பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, January 05, 2005

சரிவு, சரிவு, கடும் சரிவு

கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை எதைப் பற்றியும் கவலைப்படாமல் எகிறிக் கொண்டே இருந்தது. இந்தக் காளைச் சந்தை சரியும் வாய்ப்பு இருப்பதாகவே அனைவரும் கருதினர். ஆனால் எந்த ஒரு பெரியச் சரிவையும் சந்தை எதிர்கொள்ளவே இல்லை. எனது நேற்றையப் பதிவில் கூறியிருந்ததைப் போல அதிக அளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட சந்தை, நேற்று 28 புள்ளிகள் மட்டுமே சரிந்தது.


ஆனால் இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சி சந்தை கடுமையயகச் சரிந்து விட்டது. அவ்வப்பொழுது, சந்தையில் ஓரளவிற்குச் சரிவிருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக ஒரு கட்டத்தில் BSE குறியீடு சுமார் 300 புள்ளிகள் (Intraday) சரிவடைந்திருந்தது. இறுதியாக BSE குறியீடு 6458 (192 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும், NSE 2025 (78 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. இந்தச் சரிவு பாரதிய ஜனதா தோல்விக்குப் பிறகு பங்குச் சந்தையின் கறுப்பு தினம் என்று சொல்லப்படும் 2004, மே 17ல் நடந்த சரிவிற்க்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரியச் சரிவு. ஆனால் கடந்த முறை நடந்தச் சரிவு போல் இல்லாமல், முதலீட்டாளர்களின் லாபவிற்பனைக் (Profit Booking) காரணமாகத் தான் சந்தை சரிந்தது.


இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீடுகள் சரியத் தொடங்கின. உலோகப் பங்குகளான Hindalco, NALCO, TISCO போன்றவை சரியத்தொடங்கின. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange - LME) உலோகங்களின் விலை சரிவடைந்ததையடுத்து இந்தப் பங்குகளும் சரியத்தொடங்கின. மென்பொருள் நிறுவனங்களுக்கு வரும் காலாண்டில் லாபம் குறையக் கூடும் என்ற எதிர்ப்பர்ர்பு காரணமாக மென்பொருள் பங்குகளையும் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கினர்.


இது தவிர பங்குகளின் விலை உச்ச நிலையில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இந்த லாப விற்பனையால் எல்லாப் பங்குகளுமே குறிப்பிடத்தக்க அளவில் சரியத் தொடங்கின. இந்தச் சரிவு எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. எல்லாத் துறைப் பங்குகளுமே கடும் சரிவை எதிர்கொண்டன.


இன்று குறியீட்டில் இருந்த அனைத்து பங்குகளுமே சரிவடைந்திருந்ததன. BSE குறியீட்டில் எந்தப் பங்குகளுமே உயரவில்லை. NSEல் டாபர் (Dabur) பங்கு மட்டும் 1.8% உயர்வடைந்தது. குறியீட்டுப் பங்குகள் தவிர ஏனையப் பங்குகளையும் இந்தச் சரிவு விட்டுவைக்க வில்லை. சுமார் 2019 பங்குகள் சரிவடைந்த நிலையில் 319 பங்குகள் மட்டுமே உயர்வடைந்ததைக் கொண்டு சந்தை
எந்தளவுக்குச் சரிவைடைந்துள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம்.


காலையில் சரிவடைந்தச் சந்தை அச் சரிவில் இருந்து மீளவேயில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் (FII) பங்குகளை விற்கத் தொடங்கியதால் சரிவு மிக அதிகமாக இருந்தது. மதியம், சந்தை சுமார் 300 புள்ளிகளுக்கு சரிவடைந்து விட்டது.


சந்தையில் பங்குகள் விலைக் குறைந்து விட்டதால், மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டினர் (Value Buying). இதையடுத்து வர்த்தகத்தின் முடிவில், சரிவு ஓரளவுக்குச் சரி செய்யப்பட்டு பங்குச் சந்தை 192 புள்ளிகளுடன் சரிவடைந்தது.

இந்தச் சரிவு செல்லும் செய்தி என்ன ?

மே மாதம் 17,2004 சரிவுடன் இந்தச் சரிவை ஒப்பிடக்கூடாது. அந்தச் சரிவு முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக நடந்தச் சரிவு (Panic Selling). ஆனால் தற்பொழுது நடந்துள்ளச் சரிவு அச்சம் தரும் சரிவு அல்ல. இது ஒரு வாய்ப்பு. சந்தை கடுமையாக விலையேறி இருந்ததால் நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் சந்தைக்கு செல்வதற்கே அச்சப்படும் சூழல் இருந்தது. எப்பொழுது சரிவு ஏற்படுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்களைப் பயமுறுத்திக்கொண்டே இருந்தது. தற்பொழுது இந்த அச்சம் நீங்கி விட்டது என்று தான் சொல்வேன். நல்லப் பங்குகளை தெரிவு செய்து முதலீடு செய்யும் நேரமிது.

அடுத்து வரும் வாரங்களில் நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும். நிதிநிலை அறிக்கையும் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும். இவைகளைப் பொறுத்து தான் சந்தையின் அடுத்தக் கட்ட உயர்வும் தாழ்வும் ஏற்ப்படும். தற்போதையச் சரிவு தற்காலிகமானது தான். அடுத்து வரும் நாட்களில் இந்தச் சரிவு சரி செய்யப்படும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.

சரி..எந்தப் பங்குகளை வாங்கலாம் ?

நேற்றும், இன்றும் சிமெண்ட் பங்குகள் திடமாக இருக்கின்றன. நேற்று நல்ல உயர்வைப் பெற்ற இந்தப் பங்குகள், இன்றும், இந்தக் கடும் சரிவுக்கிடையிலும் ஓரளவுக்கு உயர்வைப் பெற்றன. குஜராத் அம்புஜா, பிர்லா சிமெண்ட போன்றவை இன்று உயர்வடைந்தப் பங்குகள். ACC பங்குகள் இன்றுச் சரியவும் இல்லை. உயரவும் இல்லை. சிமெண்ட்டிற்கு இருக்கும் தேவையும், தற்பொழுதுள்ள சந்தை நிலவரத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது சிமெண்ட பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம் இருக்கக்கூடும்.

அதைப் போலவே பார்மா(Pharma), ஜவுளி(Textile) போன்ற துறைகளும் நீண்ட கால முதலீட்டில் லாபம் தரக்கூடியவை.

பிற துறைகளைப் பொறுத்தமட்டில் நல்லப் பங்குகளாக தெரிவு செய்தால் லாபம் நிச்சயம்.

0 மறுமொழிகள்: