்படி?
  • சில வாரங்களுக்கு முன் தரமற்ற சில தரகர்களும், நேர்மையற்ற சில நிறுவனர்களும், சில கறுப்புப் பண முதலை முதலீட்டாளர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு சல்லிக்காசு பங்குகள் (மற்றும் வழக்கிலில்லாப் பங்குகள்) விலைகளை எக்கச் சக்கமாக ஏற்றி, பல விபரம் தெரியா முதலீட்டாளர்களின் பொருள் இழப்புக்குக் காரணமானார்கள். அரசு அமைப்புகள் சற்றே விழிப்புடன் செயல்பட்டதால் இந்த இழப்பு மேலும் பெரிதாகாமல் சமயத்தில் தவிர்க்கப் பட்டது. இருந்த்தும் இந்தியப் பங்குச் சந்தை இந்த வகை ஆபத்துகளை இன்னமும் முழுமையாகத தவிர்க்கவில்லை.

சென்ஸெக்ஸின் இந்த வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய நோக்கு என்னவென்றால் மேற்கூறிய நிலைகளோ, அல்லது வளர்ச்சிக்கு பாதகம் என்று கருதப் படும் எந்தவொரு செய்தியோ (உதாரணங்கள்: உயர்ந்து வரும் கச்சா எண்ணை விலை, மும்பை வெள்ளம், கட்ரீனா சூறாவளி ஏற்படுத்திய சேதம், ஈரான் இந்தியாவிற்கு திரவ எரிவாயு அளிக்கச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாக வந்த செய்தி) சென்ஸெக்ஸ் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.

சென்ஸெக்ஸ் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் - "இந்தியாவில் இன்று திறந்த நிலையில் முதலீடு இல்லாத ஒருவனுக்கு முதலீட்டு அறிவு மட்டு" என்று அன்னிய முதலீட்டாளர்களிடையே வளர்ந்து கொண்டிருக்கும் எண்ணமும் எதிர்பார்ப்பும்தான். கடந்த ஜீன் மாதம் முதல், மாதம் ஒரு பில்லியன் என்ற அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இந்தியாவில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகம் என்றாலும் சீனாவிற்குக் கிடைக்கும் அந்நிய முதலீடுகளை ஒப்பிடும் போது இந்தியா இன்னமும் மிகக் குறைவாகத்தான் முதலீடுகளைப் பெறுகிறது. அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வந்து கொண்டிருந்த முதலீடுகள் போக இன்று ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கூட இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க

பணம் காய்க்கும் பங்குகள் - 1

நல்ல நிறுவனங்களின் பங்குகள், பணம் காய்க்கும் மரங்கள். நல்ல நிறுவனங்களின் பங்குகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீண்ட காலம் பயணம் செய்தால் அந்தப் பங்குகளுடன், நம்முடைய பணமும் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அத்தகைய சில நல்லப் பங்குகளை "பணம் காய்க்கும் பங்குகள்" என்ற தலைப்பில் கூறலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு அவசியம் ஒரு Disclaimer கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் பங்குச்சந்தையை 100% சரியாக கணிப்பது யாராலுமே முடியாத காரியம். சில கணிப்புகளின் அடிப்படையில் விலை உயரும் என்று நான் நம்புகிற/அல்லது பரவலாக நம்பப்படுகிற பங்குகளை தான், நான் இங்கு பரிந்துரை செய்யப் போகிறேன். அதே சமயம் சொல்லப்படுகின்ற உயர்வை இந்தப் பங்குகள் அடையாமலும் போகலாம். இங்கு சொல்லப்படும் பங்குகள் நீண்டகால முதலீட்டிற்கு உகந்த பங்குகளாகத் தான் இருக்கும். குறுகிய காலத்தில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலீட்டாள்கள் மட்டும் இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

IDFC - INFRASTRCUTURE DEVELOPMENT AND FINANCE CORPORATION

இந்த ஆண்டு ஜூலை மாதம் IPO வந்த இந்தப் பங்குகளின், தற்போதைய விலை ரூ 71 . IPO விலையில் இருந்து தற்போதைய விலையை ஒப்பிடும் பொழுது முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே இந்தப் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம்.

ஏன் இந்தப் பங்குகளை வாங்கலாம் ?

IDFC நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். குறிப்பாக மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, சாலைகள் போன்றவற்றுக்கு கடன் கொடுக்கும் முக்கிய நிறுவனமாக உள்ளது.

நாட்டின் பெருகிவரும் உள்கட்டமைப்பு தேவைகள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். 2005ம் ஆண்டில் இந் நிறுவனம் நாட்டின் உள்கட்டமைப்பு கடன் தேவைகளில் 25% கடன் வழங்கியுள்ளது.

அது சரி.. கடன் கொடுக்கும் நிறுவனமாயிற்றே, கொடுக்கும் கடன் சரியாக வசூல் செய்யாவிட்டால் பிரச்சனை தானே ?

Non performing assets (NPA) என்பது திருப்பி செலுத்தப்படாத, நிலுவையில் நிற்கும் கடன். இந்தியாவில் உள்ள நிதி மற்றும் வங்கிகளின் முக்கிய பிரச்சனையே இந்த நிலுவையில் இருக்கும் கடன் தொகை தான். பல வங்கிப் பங்குகளை விட HDFC பங்குகள் மட்டும் எகிறிக் கொண்டே இருக்கிறதே எப்படி ? மிகவும் குறைவான NPA இருக்கும் வங்கிகளில் HDFC முக்கியமான நிறுவனம். அதாவது HDFC தான் கொடுத்த கடனை ஒழுங்காக வசூலித்து விடுகிறது. IDFC யும் அது போலத் தான். IDFCக்கும் அந்தப் பிரச்சனை இல்லை.

இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமானால், உள்கட்டமைப்பு பெருக வேண்டும், உள்கட்டமைப்பு பெருகினால் IDFC மற்றும் இது போன்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வளரும். இந்த நிறுவனங்கள் உயர்ந்தால், அந்தப் பங்குகளை வாங்கும் நாமும் உயர்வோம். மேலும் படிக்க

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2

இந்திய ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் பற்றி நான் பெரிய அளவில் விளக்கம் தரத் தேவையில்லை. இந்தியப் பங்குச்சந்தை 16,000ஐ எட்டும் என்று செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை எந்தளவிற்கு விற்கும், அது போல பங்குச்சந்தையில் ஊழலா ? என்று கேள்விக்கணையுடன் செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை பரபரப்பாக விற்குமா என்று சிந்தனையில் தான் நிறைய செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியப் பங்குச்சந்தை இந்த ஆண்டு 8000ஐ எட்டும் என்று மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே நம்பப்பட்டது. நான் கூட இது குறித்து அப்பொழுது ஒரு கட்டுரை எழுதினேன்.

எனவே குறியீடு 8000ஐ எட்டியது ஆச்சரியத்தை கொடுக்க வில்லை. ஆனால் அது எட்டப்பட்ட விதம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நிய முதலீடு, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறன.

கடந்த மாதம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி The Economist ல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை கேலி செய்துள்ளது. இது மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் என்றாலும், இந்தக் கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் உள்கட்டமையப்பு குறித்து இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. பல வருடங்களாக பொருளாதாரச் சீர்திருத்தம் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறது. இது தவிர நிலக்கரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்திருப்பதாக The Economist தெரிவிக்கிறது.

இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு கொடுத்து வரும் நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்களை தனியமார் மயமாக்கத்திற்கு எழுந்துள்ள பிரச்சனைகள் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன. இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் இத்தகைய அரசியல் தடைக்கற்களும், மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

இத்தகைய சூழலில் பங்குச்சந்தை எந்தக் கவலையும் இல்லாமல் 8500 புள்ளிகளை எட்டுகிறது. இந்தியப் பங்குச்சந்தை குறியீடு உயர்வது இந்தியப் பொருளாதாரம் உயர்வதின் அறிகுறி என்ற வாதம் நிச்சயமாக சரியானது அல்ல. அது போல இந்தியா ஒளிர்கிறது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.

பின் எதனால் பங்குச்சந்தை உயர்கிறது ?

இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்ல, உலகின் பல பங்குச்சந்தைகளும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசியாவில் இந்தியாவை விட தாய்வான் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் குவிந்து கொண்டு இருக்கிறது.

ஏன் ? அது தான் Global liquidity

இப்பொழுது உலகில் நிலவும் பொருளாதார சூழல் தான் பல பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கியமான காரணம்

அமெரிக்காவின் கையிருப்பில் (Federal Reserve) இருக்கும் டாலர் மற்றும் உலகின் பல நாடுகளின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலவாணி, இவை தான்


Global liquidity எனப்படுகிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 20% அதிகரித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று liquidity இருந்ததில்லை என்று The Economist தெரிவிக்கிறது.

ஏன் இந்த நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது ?

அமெரிக்காவின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக (3.75%) இருக்கிறது. இந்த குறைவான வட்டி விகிதத்தை பயன்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் நிறுவனங்கள் பிற நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஆசியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் தங்கள் நாணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மிக அதிகமான அந்நியச் செலவாணி தேவை. எனவே அமெரிக்க டாலர் மற்றும் பாண்டுகளை (Bonds) அதிகளவில் வாங்கி தாங்கள் அந்நியச்செலவாணி கையிருப்பை அதிகப்படுத்துகின்றன (இது குறித்த எனது முந்தைய கட்டுரை - உலகின் பொது நாணயம்). அந்நியச் செலவாணி அதிகரிக்கும் பொழுது இந் நாடுகளின் கையிருப்பில் இருக்கும் உள்நாட்டுப் பணமும் அதிகரிக்கிறது. இது இந் நாடுகளில் உள்ள வங்கிகளின் பணக்கையிருப்பை அதிகரிக்கிறது.

வங்கிகள் இதனால் அதிக அளவில் கடன் கொடுக்க தயராக இருக்கிறன. வட்டியும் குறைகிறது. வட்டி குறைவதால் மக்கள் சேமிப்பை அதிகம் விரும்பவதில்லை. மாறாக வீடு மற்றும் பிற முதலீடுகளில் செலவழிக்கத் தொடங்குகின்றனர். மக்கள் செலவு செய்யும் பொழுது அது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

இது தான் இப்பொழுது பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இருக்கும் வட்டியால் பொதுமக்களும் அதிக அளவில் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு பணம் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தற்பொழுது வசந்த காலம் தான். மக்கள் இதில் செய்துவரும் பெரும் முதலீடுகளால் அமெரிக்க வங்களில் கையிருப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த அதிகப்படியான பணத்தை இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் பிற பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். எனெனில் இங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். இதனால் பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் ? இது தொடருமா ?

இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. எப்படி ?

கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக செலவழிக்க தொடங்கும் பொழுது பொருட்களுக்கு இருக்கும் அதிகமான தேவையால் (Demand)
பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது பணவீக்கமும் குறைவாகத் தான் இருக்கிறது. காரணம், அமெரிக்கச் சந்தையில் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பொருட்கள் மலிவான விலையில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு வித்தியாசமான பொருளாதார சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவி வருகிறது

சமீப காலாங்களில் அமெரிக்கவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார ஏற்றாதாழ்வுகளுக்கு உலகில் நிலவும் இந்த liquidity தான் காரணம் என்று சில பொருளாதார வல்லுனர்கள் நினைக்கின்றனர். இது ஆசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் டாலர் உலகின் பொது நாண்யமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் வெகுவிரைவில் சீன நாணயம், யூரோ நாணயம் போன்றவற்றால் பாதிப்படையும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர். அதனால் அமெரிக்க வட்டி வகிதத்தை உயர்த்தி பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சிலரின் கருத்து.

ஆனால் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும். அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே வட்டி விகிதங்களை அதிகப்படியாக உயர்த்தாமல் 0.25% என்ற விகிதத்தில் அமெரிக்கா குறைவாக படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

உலகின் நிலவும் இந்த பொருளாதாரச் சூழல்களே இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் ஏனைய பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கிய காரணம்.

அது சரி.. இந்தியப் பங்குச்சந்தையை ஏன் இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிவைத்து உயர்த்துகின்றன ? இந்தியப் பங்குச்சந்தையின் Valuation மிக அதிகமாக இருக்கிறது என்று செல்கிறார்களே அது உண்மை தானா ? Valuation அதிகமாக இருப்பதால் இந்தியப் பங்குகள் மேலும் உயரும் சாத்தியங்கள் இருக்கிறதா ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம் மேலும் படிக்க

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 1

பங்குச்சந்தையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது ? இந்தக் கேள்வி சில வாரங்களாக இந்திய ஊடகங்களில் அதிகமாக அலசப்படுகிறது. பலரும் பல யூகங்களை முன்வைக்கின்றனர். BSE பங்குச்சந்தைக் குறியீடு 10,000 புள்ளிகளை எட்டும், 16,000 எட்டி விடும் தூரம் தான் போன்ற பேச்சுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 8000 நோக்கி பங்குச்சந்தை சரியும் என்ற எண்ணம் பரவலாக தென்பட தொடங்கி இருக்கிறது.

நான் சென்னையில் இருந்து இங்கு வந்த பொழுது பங்குச்சந்தை 6000ஐ கடக்கும் நிலையில் இருந்தது. இங்கு வந்த சில மாதங்களில் குறியீடு 8000ஐ எட்டி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அடுத்து வந்த சில நாட்களில், ஜெட் வேகத்தில் குறியீடு 8500ஐ எட்டி என்னை அச்சப்படுத்தியது. ஆம் ...குறியீட்டின் உயர்வு பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையே ஏற்படுத்தியது.

இந்த உயர்வுக்கு என்ன காரணம் ? பங்குச்சந்தைக்கு ஏதேனும் சாதகமான சூழல் நிலவியதா ?

உண்மையில் பங்குச்சந்தையை உயர்த்தக் கூடிய, இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்த்தக் கூடிய எந்த நிகழ்வும் கடந்த சில மாதங்களில் நடக்க வில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால் குறியீடு அவற்றை பற்றிக் கவலை கொள்ள வில்லை. உயர்ந்து கொண்டே தான் இருந்தது. அது போலவே பங்குச்சந்தையின் உயர்வுக்கு பிறகு பங்குவிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய Correction கூட நிகழ வில்லை. இது போன்றவை தான் அனைவரது மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்தியப் பங்குச்சந்தையின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் - Global excess Liquidity. தற்பொழுது உலகில் இருக்க கூடிய மிக அதிக அளவிலான பண புழக்கம். இது பற்றி அலசுவதற்கு முன்பாக இந்த உயர்வின் காரணமாக எழுந்திருக்கும் ஊடக எண்ணங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கவலை போன்றவற்றையும் கொஞ்சம் கவனிக்கலாம்.

இந்தியப் பங்குச்சந்தையின் எதிர்காலம் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. அடுத்து வரும் சில ஆண்டுகளில் குறியீடு 15,000 கடக்கும் என்ற பரவலான எண்ணத்தில் எனக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் அது படிப்படியாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கேற்ப வளர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறக்கூடிய சூதாட்ட மையமாக இந்தியப் பங்குச்சந்தை மாறி விடக்கூடாது.

ஹர்ஷத் மேத்தாவின் ஊழலால் பங்குச்சந்தை உயர்ந்த நிலையும் அதன் பிறகு கேத்தன் பராக்கின் கதையுடனும் தற்போதைய நிலை ஓப்பிட்டு பார்க்கப்படுகிறது. பிரதமர், நிதியமைச்சர், மைய அரசின் புலனாய்வு துறை, வருமான வரித் துறை போன்ற அனைத்து துறைகளும் பங்குச்சந்தையை கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியப் பங்குச்சந்தைக்கு பணம் வரும் வழிகள் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது. வங்கிகளில் இருந்து ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தைக்கு பணத்தை மாற்றியது போல தற்பொழுது ஏதேனும் செய்யப்படுகிறதா என்பது குறித்து அரசாங்கம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. பங்குத் தரகர்களின் அலுவலகங்கள், வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது தேவை தானா என்று கேள்வி எழுப்பப்படுகிற அதே நேரத்தில் குப்பை நிறுவனங்களின் சூம்பிக் கிடந்த பங்குகள் விலை எகிறியுள்ளதை பார்க்கும் பொழுது பங்குச்சந்தையில் மற்றொரு ஊழல் நடந்து கொண்டிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வுகள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிகழ்வுகள் இந்தியப் பங்குச்சந்தையை உலகின் பல முண்ணனி பங்குச்சந்தைகளின் தரத்திற்கு இணையாக உயர்த்தி இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தை என்றில்லாமல் ஆசியாவில் இருக்க கூடிய பல பங்குச்சந்தையிலும் இந்த முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு 8.5 பில்லியன் டாலர்களுக்கு முதலீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இவர்களின் முதலீடு இது வரையில் 8பில்லியன் டாலரை எட்டி விட்டது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் செய்யும் முதலீடு தான் குறியீடுகளின் உயர்வுக்கு முக்கிய காரணம். சில பங்குங்களில் சில பங்குத் தரகர்களின் தகிடு தத்தங்கள் நடந்திருக்கிறது என்றாலும் இந்தியப் பங்குச்சந்தையின் மொத்த உயர்வுக்கும் காரணம் இந்த கோல்மால் வேலைகள் தான் என்று முடிவு செய்து விட முடியாது ? காளைச் சந்தையில் சில பங்குகளில் இது போன்றவை நிகழ்வது சர்வசாதாரணம்.

இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு முக்கிய காரணம், நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய Global Liquidity தான்.

இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்

எனது பங்குச்சந்தை பதிவை கடந்த சில மாதங்களாக வேலைப்பளு, இந்திய பங்குச்சந்தையை கவனிக்க முடியாத நேர வேறுபாடு போன்ற சூழலால் எழுத முடியாத நிலையில் இருந்தேன். எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்கள் பலருக்கு (சும்மா ஒரு பந்தா தான், கொஞ்சம் பேர் தான் மெயில் அனுப்பி இருந்தாங்க) முடிந்த வரையில் பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன். சிலருக்கு அனுப்ப முடியவில்லை. இவ்வாறான நண்பர்களின் ஆதரவு தான் மறுபடியும் என்னை எழுத தூண்டி இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி
மேலும் படிக்க

உலகின் பொது நாணயம் : டாலர் vs யூரோ - 1

உலகின் பொது நாணயமாக (World's reserve currency) அமெரிக்க டாலர் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி வலுப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த வாரம் ஹிந்து நாளிதழில் கூட இது பற்றிய ஒரு தலையங்கம் வெளியாகி இருந்தது.

உலகின் பொது நாணயமாக டாலர் இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பில் ஒரு நிலையான தன்மை இருக்க வேண்டும். மாறாக டாலரின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நிலையில்லாமல் இருக்கிறது. இந் நிலையில் அதற்கு மாற்றாக யூரோ அல்லது சீனாவின் RenMinBi நாணயம் உருவாகக்கூடும் என்று கருதப்படுகிறது. சீனாவின் நாணயம் கட்டுப்படுத்தப்பட்ட நாணயமாக இருப்பதால் டாலருக்கு மாற்றாக யூரோ தான் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.

1944 உலகப் போருக்குப் பிறகு பிரிட்டனுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்பால் அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகிய சூழலில் டாலர் உலகின் பொது நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த முறையின் படி மற்ற நாட்டின் நாணயங்கள் அமெரிக்க டாலருடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்தில் நிலையாக பிணைக்கப்பட்டது. உதாரணமாக 1 அமெரிக்க டாலர் = 10 இந்திய ரூபாய். இதில் எப்பொழுதும் எந்த மாற்றமும் இருக்காது. இதனை Fixed Exchange Rate என்று சொல்வார்கள். இது போலவே அமெரிக்க டாலருடன் தங்கமும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பிணைக்கப்பட்டது.

இந்த முறை மூலம் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சனைகளால் 1970க்குப் பிறகு இந்த முறை மாற்றப்பட்டு சந்தை வர்த்தகம் மூலம் ஒரு குறிப்பிட்ட நாணயத்திற்கு இருக்கும் தட்டுப்பாடு, தேவை போன்றவை கொண்டு நாணயத்தின் மதிப்பை கணக்கிடும் முறை அமலுக்கு வந்தது - Floating. இதுவே தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், சக்தி வாய்ந்த வல்லரசாகவும் அமெரிக்கா இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் இருக்க வில்லை. ஆனால் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது அமெரிக்காவின் டாலருக்கு போட்டியாகவே கொண்டு வரப்படுவதாக அனைவரும் கருதினர்.

உலகின் பொது நாணயத்திற்கு ஏன் இந்தப் போட்டி ?

உலகின் பொது நாணயமாக டாலர் இருப்பதால் அமெரிக்காவிற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அமெரிக்காவின் இறக்குமதி/ஏற்றுமதி நிலவரங்களில் கடுமையான பற்றாக்குறை உண்டு. அதன் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். இந்தப் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து நீடிப்பது எப்படி ?

அது தான் உலகின் பொது நாணயம் கொடுக்கும் நன்மை

உலகின் பல்வேறு வர்த்தகங்கள் டாலர் மூலமாகவே நடக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்றவை. கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமெனில் டாலர் வேண்டும். அதனால் உலகில் உள்ள ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் டாலரை வாங்குகின்றன. இது தவிர ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில் அதன் நாணயத்தின் மதிப்பு குறைவாக இருக்க வேண்டும். ஏற்றுமதி அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும். கடும் போட்டியிருக்கும் ஏற்றுமதியில் பல நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முயலுகிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அவர்களுக்கு டாலர் வேண்டும். அதற்காக நிறைய டாலரை வாங்குகிறார்கள். அமெரிக்கா வெளியிடும் Treasury Bonds போன்றவற்றையும் பெற்று தங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு உலகின் பெரும்பங்கு டாலர் கையிருப்பு ஆசிய நாடுகளிடம் தான் உள்ளது. அமெரிக்க டாலரில் 55% முதல் 70% அமெரிக்காவிற்கு வெளியே தான் இருக்கிறது.

பல ஆசிய நாடுகள் ஏராளமான அமெரிக்காவின் பாண்ட்களை வைத்திருக்கிறார்கள். தங்கள் நாணயத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்க டாலரை தங்கள் கையிருப்பில் இந்த நாடுகள் தேக்கிக் கொள்கின்றன. இதனால் ஆசிய நாடுகளின் நாடுகளின் நாணய மதிப்பு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களால் அமெரிக்காவிற்கு குறைந்த விலைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. இந்த தேக்கம் அமெரிக்காவிற்கு வட்டியில்லா கடன் போலத் தான். டாலர் உலகின் பொது நாணயமாக இருக்கும் வரையில் இது திருப்பி தரத் தேவையில்லாத கடனாக அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா நிறைய இறக்குமதிகளை செய்தாலும் உலகின் பொது நாணயமாக இருப்பதால் கிடைக்கும் கடனை கொண்டு குறைந்த விலைக்கு ஆசிய நாடுகளின் பொருட்களை பெற்றுக் கொண்டு சுகமாக காலம் கழிக்க முடிகிறது.

உதாரணமாக சீனாவின் நாணயத்தை எடுத்துக் கொண்டால் அது அமெரிக்க நாணயத்துடன் ஒரு குறிப்பிட்ட பரிமாற்றத்த விகிதத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. இதனால் டாலர் சரியும் பொழுதெல்லாம் அதன் நாணயமும் சரிகிறது. நாணயம் சரிவதால் அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அதன் பொருட்களும் மலிவாக கிடைக்கிறது. இவ்வாறான முறையை சீனா கைவிட வேண்டுமென அமெரிக்கா வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால் சீனா கண்டுகொள்வதில்லை. சீனாவுடனான அமெரிக்காவின் ஏற்றுமதி/இறக்குமதி ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகம். அமெரிக்காவின் மொத்த வர்த்தக ஏற்றத்தாழ்வில் கால்வாசி சீனாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வாலேயே ஏற்படுகிறது.

சீனா இம் முறை தனக்கு வசதியாக இருக்கும் வரை இதனையே பின்பற்றும். ஆனால் கூடிய விரைவில் உலக வர்த்தக மையத்தின் சட்டதிட்டங்களுக்கேற்ப இதனை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் பொழுது தனது நாணயத்தின் கட்டுப்பாட்டு தன்மையை நீக்கும். அப்பொழுது சீனாவின் நாணய மதிப்பு உயரும். அமெரிக்காவில் மலிவாக கிடைக்கும் ஏராளமான சீனப் பொருட்கள் விலையும் உயரும். பல சீனப் பொருட்களை நம்பி இருக்க வேண்டிய சூழலில் அமெரிக்கா இருக்கிறது. பொருட்களின் விலை உயரும் பொழுது பணவீக்கம் அதிகரிக்கும். மக்களின் வாழ்க்கை தரத்திற்கு சவால் எழுகிறது.

இந்த நிலை ஏற்படுமா ? அமெரிக்க டாலர் உலக நாணயாமாக இருக்கும் நாட்கள் எண்ணப்படுகிறதா ?

அடுத்தப் பதிவில் பார்ப்போம் மேலும் படிக்க

சந்தை ஏன் சரிகிறது ?

கடந்த சில வாரங்களாக சந்தை கடுமையாகச் சரிந்து கொண்டிருக்கிறது. மைய அரசின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வரலாறு காணாத உயர்வைப் பெற்று 7000ஐ தொட்டு விடும் என்று அனைவரும் எண்ணியதற்கு மாறாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 587 புள்ளிகள் சரிந்து விட்டது. இது போலவே தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி, 198 புள்ளிகள் சரிந்து விட்டது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1,47,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் சந்தையில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு இந்த வாரம் திங்களன்று நல்ல லாபமுடன் தொடங்கிய வர்த்தம் செவ்வாயன்று கடும் சரிவைச் சந்தித்து. காலை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவுடன் காணப்பட்ட சந்தை ஒரு கட்டத்தில் 180 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்திருந்தது. புதனன்றும் சந்தையில் கடுமையான தள்ளாட்டமே நிலவி பிறகு ஓரளவு லாபமுடன் வர்த்தகம் நிறைவுற்றது

ப.சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு வேகமாக எகிறியச் சந்தை எதனால் இப்படி சரிந்து கொண்டிருக்கிறது ? ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ?

