பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

இன்றையச் சந்தை நிலவரம்

தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தச் சந்தை, இன்று சற்று சரிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள், லாபம் எடுப்பதற்காகப் பங்குகளை விற்றதால் தான் குறியீடு சரிவடைந்தது. BSE குறியீடு 28 புள்ளிகள் சரிவடைந்து 6651 புள்ளிகளுடனும், NSE 11 புள்ளிகள் சரிவடைந்து 2104 புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த வாரமும், நேற்றும், பங்குக் குறியீடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. எல்லாப் பங்குகளுமே விலை ஏறி இருந்தன. இன்று, இந்த உயர்வைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கத் தொடங்கினர்.

இன்று Reliance, Reliance Energy, IPCL, Reliance Capital போன்ற ரிலயன்ஸ் குழுமப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்தன. அது போலவே மென்பொருள் பங்குகளும் இன்று சரிவடைந்தன. நேற்று இந்தப் பங்குகள் லாபத்துடன் இருந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இன்று ஏன் இவைச் சரிந்தன என்பது நமக்குப் புரியும். லாப விற்பனை தான் (Profit Booking).

வங்கிப் பங்குகளும், சிமெண்ட் பங்குகளும் நல்ல லாபமடைந்தன. இந்த ஆண்டு சிமெண்டிற்கு அதிக தேவையிருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சிமெண்ட் நிறுவனங்கள் சிமெண்ட்டின் விலையை உயர்த்தி உள்ளன. இதனால் இந் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சிமெண்ட் பங்குகளான குஜராத் அம்புஜா, ACC போன்றவை இன்று நல்ல உயர்வைப் பெற்றன.

கடந்த சில நாட்களாக அதிக உயர்வைப் பெற்றச் சந்தை, ஓரளவுக்குச் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகக் குறைந்தப் புள்ளிகளே குறியீடு சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் லாப விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க முனையவில்லை.

அது போலவே பங்குகளை வாங்குவதிலும் பெரிய ஆர்வம் யாருக்குமில்லை. சந்தை சரியக்கூடும் என்ற எண்ணத்திலேயே அனைவரும் இருந்ததால், யாரும் பங்குகளை அதிகமாக வாங்க வில்லை. இத்தகைய வர்த்தகத்தால் தான் சந்தை கொஞ்சம் தள்ளாட்டத்துடன் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து பின் 28 புள்ளிகள் சரிவடைந்தது.


மேலும் படிக்க

திருக்குறளும், இன்றைய பொருளாதாரமும்

திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம் என்ற விதியை நானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். எக் காலத்திற்கும் ஏற்ற இந் நூல், இக்கால பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருந்துகிறதா என்று சோதனை செய்ய ஒரு சிறிய முயற்ச்சி. பிழை இருந்தால் மன்னியுங்கள்.

அதிகாரம் : நாடு
  • தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.
குறையாத விளைபொருளும், நல்ல அறிஞர்களும், கேடில்லாத செல்வமும் உள்ள நாடே நல்ல நாடு

விளைச்சல் என்பதை இங்கு உள்நாட்டு உற்பத்தி என்று எடுத்துக் கொள்ளலாம். இன்று எல்லா நாடுகளிலும் பற்றாக்குறையும் தட்டுப்பாடுமே நிலவுகிறது. குறைவில்லாத உற்பத்தி இன்று எந்த நாட்டிலும் இல்லை. மிகுதியான பொருளை ஏற்றுமதி செய்வதும், உள்நாட்டில் இல்லாதப் பொருளை இறக்குமதி செய்வதும் தான் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை. எல்லா நாட்டு நிதி நிலையிலுமே பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தான் எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வாறு பற்றாக்குறையைக் குறைக்க கல்வி அவசியமாகிறது. மனிதவள மேம்பாடு இருந்தால் தான் தொழில் பெருக முடியும். தொழில் பெருகினால் தான் நாட்டின் செல்வம் பெருகும். வள்ளுவரின் அந்த Dream நாட்டை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
  • பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்
    ஆற்ற விளைவது நாடு
மிக்க பொருள்வளம் உடையதாகவும், எல்லோரும் விரும்பத்தக்கதாகவும், கேடு இல்லாமல் மிகுதியாக விளைபொருள் தரும் நாடே நல்ல நாடாகும்

பொருளாதார வளமுடைய நாடே இன்று எல்லோராலும் விரும்பப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என்று படையடுப்பதன் நோக்கம் என்ன ? அந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றமும், மிகுதியான வேலை வாய்ப்பும் தானே.
  • பொறையருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
    இறையருங்கு நேர்வது நாடு
அரசன் சுமத்தும் வரிச் சுமையைத் தாங்கி, அந்த வரிகளை செலுத்தும் நாடே நல்ல நாடு

இந்தியாவில் தற்பொழுது கூட வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் மிகக் குறைவு. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலமாகத் தான் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எல்லோரும் வரிச் செலுத்தினால் தான் நல்ல நாடு என்ற நிலையை நோக்கி நாம் நகர முடியும். வரியை ஒரு சுமையாக எண்ணி ஏய்க்க நினைத்தால் நாடு எப்படி மேன்மை அடைய முடியும்.
  • உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு
பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை உயர்த்துவது தான் இன்றைய வளரும் நாடுகளுக்குள்ள முக்கியமான சவால். அது போலவே நல்ல சுகாதாரமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவே இன்று எல்லா வளரும் நாடுகளும் முயன்று கொண்டிருக்கிறது. இவ்வாறு முயன்று கொண்டிருக்கிற நாடுகளை வளரும் நாடுகள் எனவும், முயன்று வெற்றிப் பெற்று விட்ட நாடுகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் என்றும் சொல்கிறோம். வறுமை இருந்தாலும், பகையை வெற்றிக் கொள்ள இன்று எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகை இருந்தாலும், அந்தப் பகையை சமாதானமாக மாற்றுவதற்கும் முயற்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்தால் தான் மக்கள் சுமுகமாக இருக்க முடியும். நல்ல நாடு என்ற நிலைக்குச் செல்ல முடியும்
  • பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு
வள்ளுவருக்கு காஷ்மீர் தீவிரவாதிகளையும், உல்பா தீவிரவாதிகளையும் கூட தெரிந்திருக்கிறது பாருங்கள். இந்த தீவிரவாதங்களும், அழிவு செய்யும் குழுக்களும் இல்லாதிருந்தால் நம் நாடு எப்படி இருந்திருக்கும். குண்டு வெடிப்புகள் இருந்திருக்காது. காந்தியையும், பிற தலைவர்களையும் தீவிரவாதத்திற்குப் பலிகொடுத்திருக்க மாட்டோம்.
  • இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
நீர் ஆதாரங்கள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு இது நன்றாகவே புரியும். தமிழ்நாட்டில் காவிரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் குறைந்திருக்கும். அது போலவே நதி நீர் இணைப்பு நடைப்பெற்றால், விவசாயம் பெருகி நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக வளர்ச்சியடைய முடியும். இத்தகைய நல்லச் சூழ்நிலை நிச்சயமாக நம் நாட்டில் இல்லை. சில மாநிலங்களில் வேண்டுமானால் சொல்லலாம்.
  • பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து
நல்ல உற்பத்தி, சுகாதாரம், பற்றாக்குறை இல்லாத செழிப்பான சூழ்நிலை, சுகமான வாழ்வு, பாதுகாப்பான நாடு இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அழுகு தருவது. இத்தகைய ஒரு அழகான சூழ்நிலை இந்தியாவில் உதயமாகத் தான் நாம் அனைவரும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.
  • ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.
எல்லா செல்வங்களும் இருந்தாலும், நல்ல அரசன் இல்லாவிடில் அதற்கு மதிப்பில்லை

இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மாறிக் கொண்டே இருந்த பிரதமர்களாலும், நிலையற்ற தன்மையினாலும் நாடு அடைந்த பின்னடைவுகளை எண்ணும் பொழுது வள்ளுவரின் வாக்கு இக்காலத்திலும் பொருந்தத்தானே செய்கிறது.


மேலும் படிக்க

சோழர்களின் பொருளாதாரப் போர்கள்

ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன.

அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும்,
பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.

இந்த வர்த்தகச் சூழநிலையைக் கொஞ்சம் அலசுவோம்

சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் . பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது

ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான் (உலக வர்த்தகத்தில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் இணையத் தளத்தில் இந்த நிகழ்வும் இடம் பெற்றுள்ளது)

போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அரபு நாட்டுடனும் சோழர்கள் வர்த்தகம் செய்துள்ளார்கள். தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு தான் இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள்.


சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.

பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).


இவ்வாறு ஏற்றமுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், பிரிட்டிஷாரின் வரவுக்குப் பிறகு நிர்மூலமாகி, ஏழை நாடாகி விட்டது. இன்று மறுபடியும் பொருளாதாரம் வளர்ச்சி பெற தொடங்கியிருக்கிறது மேலும் படிக்க

பழையன நினைந்து புதியன புகுவோம்

இந்தியப் பங்குச் சந்தைக்கும் பொருளாதாரத்துக்கும் 2004 ஆம் ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டு. வரலாறு காணாத உயர்வைப் பங்குச் சந்தை பெற்றிருக்கிறது. 2004ம் ஆண்டு துவக்கத்தில் 5838 புள்ளிகளுடன் இருந்த BSE
குறியீடு தற்பொழுது 6602ல் இருக்கிறது. சுமார் 760 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது. இது சுமார் 13% வளர்ச்சி. இது போலவே தேசிய பங்குச் சந்தை 1877 ல் தொடங்கி 2,080க்கு உயர்ந்து, சுமார் 11% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட துவக்கத்தில் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்ததாலும் பாரதிய ஜனதா "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்வைத்தது. பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று விடும் என்ற எண்ணத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, காங்கிரஸ் வெற்றிப் பெற்று, இடதுசாரிகள் ஆதரவுடன் அரசமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது ஒரே நாளில், மே மாதம் 17ம் தேதி, குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்தது.

இந்தச் சரிவு அரசியல் மாற்றங்களினாலும், இடது சாரிகளை உள்ளடக்கிய மைய அரசு எந்தளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற அச்சத்தினாலுமே நிகழ்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்
வலுவாகவே இருந்தது. அடுத்து வந்த வாரங்களில் பங்குச் சந்தை ஒரளவுக்கு உயர்ந்தது என்றாலும், புதிய அரசின் பொருளாதார கொள்கைகளைப் பற்றிய தெளிவு இல்லாததால், பல நாட்கள் சந்தையில் அதிக சரிவும் இல்லாமல், உயர்வும் இல்லாமல் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.

ஜுலை மாதம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்குப் பிறகே வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்குச் சந்தையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற பொழுது நடந்த பங்குச் சரிவுக்கு ஸ்பேக்குலேசன் தான் முக்கிய காரணம் என்று கருதிய அரசு தேவையில்லாமல் ஸ்பேக்குலேசன் செய்து சந்தையை சரிவடையச் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரியை விதித்தது. ஒரு நல்ல அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்தாலும், பங்கு பரிவர்த்தனை வரியை ஏற்காமல் பங்குச் சந்தை சரிந்தது. இந்த வரி விகிதம் பங்குத் தரகர்களின் வேண்டுகளுக்கிணங்க பிறகு ஓரளவு குறைக்கப்பட்டது.

குறியீடு 6000ஐ நெருங்கினாலே அதிகம் என அனைவரும் எண்ணிய சூழ்நிலையில், அரசின் பொருளாதார கொள்கை மேல் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு பங்குச் சந்தை இன்று 6600ஐ எட்டி விட்டது. இதில் பெரும்பாலான உயர்வு கடந்த இரு மாதங்களில் தான் நிகழ்ந்தது.

இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 2004ல் தான் குவிந்தது. ரூபாய் 38,965 கோடி (8.5 பில்லியன் டாலர்) அளவுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் (FII) முதலீடு செய்யப்பட்டது.

அதே போல பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை பொது விற்பனைக்கு வெளியிட்டன (IPO). TCS சுமார் 5,500 கோடிக்கும், NTPC சுமார் 5000 கோடிக்கும் பங்குகளை வெளியிட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 30,500 கோடி
ரூபாய் IPO மூலம் திரட்டப்பட்டது.

குறியீட்டுப் பங்குகளில், பார்தி பங்குகள் (ஏர்டெல் செல்பேசி நிறுவனம்) தான் இந்த வருடம் அதிக லாபம் கண்டது. 110 ரூபாயில் இருந்த இந்தப் பங்குகளின் தற்போதைய விலை ரூ215. சுமார் 100% உயர்வு. இதைப் போல இன்போசிஸ் பங்குகளும் மிக அதிக அளவில், சுமார் 50% உயர்வைப் பெற்றிருந்தன.

இந்த ஆண்டு கடும் சரிவுற்றப் பங்கு இந்துஸ்தான் லீவர் (HLL) தான். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த விலைக்கு இந்தப் பங்குகள் சரிந்தன. சுமார் 30% வீழ்ச்சி.

இந்த ஆண்டு அதிக உயர்வைப் பெற்றது MIDCAP எனப்படும் நடுத்தரமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழ்நிலையில் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கக்கூடும்

இந்த ஆண்டு (2005)

கொஞ்சம் சிக்கலான, குழப்பமான மனநிலையில் தான் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டில் பங்குச் சந்தையின் அபரிதமான எழுச்சி எல்லோரையும் அச்சப்படுத்தி உள்ளது. பங்குகளின் விலை ஏறுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் தான் கடந்த ஆண்டு சந்தை லாபம் பெற்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் படசத்தில் சந்தை சரியக் கூடும். சந்தையின் போக்கினை, நம்மால் தெளிவாக கணிக்க இயலாது. வரும் வாரங்களில் நிகழக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து தான் சந்தையின் போக்கு இருக்கும்.

இம் மாதம், பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கும். சனவரி 12ம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்தக் காலாண்டில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது எல்லா ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கும். அதிலும், சுமார் 80% மென்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செய்யப்படுகிறது என்பதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக் கூடும். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களை இத்தகைய அந்நியச் செலவாணி ஏற்ற இறக்கங்களில் இருந்து FX Forwards போன்ற ஓப்பந்தங்கள் மூலமாக தற்காத்துக் கொள்ளும். ரூபாயின் மதிப்பு உயருவதால், வரும் காலாண்டிற்கு புதியதாக செய்யப்படும் FX Forwards ஒப்பந்தகங்களின் மதிப்பும் உயரும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே மென்பொருள் பங்குகள் சரியும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டுடன் ஜவுளிக்கான கோட்டா முறை முடிவடைகிறது. இதனால் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என்று கருதப்படுகிறது. இந்தத் துறையின் பங்குகள் கவனத்திற்குரியவை.

அது போலவே இந்த ஆண்டுடன் பேடண்ட முறை அமலுக்கு வருகிறது. இது பார்மா (Pharma) நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகக் கூடும்.

அடுத்த மாதம் நிதியமைச்சர் தன்னுடைய அரசின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பற்றாக்குறை குறைப்பு, உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள், அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், அரசால் விதிக்கப்படும் மற்றும் குறைக்கப்படும் வரிகள், வருவாயைப் பெருக்குவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள், தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் எனப் பல பிரச்சனைகளை எப்படி நிதி நிலை அறிக்கை கையாளுகிறதோ அதைச் சார்ந்தே பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் அமையும்.

பங்குச் சந்தை சில நேரங்களில் சரிவடையலாம், பின் உயரலாம். நல்ல நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலமாகவே நாம் லாபம் பார்க்க இயலும். அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.

கடந்த ஆண்டில் பல சாதனைகள் நடந்திருக்கிறது. புது ஆண்டிலும் அதைப் போல சாதனைகள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய நினைவுகளுடன் புதிய ஆண்டில் புகுவோம். பழையன நினைந்து புதியன புகுவோம்.

இந்தப் புத்தாண்டில் உங்கள் பணம் பெருகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


மேலும் படிக்க

புதிய வாய்ப்புகள், சவால்கள்

இந்த ஆண்டில் இருந்து கோட்டா முறை ஜவுளித் துறையில் விலக்கிக் கொள்ளப்படுவதால், ஜவுளித் துறைக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் தங்களுக்கு தேவையான ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் ஒதுக்கி அந்த அளவுக்கு மட்டுமே அந்த நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும். உதாரணமாக தன் தேவையில் 10% சதவீதத்தை பாக்கிஸ்தானில் இருந்தும், 15% பங்களாதேஷில் இருந்தும், 10% இலங்கையில் இருந்தும் இறக்குமதி செய்யும். ஒதுக்கப்பட்ட கோட்டாவுக்கு அதிகமாக அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாது. இதனால் ஏற்படும் நன்மை, குறிப்பிட்ட நாடுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஏற்றுமதியை நிச்சயமாக பெற முடியும்.

இந்த கோட்டா முறை உலக வர்த்தக சங்கம் (WTO) சட்டதிட்டங்களின் உருவாக்கப்பட்ட Agreement on Textiles and Clothing (ATC) என்ற ஒப்பந்தப் படி சனவரி 1, 2005 முதல் விலக்கப்படுகிறது. கோட்டா முறையால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7% ஜவுளித் துறையைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்கு 25%. ஆனால் உலகின் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3% என்ற சொற்ப அளவில் தான் உள்ளது. இந்த கோட்டா முறை விலக்கப்படுவதால் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளுக்குமே இந்த வாய்ப்பு இருப்பதால், பிற நாடுகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு தான் வய்ப்புகளை பெற முடியும்.

குறிப்பாக சீனாவின் கடும் சவாலை இந்தியா சந்தித்தாக வேண்டிய சூழ்நிலை. 2002ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஜவுளித் துறையின் சிலப் பிரிவுகளில் கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பொழுது,
இத்துறைகளில் 9%மாக இருந்த சீனாவின் பங்கு 45%மாக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 70% ஐ எட்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் அமெரிக்காவின் மொத்த ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு 16%. கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இது 50%ஐ தாண்டும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு மட்டுமல்லாது, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

சவால்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இருந்து நிச்சயமாக முன்னேற்றம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏராளமான வாய்ப்பு இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கிறது. எந்தளவுக்கு நாம் அதனைப் பயன்படுத்தி கொள்கிறோம், பிற நாடுகள் கொடுக்கும் சவால்களை எதிர்கொள்கிறோம், தரமான உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்.

அடுத்த வாய்ப்பு பார்மா (Pharma) துறையில், புதிய பேடண்ட் (patent) சட்டம் அமலுக்கு வருவதன் மூலமாக கிடைத்திருக்கிறது. இது வரையில் இருந்த மருத்து தயாரிப்புமுறைக்கான காப்புரிமை (process patents) நீங்கி, தயாரிக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை அமலுக்கு வருகிறது (product patents). இதனால் சுமார் 90% மேற்பட்ட மருந்துகள் காப்புரிமை பெற்றப் பிரிவில் இருந்து நீங்குகிறது. இவ்வாறு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்புகள் மட்டும் பல பில்லியன்கள்.

அமெரிக்காவின் USFDA எனப்படும் Food and Drug Administration அங்கீகாரம் பெற்ற 70க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர அமெரிக்காவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மென்பொருள் துறையில் உள்ளது போல இந்தியாவிற்கு தனது தயாரிப்புகளை (Outsourcing) மாற்றும் வாய்ப்புகளும் இருக்கிறது.
இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான ரேன்பேக்சி, சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருக்கிறது

மென்பொருள் துறை வளர்ச்சிப் பெற்றது போலவே, பார்மா மற்றும் ஜவுளித் துறைகளும் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இரு துறைகளின் வளர்ச்சி, தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக கவனிக்கப்படும்.


மேலும் படிக்க

பங்குகளும், சந்தையும்

எந்தப் பங்குகளை வாங்கலாம் ? குறியீடு மேலும் உயருமா ? இந்தப் பங்குகளை இவ்வளவு விலைக்கு வாங்கினேன் ? இது மேலும் உயருமா, சரியுமா ? விற்கலாமா, வேண்டாமா ? இது தான் பங்குச் சந்தை அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி.

