பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, January 08, 2005

காணாமல் போகும் எழுத்துக்கள்

நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கி மூன்று மாதங்களாகிறது. எழுதலாமா, வேண்டாமா என்ற பலமான யோசனைக்குப் பின், சரி ஆனது ஆகட்டும், தமிழ்மணம் வாசகர்கள் பாடு திண்டாட்டம் தான் என்று முடிவு செய்து இந்தப் பதிவினைத் தொடங்கினேன்.

கல்லூரியில் படிக்கும் பொழுது, எனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பிரதி கொண்டுவர முடிவு செய்தோம். சில வாரங்கள் யோசித்து எழுதி, நகலிட்டு சிலப் பிரதிகளை நண்பர்களிடையே விநியோகித்தோம். அதற்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பார்த்து, போதுமடா சாமி என்று ஒரே இதழுடன் முடித்துக் கொண்டோம். இதைப் போலவே நெய்வேலியில் நண்பர்கள் சிலருடன் ஆரம்பித்த கையெழுத்துப் பிரதிக்கும் மூடுவிழா தான்.

கடந்த காலங்களை அசைப் போட்டுக் கொண்டே தான் வலைப்பதிவைத் தொடங்கினேன். தற்பொழுது குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஆர்வமுள்ளத் துறையைப் பற்றி எழுதுவதே எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பங்குச் சந்தையைப் பற்றி எழுதினேன். எழுதத் தொடங்கிய பொழுது வரவேற்பு ஆரவாரமாக இருந்தாலும், பின் பின்னூட்டங்கள் குறைந்துப் போனது. பின்னூட்டம் ஊக்க சக்தியளிக்கும் டானிக் போன்றது. ஒரு பின்னூட்டம் கிடைத்தால் கூட மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்படும். பின்னூட்டங்கள் கிடைக்காதப் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுதுதெல்லாம் பின்னூட்டங்கள் கிடைக்காமல் போனால் வருத்தம் ஏற்படுவதில்லை. பழகிப் போய் விட்டது.

நமக்கு ஏன் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று யோசிக்கும் பொழுது நாம் எத்தனைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்துள்ளோம் என்று நினைத்துப் பார்ப்பேன். நான் பலப் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் கொடுத்தது கிடையாது. நம்மைப் போலத் தானே பிறரும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன். அலுவலகம், குடும்பம், படிப்பு என்று பல வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தைத் தான் வலைப்பதிவிற்காகச் செலவிடுவேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒவ்வொரு பதிவாகப் படித்துக் கொண்டே சென்று விடுவேன். என்னைப் போலவே நிறையப் பேர் இருக்கக் கூடும்.

இந்த மனநிலைக்கு நாம் பழகிக் கொண்டால் நம்முடைய இயற்கையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கும் என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டங்களுக்காக எழுதும் பொழுது எழுத்தில் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. பின்னூட்டங்களைப் பெற வேண்டும் என்று எழுதப்படும் சிலப் பதிவுகளில் இந்த செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரியும். இதைப் போலவே முகமூடி அணிந்து எழுதப்படும் சில வலைப்பதிவுகள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. நிஜத்தில் எழுதமுடியாமால் நிழலாக எழுதும் பொழுது கிடைக்கும் சுதந்திரம் அந்த எழுத்தில் பிரதிபலிக்கும். ஆனால் அதே சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

வலைப்பதிவுகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. நிறையப் பதிவுகள் தனித்தன்மையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆரோக்கியமானச் சூழல் தான். எழுத வேண்டும் என்ற ஆவல் பலருக்கு இருக்கிறது. யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று தனிப்பட்டியலிட நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு பாணியில் சிறப்பாகவே இருக்கிறது.

ஆனால் இணையத்திற்குள்ளும் வராமல், புத்தகத்திற்கும் வராமல் நிறைய எழுத்துக்கள் ஆங்காங்கே மறைந்துப் போய்க் கொண்டிருக்கின்றன.
என் சொந்த ஊரான நெய்வேலியில் நிறைய எழுத்தாளர்கள் உண்டு. நெய்வேலியில் வேலைப் பார்க்கும் அவர்களில் நிறையப் பேர் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். இதைப் போலவே நெய்வேலியின் அருகிலுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுவார்கள். புத்தகங்கள் வெளியிடுமளவுக்கு அவர்களுக்கு வசதி இருக்காது.

நெய்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார்.
அருமையாகக் கவிதைகள் எழுதுவார். சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். அவரது சில முயற்சிகள் கைக்கூடிய வேளையில் சிலப் பிரச்சனைகள். நொந்துப் போய், சொந்த கிராமத்திற்கே சென்று விட்டார். இன்னும் கவிதைகள் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.

இவரைப் போல பலர். இவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றித் தெரியாது. புத்தகங்களை வெளியிட வசதிகளும் இருக்காது. குமுதம், ஆனந்த விகடன் இதழ்களுக்கு இவர்கள் அனுப்பும் படைப்புகளும் பிரசுரமாகாது. அப் பகுதியில் வரும் சில சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கைப் போராட்டத்திற்கிடையேயும், கிராமத்து ரசனையில் அவர்களின் எழுத்து மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் சில காலங்களில் அந்த எழுத்து மறைந்துப் போய் விடுகிறது.

பி.கு: தமிழ்மணத்தின் "இந்த வார நட்சத்திரத்திற்காக" எழுதியது


4 மறுமொழிகள்:

சாகரன் said...

Good Analysis, அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது...

உண்மைதான், சிறு சிறு கிராமங்களிலும், எழுத்து ஆர்வத்துடன் இருந்த பலர்... கால் ஓட்டத்தில் சிதறிப்போவது நடப்பதுதான்! தமிழ் இணையம் ஒரு வடிகால்...
தமிழ் இணையமோ... அல்லது இணையமோ தெரியாதவர்கள் எத்தனையோ ஆயிரம்!!!

4:03 PM, January 08, 2005
Chandravathanaa said...

Good Analysis, அனுபவத்துடன் எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

5:12 PM, January 08, 2005
கைகாட்டி said...

இதே கருத்து குறித்து நான் முன்பு எழுதிய கட்டுரைக்கான சுட்டி

4:16 AM, May 04, 2005
RK said...

Sasi,

dont surprise for my quick feed back!!! do you know something??i was reading your blogs since two weeks (all your posts since 2004) but never done a feed back and i dont hope that i will do so in future..

but your way of narrating the article is good to read..pls go on..your analysis about 2005 budget was a good one and what about 2006???

rk

2:21 AM, February 25, 2006