பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Sunday, January 02, 2005

பழையன நினைந்து புதியன புகுவோம்

இந்தியப் பங்குச் சந்தைக்கும் பொருளாதாரத்துக்கும் 2004 ஆம் ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டு. வரலாறு காணாத உயர்வைப் பங்குச் சந்தை பெற்றிருக்கிறது. 2004ம் ஆண்டு துவக்கத்தில் 5838 புள்ளிகளுடன் இருந்த BSE
குறியீடு தற்பொழுது 6602ல் இருக்கிறது. சுமார் 760 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது. இது சுமார் 13% வளர்ச்சி. இது போலவே தேசிய பங்குச் சந்தை 1877 ல் தொடங்கி 2,080க்கு உயர்ந்து, சுமார் 11% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட துவக்கத்தில் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்ததாலும் பாரதிய ஜனதா "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்வைத்தது. பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று விடும் என்ற எண்ணத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, காங்கிரஸ் வெற்றிப் பெற்று, இடதுசாரிகள் ஆதரவுடன் அரசமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது ஒரே நாளில், மே மாதம் 17ம் தேதி, குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்தது.

இந்தச் சரிவு அரசியல் மாற்றங்களினாலும், இடது சாரிகளை உள்ளடக்கிய மைய அரசு எந்தளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற அச்சத்தினாலுமே நிகழ்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்
வலுவாகவே இருந்தது. அடுத்து வந்த வாரங்களில் பங்குச் சந்தை ஒரளவுக்கு உயர்ந்தது என்றாலும், புதிய அரசின் பொருளாதார கொள்கைகளைப் பற்றிய தெளிவு இல்லாததால், பல நாட்கள் சந்தையில் அதிக சரிவும் இல்லாமல், உயர்வும் இல்லாமல் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.

ஜுலை மாதம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்குப் பிறகே வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்குச் சந்தையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற பொழுது நடந்த பங்குச் சரிவுக்கு ஸ்பேக்குலேசன் தான் முக்கிய காரணம் என்று கருதிய அரசு தேவையில்லாமல் ஸ்பேக்குலேசன் செய்து சந்தையை சரிவடையச் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரியை விதித்தது. ஒரு நல்ல அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்தாலும், பங்கு பரிவர்த்தனை வரியை ஏற்காமல் பங்குச் சந்தை சரிந்தது. இந்த வரி விகிதம் பங்குத் தரகர்களின் வேண்டுகளுக்கிணங்க பிறகு ஓரளவு குறைக்கப்பட்டது.

குறியீடு 6000ஐ நெருங்கினாலே அதிகம் என அனைவரும் எண்ணிய சூழ்நிலையில், அரசின் பொருளாதார கொள்கை மேல் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு பங்குச் சந்தை இன்று 6600ஐ எட்டி விட்டது. இதில் பெரும்பாலான உயர்வு கடந்த இரு மாதங்களில் தான் நிகழ்ந்தது.

இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 2004ல் தான் குவிந்தது. ரூபாய் 38,965 கோடி (8.5 பில்லியன் டாலர்) அளவுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் (FII) முதலீடு செய்யப்பட்டது.

அதே போல பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை பொது விற்பனைக்கு வெளியிட்டன (IPO). TCS சுமார் 5,500 கோடிக்கும், NTPC சுமார் 5000 கோடிக்கும் பங்குகளை வெளியிட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 30,500 கோடி
ரூபாய் IPO மூலம் திரட்டப்பட்டது.

குறியீட்டுப் பங்குகளில், பார்தி பங்குகள் (ஏர்டெல் செல்பேசி நிறுவனம்) தான் இந்த வருடம் அதிக லாபம் கண்டது. 110 ரூபாயில் இருந்த இந்தப் பங்குகளின் தற்போதைய விலை ரூ215. சுமார் 100% உயர்வு. இதைப் போல இன்போசிஸ் பங்குகளும் மிக அதிக அளவில், சுமார் 50% உயர்வைப் பெற்றிருந்தன.