இந்தியப் பங்குச்சந்தையின் உயர்வும் தாழ்வும் இந்தியர்களின் கைகளில் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளில் தான் சந்தையின் போக்கு இருக்கிறது.

உதாரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பார்தி பங்குகளில் ஏற்பட்ட சரிவை பார்த்தாலே சந்தையின் மொத்த போக்கும் புரிபடும். பார்தி பங்குகளில் தன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அன்று காலை 233 ரூபாயை எட்டிய பார்தி பங்குகள் இந்த செய்தி வெளியானவுடன் சரியத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியாது என்று தெரிந்தவுடன் முதலீட்டாளர்கள் இனி பார்தி பங்குகளில் ஏற்றமிருக்காது என்று கருதி இந்தப் பங்குகளை விற்க தொடங்கி விட்டனர்.

சந்தையின் மொத்த போக்கும் இதேப் போலத் தான் இருக்கிறது. சந்தையின் செண்டிமெண்டை மாற்றும் அதி வல்லமை மிக்கவர்களாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இருக்கின்றனர்.
அவர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து விலகுகிறார்களா ? கிடையாது. ஆனால் அவர்களின் முதலீடு குறைந்துள்ளது, அல்லது மேலும் குறையக் கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது.

ஏன் இந்த அச்சம் ?

  • அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் அமெரிக்க வட்டி விகிதத்தை உயர்த்தியதும் மேலும் உயர்த்தக் கூடும் என்ற ஊகங்களும்
  • கச்சா எண்ணெய்யின் விலையேற்றம்

பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மற்றும் பிற ஆசியப் பங்குச்சந்தைகளை லாபம் ஈட்டும் ஒரு இடமாக கருதியே முதலீடு செய்கின்றனர். அவர்களின் முதலீட்டிற்கு தேவைப்படும் நிதியும் மிக குறைந்த வட்டியில் அமெரிக்காவில் கிடைக்கிறது. அந்தப் பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் பொழுது ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் முதலீட்டிற்கு தேவைப்படும் பணத்தின் வட்டியும் அதிகரிக்கிறது.

வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் இங்கு ரிஸ்க் மிக அதிகம். அதிக வட்டியை கொண்டு பெற்ற பணத்தை ரிஸ்க் அதிகம் உள்ள நாடுகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளின் சந்தையிலோ அல்லது பாண்ட் போன்ற Debt சந்தையிலோ முதலீடு செய்வதை பாதுகாப்பான நல்ல முதலீடாக வெளிநாட்டு நிறுவனங்கள் கருதக் கூடும். அதனால் அவர்களின் முதலீடு இந்திய மற்றும் பிற ஆசிய பங்குச்சந்தைகளில் குறையலாம். அவ்வாறு குறையும் பொழுது இந்தப் பங்குச்சந்தையின் உயர்வு கேள்விக்குறி தான்.
இந்த அச்சம் தான் இந்திய மற்றும் ஆசியாவில் உள்ள பிற பங்குச்சந்தைகளை சரிய வைக்கிறது.

செவ்வாயன்று மும்பை பங்குச்சந்தை சரிந்த பொழுது ஆசியாவில் இருக்கும் பிற பங்குச்சந்தைகளும் கடுமையாக சரிந்தன. ஜப்பானின் Nikkei குறியீடு 225 புள்ளிகளும், ஹாங்காங்கின் Seng 185 புள்ளிகளும், தென்கொரியாவின் Kospi 18 புள்ளிகளும், தாய்வானின் Taiex 87 புள்ளிகளும் சரிந்தன. இவையனைத்தும் 1.5% முதல் 2% அளவிலான சரிவு. இந்தியப் பங்குச்சந்தையின் சரிவு சுமார் 2.19%
ஆசிய நாடுகளில் காணப்படும் இந்தச் சூழ்நிலையே இந்தியப் பங்குச்சந்தையிலும் பிரிதிபலிக்கிறது.

வெளிநாட்டு முதலீடு பற்றிய இந்த அச்சம் சரியானதது தானா ?

ஜனவரி மாதத்திலும் இதே அச்சம் நிலவியது. பிறகு அமெரிக்காவின் வட்டி விகிதம் 0.25 என்ற குறைவான விகிதத்தில் மட்டுமே உயர்த்தப்பட்டதால் அந்த பாசிடிவ் செண்டிமெண்ட்டில் சந்தை எகிறியது. பிறகு பட்ஜெட்டை ஒட்டிய வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை முடக்கி கொண்டதால் சந்தை தடுமாறியது. பட்ஜெட்டிற்கு பிறகு வெளிநாட்டு முதலீடுகள் மறுபடியும் அதிகரிக்க குறியீடு 7000 ஐ நெருங்கியது. இப்பொழுது மறுபடியும் சரிகிறது.

சந்தையின் தற்போதைய சரிவு இப்பொழுதுள்ள சூழ்நிலைகளை ஒட்டிய தற்காலிக பின்னடைவு தான். முதலீட்டாளர்களின் இந்த அச்சம் தற்போதைய சூழ்நிலைகளைச் சார்ந்து இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

குறுகிய கால சாதக பாதகங்களை விட நீண்ட காலத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு இழுக்கும் அஸ்திரம் நம்மிடம் இருக்கிறது. அந்த அஸ்திரம் அவர்களை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி இழுக்கும் வல்லமை கொண்டது. உலகில் வேகமாக வளரும் இரண்டு பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று (மற்றொன்று சீனா). இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலீடுகளை இந்தியப் பங்குச்சந்தையை நோக்கி நிச்சயமாக இழுக்கும். வளர்கின்ற பொருளாதாராங்களில் தான் அவர்களுக்கு லாபமும் அதிகம்.

சரி...அடுத்து என்ன நடக்கும் ?

இந்த ஆண்டு இது வரை சுமார் 4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், அடுத்து நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளின் நிலவரத்தைப் பொறுத்து தங்கள் முதலீடுகளை மறுபடியும் சந்தைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய நிறுவனங்களின் அறிக்கைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சந்தை நல்ல முன்னேற்றம் அடையும்.

மும்பை பங்குச்சந்தை குறியீடு 6000 க்கும் கீழ் சரியும் வாய்ப்புகள் இருப்பதாக தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.

ஆனால் உண்மையில் பங்குகள் நமக்கு குறைவான விலையில் கிடைக்கின்றன, அல்லது மேலும் சரியும் பொழுது இன்னும் குறைவான விலையில் நமக்கு கிடைக்க போகின்றன என்பது தான் உண்மை.
ஒரு நல்ல முதலீட்டாளன் சந்தையில் எதிர்நீச்சல் போட வேண்டும். அதாவது சந்தை சரியும் பொழுது, அந்த சரிவு நிலையில் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். சந்தை உச்ச நிலையில் இருக்கும் பொழுது பங்குகளை விற்று விட வேண்டும்.

இது நல்ல பங்குகளை குறைந்த விலையில் வாங்கக் கூடிய சரியான தருணம்.

(இன்றைய வர்த்தகம் தொடங்கி விட்டது. மும்பை பங்குச்சந்தை 80 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிறிக் கொண்டு இருக்கிறது)

மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 9



1992 ல் நடந்த பங்குச்சந்தை ஊழலுக்குப் பிறகு 1998ல் மறுபடியும் ஒரு புதிய ஊழலை ஹர்ஷத் மேத்தா செய்யத் துணிந்தான். இவ் வார தமிழோவியத்தில் ஹர்ஷத் மேத்தா 9ம் பாகத்தில் அது பற்றி எழுதியிருக்கிறேன்

மேலும் கடந்த வார சந்தை நிகழ்வுகள் குறித்து தமிழோவியம் பங்குச்சந்தைபார்வையில் ஒரு அலசல் - Block Deal மேலும் படிக்க

அமுதசுரபி - நிதிச் சிறப்பிதழ்



இம் மாத அமுதசுரபி இதழ், நிதிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல நல்ல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

பங்குச்சந்தை பற்றிய எளிய அறிமுகமாக பங்குச்சந்தை - உள்ளும், புறமும் என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்



பட்ஜெட் நாளன்று, பங்குச்சந்தை சரிய வேண்டும். இது தான் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் எழுதப்படாத நியதி. இந்த ஆண்டு ஒரு மாற்றம். பங்குச்சந்தை பட்ஜெட் தினத்தன்று 144 புள்ளிகள் எகிறியது.

கடந்த ஆண்டை தவிர சிதம்பரத்தின் ஒவ்வொரு பட்ஜெட்டையும் பங்குச்சந்தை ஆரவாரமாய் வரவேற்கவேச் செய்துள்ளது. கடந்த ஆண்டு கூட பங்குப் பரிவர்த்தனை வரி (STT) என்ற வரியாலேயே பங்குச்சந்தை சரிந்தது. மற்றபடி அது கூட ஒரு சிறப்பான பட்ஜெட் தான்.

பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் மிக அதிகமாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, இந்த வருட முடிவில் 8000ஐ எட்டும் என்று மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனம் கணித்துள்ளது. இதை விட ஆச்சரியம் அடுத்த பத்தாண்டுகளில் குறியீடு 25,000 எட்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

குறியீடு உயர வேண்டுமானால் பங்குச்சந்தைக்கு பணம் குவிய வேண்டும். பணம் குவியவிருக்கும் சில வழிகளைப் பற்றி இவ் வார தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - எகிறப் போகும் பங்குச்சந்தை என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.


மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - 4 - Fringe Benefits Tax



இந்தப் பட்ஜெட்டின் மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம் - Fringe Benefits Tax. திரு.மாலன் தன் பதிவில் கூறியிருந்த இரண்டு இந்தியாவில், வளமான ஒரு இந்தியாவை எரிச்சல் படுத்தியிருக்கும் வரி.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் பலச் சலுகைகளுக்கு இந்த Fringe Benefits Tax மூலம் வரி விதிக்கப்படுகிறது. நிறுவனத்தின் நிறைய ஊழியர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்துவதால் இந்த வரி ஊழியர்களுக்கு விதிக்கப்படாமல் நிறுவனங்களுக்கு (Cost To Company) விதிக்கப்படுகிறது.

கீழே தரப்பட்டுள்ள பலச் சலுகைகளுக்கு இனி வரி விதிக்கப்படும்.

As many as eighteen categories of expenses are proposed to be covered. These include entertainment, festival celebrations, gifts, use of club facilities, food and beverages (excluding that at the work place), maintenance of guest house, conference, employee welfare, use of health clubs, sports and similar facilities, sales promotion including publicity, conveyance, tours and travel including foreign travel expenses, hotel boarding and lodging, running and maintenance of motor cars and aircrafts, consumption of fuel other than industrial fuel, use of
telephone, scholarship to the children of employees.

பெரிய பட்டியல் தான். இதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது - foreign travel expenses, hotel boarding and lodging. இதற்கு எழுந்த பலமான எதிர்ப்புக் காரணமாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்த வரியால் அதிகம் பாதிப்படைவது மென்பொருள் நிறுவனங்கள் தான். வெளிநாட்டுப் பயணங்கள் மென்பொருள் நிறுவனங்களில் முக்கியமானது. வெளிநாட்டிற்கு System Study போன்றவற்றுக்குகாகச் செல்லும் வழக்கம் மென்பொருள் நிறுவனங்களின் தொழில் சார்ந்த நடைமுறை. வெளிநாட்டிற்குச் செல்லும் ஊழியர்களுக்கு வழங்கும் அலவுன்சங்கள், தங்கும் வசதிகள், போக்குவரத்துச் செலவுகள், இந்தியாவிற்கு பேசும் தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றுக்கு இப்பொழுது வரி கிடையாது.

உதாரணமாக நான் அமெரிக்காவிற்கு B1 விசாவில் செல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பயணம் மேற்கொள்ளாமல் என்னால் இங்கு வேலை செய்ய முடியாது. அங்குச் சென்று அங்குள்ள தேவைகளை அறிந்தப் பின் தான் இந்தியாவில் அந்தப் பணியைச் செய்ய முடியும்.

இதற்கான விமானச் செலவு தவிர அங்கு தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தொகையை அலவுன்சாக கொடுப்பார்கள். ஹோட்டலில் தங்கும் செலவு, போக்குவரத்துச் செலவு, தொலைபேசிச் செலவு என அனைத்தும் எனக்குத் தரப்படும் சலுகைகள்.

எனக்கு அலவுன்சாக தரப்படும் தொகையை நான் சேமித்து இந்தியாவிற்கு எடுத்து வந்தாலும், இந்தத் தொகைக்கு எந்த வரியும் கிடையாது. எனது நிறுவனம் தன் கைவசமுள்ள அந்நியச் செலவாணி மூலமாக எனக்கு இதனை தருவதால் எனது நிறுவனத்திற்கும் வரி கிடையாது.

ஆனால் சிதம்பரம், இவ்வாறு செலவு செய்யப்படும் தொகைக்கு வரி கொண்டு வந்துள்ளார். 30% வரி இந்த தொகை மீது விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த வரி எனக்கு விதிக்கப்படாது. எனது நிறுவனத்திற்க்கு விதிக்கப்படும் (Cost to Company).

இது தான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மென்பொருள் நிறுவனங்களில் வெளிநாட்டுப் பயணம் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கணிசமானத் தொகை இந்தப் பயணத்திற்காகச் செலவிடப்படுகிறது. இன்போசிஸ், விப்ரோ, சத்யம் போன்ற நிறுவனங்களின் லாபத்தில் சுமார் 1% இந்த புது வரிக்குச் சென்று விடும் என்று இந் நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால் சிறிய மென்பொருள் நிறுவனங்களுக்கு இந்தப் புது வரி கணிசமான இழப்பை ஏற்படுத்தும். லாபத்தில் 5% மேல் இழப்பு ஏற்படும் என்று இந் நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

சிலப் பிரிவுகளை மறுபரிசீலனைச் செய்வதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். தொழில் சார்ந்த செலவுகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் வெளிநாட்டுப் பயணம் போன்றவற்றின் மீதான வரியில் மாற்றம் இருக்கும்.

ஆனால் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மீதான வரி தொடரக்கூடும்.

மென்பொருள் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஏராளமானச் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த புது விரி காரணமாக எழக்கூடிய பிரச்சனனகள் குறித்து இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தச் சலுகைகள் பறிபோய் விடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சலுகைகளை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு ஊழியர்களின் சம்பளம் உயரக் கூடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

உதாரணமாக என் நிறுவனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு சம்பளம் தவிர ஒரு குறிப்பிட்ட தொகை பொழுபோக்குக்காக என் நிறுவனத்தால் ஒதுக்கப்படுகிறது. இது சம்பளம் தவிர கூடுதலாக தரப்படும் ஒரு சலுகை. இது எனக்கு பணமாக கிடைக்காது. சுற்றுலா, Fisherman Cove க்குச் சென்று ஜாலியாக ஒரு நாளைச் செலவிடுவது என்று இந்தப் பணம் செலவழிக்கப்படுகிறது. போக்குவரத்து, ஹோட்டலில் டின்னர் போன்றவற்றுக்குச் செலவிடப்படும் தொகைக்கு தற்பொழுது எந்த வரியும் கிடையாது. ஆனால் இந்தப் புது வரியால் 15% - 30% வரி விதிக்கப்படுகிறது.

இதனால் என்ன நடக்கும் ? எனக்கு இந்தச் சலுகை பறிபோகலாம்.

அல்லது இந்தச் சலுகைக்கிற்கு ஒதுக்கப்படும் தொகை சம்பளத்தில் சேர்க்கப்படலாம். நிறுவனங்களும் அதே தொகையைச் செலவு செய்யும் கூடுதல் வரியில் இருந்தும் தப்பிக்கும்.

இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஊழியர்களுக்கு பாதிப்பும் இருக்கும். பாதகமும் இருக்கும்.

நிதியமைச்சர் இந்தச் சலுகைகளை வெறும் பொழுதுபோக்குச் செலவுகளாக பார்ப்பது தான் கொஞ்சம் இடிக்கிறது. இது பொழுது போக்குச் செலவுகள் தான் என்றாலும் நிறுவனங்கள் ஏன் இந்தச் செலவுகளைச் செய்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இதனையும் தொழில் சார்ந்தச் செலவாகத் தான் நான் நினைக்கிறேன்.

எப்படி ?

நாம் இப்பொழுது ஒரு புதிய மேலாண்மையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் மேலாண்மைக்கும் பிறத் துறைகளில் இருக்கும் மேலாண்மைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. பத்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்குச் சென்றால் மேலாளரிடம் டோஸ் வாங்கும் கதையெல்லாம் அரசு நிறுவனங்களில், சிறிய நிறுவனங்களில் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நான் அனுபவப்பட்டதில்லை. சில மணி நேரங்கள் தாமதமாகச் சென்று சில மணிநேரங்கள் மட்டுமே பணியாற்றி விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். எந்த மேலாளரும் இதற்கு டோஸ் விட்டதில்லை. வெள்ளிக்கிழமை வந்தால் அலுவலகத்தில் இருக்கும் சிலர் 3 மணிக்கே வீட்டிற்கு கிளம்பி விடுவார்கள். யாரும் இதனையெல்லாம் கண்டு கொண்டதில்லை. இங்கு தேவை End Result மட்டுமே.

ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்துக் கொண்டிருக்காமல் ஒரு மாறுதல் தேடி சுற்றுலாவுக்கு தங்கள் ஊழியர்களை நிறுவனங்கள் அழைத்துச் செல்கின்றன. இது மாறுதலுக்காக மட்டும் இல்லை. Team Building என்றும் சொல்வார்கள். இந்தப் பயணம், பொழுதுபோக்கு மூலமாக பணியாற்றும் திறன் அதிகரிக்கரிக்கிறது (Productivity). இதனாலேயே இத்தகைய பொழுதுபோக்குகளுக்கு கணிசமானத் தொகை செலவழிக்கப்படுகிறது. இவ்வாறு செலவழிக்கப்படும் தொகைக்கு வரியும் இல்லாமல் இருந்தது.

ஆனால் இப்பொழுது நிறுவனங்கள் இந்தச் செலவுகளை தொடருமா என்று தெரியவில்லை. பெரிய நிறுவனங்கள் தொடரலாம். சிறிய நிறுவனங்கள் நிறுத்தலாம்.

இது தவிர அவ்வப்பொழுது ஊழியர்களுக்குச் சில Gifts வழங்கப்படும். இது ஊழியர்களை ஊக்கப்படுத்தும் ஒரு நடவடிக்கை. நிறுவனங்கள் CMM போன்ற நிலையை அடைந்தால் அதனைக் கொண்டாடும் விதத்தில் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுப் பொட்கள் வழங்குவார்கள். இது வெறும் Gifts அல்ல. இந்த வெற்றியில் உனக்கும் பங்கு இருக்கிறது என்று ஊழியர்களுக்கு அறிவிக்கும் செயல். இதன் மூலம் அவர்களின் Morale, Committment போன்றவையும் அதிகரிக்கிறது. இனி இந்தப் பரிசுகள் கேள்விக்குறி தான்.

இது தவிர ஊழியர்கள் பயன்படுத்தும் தொலைபேசிச் செலவுகள் போன்றவற்றுக்கும் இனி வரி உண்டு. வீட்டில் தொலைபேசி இருந்தாலும், கையில் செல்பேசி இருந்தாலும், அலுவலகத் தொலைபேசியையே பயன்படுத்தும் பலருக்கும் இனி பிரச்சனை தான் :-)

தனியார் நிறுவன ஊழியருக்கு தரப்படும் சலுகைக்கு இவ்வாறு வரியைக் கொண்டு வரும் அரசு, தன்னுடைய ஊழியர்களுக்கும் இந்த முறையை கொண்டு வருமா ? இந்த வரி மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு வரி உண்டு. ஆனால் "நம் மக்கள் பிரதிநிதிகள்" சென்னைக்கும் தில்லிக்கும் இடையே மேற்கொள்ளும் விமானப் பயணங்களுக்கு எந்த வரியும் இல்லை.

இதைப் போலவே அரசு ஊழியர்கள் அனுபவிக்கும் பலச் சலுகைகளுக்கு வரியே இல்லை. அரசு தனக்குத் தானே வரி விதித்து கொள்வதில் எவ்வித லாஜிக்கும் இல்லை தான். ஆனால் இந்த வரியால் எனது சலுகை பறிபோகிறது என்னும் பொழுது இது ஏற்றத் தாழ்வு தானே ?

ஒரு நிறுவனத்திற்கு Corporate Tax போன்ற வரி விதிக்கப்படுகிறது. தனது வரியெல்லாம் போக மீதம் உள்ள தொகையை எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கும் உரிமை ஒரு நிறுவனத்திற்கு உண்டு. மாறாக நிறுவனம் செலவு செய்யும் ஒவ்வொன்றுக்கும் வரி விதிப்பது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் மூக்கை நுழைப்பது போலத் தான்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இத்தகைய பொழுது போக்குகளுக்கு வரி விலக்கு 1997ல் ப.சிதம்பரத்தால் தான் அளிக்கப்பட்டது. அவரே அதனை மறுபடியும் மாற்றியிருக்கிறார்.

ஆனால் தொழில் சார்ந்தச் செலவுகளுக்கு வரியிருக்காது என்று நேற்று வெளியாகியுள்ள அறிவிப்பு நல்ல மாற்றம். மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - 3 - 10,000 ரூபாய் பிரச்சனை



இந்தப் பட்ஜெட்டின் சர்சைக்குரிய விஷயம் 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் வரி விதிக்கும் முறை. இது பலமாக விவாதிக்கப்படுகிறது. பல எண்ணங்கள், வாதங்கள். வலைப்பதிவில் கூட இரு வேறானக் கருத்துக்கள். இது பற்றி எழுதிய அருணா கூட இது சரியான முடிவு என்று கூறியிருக்கிறார்.

அரசுக்கு வருமானத்தை உருவாக்கவும், அதே சமயத்தில் வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்தப் புது வரி மூலம் சிதம்பரம் முயற்சிக்கிறார் என்ற வகையில் இந்த வரி விதிப்பு முறை வரவேற்கத்தக்கது. ஆனால் இம் முறை நடைமுறைக்கு ஒத்து வராது என்பது எனது கருத்து.

தினமும் பல இலட்சம் பணம் எடுக்கும் பெரிய நிறுவனங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். மற்றவர்களைப் பற்றி மட்டும் விவாதிப்போம்

சிதம்பரம் இந்த வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக கூறும் காரணங்கள் என்ன ?
  1. வங்கியில் இருந்து தினசரி நிறையப் பணம் எடுக்கப்படுகிறது. பிறகு இந்தப் பணம் மறைந்து விடுகிறது. இந்த புதிய வரி மூலம் எடுக்கப்படும் பணம் track செய்யப்படுகிறது. அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது. வரி ஏய்ப்பும் தடுக்கப்படுகிறது
  2. மக்களை காசோலை மூலம் பணம் எடுக்கும் முறைக்குத் தள்ள வேண்டும்
  3. பிரேசில் போன்ற நாடுகளில் வரி ஏய்ப்பை தடுக்க இம் முறை வெற்றிகரமாக அமலில் இருக்கிறது.

முதல் காரணத்தைப் பற்றிப் பார்ப்போம். அவரின் கருத்தில் உண்மை இருக்கிறது. பல லட்சம் சம்பாதிக்கும் பணக்காரர்களால் மட்டும் அல்ல. போதிய வருமானம் ஈட்டும் ஆனால் வரிக் கட்டத் தவறும் சாதாரண மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.


சம்பளம் வாங்குபவர்களின் பணத்தைப் பற்றி சிதம்பரம் கவலைப்படவில்லை. அவர்களின் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு இருக்கிறது. ஆனால் சம்பளம் வாங்காத பலரின் வருமானம் இவ்வாறு மறைந்து போவது உண்மை. இவர்கள் தான் முழுதாக வரி ஏய்ப்பவர்கள்.


உதாரணமாக இரு வியபாரி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரின் வருமானம் track செய்யப்படுவதேயில்லை. அவராக பார்த்து ஏதாவது வருமானவரிச் செலுத்தினால் தான் உண்டு. ஆனால் வருமான வரிச் செலுத்தும் சம்பளம் வாங்குபவர்களை விட அவர் நிறைய வருமானம் ஈட்டக் கூடியவர் என்றால் அரசுக்கு இழப்பு தானே. அவர்களை இவ்வாறு ஏதாவது ஒரு வரிச் செலுத்த வைக்கத் தான் சிதம்பரம் முயற்சி செய்கிறார். இந்த வகையில் இந்த முறை வரவேற்கத்தக்கது.


ஆனால் அதற்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் மிகக் குறைவு. வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு 1 லட்சம் அல்லது 50,000 என்ற உச்சவரம்பு வைக்கலாம். இதனை விட அதிக அளவு கூட வரி விதிக்கலாம். இம் முறை மூலம் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் எளியவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். இன்னும் கூட ஒரு படிச் சென்று வருமான வரிச் செலுத்துபவர்களை இம் முறையில் இருந்து விடுவிக்கலாம். இதனால் நாங்கள் ஏன் தேவையில்லாமல் மற்றொரு வரிச் செலுத்த வேண்டும் போன்ற கேள்விகளும் குறையும்.


இது நடைமுறைக்கு கொண்டு வர முடியும் ? முடியும்.

