பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, January 03, 2005

திருக்குறளும், இன்றைய பொருளாதாரமும்

திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம் என்ற விதியை நானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். எக் காலத்திற்கும் ஏற்ற இந் நூல், இக்கால பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருந்துகிறதா என்று சோதனை செய்ய ஒரு சிறிய முயற்ச்சி. பிழை இருந்தால் மன்னியுங்கள்.

அதிகாரம் : நாடு

  • தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.
குறையாத விளைபொருளும், நல்ல அறிஞர்களும், கேடில்லாத செல்வமும் உள்ள நாடே நல்ல நாடு

விளைச்சல் என்பதை இங்கு உள்நாட்டு உற்பத்தி என்று எடுத்துக் கொள்ளலாம். இன்று எல்லா நாடுகளிலும் பற்றாக்குறையும் தட்டுப்பாடுமே நிலவுகிறது. குறைவில்லாத உற்பத்தி இன்று எந்த நாட்டிலும் இல்லை. மிகுதியான பொருளை ஏற்றுமதி செய்வதும், உள்நாட்டில் இல்லாதப் பொருளை இறக்குமதி செய்வதும் தான் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை. எல்லா நாட்டு நிதி நிலையிலுமே பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தான் எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வாறு பற்றாக்குறையைக் குறைக்க கல்வி அவசியமாகிறது. மனிதவள மேம்பாடு இருந்தால் தான் தொழில் பெருக முடியும். தொழில் பெருகினால் தான் நாட்டின் செல்வம் பெருகும். வள்ளுவரின் அந்த Dream நாட்டை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
  • பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்
    ஆற்ற விளைவது நாடு
மிக்க பொருள்வளம் உடையதாகவும், எல்லோரும் விரும்பத்தக்கதாகவும், கேடு இல்லாமல் மிகுதியாக விளைபொருள் தரும் நாடே நல்ல நாடாகும்

பொருளாதார வளமுடைய நாடே இன்று எல்லோராலும் விரும்பப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என்று படையடுப்பதன் நோக்கம் என்ன ? அந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றமும், மிகுதியான வேலை வாய்ப்பும் தானே.
  • பொறையருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
    இறையருங்கு நேர்வது நாடு
அரசன் சுமத்தும் வரிச் சுமையைத் தாங்கி, அந்த வரிகளை செலுத்தும் நாடே நல்ல நாடு

இந்தியாவில் தற்பொழுது கூட வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் மிகக் குறைவு. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலமாகத் தான் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எல்லோரும் வரிச் செலுத்தினால் தான் நல்ல நாடு என்ற நிலையை நோக்கி நாம் நகர முடியும். வரியை ஒரு சுமையாக எண்ணி ஏய்க்க நினைத்தால் நாடு எப்படி மேன்மை அடைய முடியும்.
  • உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு
பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை உயர்த்துவது தான் இன்றைய வளரும் நாடுகளுக்குள்ள முக்கியமான சவால். அது போலவே நல்ல சுகாதாரமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவே இன்று எல்லா வளரும் நாடுகளும் முயன்று கொண்டிருக்கிறது. இவ்வாறு முயன்று கொண்டிருக்கிற நாடுகளை வளரும் நாடுகள் எனவும், முயன்று வெற்றிப் பெற்று விட்ட நாடுகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் என்றும் சொல்கிறோம். வறுமை இருந்தாலும், பகையை வெற்றிக் கொள்ள இன்று எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகை இருந்தாலும், அந்தப் பகையை சமாதானமாக மாற்றுவதற்கும் முயற்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்தால் தான் மக்கள் சுமுகமாக இருக்க முடியும். நல்ல நாடு என்ற நிலைக்குச் செல்ல முடியும்
  • பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு
வள்ளுவருக்கு காஷ்மீர் தீவிரவாதிகளையும், உல்பா தீவிரவாதிகளையும் கூட தெரிந்திருக்கிறது பாருங்கள். இந்த தீவிரவாதங்களும், அழிவு செய்யும் குழுக்களும் இல்லாதிருந்தால் நம் நாடு எப்படி இருந்திருக்கும். குண்டு வெடிப்புகள் இருந்திருக்காது. காந்தியையும், பிற தலைவர்களையும் தீவிரவாதத்திற்குப் பலிகொடுத்திருக்க மாட்டோம்.
  • இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
நீர் ஆதாரங்கள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். நமக்கு இது நன்றாகவே புரியும். தமிழ்நாட்டில் காவிரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் குறைந்திருக்கும். அது போலவே நதி நீர் இணைப்பு நடைப்பெற்றால், விவசாயம் பெருகி நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக வளர்ச்சியடைய முடியும். இத்தகைய நல்லச் சூழ்நிலை நிச்சயமாக நம் நாட்டில் இல்லை. சில மாநிலங்களில் வேண்டுமானால் சொல்லலாம்.
  • பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து
நல்ல உற்பத்தி, சுகாதாரம், பற்றாக்குறை இல்லாத செழிப்பான சூழ்நிலை, சுகமான வாழ்வு, பாதுகாப்பான நாடு இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அழுகு தருவது. இத்தகைய ஒரு அழகான சூழ்நிலை இந்தியாவில் உதயமாகத் தான் நாம் அனைவரும் கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.
  • ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.
எல்லா செல்வங்களும் இருந்தாலும், நல்ல அரசன் இல்லாவிடில் அதற்கு மதிப்பில்லை

இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மாறிக் கொண்டே இருந்த பிரதமர்களாலும், நிலையற்ற தன்மையினாலும் நாடு அடைந்த பின்னடைவுகளை எண்ணும் பொழுது வள்ளுவரின் வாக்கு இக்காலத்திலும் பொருந்தத்தானே செய்கிறது.


1 மறுமொழிகள்:

இராதாகிருஷ்ணன் said...

இந்தக்காலப்பசங்களுக்கு வாத்தியாருங்க இப்படி விளக்கம் சொன்னாங்கன்னா அப்படியே கப்புன்னு புடிச்சுக்குவானுங்க.

4:56 PM, January 03, 2005