இந்த ஆண்டு கடும் சரிவுற்றப் பங்கு இந்துஸ்தான் லீவர் (HLL) தான். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த விலைக்கு இந்தப் பங்குகள் சரிந்தன. சுமார் 30% வீழ்ச்சி.

இந்த ஆண்டு அதிக உயர்வைப் பெற்றது MIDCAP எனப்படும் நடுத்தரமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழ்நிலையில் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கக்கூடும்

இந்த ஆண்டு (2005)

கொஞ்சம் சிக்கலான, குழப்பமான மனநிலையில் தான் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டில் பங்குச் சந்தையின் அபரிதமான எழுச்சி எல்லோரையும் அச்சப்படுத்தி உள்ளது. பங்குகளின் விலை ஏறுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் தான் கடந்த ஆண்டு சந்தை லாபம் பெற்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் படசத்தில் சந்தை சரியக் கூடும். சந்தையின் போக்கினை, நம்மால் தெளிவாக கணிக்க இயலாது. வரும் வாரங்களில் நிகழக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து தான் சந்தையின் போக்கு இருக்கும்.

இம் மாதம், பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கும். சனவரி 12ம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்தக் காலாண்டில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது எல்லா ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கும். அதிலும், சுமார் 80% மென்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செய்யப்படுகிறது என்பதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக் கூடும். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களை இத்தகைய அந்நியச் செலவாணி ஏற்ற இறக்கங்களில் இருந்து FX Forwards போன்ற ஓப்பந்தங்கள் மூலமாக தற்காத்துக் கொள்ளும். ரூபாயின் மதிப்பு உயருவதால், வரும் காலாண்டிற்கு புதியதாக செய்யப்படும் FX Forwards ஒப்பந்தகங்களின் மதிப்பும் உயரும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே மென்பொருள் பங்குகள் சரியும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டுடன் ஜவுளிக்கான கோட்டா முறை முடிவடைகிறது. இதனால் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என்று கருதப்படுகிறது. இந்தத் துறையின் பங்குகள் கவனத்திற்குரியவை.

அது போலவே இந்த ஆண்டுடன் பேடண்ட முறை அமலுக்கு வருகிறது. இது பார்மா (Pharma) நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகக் கூடும்.

அடுத்த மாதம் நிதியமைச்சர் தன்னுடைய அரசின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பற்றாக்குறை குறைப்பு, உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள், அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், அரசால் விதிக்கப்படும் மற்றும் குறைக்கப்படும் வரிகள், வருவாயைப் பெருக்குவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள், தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் எனப் பல பிரச்சனைகளை எப்படி நிதி நிலை அறிக்கை கையாளுகிறதோ அதைச் சார்ந்தே பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் அமையும்.

பங்குச் சந்தை சில நேரங்களில் சரிவடையலாம், பின் உயரலாம். நல்ல நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலமாகவே நாம் லாபம் பார்க்க இயலும். அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

கடந்த ஆண்டில் பல சாதனைகள் நடந்திருக்கிறது. புது ஆண்டிலும் அதைப் போல சாதனைகள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய நினைவுகளுடன் புதிய ஆண்டில் புகுவோம். பழையன நினைந்து புதியன புகுவோம்.

இந்தப் புத்தாண்டில் உங்கள் பணம் பெருகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


1 மறுமொழிகள்:

meenamuthu said...

நன்றி தமிழ்சசி,

//அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.//

நம்பிக்கையான வரிகள்,
தொடர்ந்து படித்து வருகிறேன்.

எங்களைப் போல் வெளிநாட்டில்
இருப்போர்க்கு இந்திய பங்குச்சந்தை
பற்றி தெரிந்து கொள்ள நல்லவொரு
பயனுள்ள பதிவுகள்.

7:54 AM, January 03, 2005