பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

இந்திய பங்குச்சந்தை - BSE கட்டிடம், மும்பை இந்திய பங்குச்சந்தை · BSE, மும்பை
வால் ஸ்ட்ரீட் - நியூயார்க் பங்குச்சந்தை (NYSE) கட்டிடம் வால் ஸ்ட்ரீட் · NYSE, நியூயார்க்

கரடியாட்டம்

கடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது. செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் BSE மற்றும் NSE குறியீடுகள் முறையே 58, 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது. சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.

இன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து BSE 66 புள்ளிகள் சரிவுடன் 5,672 லும், NSE 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1,790 லும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8% சதவீதம் அதிகம். ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது (25 ரூபாய் வீழ்ச்சி).

இது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ், விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன

பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கையும் கடுமையான சரிவையே சந்தித்தது.

இன்று அறிக்கை தாக்கல் செய்து மிகுதியான லாபம் அடைந்த பங்கு குஜராத் அம்புஜா சிமெண்ட்.

நேற்று காளை, இன்று கரடி, நாளை ??
மேலும் படிக்க

Speculation

நான் முன்பு எழுதிய "ஒரு நாள் வர்த்தகத்தின்" தொடர்ச்சியாக இதனைப் படியுங்கள்.

Day trading ஒரு ரிஸ்க்கான வேலை. அன்றைக்கு லாபகரமாக இருக்கின்ற பங்குகளை வாங்கிக் கூட நஷ்டம் அடைய முடியும். சரிந்து கொண்டிருக்கிற பங்குகளை வாங்கிக் கூட லாபம் பார்க்க முடியும். ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் நேரத்தில் ஏதோ ஒரு நிறுவனம் அந்தப் பங்குகளை விற்க தொடங்க, விலை சரிந்து நாம் நஷ்டம் அடைவோம். இதில் நாம் கடைப் பிடிக்கும் எந்த ஒரு உத்தியும் நிரந்தரமாக பலனளிக்கும் என்று சொல்ல முடியாது. அந்த நாளில் சந்தை நிலவரத்தைப் பொருத்துத் தான் நமது லாபமும் நஷ்டமும். சில நிறுவனங்கள் இதற்கான டிபஸ் தருகின்றன. ஆனால் இவற்றின் வெற்றி சதவீதம் 50% மட்டுமே. சில நாட்களில் அவர்கள் சொல்லும் அத்தனை உத்திகளும் நஷ்டத்தில் முடிவடைந்திருக்கின்றன.

பல நிறுவனங்கள் இதற்கான மென்பொருள்களை தருகின்றன. sharekhan.com, 5paisa.com, indiabulls.com, kotakstreet.com போன்ற நிறுவனங்களின் மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதில் சில நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கான தரகு தொகையை முன்கூட்டியே வசூலித்து விடுகின்றனர். நாம் அந்த தரகுத் தொகைக்கு கட்டாயமாக வர்த்தகம் செய்தாக வேண்டும். சந்தை நிலவரம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த தொகை நமக்கு அற்பமாக தெரியும். சந்தை சரிவில் இருக்கும் பொழுது பெரும்பாலும் அந்தப் பக்கம் செல்ல மாட்டோம். தரகுத் தொகை பறிபோய் விடும்.

Day trading நம்மை ஈர்ப்பதற்கான ஒரே காரணம், அதிக முதலீடு இல்லாமல், ஒரு குட்டி வியபாரத்தை வீட்டில் இருந்து கொண்டே சொகுசாக பார்க்கலாம் என்பது தான். ஆனால் இதில் சரிவும் பயங்கரமாக இருக்கும். ஒரு வாரம் லாபம் பார்த்த தொகையை விட அதிகமாக ஒரே நாளில் காணாமல் போனதும் உண்டு. மிகவும் டென்ஷனான வேலை இது. ஒரு நாள் முழுவதும் இதற்கென ஒதுக்க கூடிய சூழ்நிலை இருந்தால் நல்லது. அலுவலகத்தில் இருந்து கொண்டே இதில் ஈடுபடலாம் என்ற எண்ணம் ஆபத்தானது. என்றாவது ஒரு நாள் நம்மை கவிழ்த்து விடும்.