தரகு நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் முதலீட்டாளர் கருத்தரங்குக்கு சென்று பாருங்கள். அங்கு வரும் அனலிஸ்டுகளிடம் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். எல்லாமே "Forecasting" தான். இது எகிறுமா ? குறியீடு எகிறுமா ? அனலிஸ்டும் ஏதாவது பங்குகளை சொல்வார். இவர்களும் அதை வாங்கி அப்படியே அடைகாத்து கொண்டிருப்பார்கள். மறுபடியும் விற்கலாமா என்று ஒரு கேள்வியை வேறு சில அனலிஸ்டுகளிடம் கேட்பார்கள். தொலைக்காட்சி மற்றும் வணிகபத்திரிக்கைகளில் நிச்சயம் இந்தக் கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் நேரம். அறிக்கை தாக்கல் செய்திருந்த மற்றொரு மென்பொருள் நிறுவனம் அந்நிய செலவாணியால் எதிர்பார்த்ததை விட குறைந்த லாபமே பெற்றிருந்தது. எல்லா மென்பொருள் நிறுவனங்களும் அவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சத்தில் எல்லோரும் பங்குகளை விற்க தொடங்க பங்குகள் சரியத் தொடங்கின. ஒரு பிரபல ஆங்கீலத் தொலைக்காட்சி சேனலில் "Buy/Sell" என்றொரு நிகழ்ச்சி தினமும் ஒளிபரப்பாகும். முதலீட்டாளர்களின் பங்குகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு இரண்டு அனலிஸ்டுகள் கலந்து கொண்டு விடையளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் தான் 50 இன்போசிஸ் பங்குகளை 1500 ரூபாய்க்கு வாங்கியருப்பதாகவும் அதனை விற்கலாமா வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார். முதலில் விடையளித்த அனலிஸ்ட் இன்போசிஸ் பங்குகள் தற்பொழுது 1700 ரூபாயில் இருப்பதால் அதை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம் என்றார். மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார். மற்றொரு அனலிஸ்டோ இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் எகிறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொன்னார். கேள்வி கேட்ட முதலீட்டாளர் நிச்சயமாக குழம்பிப் போயிருப்பார். வந்தவரை போதும் என்று விற்றும் இருக்கலாம். அவர் மட்டுமின்றி அவரைப் போல அந்த நிகழ்ச்சியைப் பார்த்து கொண்டிருந்த சிலராவது பங்குகளை அச்சத்தில் விற்றிருக்கலாம். எனக்கும்
கூட கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்ற எண்ணத்தில் நானும் சிலப் பங்குகளை சில தினங்களுக்கு முன்பு தான் 1700 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன். அன்று பங்குகள் சரிந்து 1680 ரூபாயில் திண்டாடிக் கொண்டிருந்தது. ஏன் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்துத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. ஆனாலும் விற்பதில்லை என்ற முடிவுடன் இருந்து விட்டேன்.

இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் பங்குகள் 1800க்கு எகிறியது. சில வாரங்களில் 2000ஐ கடந்து விட்டது. கேள்வி கேட்ட முதலீட்டாளர் விற்காமல் இருந்திருந்தால் ஒரு பங்குக்கு எவ்வளவு லாபம் பார்த்திருக்க கூடும்.

யார் இந்த அனலிஸ்டுகள் ? அனலிஸ்டுகளுக்கு பங்குகளைப் பற்றி ஆராய்ந்து சொல்வது தான் தொழில். தாங்கள் ஆராய்ந்தவற்றை வெளியே சொல்லும் பொழுது தங்கள் தொழிலுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பான டிப்சையே தருவார்கள்.

நீங்கள் என்னிடமே எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று கேள்வி கேட்டால் நான் என்ன யோசிப்பேன் ?

நம்மை பெரிய ஆள் என்று நினைத்து இவர் கேள்வி கேட்பதால் முதலில் நம் பெயரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சொல்லும் பங்கு இவருக்கு லாபமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது. அதைப் போல மிகப் பெரிய நிறுவனப் பங்குகளாகத் தான் சிபாரிசு செய்ய வேண்டும். நஷ்டமடைந்தாலும் பெரிய நிறுவனத்தின் மேல் தான் பழி விழும். நம்முடைய டிப்ஸ் மேல் பழி விழாது. இவ்வாறு யோசித்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு இன்போசிஸ் பங்குகளையோ, HDFC பங்குகளையோ வாங்குமாறு சிபாரிசு செய்யலாம். இன்போசிஸ் சரிந்தால் கூட எதிர்பார்க்காத சில நிலவரங்களால் இவ்வாறு சரிந்து விட்டது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் எந்த அனலிஸ்களிடமாவது கருத்து கேளுங்கள். ஒரு பெரிய நிறுவனப் பங்குகளையே அவர் சிபாரிசு செய்வார். வளர்ந்து வரும் நிறுவனங்களையோ, குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களையோ சொல்லவே மாட்டார். "இந்தப் பங்கு குறைந்த விலையில் இருந்த பொழுது, நான் என் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்தேன். இன்று அது பல மடங்கு உயர்ந்து விட்டது" என்பார். இவ்வாறு குறைந்த விலையில் உள்ள நிறுவனங்கள் தற்பொழுது ஏதாவது உண்டா என்றால் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் அது நடக்காமல் போய் விட்டால் அவரது பெயரும், நிறுவனப் பெயரும் ரிப்பேராகி விடும். நடந்தப் பிறகே நம்மிடம் சொல்வார்கள்.