இப்பொழுது எல்லா வங்கிகளும் PAN எண் கேட்கிறார்கள். இதன் மூலம் யார் வருமான வரிச் செலுத்துகிறார்கள் என்பது தெரியும். நிறைய வங்கிகள் கணினி மயமாகி விட்டதால் இதனை செயல் படுத்துவதில் சிக்கல் இருக்காது. ஆரம்பத்தில் சிக்கல் இருக்கலாம். எல்லாப் புதிய முறைக்கும் ஆரம்பத்தில் சிக்கல் இருக்கவேச் செய்யும் ?

10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் மிகக் குறைவு என்றாலும், இந்த புது வரியின் நோக்கம் வரி ஏய்ப்பை தடுக்கவே என்பதால் ஒழுங்காக வரிச் செலுத்துபவர்களை இதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இது கல்விக்கான ஒரு செஸ் என்றால் நிறையப் பேர் கேள்வி கேட்க மாட்டர்கள். ஆனால் வரி என்றாலே அது சைக்காலஜிக்கலாக ஒரு எதிர் வினையை ஏற்படுத்துகிறது.


அடுத்ததாக, மக்களை காசோலை மூலம் பணம் எடுக்கும் முறைக்குத் தள்ள வேண்டும் என்கிறார்.


இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.


சென்னையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து செங்கற்பட்டுக்குச் செல்லுங்கள். அங்குள்ள எத்தனை வங்கிகளில் காசோலை பயன்படுத்தப்படுகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து ஏதாவது குட்டி ஊருக்குச் செல்லுங்கள், வங்கிகளில் காசோலையே இருக்காது. சிதம்பரத்தின் சொந்த ஊரான சிங்கங்கையில் கூட இதே நிலைமை தான் இருக்கும்.


பின் எப்படி காசோலையை பயன் படுத்த முடியும் ?


எல்லா வங்கிகளிலும் காசோலை வந்து விட வில்லை. ICICI, SBI போன்ற சில வங்கிகள் தான் நாடெங்கும் பல இடங்களில் கிளைகளை வைத்துள்ளன. காசோலைகளையும் வைத்துள்ளார்கள். ஆனால் நகரங்களை விடுத்து கிராமங்களில் உள்ளோர் காசோலை மூலமாக பணத்தைப் பறிமாறிக் கொள்ள முடியுமா ?


இது எல்லாவற்றையும் விட நம் நாட்டில் மக்கள் பலருக்கு பணம் எடுக்கும் Withdrawl form எப்படி நிரப்புவது என்று கூட தெரியாது. நான் வங்கிக்கு செல்லும் பொழுது நிறையப் பேருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள் எப்படி காசோலையை நிரப்புவார்கள்.


இந்தச் சூழலில் பிரேசில் நாட்டுடன் நம் நாட்டை ஒப்பிட முடியாது.


அருணா தன் பதிவில் கூறியுள்ளது போல கடன் அட்டை (Credit Card) நிறுவனங்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும். ஆனால் இதுவும் கூட நகரங்களில் தான். மற்ற இடங்களில் கடன் அட்டையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.


இது நீண்ட காலத்திற்கானத் திட்டம் தான். ஆனால் தற்போதையச் சூழலில் சாத்தியம் இல்லாதது. அதுவும் 10,000 ரூபாய் என்னும் பொழுது தான் எல்லோரும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கின்றனர். தொகை அதிகமாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை.


இது எல்லாவற்றையும் விட கறுப்பு பணம் வங்கிகளுக்கே வருவதில்லை என்பது வேறு விஷயம். வங்கிகளுக்கு வராமல் வேறு மார்க்கத்தில் எங்கோ மறைந்து விடுகிறது.


இந்தப் புது வரியால் வங்கிகளுக்குத் தான் நன்மை. தேவை என்றால் தவிர வங்கிகளில் இருந்து இனி யாரும் பணம் எடுக்க மாட்டார்கள்.


எது எப்படியிருந்தாலும் சிதம்பரத்தின் புத்திசாலித்தனம் பலிச்சிடுகிறது. வேறு எந்த நிதியமைச்சரும் இது வரை யோசிக்காத பல வரிச் சீர்திருத்தங்களை சிதம்பரம் தான் செய்திருக்கிறார். வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சி என்ற வகையில் இந்த வரி ஒரு நல்ல ஆரம்பம். இது தீவிரமாக விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களுடன் வர வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

ஆனால் நிச்சயம் இது போன்ற வரி வேண்டும்.

மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - 2



பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தப் பொழுது தள்ளாடிக் கொண்டிருந்த பங்குச்சந்தை, சிதம்பரம் பட்ஜெட் உரையை முடித்ததும் துள்ளிக் குதித்து பின் மேல் நோக்கி எழும்பி வரலாறு காணாத உயர்வுடன் இன்றைய வர்த்தகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 144 புள்ளிகள் எகிறி 6,713.86 புள்ளிகளை எட்டியது. தேசியப் பங்குச்சந்தை, Nifty 43 புள்ளிகள் எகிறி 2,103.95 புள்ளிகளை எட்டியது.



கடந்த ஆண்டு நிதியமைச்சர், பங்குப் பரிவர்த்தனை வரி என்ற ஒன்றை அறிவிக்க சரிந்தப் பங்குச்சந்தை, இந்த ஆண்டு அந்த வரியில் பெரிய அளவில் உயர்வு ஏதும் இல்லாமல் இருந்தாலே போதும் என்று தான் எதிர்பார்த்தது.

அதேப் போல ஒரு சிறு உயர்வு மட்டுமே இந்தப் பட்ஜெட்டில் செய்யப்பட்டது. இது யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ப.சிதம்பரம் கூறினார். உண்மை தான் 0.015%ல் இருந்து 0.02% ஆக உயரும் வரியால் எந்தப் பாதிப்பும் இல்லை.

இது தவிர மும்பை இப் பகுதியின் நிதித் தளமாக (Regional Finance Hub) மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர நிதி தொடங்குவது பற்றி SEBI பரிசீலிக்கும் என்றும் அறிவித்தார்.

வருமான வரியில் 1 இலட்சம் வரையிலான எந்த முதலீட்டிற்கும் வரி கிடையாது என்ற அறிவிப்பும் சந்தைக்கு ஊக்கமளிக்கும். அதாவது தற்பொழுது பலர் வரிச் சலுகைக்காகவே பல சேமிப்புகளை மேற்கொள்கிறார்கள். இவர்களை முதலீட்டாளர்களாக மாற்ற வேண்டும் என்று பட்ஜெட்டிற்கு முன்பே சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன் படி 1 இலட்சம் வரை எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பரஸ்பர நிதி (Mutual Funds) போன்றவற்றில் கூட முதலீடு செய்யலாம். 1 இலட்சத்திற்கு வருமான வரியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே பென்ஷன் பண்ட் போன்றவைகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் இந்த அறிவிப்பும் பங்குச்சந்தையின் ஏற்றத்திற்கு உதவும்.

இது தவிர வங்கிகளின் CRR வரம்பு குறித்த அறிவிப்பும் ஒரு நல்ல அறிவிப்பு. வங்கிகள் தங்கள் நிதி நிலைமை அதிகரித்துக் கொள்ள முடியும். இன்று வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஏற்றம் இருந்தது.

நாட்டின் ஏற்றுமதியை 15,000 கோடி டாலராக 2009க்குள் அதிகரிக்கப்படும். அதற்காக விதிகள் மேலும் தாரளமயமாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

G7 மாநாட்டுக்கு தான் சென்றிருந்தப் பொழுது சீனா பெறும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை சீன நிதியமைச்சர் தன்னிடம் சுட்டிக் காட்டியதாகக் கூறிய நிதியமைச்சர், சுரங்கம், வர்த்தகம், பென்ஷன் (mining, trade, pension) போன்ற துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பது பற்றி பேசிய பொழுது, வெளிநாட்டு நேரடி முதலீடு மூலமாக மென்பொருள், தொலைத்தொடர்பு, ஆட்டோமோபைல் போன்ற துறைகளில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை சுட்டிக் காட்டி உறுப்பினர்கள் ஒரு யதார்த்த நிலையை எடுக்கும் படி வற்புறுத்தினார். இது இடதுசாரிகளை நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது அவையில் சிறு சலசலப்பு இருந்தது. இந்த சலசலப்பு ஆளும் கூட்டணியில் அடுத்து வரும் வாரங்களில் பெரும் கூச்சலாக மாறக் கூடும்.

சீனா கடந்த ஆண்டு மட்டும் சுமார் 60பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீட்டை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா பெற்றுள்ளது எவ்வளவு தெரியுமா...4 பில்லியன்.

பின் எப்படி நாம் சீனாவை எட்டிப் பிடிக்க முடியும்.

வருமான வரி விகிதத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • 1 இலட்சம் வரை வருமான வரி கிடையாது
  • 1,00,000-1,50,000 - 10%
  • 1,50,000- 2, 00,000 - 20%
  • 2, 50, 000 அதிகமாக உள்ளவர்களுக்கு 30%

Standard deduction போன்ற வரி விலக்குகள் எல்லாம் இனி இருக்காது. ஆனால் போக்குவரத்து, கேண்டின் என சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தரும் சலுகைகளுக்கு வருமான வரி இருக்காது.


மகளிர், முதியோரின் ஆசியை பெருவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறி மகளிருக்கான வருமான வரி உச்ச வரம்பு 1, 25, 000 லட்சம் என்றும் முதியோருக்கு 1, 50,000 லட்சம் என்றும் அறிவித்தார்.

வருமான வரியின் மாற்றங்கள் எதிர்பார்த்தது தான் என்பதால் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு, மருத்துவச் செலவுகள் போன்றவற்றுக்கு கொடுக்கப்படும் வரி விலக்குகள் தொடரும்.

மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - 1



பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

இன்று பட்ஜெட் வாசித்த ப.சிதம்பரம், இதேக் குறளுடன் தன் பட்ஜெட் உரையை முடித்து ஒரு நல்ல பட்ஜெட்டைக் கொடுத்தார். நகரம், கிராமம் என்று எல்லா விரிந்து பரந்திருக்கும் இந்தியாவின் பல கோடி மக்களுக்கும், துறைக்கும் பட்ஜெட்டில் சமமாக சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.



விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற முக்கியத் துறைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் பட்ஜெட்டாக இந்தப் பட்ஜெட் அமைந்திருக்கிறது

எதிர்பார்த்தது போலவே வரி விதிப்பில் நிறைய மாறுதல் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறைகளான ஜவுளி, பார்மா, மென்பொருள் போன்ற துறைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், ஜவுளித் துறைக்கு ஏரளமானச் சலுகைகளை அறிவித்தார்.

பார்மா துறையில் ஆய்வுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர சர்க்கரை ஆலைகள், கிராமப்புற நெசவுத் தொழில் போன்றவற்றுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளார்.

நாட்டில் 3ல் 2 பங்கு மக்கள் இருக்கும் விவசாயம் நாட்டின் GDPல் வெறும் 21% மட்டுமே இருப்பதால் விவசாயத்திற்கும், கிராமப் புற வளர்ச்சிக்கும் பட்ஜெட்டில் ஏராளமானச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

1.25 லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம்

66,820 கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புகள்

கிராமப்புற மக்களுக்கு 60 லட்சம் புதிய வீடுகள்

சுமார் 1 கோடி எக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி

கடந்தப் பட்ஜெட்டில் வருமான வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது கல்விக்கு பயன்படுத்தியது போல இந்தப் பட்ஜெட்டில் சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு கேடு செய்யும் பொருட்களின் வரியில் செஸ் விதிக்கப்பட்டு அது சுகாதாரத் துறைக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் பீடிக்கு செஸ் கிடையாது என்ற பொழுது பாராளுமன்றத்தில் ஒரே சிரிப்பலை

இது தவிர பெட்ரோல், டீசல் போன்றவற்றிலும் செஸ் விதிக்கப்பட்டு அது நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

குடிநீர் வசதிக்காக 4,750 கோடி செலவிடப்படும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக 83,000 கோடி ஒதுக்கப்படுகிறது

கல்விக்காக 18,337 கோடி ஒதுக்கப்படும். SC/ST மாணவர்களுக்கு கல்விச் செலவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது

நிதியமைச்சர் பட்ஜெட் வாசிக்கத்து வங்கியதில் இருந்து அவை மிக அமைதியாக இருந்தாலும், இறுதியில் ஒரே கூச்சலுக்கிடையே தான் பட்ஜெட்டை முடித்தார்.

அதற்கு காரணம், வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு 10 ரூபாய் வரிச் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை தான்.

தேவையில்லாமல் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, வரிச் செலுத்தப்படாமல் நழுவி எங்கோ மறைந்து போய் விடுவதால் இந்த நடவடிக்கை என்று நிதியமைச்சர் கூறியதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இது கறுப்பு பணம், மற்றும் வரி ஏய்ப்பவர்கள் மீதான நடவடிக்கை என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
10,000 என்பது பெரிய தொகை இல்லை. வீட்டு வாடகை, பிறச் செலவுகளுக்காக மாதம் தோறும் பல குடும்பங்களுக்கு இந்தளவுக்கு ஒரே நாளில் பணம் தேவைப்படலாம். 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் என்ற வரி குறைவு தான் என்றாலும், ஏற்கனவே வருமான வரி செலுத்தியப் பிறகு வரும் தொகைக்கு நான் ஏன் மறுபடியும் வரிச் செலுத்த வேண்டும். இதில் எந்தவித லாஜிக்கும் இல்லை.

கறுப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பவர்களை நோக்கித் தான் இந்த முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றால் பணத்தின் உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது வேறு மாதிரியான ஒரு முறைக் கொண்டு வரப்பட வேண்டும்.

பட்ஜெட்டை எதிர்ப்பதற்கு காரணம் தேடிக் கொண்டிருந்த எதிர்கட்சிகளுக்கு ஒரு காரணம் கிடைத்து விட, ஒரே கூச்சல் தான்.

பட்ஜெட் பற்றிய கண்ணேட்டம் அடுத்தப் பதிவிலும் தொடரும் மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 8

இவ் வார தமிழோவியத்தில்

மற்றும்


மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 4



நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. சரக்குகளுக்கான கட்டணப் பிரிவு 4000ல் இருந்து 80 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சரக்குகளின் பல வகையான கட்டணப் பிரிவுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ரயில்வேக்கு 650 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த பலருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். பயணிகள் கட்டணத்தை அதிகரிக்காதது, ரயில்வே வழங்கும் 6500 கோடி ரூபாய் பெருமானமுள்ள மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லாதது இவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் ரயில்வேத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது சாதாரண மக்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால், இத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எந்த அரசும் முனைவதில்லை.

ரயில்வே பட்ஜெட் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது போல, பொது பட்ஜெட்டும் இருக்குமா? பொது பட்ஜெட்டில் இருக்கக் கூடிய முக்கிய அம்சங்களை கொஞ்சம் கவனிப்போம்

நிதிப் பற்றாக்குறையை குறைக்க வரி விதிப்பில் பல மாற்றங்கள் இருக்கும் என்று முந்தையப் பதிவில் பார்த்தோம். இதையே வெள்ளியன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவு படுத்துகிறது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இப்போதைக்கு இருக்காது என்பது தவிர வட்டி விகிதமும் குறைந்த அளவே இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கை பரிந்துரைச் செய்கிறது. இது போலவே குறைவான வரி விகிதம், ஆனால் பரவலான மக்களை வரிச் செலுத்த வைப்பது போன்றவையும் இந்தப் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) பலத் துறைகளில் கொண்டு வருவதும் கட்டுப்பாடுகளை நீக்குவதும் பட்ஜெட்டில் இருக்க வேண்டும். ஏற்கனவே ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள அரசு இந்த பட்ஜெட்டில் வர்த்தகத் துறையிலும் (Retail), பென்ஷன் பண்ட் போன்ற துறைகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இடதுசாரிகள் இதற்கு ஒத்துழைப்பு தருவார்களா என்பது தெரியவில்லை. குறிப்பாக வர்த்தகம் - Retail துறை நம் நாட்டில் பல இடங்களில் முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது அமெரிக்க நிறுவனங்களான Wal-mart, GAP, JCPenny போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கும், பிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியச் சந்தையை திறந்து விடும் முயற்சி. ஏற்கனவே பல நிறுவனங்கள் (Shoprite, Metro) போன்றவை இதற்காகக் காத்திருக்கின்றன. இதனால் நம் நாட்டில் முறைபடுத்தப்படாமல் இருக்கும் பல சிறு வியபாரிகள் பாதிப்படையக்கூடும் என்பதான பிரச்சனைகள் எழுப்பப்படும்.

இது தவிர வங்கித் துறையில் அரசு கொண்டு வர இருந்த FDI வருமா என்று தெரியவில்லை.

பொருளாதார ஆய்வறிக்கை வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இருக்கும் பல விதி முறைகளை எளிமையாக்கும்படி வலியுறுத்துகிறது. இது தவிர உள்கட்டமைப்புத் துறையில் அரசு செயல்படுவது தவறென்றும் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. உள்கட்டமைப்பை தனியாரிடம் ஒப்படைப்பது மூலம் தேவையில்லாத அரசியல் தலையீடுகளைத் தவிர்க்கலாம் என்பதே ஆய்வறிக்கையின் வாதம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கும் உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. அரசு, சாலைகள் மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பில் தற்பொழுது அதிகளவில் முதலீடு செய்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறையை அதிக அளவில் உள்கட்டமைப்பில் ஈடுபடுத்த வேண்டும். சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, மின்உற்பத்தி போன்ற துறைகளில் FDI அதிக அளவில் தேவைப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை பட்ஜெட் மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார ஆய்வறிக்கையைச் சார்ந்து பட்ஜெட் அமையும் பட்சத்தில் அது ஒரு கனவு பட்ஜெட்டாகவாக இருக்கும். ஆனால் பல நிர்பந்தங்களுக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அப்படி கனவு பட்ஜெட்டாக இருக்கும் வாய்ப்புகள் குறைவாகத் தான் இருக்கிறது.

பார்ப்போம்.. நாளை தெரிந்து விடும்.

நிறைய எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக சில நாட்களாக வலைப்பதிவுகளை படிக்கக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொண்டு நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

விடைபெறும் முன் சில லைட்டான தகவல்கள்

  • கார் தயாரிப்புக்கு விதிக்கப்படும் வரி 8%ல் இருந்து 4%மாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் கார்களின் விலைக் குறையும்.
  • A.C. விலையும் குறையும். எனவே இந்தக் கோடை காலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டு ஜாலியாக இருங்கள்.

மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 3



காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமையவிருந்த நேரம். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அமைச்சகமான Disinvestment அமைச்சகம் இனி இழுத்து மூடப்படும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறிவிக்க, பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்த கேள்விக்குறி எழ, மே மாதம் 17 அன்று பங்குச்சந்தை 565 புள்ளிகள் சரிந்தது. அதே நாளில் ஒரு கட்டத்தில் பங்குச்சந்தை 800 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்திருந்தது. வர்த்தகம் சந்தையில் வர்த்தகம் இரு முறை நிறுத்தப்பட்டது.

இது தான் புதியதாக அமையவிருந்த காங்கிரஸ் அரசுக்கு பங்குச்சந்தை கொடுத்த வரவேற்பு. மறுநாள் சோனியா பிரதமர் பதவி ஏற்கப்போவதில்லை, மன்மோகன் சிங் பதவி ஏற்பார் என்றச் செய்தியே பங்குச்சந்தைக் குறியீட்டை 372 புள்ளிகள் உயர வைத்தது. மன்மோகன் சிங் மேல் அந்தளவுக்கு நம்பிக்கை.

மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சி.ரங்கராஜன் ஆகியோரை உள்ளடக்கிய கனவுக் கூட்டணி என்னச் செய்யப் போகிறது ? இவர்களை இடதுசாரிகள் சுதந்திரமாக செயல்பட விடுவார்களா ? கூட்டணி அரசின் நிர்பந்தங்களுக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் வகையில் வருகின்ற பட்ஜெட் இருக்குமா ? 1997ல் ஒரு Dream பட்ஜெட்டைக் கொடுத்த ப.சிதம்பரம் இப்பொழுது என்னச் செய்யப் போகிறார் ? வரும் திங்களன்று விடைக் கிடைத்து விடும்.

இந்தப் பட்ஜெட்டில், வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டின் ஹைலைட்டே வரிச் சீர்திருத்தமாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு அது பற்றி ஒரு Hype நிலவுகிறது. அது பற்றிய ஒரு சிறு முன்னோட்டம் தான் இக் கட்டுரை.

தற்பொழுதுள்ள நிலையில் நாட்டின் GDP யுடன் ஒப்பிடும் பொழுது வரி வருவாய் வெறும் 9% தான். இந்தியாவைப் போலவே வளரும் நாடுகளாக இருக்கும் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இது மிகக் குறைவு. உதாரணமாக பிரேசிலில் இது 20%. தற்போதைய 9%ல் இருந்து 11% மாக இதை உயர்த்த இந்தப் பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் பல மாற்றங்கள் இருக்கும். கேல்கர் கமிட்டியின் விரிச் சீர்த்திருத்தங்கள் இந்தப் பட்ஜெட்டில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. கேல்கர் கமிட்டி எளிமையான, குறைந்த விகிதத்தில் வரி விதிப்பதைப் பரிந்துரை செய்கிறது.

தற்பொழுது நம்முடைய ஒட்டு மொத்த வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. நாம் சேமிக்கும் சேமிப்புகள் (NSC), காப்பீடு, PF, வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது பிரிவு 88 கீழ் இருக்கும் விலக்குகள். இந்த விலக்குகளை EEE (Exempt Exempt Exempt) என்றுச் சொல்வார்கள். அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுதும், அந்தப் பணம் வட்டியால் பெருகும் பொழுதும், இறுதியில் அந்தப் பணத்தை நாம் எடுக்கும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இம் முறை மாறி EET (Exempt Exempt Tax) என்ற முறை அமலுக்கு வர இருக்கிறது. அதாவது சேமிப்பில் முதலீடு செய்யும் பொழுது அந்தப் பணத்திற்கு வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பணம் பெருகும் பொழுதும் வட்டிக்கு விலக்கு உண்டு. ஆனால் அந்தப் பணம் திரும்ப எடுக்கப் படும் பொழுது, எடுக்கப்படும் பணம் முழுமைக்கும் வரி விதிக்கப்படும். முதலீடு செய்யும் பொழுது தற்பொழுது கொடுக்கப்படும் 15% ரிபேட், இனி 30%மாக உயர்த்தப்படும். ஆனாலும் இறுதியில் வரி விதிக்கப்படும் பொழுது முதலீட்டாளருக்கு கிடைக்கும் பணத்தில் கணிசமானத் தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.

இது போலவே Standard Deduction என்று சொல்லப்படும் வரி விலக்கும் இனி இருக்காது. தற்பொழுது 5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு 30,000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 20,000 ரூபாயும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர மகளிருக்கு வழங்கப்படும் ஸ்பெஷல் வரி விலக்குகளும் இனி நீக்கப்படும். இவ்வாறு விரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் பணம் முதலீடாக மாறுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே அரசுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த விலக்கு ஒழுங்காக வரிச் செலுத்தும் சம்பளம் வாங்கும் பிரிவிற்கு அளிக்கப்படும் சலுகையாகவே இது வரையில் இருந்தது. இனி இந்தச் சலுகை இருக்காது.

வாங்கும் சம்பளம் குறையும் சாத்தியக்கூறுகள் இருக்குதுங்கோ....

வீட்டுக்கடனுக்கு தற்பொழுது அளிக்கப்படும் சலுகை அப்படியே தொடரும் என்பது வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் (வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் ரூ1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது). வீட்டுக்கடனுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை முதலீட்டாளர்களுக்கு பலன்
தருவதோடு மட்டுமில்லாமல் வீட்டு வசதித் துறையின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது என்பதால் இது அப்படியே தொடரும். ஆனால் கேல்கர் கமிட்டி இதனையும் நீக்க வேண்டும் என்று தான் பரிந்துரைச் செய்திருந்தது.

சம்பளம் வாங்கும் ஒரு பிரிவினருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களும் இந்தப் பரிந்துரையில் இருக்கிறது.

தற்போதைய வருமான வரிப் விதிப்பில் உள்ள முறைப்படி 50,000 ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. இனி அந்த உச்ச வரம்பு 1,00,000 உயர்த்தப்படும்.

மொத்தத்தில் தற்பொழுது இருப்பது போல பல சிக்கலான கணக்கு வழக்குகள் இல்லாமல் வாங்கும் சம்பளத்தை/வருமானத்தை வரி விகிதத்துடன் கழித்து விட்டால் எஞ்சியுள்ளது தான் நம் வருமானம்.

எளிமையான வரி விகிதம் தானே ? நாம் ஆடிட்டரைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. சுலபமாக கணக்கிடலாம் என்பது தான் நமக்கு கிடைக்கும் ஆதாயம்.

அதெல்லாம் சரி தான்... வருமானம் குறையுமேன்னு நினைக்கிறீங்களா ?

அரசின் சலுகைகள் ஏழை மக்களுக்குத் தான் வழங்கப்படவேண்டும். பல இடங்களில் பலச் சலுகைகளை அரசு வாரி வழங்கும் பொழுது, அரசின் கவனிப்பு தேவைப்படும் பல துறைகளின் வளர்ச்சியில் தேக்கமே நிலவுகிறது. அரசு, ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு செலவழிக்கும் தொகையை விட பெட்ரோல், சிலிண்டர் போன்றவற்றுக்கு வழங்கும் subsidies தான் மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு வழங்கும் சலுகை விலையினால் அரசுக்கு சுமார் 46,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர விவசாயத்திற்கு தரப்படும் பலச் சலுகைகள் (உரம்), அரசு குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து பெறும் தானியங்கள் போன்றவற்றாலும் அரசுக்கு கணிசமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இந்தச் சலுகைகளை படிப்படியாக நீக்கி தேவைப்படும் பிற துறைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலேக் கூறியுள்ள சலுகைகளை நீக்கினால் தான் ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு சலுகைகளைத் தர முடியும். இத் துறைகளுக்குத் தான் அரசின் தனி கவனிப்பு தேவைப்படுகிறது. இத் துறைகளுக்கு தற்பொழுது சுமார் 6 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்படுகிறது. இது பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும்.


தற்பொழுது வழங்கப்படும் தேவையில்லாத வரிச் சலுகைகளை நீக்குதல், அரசுக்கு வருவாய் தரும் புது வழிகளை உருவாக்குதல் போன்றவற்றால் மூலமே கவனிப்பின்றி கிடக்கும் பலத் துறைகளின் மீது அரசு கவனம் செலுத்த முடியும். இந்தப் பட்ஜெட் அதற்கான ஆரம்பமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இவை எல்லாம் அனுமானங்கள் தான். சிதம்பரம் எந்தளவுக்கு இதற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார் என்பது திங்களன்று தெரிந்து விடும்.



முந்தையப் பதிவுகள் - 1, 2 மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 6

ஹர்ஷத் மேத்தா பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியப் பொழுது, இது பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. 1991ல் நடந்தக் கதை. எனவே இதைப் பற்றி அதிகமாக இணையத்தில் தகவல்கள் இல்லை. IIMல் இது பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எங்கள் அலுவலகத்தில் இருக்கும் கேப்பிடல் மார்க்கெட் பிரிவு நண்பர்களின் ஆய்வுகள் எனக்கு உதவி புரிந்தது. இந்த ஊழல் பற்றி "The Scam" என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளிவந்தது. இந்த ஊழலை வெளியுலகுக்கு கொண்டு வந்த சுசித்தா தலால் எழுதியப் புத்தகம். இதைக் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியுமா என்று முயற்சி செய்தேன். சென்னையில் எங்குமே இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. மும்பைக்குத் தொடர்பு கொண்டு இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்திடமே கேட்ட பொழுது இந்தப் புத்தகம் தற்பொழுது அச்சில் இல்லை. கைவசம் ஒரு புத்தகம் கூட இல்லை என்றார்கள். இந்தப் புத்தகத்திற்காக இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.



இந்த ஊழல் பற்றி ஒரு Balanced கருத்தையே ஹர்ஷத் மேத்தா கதையில் கொடுக்க முயன்றுள்ளேன். முயற்சி வெற்றியடைந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இவ்வார தமிழோவியத்தில் இந்த ஊழல் கதையின் 6 வது பாகம் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க

பட்ஜெட்டை எதிர்நோக்கி

எந்தத் திசையில் நகருவது என்று தெரியாமல் கடந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்றமும் இறக்கமும் நிலவியது. பட்ஜெட்டை ஒட்டிய சில வாரங்களில் முதலிட்டாளர்களின் எச்சரிக்கை, சந்தையை எந்த திசையிலும் செல்ல விடாமல் அலைக்கழிக்கும். அது பற்றி இவ்வார தமிழோவியத்தில் ஒரு அலசல் - "பட்ஜெட்டை எதிர்நோக்கி"

மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 2



அரசுக்கு வரும் வருமானம், செலவு ஆகிய இரண்டையும் சென்றப் பதிவில் கூறியிருந்த வருவாய் வரவு செலவுத் திட்டம், முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் அடக்கி விடலாம்.

நாம் இப்பொழுது அரசுக்கு வருமானம் கிடைக்கக் கூடியச் சில வரி முறைகளைக் கவனிப்போம்.

சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். பலருக்கு இதுப் பற்றி விரிவாகவே தெரிந்திருக்கும். ஒரு சிறு விளக்கம் மட்டும் தர முயன்றுள்ளேன்.

வருமானம் நமக்கு பல வழிகளில் கிடைக்கிறது. சம்பளம், வியபாரம், வீட்டு வாடகை, முதலீட்டு லாபம் என்று பல வழிகளில் கிடைக்ககூடிய வருமானங்களுக்கு நாம் வரிச் செலுத்த வேண்டும்.

ஆண்டு வருமானம் 50,000 வரை உள்ளவர்களுக்கு வருமானவரி கிடையாது. அதற்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு சம்பளத்திற்கு ஏற்றாற்ப் போல வருமான வரி விகிதமும் மாறும். அதைப் போல நிலம், வீடு போன்ற சொத்துகளை விற்பதால் கிடைக்கும் லாபத்திற்கும் வரிச் செலுத்த வேண்டும். பங்குகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வரிச் செலுத்த வேண்டும். இதனை முதல் இலாப வரி அல்லது மூலதனலாப வரி (Capital Gains tax) என்றும் சொல்லலாம். ஆனால் பங்குகள் வாங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு அதனை விற்கும் பொழுது Capital Gains tax ல் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இது தவிர நம்முடைய சம்பளத்தின் ஒரு பகுதிக்கும் சில முதலீட்டுகளுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. ஆண்டு வருமானம் 1,50,000க்குள் இருந்தால் 20% விலக்கு உண்டு. 5 லட்சத்தைக் கடந்தால் ஒன்றும் கிடையாது. நம்முடைய PF, காப்பீடு, NSC, அரசு பத்திரங்கள் போன்றவற்றுக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு. பிரிவு 88, 88C, 88D போன்ற பல பிரிவுகளில் வருமான வரி விலக்கு உண்டு. நாம் வாங்கும் வீட்டுக் கடனுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தற்பொழுது வீட்டுக் கடனில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதில் மாற்றம் வரும் என்று பல வருடங்களாகச் செல்லப்பட்டாலும் இது வரை இதில் எந்த மாற்றமும் வரவில்லை. இந்தப் பட்ஜெட்டிலும் மாற்றம் இருக்க கூடாது என்பது தான் பல நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ணம்.

இந்தப் பட்ஜெட்டில் கேல்கர் கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கேல்கர் கமிட்டி பரிந்துரையில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், இக் கமிட்டி பரிவு 88ன் கீழ் இருக்கும் சில வருமான வரிச் சலுகைகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அரசு இதனை அமல்படுத்துமா என்று தெரியவில்லை.

நாட்டிலேயே ஒழுங்காக வருமான வரிச் செலுத்துவது சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கம் தான். ஒழுங்காக வரிச் செலுத்துபவர்கள் மேல் மேலும் பாரம் கொடுக்காமல் நாட்டின் Tax base அதிகரிக்கப்பட வேண்டும்.

வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையே Tax base எனப்படுகிறது. இந்தியாவில் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 3 கோடி பேர் மட்டுமே வரி கட்டுகிறார்கள். வரி ஏய்த்தல் இங்கு தான் அதிகமாக இருக்கிறது. குறைவான வரி மூலம் அதிகமானவர்களை நாணயமாக வரிச் செலுத்த வைக்க முடியும்.

பொதுவாக அரசு விதிக்கும் வரிகளில் இரண்டுப் பிரிவுகள் இருக்கிறது
  • நேரடி வரி
  • மறைமுக வரி
நேரடி வரி - வருமானவரி, சொத்துவரி, இலாப வரி போன்றவை நேரடி வரி என்று சொல்லப்படும் வரிகள். இந்த வரிகளை நாம் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறோம்.

மறைமுக வரி - விற்கப்படும் பொருளின் மீதான வரி. இந்த வரி பொருள்கள் மீது விதிக்கப்பட்டாலும் இறுதியில் நம் தலையில் தானே விழுகிறது. இது நாம் நேரடியாக இல்லாமல் பொருளின் மீதான விலையுடன் சேர்த்துச் செலுத்துகிறோம்.

இப்பொழுது சர்சையில் இருக்கும் முக்கியமான ஒரு வரி VAT - Value added Tax, மதிப்புக் கூட்டு வரி / மதிப்பு ஆக்க வரி.

ஒரு பொருள் தயாரிப்பில் பல இடங்களில் அதன் மதிப்புக் கூட்டப்படுகிறது. ஒரு மோட்டார் வாகான தயாரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் இடத்தில் இதற்கு சுங்கவரி, விற்பனை வரி போன்றவை உண்டு. இந்த உதிரிப்பாகங்களை பெற்று வாகனம் தயாரிக்கும் நிறுவனம் மற்றொரு முறை சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்த வேண்டும்.

உதிரிபாகம் 10 ரூபாய் என்றால், அதனை தயாரிக்கும் நிறுவனம் அதற்குச் சுங்கவரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்துகிறது. அந்த உதிரிப்பாகத்தைப் பெற்று வாகனம் தயாரிக்கும் நிறுவனம், தன் தயாரிப்புச் செலவாக 50 ரூபாயை செலவழித்து பொருள் செய்யும் பொழுது மற்றொரு முறை உதிரிப்பகத்தின் விலையான 10 ரூபாய்க்கும் சேர்த்து வரிச் செலுத்த வேண்டும். அதாவது 60 ரூபாய்க்கு வரிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பல நிலைகளில் வரிச் செலுத்த வேண்டிய நிலை. ஒரு பொருளின் மொத்த வரி 10% என்றால், இது பல நிலைகளில் கட்டப்படும் பொழுது 10% கடந்து விடுகிறது. இவ்வாறான வரி விதிப்பு முறை பொருட்களின் தயாரிப்புச் செலவையும் பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது.

ஆனால் VAT முறைப் படி வாகனம் தயாரிக்கும் நிறுவனம் 50 ரூபாய்க்கு மட்டும் வரிச் செலுத்தினால் போதும். ஏனெனில் ஏற்கனவே ஒரு உதிரிப்பாகத்தின் விலையான 10 ரூபாய்க்கு வரிச் செலுத்தப்பட்டு விட்டது.

இது பலனளிக்கும் திட்டம் தானே ? நிச்சயமாக. வரி குறைவதால் பொருள் தயாரிப்புச் செலவு குறையும். நிறுவனங்களுக்கு லாபம். அந்தப் பொருள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் நுகர்வோருக்கும் லாபம் தான்.

பின் ஏன் சர்சை ? பிரச்சனை ?

சுங்கவரி மைய அரசாலும், விற்பனை வரி மாநில அரசாலும் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான வரி விதிப்பு முறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறன. மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படுமோ என்ற அச்சம். இது தவிர பல பொருட்கள் இந்த VAT முறையின் கீழ் வருவதால் இது வரை வரிச் செலுத்தாத வியபாரிகளுக்கும் அச்சம். கணக்கு வழக்குகளை சரியாகப் பராமரிக்கும் நிர்பந்தமும் இருக்கிறது. சரியாக கணக்கு இருந்தாலும் அதிகாரிகளின் தொந்தரவு இருக்கும் என்று வியபாரிகள் அஞ்சுகிறார்கள்.

இப்படி பலப் பிரச்சனைகளுடன் இந்த வரி விதிப்பு முறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

சரி..வரியில் இருந்து கொஞ்சம் நகர்ந்து பட்ஜெட்டின் பிறப் பகுதிகளுக்கு வருவோம்

மானியக் கோரிக்கைகள் (Demands for grants)

நிதி நிலை அறிக்கை ஒவ்வொரு அமைச்சகத்துக்குமான நிதித் திட்டங்களை அறிவிக்கும். இந்தத் திட்டங்கள் மக்களவையில் ஒட்டெடுப்புக்கு விடப்படும். இதைத் தான் மானியக் கோரிக்கைகள் என்றுச் சொல்வார்கள். பொதுவாக ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் (துறைக்கும்) ஒரு மானியக் கோரிக்கைத் தான் மக்களவையில் முன்வைக்கப்படும். பெரியத் துறையாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் மக்களவையில் சமர்பிக்கப்படும்.

மானியக் கோரிக்கைகள் நிறைவேறியப் பிறகு, அந்த அமைச்சகத்திற்கான நிதி Appropriation bills என்னும் நிதி ஒதுக்கீட்டு மசோதா மூலம் குறிப்பிட்ட துறைக்கு வழங்கப்படும்.

நிதி மசோதா (Finance Bill)

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டுமே மக்களவையால் நிறைவேற்றப்படும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வழக்கில் இருக்கும் வரி போன்றவற்றை அப்படியே தொடரவும், சில மாற்றங்களை செய்யவும் நிதி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசு இத்தகைய நிதி மசோதாக்களையே தாக்கல் செய்யும்.

பட்ஜெட் பற்றாக்குறை (Budget deficit)

சுலபமானக் கணக்குத் தான், ஆனால் இதனைக் கட்டுக்குள் வைப்பது அவ்வளவு சுலபமில்லை.

வருவாய் - செலவுகள், இவைத் தான் பற்றாக்குறை.