பத்தாயிரம் முதலீட்டிற்கு எழுபதாயிரம் பங்குகள் வாங்கலாம் என்பது தான் நம்மை ஈர்க்கும் கவர்ச்சி வாசகம். ஆனால் நீண்ட நாள் முதலீட்டிற்கு கூட இப்பொழுது இது போன்ற வசதிகளை தரகு நிறுவனங்கள் தருகின்றன. நம்மிடம் இருக்கும் பணத்தை விட இரு மடங்கு அதிகமாக பங்குகளை வாங்கலாம். அந்த தொகைக்கான வட்டியை வசூலித்து கொள்வார்கள். இது கடன் வாங்குவது போலத் தான் என்றாலும், நல்ல நிறுவனங்களின் பங்குகள் தரும் லாபத்தை கணக்கில் எடுத்து கொள்ளும் பொழுது, வட்டி ஒன்றும் பெரிய தொகை இல்லை.

Day Trading அல்லது Speculation க்கும், பங்குகளில் முதலீடு செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. Speculation னில் அதிக ரிஸ்க் இருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதில் அது குறைவு.


மேலும் படிக்க

சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரம்

துவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம், இறுதியில் சரிவடைந்தது. அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற்பனையால் BSE 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும், NSE 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது.

மென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது. பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது. ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது.

இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் HDFC ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது. லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் - ICICI வங்கி, டாபர், BHEL.

இன்றைய வர்த்தகம் முழுமையாக கரடிகளின் ஆளுமையிலேயே இருந்தது.
மேலும் படிக்க

காளைகளின் தகவல்கள்

இந்த வார காளைகளின் தகவல்கள்

ஓவ்வொரு வாரமும், இந்த தகவல்களை சேகரிக்க பல இணையத்தளங்களையும், வர்த்தக தினசரிகளையும் மேயும் பொழுது ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் சொல்லும் தகவல்களை முழுவதும் நம்பவும் முடியாது, முற்றிலும் நிராகரிக்கவும் இயலாது. "Technical Charts"ன் ஆருடங்கள் சில நேரங்களில் நடக்கும். சில நேரங்களில் பொய்த்துப் போகும். ஆனாலும் இது ஜோசியம் அல்ல என்பதால், ஒன்றுமே தெரியாமல் சந்தைக்கு செல்வதை விட ஓரளவுக்கு விஷயத்துடன் செல்வதற்கு இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்க வேண்டும். நம் பணத்தை நாம் தானே பாதுகாத்து கொள்ள வேண்டும் ?!.

இதோ நான் திரட்டிய தகவல்கள்

மென்பொருள் நிறுவனங்களின் நல்ல அறிக்கைகளால் இந்தப் பங்குகள் கடந்த வாரம் ஏற்றம் கண்டன. வெள்ளியன்று முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் (Profit Booking) இதன் விலையில் சரிவு ஏற்பட்டது. மென்பொருள் பங்குகள் மீண்டும் ஏற்றம் அடையக்கூடும்.

கடந்த சில வாரங்களாக மிகவும் லாபகரமாக சென்று கொண்டிருந்த உலோகப் பங்குகள் கடந்த வாரம் சரிவு கண்டு பின் வெள்ளியன்று ஓரளவிற்கு விலை ஏறியது. உலோகங்களின் விலையில் சரிவு ஏற்பட்டதாலும், சீனா வின் திட்டமிடப் பட்ட பொருளாதார தேக்கத்தாலும், இந்த நிறுவனங்களின் வர்த்தகம் பாதிப்படையக் கூடும். இந்த அச்சத்தால் உலோகப் பங்குகள் (Hindalco, SAIL, NALCO, TISCO) சரிவடைந்தன. இந்த நிலை மாறினால் இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறக் கூடும்.

தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை ஏறுவதும் பங்குச் சந்தையை பாதிப்படைய வைக்கும். ஆனால் இது வரை பங்குச் சந்தையில் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை என்றே தோன்றுகிறது. இது எவ்வளவு நாள் தொடர முடியும் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

ONGC, ரிலயன்ஸ் ஆகியப் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. இந்த வாரமும் இவை தொடரக் கூடும்.

வரும் வாரம் பஜாஜ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் நிலவரத்தைப் பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் இருக்கும்.

வெள்ளியன்று கரடிகளின் வசமிருந்த சந்தை திங்களன்று காளைகளின் ஆளுமைக்கு வருமா, கரடிகளின் பிடியிலேயே தொடருமா ?

ஆவலுடன் காத்திருக்கிறேன்
மேலும் படிக்க

ஒரே நாள் வர்த்தகம்

இன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் "Intra Day Trading" பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன். இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நல்லா பணம் பார்க்கலாம். நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும்.

அதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும். நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது. லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க.

அது என்ன "Intra Day/Margin Trading".

இன்றே பங்குகளை வாங்கி, விற்று விட வேண்டும்.

நம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க. அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம். இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு Exposure தருகின்றன.

சரி.. மறுபடியும் ஒரு கணக்கு

நேற்று இன்போசிஸ் பங்கு 100 ரூபாய் வரை விலை ஏறியது.

பங்குத் தரகு, பங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது. பங்குத் தரகு, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம். தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு. சில நிறுவனங்கள், அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர்.

தோராயமாக 15 பைசா (பங்குத் தரகு + பங்குப்பரிவர்த்தனை) என்று வைத்து கொள்வோம்.

வாங்கும் விலை
40 x 1740 = 69600
தரகு = 69600 x .0015 = 104.40
மொத்த வாங்கும் விலை = 69,704.40

விற்கும் விலை 1800 (லாபம் போது சாமி என்று இந்த விலைக்கு விற்றிருந்தால்)

விற்கும் விலை
40x 1800 = 72,000
தரகு = 72,000 x .0015 = 108
மொத்த விற்கும் விலை = 72,108.00

லாபம் = 2187.60

பத்தாயிரம் முதலீடுக்கு கிடைக்கும் லாபம் 2187.60

சரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ? ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும். அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம்.

சரியும் பங்குகளில் கூட லாபம் பார்க்க முடியும். எப்படி ?

பங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும். இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் fluctuations ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம்.

இந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள Real time charts மூலம் பார்க்கலாம். அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.

nseindia வில் உள்ள வரைப் படத்திற்கான சுட்டி

இந்த வர்த்தகத்தில் உள்ள தொல்லைகள்

கணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம். லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம்

சந்தை நிலவரத்தை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்

நாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும்.

இந்த வர்த்தகத்திற்கு நம்மிடம் இருக்கும் மிகுதியான பணத்தை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

நம்முடைய அவசர தேவைகளுக்கான பணத்தை இதில் கொண்டு வரவே கூடாது

மேலும் படிக்க

மென்பொருள் ஆளுமை

மென்பொருள் நிறுவனங்களின் ஆளுமையால் இன்றைய வர்த்தகம் லாபகரமாக முடிவடைந்தது. மேலும், கீழும் ஊசலாடிக் கொண்டிருந்த பங்குக் குறியீடு, அனைவரும் ஒட்டு மொத்தமாக மென்பொருள் பங்குகளையே வாங்கியதால் மதியத்திற்கு மேல் உயரத் தொடங்கி, இறுதியில் BSE 36 புள்ளிகளும், NSE 8 புள்ளிகள் லாபத்துடனும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்போசிஸ் 103 ரூபாய் லாபத்துடன் இன்றைய மிக அதிக லாபம் பெற்ற நிறுவனமாக இருந்தது. விப்ரோ, சத்யம், பாட்னி, HCL போன்ற மென்பொருள் நிறுவனங்களும் இன்று அதிக லாபம் கண்டன. இன்போசிஸ் 1800 - 1850 வரை செல்லக் கூடும் என்று நேற்று எழுதியிருந்தேன். ஆனால் அது போகிற திசையை பார்த்தால் இன்னும் எவ்வளவு உயருமோ ?

சத்யம், விப்ரோ போன்ற நிறுவனங்களின் அறிக்கைகள் வெளிவராமலேயே, இந்த நிறுவனங்களும் இன்போசிஸ் போலவே இருக்கும் என்ற எண்ணத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். ஏற்கனவே அதிக விலையுடன் காட்சி தரும் இப் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் ஏறக் கூடுமோ ?

பெட்ரோல் விலை ஏற்றப் படும் என்ற எண்ணத்தில் BPCL போன்ற எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளும் இன்று லாபகரமாக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த ஸ்டீல் மற்றும் அலுமினிய பங்குகள் - HINDALCO, NALCO, SAIL, TISCO இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) உலோகங்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன. கடந்த வாரம் வரை மிகவும் லாபகரமான பங்குகளாக இவை கருதப் பட்டன.

ஹீரோ ஹோண்டா நிறுவனம் இந்த காலாண்டில் தன்னுடைய நிகர லாபம் 24% உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இறங்குமுகமாக இருந்த இந்தப் பங்கு நாளை உயரக் கூடும்.


மேலும் படிக்க