அதைப் போல "Forecasting" என்பதெல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியவை அல்ல. இந்த வருடம் 6000ஐ குறியீடு நெருங்குவதே கடினம் என்று சொன்னார்கள். இன்று 6500ல் இருக்கிறோம். ஒவ்வொரு இலக்கையும் கடக்கும் பொழுது சரியும் என்றார்கள். முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். பங்குச் சந்தை 2000ம் ஆண்டில் கடும் வீழ்ச்சி அடையும் என்று எத்தனைப் பேர் சரியாக கணித்தார்கள். அல்லது 2004 ஆம் ஆண்டு 6500 ஐ எட்டி விடும் என்று எத்தனை அனலிஸ்டுகள் கணித்துச் சொன்னார்கள். 2005ல் பங்குச் சந்தை இலக்கு என்ன என்று யாராலும் கணிக்க முடியுமா ? 7000, 8000 என்று குறியீடு நகருமா, அல்லது 5000க்கு வருமா ? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

அதைப் போல பொருளாதாரத்தை கணித்தால் பங்குச் சந்தையை கணிக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மந்தப்படும் (Recession) என்று ஒரு கருத்தும்
உண்டு. ஆனால் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பொருளாதாரம் மந்தப்படுவதில்லையே. பொருளாதார வல்லுனர்களால் ஏன் 2000ம் ஆண்டு பொருளாதாரம் மந்தமானதை முன்கூட்டியே கணிக்க வில்லை. முன்
கூட்டியே கணித்திருந்தால் பங்குகளை முன்கூட்டியே விற்றிருப்பார்கள். பங்குச் சந்தையும் முன்கூட்டியே சரிந்து போயிருக்கும்.

ஆக சந்தையை கணிப்பதென்பது இது வரை சரியாக நடந்ததில்லை. இனிமேல் நடக்குமா என்றும் தெரியவில்லை.

இது வரை கூறியதை வைத்து நான் உங்களைச் சந்தைப் பக்கம் வராதீர்கள் என்று சொல்வதாகத் தான் நீங்கள் நினைக்கத் தொடங்கியிருப்பீர்கள்.

நான் சொல்ல வருவது "பங்குச் சந்தையில் நம்பிக்கை வைத்து முதலீடு
செய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள்".

ICICI வங்கி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தால், நாடெங்கும் கிளைகளை தொடங்கிக் கொண்டே இருந்தால், பயனாளர்களுக்காக வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருந்தால் அது மேலும் வளர்ச்சி அடைவதாகத் தானே பொருள். அப்பொழுது சந்தை 3000மாக இருந்தால் என்ன 6500 ஆக இருந்தால் என்ன.
நிறுவனம் வளரும் பொழுது பங்குகளின் விலையும் உயரத் தானே செய்யும். பின் எதற்கு பங்குக் குறியீடுகளைக் கண்டு அஞ்ச வேண்டும் ?

பங்குக் குறியீடுகள் உயரும் பொழுது எல்லாப் பங்குகளும் உயர்ந்து விடுகிறதா என்ன ? சில மாதங்களுக்கு முன்பு பங்குக் குறியீடுகள் எகிறிய பொழுது மென்பொருள் பங்குகள் எகிறிக் கொண்டே இருந்தது. வங்கிப் பங்குகள் சரிந்து கொண்டே இருந்தது. இப்பொழுது குறியீடு உயரும் பொழுது வங்கிப் பங்குகள்
உயர்கிறது. மென்பொருள் பங்குகள் சரிகிறது. குறியீடுகள் உயருவதாலேயே நாம் வாங்கிய பங்குகளும் உயர்ந்து விடாது. எந்தப் பங்குகளை நாம் தெரிவு செய்கிறோமோ அதைப் பொறுத்து தான் லாபமும், நட்டமும். அவ்வப் பொழுது சந்தையில் நிகழும் மாற்றங்களை கண்டு அஞ்சாமல் இருந்தால் நல்ல நிறுவனப் பங்கு எப்பொழுதும் லாபம் தரும்.

சரி..நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி தெரிவு செய்வது ? அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.


மேலும் படிக்க