வருவாய் வரவு செலவுத் திட்டம், முதலீட்டு வரவு செலவுத் திட்டம் என இவை இரண்டையும் கொண்டு இந்தப் பற்றாக்குறை கணக்கிடப்படும்.
நம் நாட்டில் வருவாயை விட செலவுகள் அதிகமாக இருப்பதால், வருவாய் - செலவுகள் என்றாலே பற்றாக்குறைத் தான். சில நாடுகளில் பற்றாக்குறை இருக்காது. மிகுதியானப் பணம் கையிருப்பில் இருக்கும். இதற்கு Surplus என்றுப் பெயர்.

நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit)

மேலே இருக்கும் பட்ஜெட் பற்றாக்குறையுடன், அரசு வாங்கியிருக்கும் கடனையும் சேர்த்தால் வருவது தான் நிதிப் பற்றாக்குறை அல்லது Fiscal deficit

Direct Investment - நேரடி முதலீடு - புதிதாகத் தொழில்களில் செய்யப்படும் முதலீடு. இது வெளிநாட்டினர் மூலமாக வந்தால் - FDI - வெளிநாட்டு நேரடி முதலீடு. இதுவும் சர்சைகளில் இருக்கும் ஒரு பிரச்சனை. இடதுசாரி தலைவர்கள் இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே எதிர்க்கும் பிரச்சனை. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. கடந்த வாரம் தான் தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு 74% மாக உயர்த்தப்பட்டது. பல துறைகளுக்கும் இவ்வாறான FDI தேவைப்படுகிறது. நிதியமைச்சர் என்னச் செய்யப்போகிறார் என்று பார்ப்போம்

பணக்கொள்கை/கடன் கொள்கை (Monetary policy) - பணப்புழக்கம், வட்டி விகிதம் போன்றவற்றை சீராக வைக்கும் அரசின் செயல்திட்டமே பணக்கொள்கை/ கடன் கொள்கை எனப்படுகிறது.

நிதிக்கொள்கை (Fiscal policy) - பொருளாதாரத்தைச் செலுத்தும் முக்கியமானத் திட்டங்களில் அரசின் நிதிக்கொள்கை முக்கியமான இடத்தை வகிக்கிறது. குறைவான நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்வது. அதன் மூலம் பொருட்களுக்கானத் தேவையை அதிகரிப்பது. தேவை அதிகரிக்கும் பொழுது உற்பத்தி பெருகுவதால் நாட்டின் பொருளாதாரமும் ஏற்றமடையும்.

தொடர்ந்து அடுத்தப் பதிவில் பட்ஜெட் எவ்வாறு இருக்க வேண்டும் என்று பலவேறு ஊடகங்களில் படித்த, கேட்டச் செய்திகளையும் எனது கருத்துகளையும் எழுதுகிறேன்.

முந்தையப் பதிவு

References : Economic Times

மேலும் படிக்க

பட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1



பிப்ரவரி மாதம் என்றாலே பட்ஜெட் மாதம், ஒரு வித பரபரப்பு அனைவருக்கும் ஏற்படுகிறது. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கம் முதலில் கவனிப்பது வருமான வரியைத் தான். வீட்டுக் கடனுக்கு வருமான வரி விலக்கு நீடிக்குமா, வரி விகிதம் உயருமா என்று பல்வேறு கவலைகள். முன்பெல்லாம் புதிதாக பொருள் வாங்க நினைப்பவர்கள் பட்ஜெட்டுக்கு முன்பே பொருள் வாங்கிவிடுவார்கள். பட்ஜெட் என்றாலே வரி உயர்வு, விலையேற்றம் என்று இருந்தக் காலம். வணிகர்கள் பட்ஜெட்டுக்கு முன்பு நிறையப் பொருட்களை வாங்கித் தங்கள் கிடங்குகளில் சேமித்துக் கொள்வார்கள்.

ஆனால் பட்ஜெட் என்பது வரி விதிப்பது மட்டும் அல்லவே. பட்ஜெட் என்பது என்ன ?அதில் இருக்கும் பலப் புரியாத வார்த்தைகளுக்குப் பொருள் என்ன ? அதைப் பற்றி கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது.


Bougette என்ற ஆங்கில வார்த்தைத் தான் கொஞ்சம் மருவி Budget என்றாகி விட்டது. Bougette என்றால் "Pouch" என்று பொருள். இங்கிலாந்து பாரளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும் பொழுது பேப்பர்களை இந்த Bougetteல் எடுத்து வந்து, பிறகு பாரளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தான் கொஞ்சம் மருவி இன்று பட்ஜெட் என்ற சொல்லாக்கத்தில் வழங்கப்படுகிறது.



இந்தியாவில் பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்படும். இந்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி, திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. 1999 வரை பட்ஜெட் மாலை 5 மணிககுத் தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் வசதிக்காக பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதனை அப்படியே பல வருடங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். February 27, 1999 அன்று யஷ்வந்த் சின்கா நிதியமைச்சராக இருந்தப் பொழுது முதன் முறையாக 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பிறகு அதுவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதியமைச்சகத்திடம் இருந்தாலும் பிற துறை அமைச்சகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. நிதியமைச்சகம் பிற அமைச்சகத்திடமும், திட்டக்குழுவிடமும் ஆலோசனைக் கேட்கும். பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பிற துறை அமைச்சகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் திட்டங்கள், அதற்கு தேவையான நிதி போன்ற விவரங்கள் பெறப்படும். ஜனவரி மாதத்தில் பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் துறையினர், தொழிற்ச்சங்கங்கள் போன்ற பல்வேறு குழுக்களுடன் நிதியமைச்சர் ஆலோசணைச் செய்வார்.

தற்பொழுது, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தவிர நிதியமைச்சக ஆலோசகராக இருக்கும் பார்த்தசாரதி, திட்டக்குழு துணைத் தலைவராக இருக்கும் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத்தலைவராக இருக்கும் சி.ரங்கராஜன் போன்றோருக்கும் பட்ஜெட் தயாரிப்பில் முக்கியப் பங்கு இருக்கிறது. தயாரிக்கப்பட்ட பட்ஜெட் பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகே மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு பட்ஜெட் மீது ஒரு மாதம் விவாதம் நடக்கும். ஒவ்வொரு துறைக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். இதில் எதிர்கட்சிகள் மாற்றங்களை கொண்டுவர நினைத்தால் வெட்டுத் தீர்மானங்களை கொண்டு வரலாம். அல்லது சில மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இறுதியாக நிதி ஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். ஏப்ரல் முதல் தேதியன்று பட்ஜெட் அமலுக்கு வரும். அடுத்த வருடம் மார்ச் 31 வரை இது அமலில் இருக்கும் (ஏப்ரல் 1, 2005 முதல் மார்ச் 31,2006 வரை). பிறகு அடுத்த பிப்ரவரியில் (2006) அடுத்த ஆண்டிற்கான (2006 -2007) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்தியாவில் மைய அரசால் இரண்டு நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது.

பொது பட்ஜெட் - நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும்




ரயில்வே பட்ஜெட் - ரயில்வே அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.




முதலில் ரயில்வே பட்ஜெட்டும், அதற்குப் பிறகு பொதுப் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

மைய அரசு தவிர ஒவ்வொரு மாநில அரசும் அம் மாநிலத்திற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இது தான் பட்ஜெட் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

பட்ஜெட்டில் பலப் புரியாத நிதி வார்த்தைகள் இருக்கும். அத்தகைய நிதி வார்த்தைகளை இப்பொழுது கவனிப்போம்.

அரசாங்கத்திற்கு வரும் பணம், செலவுச் செய்யப்படும் பணம் போன்றவை எங்கு பராமரிக்கப்படுகின்றன ?

அரசாங்கத்தில் இருக்கும் பணம் பல்வேறு கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும். இதுப் பற்றிய விவரங்கள் பட்ஜெட்டில் இருக்கும். அந்தக் கணக்குகளை முதலில் பார்ப்போம்.

பொதுவாக மூன்று கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
  • The Consolidated Fund of India (CFI)
  • Public Account
  • Contingency Fund
இவையே இந்த மூன்று கணக்குகள்

The Consolidated Fund of India (CFI)

அரசுக்கு பல வழியில் கிடைக்கும் வருவாய் CFI ல் வைக்கப்பட்டிருக்கும். அரசுக்கு செலுத்தப்படும் வரி, கடன் தொகைகளுக்கான வட்டி, பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடண்ட்கள் போன்றவை இங்கு வைக்கப்பட்டிருக்கும். இது தான் அரசின் பொதுவான நிதி. இந்த நிதியத்தில் இருந்து பணம் பெற பாரளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. பெரும்பாலும் ஒவ்வொரு அமைச்சகமும் தங்களுக்கு தேவையான நிதியை மானியக் கோரிக்கைகள் மூலம் மக்களவையின் ஒப்புதல் கொண்டு பெற்றுக் கொள்ளும்.

Public Account என்பது அரசுக்கு சொந்தமில்லாதப் பணம் இருக்கும் கணக்கு. அதாவது அரசு பொதுமக்களிடமிருந்து PF, சிறுசேமிப்பு போன்றவற்றின் மூலம் பெறும் பணம். இந்த நிதியில் இருந்து அரசு எடுக்கும் பணத்திற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை.

Contingency Fund என்பது எதிர்பாராச் செலவு நிதி. இயற்கைச் சீற்றங்கள் போன்ற எதிர்பாராச் செலவுகளுக்காகப் பராமரிக்கப்படும் நிதி. இதில் இருந்து பணம் பெற குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை (பிரதமரின் பொது நிவாரண நிதி, எதிர்பாராச் செலவு நிதி என்று இரு வேறு நிதிக் கணக்குகள் இருக்கின்றன)

பட்ஜெட்டில் இரு வகையானப் பிரிவுகள் இருக்கின்றன
  • Revenue Budget எனப்படும் வருவாய் வரவு செலவுத் திட்டம்
  • Capital Budget எனப்படும் முதலீட்டு வரவு செலவுத் திட்டம்
Revenue Budget - வருவாய் வரவு செலவுத் திட்டம்

வருவாய்த் துறையில் அரசுக்கு கிடைக்கும் வரவினம் மற்றும் செலவினம் போன்றவற்றின் நிதி நிலையை அறிவிக்கும் பட்ஜெட் தான் Revenue Budget

அரசுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது. வருமான வரி, நிறுவனங்களுக்கான வரி, சுங்க வரி போன்ற வரி விதிப்பு (Tax revenue) மூலம் கிடைக்கும் வருவாய், அரசு வழங்கியுள்ள கடன் தொகைக்கான வட்டி, அரசு முதலீடு செய்யும் பணத்திற்கான டிவிடண்ட் எனப் பல வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அரசுக்கு கிடைக்கும் வருவாய் Revenue receipts - வருவாய் வரவினம் என்றுச் சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒய்வுதியம், அமைச்சர்கள் அனுபவிக்கும் சலுகைகள், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் போன்றவை வருவாய்ச் செலவினம் - Revenue Expenditure ஆகும். வருவாய்ச் செலவினம் என்பது பணம் கரைந்துப் போகும் செலவுகள் மட்டுமே. புதிதாகத் தொழில் துறையில் செய்யப்படும் மூலதனம் போன்ற செலவுகள் இதில் வராது.

இந்த வருவாய் வரவினம் மற்றும் வருவாய்ச் செலவினம் இவற்றின் Balance Sheet தான் Revenue Budget எனப்படும் வருவாய் நிதிநிலை அறிக்கை

Capital Budget - முதலீட்டு வரவு செலவுத் திட்டம்

புதிதாக முதலீடு செய்யப்படும் தொகை மற்றும் அரசுக்கு புதிதாக கிடைக்கும் கடன் போன்றவை இந்த முதலீட்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரும்.

தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், தொழில்கள் போன்றவற்றில் செய்யும் முதலீடுகளே முதலீட்டுச் செலவு - Capital Expenditure எனப்படுகிறது. இது தவிர மாநில அரசுக்கு மைய அரசு வழங்கும் கடன் போன்றவையும் இந்தப் பிரிவின்கீழ் வரும்.

அரசு பொதுமக்களிடம் இருந்து பெறும் கடன், ரிசர்வ் வங்கி, உலக வங்கி, பிற நாடுகளிடமிருந்து பெறும் கடன் போன்றவை முதலீட்டு வரவினம் - Capital receipts என்று அழைக்கப்படுகிறது.

முதலீட்டுச் செலவினம், முதலீட்டு வரவினம் இவற்றின் நிதி நிலைத் தான் முதலீட்டு வரவு செலவுத் திட்டம் ஆகும்.

என்ன...நிதிச் சம்பந்தமான வார்த்தைகளைப் படித்தவுடன் தூக்கம் வருகிறதா ?

சரி...அடுத்தப் பதிவில் பிற முக்கியமான வார்த்தைகளைப் பார்ப்போம்.



(நிதிப் பற்றாக்குறையை குறைக்க வழியே தெரியலை... உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா)

References : Economic Times

மேலும் படிக்க

ஹர்ஷத் மேத்தா - 5

இந்த வார தமிழோவியத்தில் ஹர்ஷத் மேத்தா தொடரின் 5ம் பாகம்







மேலும் படிக்க