பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Tuesday, January 04, 2005

இன்றையச் சந்தை நிலவரம்

தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தச் சந்தை, இன்று சற்று சரிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள், லாபம் எடுப்பதற்காகப் பங்குகளை விற்றதால் தான் குறியீடு சரிவடைந்தது. BSE குறியீடு 28 புள்ளிகள் சரிவடைந்து 6651 புள்ளிகளுடனும், NSE 11 புள்ளிகள் சரிவடைந்து 2104 புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த வாரமும், நேற்றும், பங்குக் குறியீடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. எல்லாப் பங்குகளுமே விலை ஏறி இருந்தன. இன்று, இந்த உயர்வைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கத் தொடங்கினர்.

இன்று Reliance, Reliance Energy, IPCL, Reliance Capital போன்ற ரிலயன்ஸ் குழுமப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்தன. அது போலவே மென்பொருள் பங்குகளும் இன்று சரிவடைந்தன. நேற்று இந்தப் பங்குகள் லாபத்துடன் இருந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இன்று ஏன் இவைச் சரிந்தன என்பது நமக்குப் புரியும். லாப விற்பனை தான் (Profit Booking).

வங்கிப் பங்குகளும், சிமெண்ட் பங்குகளும் நல்ல லாபமடைந்தன. இந்த ஆண்டு சிமெண்டிற்கு அதிக தேவையிருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சிமெண்ட் நிறுவனங்கள் சிமெண்ட்டின் விலையை உயர்த்தி உள்ளன. இதனால் இந் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சிமெண்ட் பங்குகளான குஜராத் அம்புஜா, ACC போன்றவை இன்று நல்ல உயர்வைப் பெற்றன.

கடந்த சில நாட்களாக அதிக உயர்வைப் பெற்றச் சந்தை, ஓரளவுக்குச் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகக் குறைந்தப் புள்ளிகளே குறியீடு சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் லாப விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க முனையவில்லை.

அது போலவே பங்குகளை வாங்குவதிலும் பெரிய ஆர்வம் யாருக்குமில்லை. சந்தை சரியக்கூடும் என்ற எண்ணத்திலேயே அனைவரும் இருந்ததால், யாரும் பங்குகளை அதிகமாக வாங்க வில்லை. இத்தகைய வர்த்தகத்தால் தான் சந்தை கொஞ்சம் தள்ளாட்டத்துடன் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து பின் 28 புள்ளிகள் சரிவடைந்தது.


0 மறுமொழிகள்: